இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1196



ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1196)

பொழிப்பு (மு வரதராசன்): காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

மணக்குடவர் உரை: ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காம வேட்கை காவடித் தண்டின் சுமைபோல இருபக்கமும் ஒத்திருப்பின் இனிது. அது ஒரு பக்கம் மட்டும் அமைந்திருப்பின் துன்பந்தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.

பதவுரை: ஒருதலையான்-ஒருதலைக்கண், ஒருசார்பின் கண், ஒரு பக்கத்து இருந்தால்; இன்னாது-துன்பமானது, இனிதன்று; காமம்-காதல்; காப்போல-காவடி போல; இருதலையானும்-இருபக்கத்திலும் இருப்பது, இரண்டு சார்பின்கண்ணும்; இனிது-இனிமையானது.


ஒருதலையான் இன்னாது காமம் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது;
பரிப்பெருமாள் :ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது;
பரிதி: ஒருதலைக்காமமாகிய கைக்கிளை ஒண்ணாது; .
காலிங்கர்('ஒரு தலையா' பாடம்): நெஞ்சே! இவர்மாட்டு ஒருவழிப்பட ஒத்து நிற்பது அன்றிக் காமம் ஒருதலைபற்றி நிற்பது இன்னாது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காமம் மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; [இருதலையினும் - இரண்டு இடத்தும்; இன்னாது - துன்பம் செய்வதாம்]

'ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம்', 'அப்படியின்றி ஒரு ப்க்கம் அதிகமாகவும் இன்னொரு பக்கத்தில் குறைவாகவும் இருந்தால் துன்பந்தான்', 'காதலானது ஒருவரிடத்து மாத்திர மிருந்தால் துன்பம் தருவதே', 'காதல் ஒரு பக்கத்து ஆயின் அது துன்பம் தருவதாகும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

காப் போல இருதலை யானும் இனிது

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள் காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்ட பாங்காயினார் 'அன்பு செய்வாரைத் தலைவன் அருள் செய்வன்' என்று நகைக்குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் 'கூடினாலும் பயனில்லை' என்று தலைமகள் கூறியது
பரிதி: காவடியிற்பாரம் ஒத்ததுபோல, இரண்டுபேர்க்கும் ஒத்த இன்பம் நன்று.
காலிங்கர்: காவினது பாரம்போல இருதலையானும் ஒத்து நிற்பது உளதாயின் மிகவும் இனிது என்றவாறு.
பரிமேலழகர்: காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. [கா-காப்புத்தண்டு]
பரிமேலழகர் குறிப்புரை: மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'? என்பதாம்.

'காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காவடிப் பாரம்போல் இருபக்கமும் இருப்பது இன்பம்', 'காம ஆசை என்பது தராசு போலக் கணவன் மனைவி ஆகிய இருவரிடத்திலும் சமமாக இருந்தால்தான் இன்பம்', 'காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருந்தால் அஃது இனிமை பயக்கும்', 'சுமக்கும் கோலினது (காவினது) பாரம்போல் இரு பக்கங்களிலும் ஒத்திருப்பின் அஃது இனிமை பயக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இனிமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும்; காப் போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இனிமையாம் என்பது பாடலின் பொருள்.
'காப் போல' குறிப்பது என்ன?

ஒருதலைக் காதலில் இன்பம் ஏது?

காதல் ஒருதலையானது’ என்றால் அது துன்பம் தருவது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் சமமாக இருந்ததானால், அது இனிமையாயிருக்கும்.
காட்சிப் பின்புலம்:
தொழில் தொடர்பாகக் கணவர் பிரிந்து தொலைவு சென்றிருப்பதைத் தாங்க முடியாமல் தலைவி துயருற்று இருக்கிறாள். அவள் உடல் கெடுகிறது. பசலை படர்கிறது. தலைவன் நினைவாகவே இருப்பதால் தூக்கமின்றி இருக்கிறாள். தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. அவ்வேளையில் உலகத்து மற்ற காதலர்களது உறவுநிலைகளை நினைக்கத் தொடங்குகிறாள். மனமொத்த ஆண்-பெண் வாழ்வு விதை இல்லாத கனி போன்று முழுவதும்‌ சுவைக்கப்பட்டு முழுமையான காம இன்பம்‌ பெறுமே; தன் வாழ்க்கைத் துணைவிக்குச் சமயம் அறிந்து கணவர் செய்யும் தண்ணளியானது, வேண்டும் காலத்தில் கிடைக்கும் மழை கிடைப்பது போன்றதாகும்; ஒருவர்க்கொருவர் விருப்பத்துடன் வாழும் வாழ்க்கை அமைந்தால் 'நாம் வாழ்கிறோம்' என்னும் செருக்குடன் நடமாடலாம்; விருப்பம் இல்லா இல்வாழ்வு உரிமையற்ற வாழ்க்கையாகும்; அது இன்பமில்லாததுமாகும். இவ்வாறாக அவளது எண்ண ஓட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இக்காட்சி:
இப்பொழுது ஒருபக்கக் காதல் கொண்ட வாழ்க்கையை நினைக்கத் தொடங்குகிறாள் தலைமகள்.
மகளிர் ஆடவர் என்னும் இருபக்கத்தும் ஒத்த அளவில் இல்லாமல் ஒருதலைக்கண்ணே காதல் அமைந்திருந்தால் காதலில் வீழ்ந்தவர்க்கும் காதல் செய்யப்பட்டவர்க்கும் துன்பமாகவே இருக்கும். காவடியினது பாரம்போல காதல் இருதலையானும் ஒத்து நின்றால் இருவருக்கும் இனிமையாக அமையும்; ஒருதலைப்பாரமும் ஒருதலைக் காமவிழைவும் துன்பச் சுமையாகும் என எண்ணுகிறாள்.
மணவாழ்க்கையில் கணவன்-மனைவி இருவரிடை அன்பு இருபக்கமும் இழைந்தோடியிருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் காதலுடன் விளங்க, மற்றொருவர் அதற்கு ஈடாக அன்பு காட்டாவிட்டால் இல்லற வாழ்வு தடம் புரண்டு விடும். இதை விளக்க வள்ளுவர் காவடிச்சுமை என்னும் உவமையை ஆள்கிறார். இரண்டு பக்கமும் ஒத்த அளவில் பாரம் அமைந்தால்தான் காவடி தூக்க எளிது. அதுபோல, இருவருக்கும் காதல் இருந்தால்தான் காதல் வாழ்க்கை இனிமை பயக்கும். ஒருதலைப்பாரமும் ஒருதலைக் காமமும் துன்பச் சுமையாகும்.
இப்பாடலிலுள்ள காமம் என்ற சொல்லுக்குக் காதல்இன்பம் என்று பொருள் கொள்வதே பொருந்தும். காதலர் வாழ்க்கை இன்பமாக இருக்கவேண்டுமென்றால், இருவரும் சமமாக அன்பு செலுத்தி வாழவேண்டும்; ஒருவர் மட்டும் காதலித்து மற்றவர் அதே அளவு விருப்பம் காட்டாவிட்டால் எப்படி ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் எனச் சிந்திக்கிறாள் தலைவி.

