இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0161 குறள் திறன்-0162 குறள் திறன்-0163 குறள் திறன்-0164 குறள் திறன்-0165
குறள் திறன்-0166 குறள் திறன்-0167 குறள் திறன்-0168 குறள் திறன்-0169 குறள் திறன்-0170

அழுக்கு-மன அழுக்கு. அழுக்காறு-அழுக்காக்கிக் கொள்ளுதல். பொறாமை. அழுக்காறாமை-பொறாமைப்படாதிருத்தல். புற உடல் அழுக்கைப் போல், இவை மனத்தில் படியும் அழுக்கு எனும் வள்ளுவக் கருத்து புதுமையானது.
- தமிழண்ணல்

பொறாமை என்பது மன அழுக்கு அதாவது ஒருவனது உள்ளத்திலுள்ள மாசு குறித்தது. பிறர்க்குக் கிடைக்கும் பேறு கண்டு தாங்கிக் கொள்ள முடியாத இம்மனமாசு பற்றியது அழுக்காறாமை அதிகாரம்.
பொறாமை என்பது பொறுத்தலின் மறுதலையாதலால், அதை விலக்குதற்கு இவ்வதிகாரம் பொறையுடைமையின் பின் வைக்கப்பட்டது என்பர். தன்னைப் பற்றிப் பிறர் நிகழ்த்திய தீயசொல் செயல்களைக் கண்டு சினந்து தீய செய்யாது தான் பொறுத்தலையுணர்த்தியது பொறையுடைமை அதிகாரம். அழுக்காறாமை அதிகாரம் பிறனாக்கம் கண்டு தன் மனத்துத் தீய எண்ணங்கள் தோன்றாமற் செய்தலைச் சொல்கிறது.
பொறாமைக்குணம், மற்றக் குற்றங்கள் நிகழ வழி வகுப்பதால், அது முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாகும். அழுக்காறு உடையவனை அக்குணமே அழித்துவிடும். அவனுக்கு நல்வாழ்வு இருக்காது; அவனைவிட்டுச் செல்வம் விலகிச் செல்லும்; அவனது சுற்றமும் அவனின்று நீங்கும்; உணவும் உடையும் இல்லாமல் போவான்; பொறாமை அவனை இருட்டுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பன இவ்வதிகாரச் செய்யுள்கள் தரும் செய்தி. பொறாமைக்காரனும் நன்றாகத்தானே இருக்கிறான், பொறாமையில்லாதவன் தேய்ந்தும் போகிறானே அதற்கு என்ன செய்வது? இதற்கு வள்ளுவர் கூறும் பதில்: கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொறாமையுடையார் செல்வம் பெருக்கியதும் இல்லை; அழுக்காறு இல்லாதவர் வளர்ச்சியில் குன்றியதாகவும் இல்லை என்பது. மாந்தர் அழுக்காறு இல்லாத இயல்பை ஒழுக்க வழியாகக் கொள்ள வேண்டும் என்பது இவ்வதிகாரம் தரும் அறிவுரை.

