இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1195



நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1195)

பொழிப்பு (மு வரதராசன்): நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

மணக்குடவர் உரை: நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.

பரிமேலழகர் உரை: ('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: நாம் காதல் கொண்டவர் நாம் அவரைக் காதலிப்பதுபோலவே, அவரும் நம்மிடம் காதல் கொள்ளாதவிடத்து, நமக்கு என்ன இன்பத்தைச் செய்யப் போகிறார்? அக்காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.

பதவுரை: நாம்-நாம்; காதல்கொண்டார்-காதல் செய்யப்பட்டார், காதலிக்கப்பட்டவர்; நமக்கு-நமக்கு; எவன்-என்ன; செய்பவோ-செய்வரோ; தாம்- தாம்; காதல்கொள்ளா-காதல் செய்யாத; கடை-இடத்து.


நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்;
பரிப்பெருமாள் (கொண்டால்'. 'செய்யவோ' பாடம்): நாம் காதலித்தால் அக்காதல் நமக்கு யாதனைச் செய்யும்;
பரிதி: ஒருதலைக் காமம் நன்றல்ல;
காலிங்கர்: நாம் காதல் கொண்டிருக்கிற காதலர் நமக்கு என்ன துணைமை செய்வரோ; யாதும் செய்யார்;
பரிமேலழகர்: ('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்;

நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் காதலித்தவர் அவர் நமக்கு வேறு என்ன நலம் செய்வார்?', 'நாம் காதல் கொண்டவர் அவர் நமக்கு என்ன நலம் செய்வர்?', 'நம்மாற் காதலிக்கப்பட்டவர் நமக்கு என்ன நன்மையைச் செய்யக்கூடும்?', 'நம்மால் காதலிக்கப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாம் காதல் கொண்டிருக்கிறவர் நமக்கு என்ன செய்வரோ என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்காதல் கொள்ளாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் காதலியாதவிடத்து.
பரிப்பெருமாள்: அவர் தாம் காதலியாதவிடத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: புணர்வு கேட்ட நெஞ்சிற்கு நின் காதலினால் பயன் இல்லை என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு அவன் பாங்காயினார் கேட்பத் தலைமகள் கூறியது.
பரிதி: இருதலைக் காமம் நன்று என்றவாறு.
காலிங்கர்: தாமும் நம்மாட்டுக் காதல் கொள்ளாதபின்.
காலிங்கர் குறிப்புரை: அதனால் யாம் இத்தனிப்படர் உறுதலே உளது என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. [அவ்வாறே - நாம் காதல் செய்தபடியே]
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.

'தாம் காதலியாதவிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மைக் காதலிக்கா விடின்', 'தாமும் நம்மிடைக் காதல் கொள்ளாதவிடத்து', 'நம்மிடத்தில் விருப்பங் கொள்ளாதபோது', 'அவ்வாறே தாமும் நம்மிடம் காதல் செய்யாத வழி' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாம் (நம்மிடத்தில்) விருப்பம் கொள்ளாதபோது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாம் காதல் கொண்டிருக்கிறவர் தாம் (நம்மிடத்தில்) விருப்பம் கொள்ளாதபோது நமக்கெவன் செய்பவோ என்பது பாடலின் பொருள்.
'நமக்கெவன் செய்பவோ' குறிப்பது என்ன?

நாம் காதல் கொண்டவர், நம்மை விரும்பாவிடில், அவர் நமக்குத் துணையாக இருக்க முடியுமோ?

தாம் காதல் கொண்டிருக்கிறவர் தம்மீது விருப்பம் கொள்ளாதபோது அவர் நமக்கு என்ன செய்துவிடப் போகிறார்?
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை காரணமாகத் தலைவியிடம் விடைபெற்று அயல் சென்றிருக்கிறார். தலைவிக்கு அவரது பிரிவை ஆற்றமுடியவில்லை. எந்த நேரமும் அவனையே நினைத்திருப்பதால் உடல் மெலிகிறது. படர் உண்டானது. உறக்கம் தொலைந்தது. தன்னைத் தனிமை வாட்டுகின்ற இக்காலத்தில் காதல் நிலையில் உள்ள உலக இணையரை எண்ணிப் பார்க்கிறாள் தலைவி.
மனம் ஒத்த காதலர்கள் விதையில்லாத இனியகனியைச் சுவைப்பதுபோல் வாழ்க்கையை முழுமையாக நுகர்கின்றனர்; காதலிக்கப்படுபவர் காதலிக்கிறவர்க்குச் செய்கிற அன்புச்செயல், உயிர்வாழ்வார்க்கு வானத்தினின்று மழை பெய்து அருள்வது போன்றது; அவர்களுக்கு 'நாங்கள் வாழும் வாழ்வே வாழ்வு' என்ற பெருமிதம் இருக்கும்; அடுத்து, இல்லறவாழ்வில் ஒருவர் மட்டும் காதலித்து மற்றவர் அதே அளவு விருப்பம் காட்டாவிட்டால் அது உரிமையற்ற வாழ்வாகத்தான் இருக்கும். இவை போன்ற எண்ணங்கள் அவளது மனதில் ஓடுகின்றன.