'காப் போல' குறிப்பது என்ன?

'காப் போல' என்பதற்குக் காவினது பாரம்போல, காவடியிற்பாரம் ஒத்ததுபோல, காவடியின் பாரம்போல், காவடித் தண்டில் இருபக்கத்தும் சமமான சுமை அமைவது போல, காவடிப் பாரம்போல், காவடித் தண்டின் சுமைபோல, துலாக்கோல் போல் இரண்டு பக்கமும் சமமாக இருந்தால், காவுதடிபோல் (காவடி போல்), கா(வடி) போல, சுமக்கும் கோலினது (காவினது) பாரம்போல், காவடி இருபக்கமும் ஈர்ப்புச் சுமை பெற்றிருப்பதுபோல், காவாட்டுச் சுமைபோலே, தராசின் இரு தட்டுகளும் சம எடையில் நிற்பது போல என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.

‘கா’ என்பதற்குக் காவடித்தண்டு, தராசின் தட்டு, துலாக்கோல் என்று பொருள் கூறியுள்ளனர். இவற்றுள் காவடித் தண்டு என்னும் பொருள் பொருந்தும். காப்போல என்பதற்குப் பாரம் சுமக்கும் காவடித்தண்டு போல என்பது பொருள்.
கா' என்பது பாரமுள்ள பொருள்களை இரு பக்கமும் தூக்கித் தோளில் தாங்கிச் செல்லும் தண்டைக் குறிக்கும். காத்தண்டை காவடித் தண்டு அல்லது கோல் என்றும் அழைப்பர். இது சுமை தூக்குவதற்காகப் பயன்படுத்தப்படும். சுமை தாங்குவார் காத்தண்டைத் தோளில் சுமந்து கொண்டு அதன் இரு புறங்களிலும் சுமக்க வேண்டியவைகளைக் கனம் ஒக்கத் தொங்க விட்டிருப்பர். சுமை ஒருபக்கம் மிகுந்து மற்றொரு பக்கம் குறைந்தால் காவடித்தண்டு தோளில் சமநிலையில் நில்லாமல் சரிந்துகொண்டே இருக்கும். அதைச் சுமக்கக் கடினமாகவும் துன்பந்தருவதாகவும் இருக்கும். கா என்பது இங்கு அதன் கண்ணுள்ள பாரத்தினை அதாவது சுமையை உணர்த்தும்.
'காப் போல' என்றது காதல் உணர்வானது அன்பு செய்யும் இருபாலாரிடையேயும் சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தக் கூறப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈர்ப்பு காவடித் தண்டின் இருமுனைச் சுமைபோல சீராக இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இல்லறவாழ்வில் ஈடுபட்ட இவர்களில் அன்பு ஒருவரிடம் மிகையாகவும், மற்றொருவரிடம் மாறுபட்டும் இருந்தால் வாழ்வு துன்பமாக அமையும் என்பது செய்தி.

சமயப் பற்றாளர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்துக்கு, சிறப்பாக முருகனுக்குக் காணிக்கையாகப் பால், பூக்கள், பன்னீர் போன்ற பொருட்களை 'கா' வின் இருபுறங்களிலும் வைத்துச் சுமந்து செல்வதை நாம் விழாக் காலங்களில் இன்று காண்கிறோம். இது காவடி எடுத்தல் என்று அறியப்படுகிறது.

'காப் போல' என்ற தொடர்க்கு காவடியின் பாரம்போல என்பது பொருள்.

காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும்; காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இனிமையாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனிப்படர் மிகுதியால் வருந்திக்கொண்டிருக்கும் தலைவி அன்பு என்பது கணவன்-மனைவி இருபக்கமும் ஒத்திருக்க வேண்டும் என்பதை எண்ணுகின்றாள்.

பொழிப்பு

காமம் ஒருபக்கம் இருப்பது துன்பம். காவடிப் பாரம்போல் இருபக்கமும் ஒத்திருப்பின் இனிமை.