அழுக்காறாமை

அழுக்காறாமை என்பது அழுக்காற்றின் அன்மை பெறுதல் அதாவது 'அழுக்காறு கொள்ளாமை' என்னும் கருத்தில் அமைந்தது. அழுக்காற்றுக்கு எதிர்மறை அழுக்காறாமை. அழுக்காறு என்ற சொல்லுக்குப் பொறாமை அதாவது பிறர் ஆக்கம் கண்டு பொறுக்கமுடியாத உளநிலை எனக் கொண்டு அழுக்காறாமை என்றதற்குப் பொறாமையின்மை என அனைத்து உரையாசிரியர்களும் பொருள் கூறினர். அழுக்கான ஆற்றில் (அதாவது வழியில்) உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. இது அழுக்காறு என்பதை அழுக்கு+ஆறு அதாவது அழுக்கு வழி என்று விரித்தலால் வருவது. ஆனால் ‘பேணாது அழுக்கறுப்பான்’ ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ ‘அழுக்கற்றகன்றாரும் இல்லை’ என வரும் இவ்வதிகாரத்துத் தொடர்களால் அழுக்கறு (மன மாசை அகற்று-பொறாமைப் படுதலைத் தவிர்) என்னும் பகுதி கொண்டது இச் சொல்லமைப்பு என்றும் தெரிகிறது. 'அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு எனநிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற்போன்று, அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. "அழுக்கற் றகன்றாருமில்லை" (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க. அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயராகும். அது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அழுக்காறு கடும் பொறாமை. அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது' என்பார் தேவநேயப் பாவாணர்.
அழுக்காறாமை என்பதற்குப் பொறாமைப்படாதிருத்தல் என்பது பொருள். பிறரது புகழ், அறிவு, வலி, வெற்றி, உடைமை, நல்லூழ், நுகர்ச்சி, அழகு, பெருமை, துணிவு, நோயின்மை, போன்ற பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. இவற்றை மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாமலும் அவற்றைப் பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவது அழுக்காறு. அழுக்காறுடையர் இவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து களங்கப்படுத்தவும் செய்வர்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (குறள் எண்: 35) என்று குறளின் பாயிர அதிகாரத்துள் ஒன்றான அறன் வலியுறுத்தலில் கூறினார் வள்ளுவர். அழுக்காறு மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இடமாக விளங்குவதினால்தான் வள்ளுவர் தவிர்க்க வேண்டுவனவற்றுள் அழுக்காற்றுக்கு முன்னிடம் தருகின்றார். பெருமைமிக்க மனிதனாகத் திகழ்வதற்கு வேண்டிய அறப்பண்புகளுள் இன்றியமையாததாக விளங்குவது அழுக்காறின்மை. இவ்வதிகாரம் பிறராக்கம் கண்டு தன்உள்ளத்தில் கோணல்கள் அதாவது தீய எண்ணங்கள் தோன்றாமற் செய்தலை அறிவிக்க வந்தது.
'கல்வி, புகழ், தொழில் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்' என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர். இது போட்டி இருக்கலாம்; பொறாமை கூடாது என்பதைச் சொல்வதற்காக எழுந்தது. பொறாமை என்பது வேறு; போட்டி மனப்பான்மை வேறு. பிறரை ஒப்பீடு செய்து அவரினும் மிஞ்சவேண்டும் என நினைப்பது போட்டி மனப்பான்மை. போட்டிகள் நிறைந்த உலக வாழ்வில் ஊக்கம் பெறுவதற்காக எழுவது போட்டி மனப்பான்மை; போட்டியாளன் வெற்றிபெறுபவனை ஆராய்ந்து அவனிடமிருந்து நல்லவற்றைக் கற்றுத் தனது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளுவான்; பிறர் வளருவதால் தானும் வளர்கிறோம் என்று நம்புவான். ஆனால் பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். பிறரின் நலனில் மனம் புழுங்குவான். மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க, தட்டிப் பறிக்க, களவு, பொய், சூது, வஞ்சகம், சூழ்ச்சி, வாதம், குறுக்குப் புத்தி, சினம், தன்னிரக்கம் ஆகியவற்றோடு பழி தூற்றச் செய்யும் முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டு அதன் மூலம் தான் உயர நினைப்பான். அவனுக்கு முன்னேற்றம் இருக்காது. பொறாமை அதைக் கொண்டவனது அழிவுக்கே வழிகோலும். போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு ஆக்கத்தில் குறைவு இல்லை.
பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் கடையாய பொறாமைக்காரனுக்கு வள்ளுவர் வழங்கும் ஒறுப்பு மிகக் கடுமையானது - அவன் சுற்றம் இழந்து உண்ணவும் உடுக்கவும் இன்றி கெட்டலைவான் என்கிறார்.

பொறாமையில்லாக் குணத்தையும் ஆக்கம் பெறுதலையும் தொடர்புபடுத்தியே பேசுகிறது குறள். இங்குள்ள பாடல்களிலும் மிகுதியாக ஆக்கம் அல்லது செல்வம் பெருகுதல் இவற்றுடனே அழுக்காறு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. பொறாமை நெஞ்சம் கொண்டு வளம் பெருக்கியவரும் இல்லை; அழுக்காறு இல்லாது கோடாத மனம் உள்ளவராய் இருந்தவர்கள் தாழ்ந்து போனதும் இல்லை என்பது வள்ளுவரது ஆய்வின் முடிவு.

அழுக்காறு என்னும் பொறாமையைக் குறிக்கும் சொல்லாட்சி, திருக்குறள் தவிர வேறு எந்தக் கழகநூல்களிலும் (சங்கநூல்களிலும்) வரவில்லை என்பார் பெருஞ்சித்திரனார். மேலும் அவர் 'பொறாமை என்னும் சொல்கூடப் பொறுத்துக் கொள்ளாமைப் பொருளில்தான் வந்துள்ளதே தவிர, திருக்குறளில் வரும் பொறாமைப்படும் 'அழுக்காறு' என்னும் பொருளில் எந்தக் கழகஇலக்கியத்தும் வரவில்லை. தொல்காப்பியத்துள் வரும் 'பொறாமை' (1206-8) என்னும் சொல்லும் 'பொறுத்துக் கொள்ளாமை'ப் பொருளிலேயே வருகிறது. வெளிப்படையாகச் சொன்னால், பொறாமையுணர்வு தரும் எந்தச் சொல்லும் கழக இலக்கியங்களுள் இல்லை. இந் நூலிலுங்கூட, இவ்வதிகாரத்தில் தவிர, பொறாமையுணர்வைக் குறிக்க வேறு சொற்கள் எங்கும் வரவில்லை.. ....இச்சொல் வேறு கழக இலக்கியங்களுள் இப்பொருளில் எங்கும் பிறரால் கையாளப் பெறவில்லையாகலின், இந்நூலாசிரியரே இச்சொல்லை, இந்தப் பொருளில் உருவாக்கிக் கொண்டாராதல் வேண்டும் என்று கருதுதற்கு இடமுண்டு என்க' எனவும் கூறுகிறார் பெருஞ்சித்திரனார்.