இக்காட்சி:
ஒருபக்கக் காதலுடையார் பற்றி மேலும் நினைத்துப் பார்க்கிறாள் தலைவி. நம்மால் காதலிக்கப்பட்டவர் நம்மிடம் அன்பு செலுத்தாவிட்டால், அவர் நமக்கு என்ன செய்துவிடப் போகிறார் என்று காதல்கொண்டோர் நினைப்பர். இருவர் உளமும் ஒன்றுபட்டால்தான் இல்வாழ்வில் இன்பம் பெறமுடியும் அவ்வாறு இல்லையென்றால் இன்பமாகக் கருதப்பட்ட பொருளே துன்பத்துக்குக் காரணமானதாக ஆகிவிடுகிறது. ஒருதலைக் காதலில் ஒருவர்க்கு மற்றவர் எப்படி வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என ஐயவினா எழுப்புகிறாள். அது முடியாதே என்பதுவே பதில் என்பதையும் அறிகிறாள். அந்த இன்னொருவர் எஞ்ஞான்றும் தனிமையில் துயரபடத்தான் வேண்டுமோ என அவர் மீது இரங்கி நிற்கிறாள் தலைவி.

தாம் காதல் கொள்ளாமை என்றவெல்லாம் கடைப்பட்டன என்னும் பொருட்குறிப்பும் தோன்றக் கடை சொற் பெய்தார் என்பது நினைக்கத்தகும் என்பார் வ சுப மாணிக்கம். தாம் காதல் கொள்ளாக் கடை என்பதில் உள்ள இறுதிச் சீரான கடை கடைப்பட்டது என்பதை உணர்த்தியது.

'நமக்கெவன் செய்பவோ' குறிப்பது என்ன?

'நமக்கெவன் செய்பவோ' என்றதற்கு யாதினைச் செய்வர், யாதனைச் செய்யும், என்ன துணைமை செய்வரோ யாதும் செய்யார், நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?, நமக்கு என்ன இன்பத்தைச் செய்யப் போகிறார்?, நமக்கு வேறு என்ன நலம் செய்வார்?, நமக்கு என்ன நலம் செய்வர்?, எனக்கு என்ன நன்மை செய்யப் போகிறார், நமக்கு வேறு என்னதான் நன்மையைச் செய்துவிடப்போகிறார்?, நமக்கு என்ன நன்மையைச் செய்யக்கூடும்?, நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்?, நமக்கு அவரால் என்னதான் பயன்? (துன்பமே பயன்), நாம் என்ன இன்பத்தை அவரிடம் பெறமுடியும்? என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

'நமக்கெவன் செய்பவோ' என்ற தொடர்க்கு நமக்கு என்ன செய்வார்? என்பது நேர் பொருள். இக்கேள்விக்கு ஒன்றுமில்லை என்பது பதில்.
காதல் வாழ்விற்கு அன்பே அடிப்படை. இங்கே தலைவி கணவர் மீது காதலுடையவளாயிருக்கிறாள். ஆனால் அவரோ அதுபோலத் தம்மிடம் காதல் கொள்கிறார் என்பதைத் தலைவியினால் உணரமுடியவில்லை. இருவர் உளமும் ஒன்றுபட்டால்தான் இல்வாழ்வு பொருளுள்ளதாக இருக்கும். உள்ளம் ஒன்றுபட்ட நிலையில் அன்பு நிறைந்திருக்கும்; ஒருவருக்கொருவர் துணை நிற்பர்; அங்கு இன்பம் குடிகொண்டு தங்கியிருக்கும். இருவர் மனமும் வேறுபட்டுவிட்டால் இந்நல்லியல்புகள் அனைத்தும் மறைந்துபோகும்.
தலைவியின் காதல் உள்ளத்திற்கு ஈடாக காதலன் உள்ளம் இல்லையோ என ஏங்கிக் கலங்கும் நிலையை இக்குறள் காட்சிப்படுத்துகிறது. தாம்கொண்ட காதலின் அளவு கணவர் தம்மை நினைக்கவில்லையென்றால் அவர் என்ன மகிழ்ச்சியைக் கொடுத்து விடமுடியுமெனத் தலைவியின் உள்ளம் வருந்துகிறது. ஒருதலைக் காமம் நிலவும் இல்லறவாழ்க்கையில் மனைவி பெறுவது துன்பமே; அதில் இன்பம் இருக்காது.
உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் இல்லறத்தோடு கூடி வாழ்தலை முன்பு அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (அன்புடைமை 78) என்ற குறள் கூறியது நினையத்தகும்.

'நமக்கெவன் செய்பவோ' என்றதற்கு 'நமக்கு என்ன செய்வரோ' என்பது பொருள்.

நாம் காதல் கொண்டிருக்கிறவர் தாம் (நம்மிடததில்) விருப்பம் கொள்ளாதபோது நமக்கு என்ன துணை செய்வரோ என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லில் ஒருபக்கக் காதல் உள்ளவரை தனிப்படர்மிகுதி உளதாம்.

பொழிப்பு

நாம் காதல் கொண்டவர் தாமும் நம்மை விரும்பாவிட்டால் அவர் நமக்கு என்ன துணை செய்வார்?