தனிமையால் வருந்தும் துன்ப மிகுதியைச் சொல்வது தனிப்படர்மிகுதி
கடமை காரணமாகத் தலைவன் வெளியிடம் சென்றிருக்கிறான். அவனது பிரிவு தாங்காமல் தலைவி உடல் மெலிவுற்று, நிறம் மாறி உறக்கம் இழந்து வருந்தி துன்பம் மிகுந்து இருக்கிறாள். அவ்வேளையில் அவள் உலகத்து மகளிர்-ஆடவர் மணவாழ்வு எப்படியெப்படியெல்லாம், அமைகிறது என்பது பற்றி எண்ணித் தன் உள்ளத்து உணர்வுகளை உரைப்பதாக அதிகாரம் உருவெடுக்கிறது.
இல்லற வாழ்வில் ஆண்-பெண் இடையேயான உறவு பற்றிய கருத்தாடல் செய்வதாக அதிகாரம் அமைந்துள்ளது. மணவினைக்குப் பின் அமையும் ஆடவர்-மகளிர் காதல் நிலையின் சீர்கேட்டை இலைமறை காய்மறையாகக் காட்டிப் பொதுவறம் கூறும் போக்கு காணப்படுகிறது. அவர்கள் உண்மை இன்பம் அடையவேண்டும் என்ற குறிக்கோள் தெரிகிறது.
"மனம் ஒத்த வாழ்வு என்பது விதை இல்லாத இனிய பழம் போன்றது; காதலரை விரும்பும் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அந்தக் காதலரும் அவ்வாறு அன்பு கொண்டால்தான், தடையற்ற இன்பம் உண்டாகும்; விரும்பப்படும் காதலரும் தம் விருப்பமான அன்பை அளித்தால், அது வாழும் மக்களுக்கு மழை கிடைத்த பயன் போன்றதாகும்; நாம் மட்டும் அன்பு செலுத்திக் காதல் கொண்டால், அந்தக் காதலர் நம்மிடம் அன்பு செலுத்தாவிட்டால், அவர் எப்படித் துணை ஆவார்?; மணவாழ்வு என்பது காவடிபோல் இரு பக்கமும் ஒத்திருந்தால்தான் இன்பமாய் அமையும்; ஒரு பக்கம் மட்டும் இருப்பது துன்பச் சுமையாகும் என்கின்றன பாடல்கள்.
இவ்வதிகாரம். தலைவர் காதலியாதிருப்பதாகவும் தான்மாத்திரம் காதலிப்பதாகவும் தலைவி நினைப்பதால் உளதாம் வருத்தம் என்று சில உரைகாரகள் விளக்கம் கூறுவர். இணக்கமான மணவாழ்க்கை நோக்கமாதலால், இவ்வதிகாரத்தில் கணவனை அன்பு இல்லாதவனாகச் சொன்னதெல்லாம், கணவனும் மனைவியும் விரும்புவராகவும் விரும்பப்படுவராகவும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே. அது, ஆண் பெண் என்று வேறுபாடு காட்டாமல், மேல்வரிச் சட்டமாக, இருபாலர்க்கும் ஏற்றத்தாழ்வற்ற அறமாக, இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது. துன்பமிகுதி கூறவந்த அதிகாரத்தில் அவலச்சுவை காணப்படவில்லை.