அழுக்காறாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 161 ஆம்குறள் ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமைக் குணம் இல்லாததைத் தான் ஒழுக வேண்டிய நெறியாகக் கொள்வானாக என்கிறது.
  • 162 ஆம்குறள் எவரிடத்தும் பொறாமை இல்லாமல் நடப்பதைப் பெற்றால் விழுமங்களுள் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை எனச் சொல்கிறது.
  • 163 ஆம்குறள் அறவாழ்வு வேண்டாம் என்பவனே பிறன் பெற்ற நலங்களைக் கண்டு பொறாமைப்படுவான் என்கிறது.
  • 164 ஆம்குறள் இழிந்த வழியில் சென்றால் துன்பம் உண்டாதலை உணர்ந்து, பொறாமை வழிப்பட்டு அறமல்லாதவற்றை ஒருவர் செய்யமாட்டார் என்று சொல்கிறது.
  • 165 ஆம்குறள் பொறாமைக் குணம் கொண்டவருக்குப் பகைவர் கேடுண்டாக்கத் தவறினாலும் அவரது பொறாமையே தவறாமல் கெடுத்துவிடும். கெடுதி செய்ய வேறொருவர் வேண்டியதில்லை என்கிறது.
  • 166 ஆம்குறள் பிறருக்குக் கொடுக்கப்படுவது கண்டு பொறாமை கொள்பவன் சுற்றமும் உடுக்கவும் உண்ணவும் இல்லாமல் அழிந்துபோவான்.
  • 167 ஆம்குறள் பொறாமைப்படுபவனைத் திருமகள் வஞ்சனை கொண்டு தன் அக்காளுக்குக் காட்டி அவனிடத்தில் வறுமை புகுமாறு செய்துவிடும் எனக் கூறுகிறது.
  • 168 ஆம்குறள் பொறாமை என்னும் பெரும் பாவம் அக்குணம் கொண்டவனின் செல்வத்தை அழிப்பதுடன் தீய இடங்களிலும் அவனைக் கொண்டு சேர்த்துவிடும் என எச்சரிக்கிறது.
  • 169 ஆம்குறள் பொறாமைக் குணம் கொண்டவன் இடத்துள்ள செல்வமும் நேரான நெஞ்சம் உள்ளவனிடமுள்ள வறுமையும் ஆராயப்படவேண்டும் எனக் கூறுகிறது.
  • 170 ஆவதுகுறள் பொறாமையால் வளம் பெருக்கியவரும் இல்லை; பொறமை இல்லாமல் வளர்ச்சியில் சுருங்கியோரும் இல்லை எனக் கூறுகிறது.

அழுக்காறாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

ஒருவனை மோசமாக இழித்துரைக்க வேண்டுமென்றால் 'சோறு தண்ணி இல்லாமல் போகட்டும்' எனத் திட்டுவர். வள்ளுவர் இன்னும் வெறுப்புடன் 'சுற்றமும் போய் உண்ணவும் உடுக்கவும் இன்றிக் கெடட்டும்' என வசை பாடுகிறார். யாரைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்? ஒருவன் இழிவென்று பாராமல் 'ஈ'யெனச் சொல்கிறான். அவனுக்கு ஒன்றும் கொடுக்கவிடாமல் பொறாமைக்காரன் ஒருவன் தடுக்கிறான். அவன் வாங்கி வாழ்ந்துவிடக் கூடாதாம்! எனவே பொறாமை கொண்டு கொடுப்பதைத் தடுக்கிறான். அந்த அழுக்காறுடையானை நோக்கியே கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள்: 166) என வெஞ்சினம் உரைக்கிறார்.

அறமல்லாதவற்றுள் முதன்மையாக அழுக்காற்றை வள்ளுவர் கருதுவதால் அதைப் பாவி என்று உருவகித்துக் குறிப்பிடுகின்றார். அழுக்காறு வேறு-பாவி வேறல்ல என்ற கருத்தை விளக்குவதற்காக 'என ஒரு பாவி' என்றும் சொல்கிறார். இங்கு அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் (குறள்: 168) என மிகுந்த வெறுப்புடனே அழுக்காறு குணத்தைப் 'பாவி' எனக் கூறினார்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (குறள்: 169) என்ற குறளில் ஒரு புறம் பொறாமைக் குணம் கொண்ட தீயவர்கள் நன்றாக வாழ்வதும் மறுபுறம் பொறாமை இல்லதவர்கள் கேடுறுவதுமான அறத்திற்கு முரணான நிலைமை ஆராயப்படவேண்டும் என்று சொன்னது அறிவியல்துறையில் உள்ளது போன்ற ஓர் புதிய அணுகுமுறை என்பார் வ செ குழந்தைசாமி.




குறள் திறன்-0161 குறள் திறன்-0162 குறள் திறன்-0163 குறள் திறன்-0164 குறள் திறன்-0165
குறள் திறன்-0166 குறள் திறன்-0167 குறள் திறன்-0168 குறள் திறன்-0169 குறள் திறன்-0170