இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1131 குறள் திறன்-1132 குறள் திறன்-1133 குறள் திறன்-1134 குறள் திறன்-1135
குறள் திறன்-1136 குறள் திறன்-1137 குறள் திறன்-1138 குறள் திறன்-1139 குறள் திறன்-1140

தான் அனுபவிக்கக்கூடாததை எண்ணக் கூசுவதும், குறையான வற்றைச் சொல்லக் கூசுவதும், பழியானவற்றைச் செய்யக் கூசுவதும் நாணமாகும். ஆனால், அந்நிலைகளைக் கூசாமல் சொல்லுவதே நாணுத்துறவு உரைத்தலாம். காதல் வசப்பட்ட ஆண், பெண் இருபாலர்க்கும் இதுபொது. ஆகையால் இங்கே உண்மை யுரைத்தல் என்னும் அறவழி நிற்றற்கே நாணத்தை விடுவதற்குத் தலைவனும், தலைவியும் இசைகின்றனர் என்றதை ஆசிரியர் விளக்குகிறார். காதலின் பெருமை நாணத்தையும் துறக்கச் செய்வதால், காதற்சிறப்பின் பின் இந்த அதிகாரம் அமைகிறது.
- ஜி வரதராஜன்

தன் காதலில் இடர் எதிர்கொள்ளும் தலைவன் மடலேறத் துணிகிறான். மடல் ஏறுதல் என்பது ஊரார் முன் முறையிட்டுத் தன் காதலை நிறைவேற்றித் தர வேண்டுவது ஆகும். இச்செய்கையால் தன் நாணையும் நல்லாண்மையையும் அவன் இழப்பான் என உணர்ந்து இருக்கின்றான். தன் காதல் நிறைவேற உதவ முன்வராத ஊர் மக்களை அறிவில்லாதவர்கள் என இகழ்கிறான். ஊரார் பார்வையில் அவன் கிறுக்கன் போல் காட்சி அளிக்கிறான். காதல் மிகுதியால் தன் நாணம் நீங்கியமையை உரைக்கின்றான். நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் காதலனுடைய நிறை சிதையும்போது அவன் அகத்தும் புறத்தும் நேரும் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிறது.

நாணுத்துறவுரைத்தல்

காமமிகுதியால் தலைவன் நாண் துறத்தலைக் கூறுவது இவ்வதிகாரம். அதிகாரத்தின் 1-7 குறள்கள் ஆற்றானாகிய தலைவன்தன் நாண்துறவுஉரைத்தல் என்றும் 8, -10 குறள்கள் அறத்தொடுநிற்றலை மேற்கொள்ளக் கருதும் தலைமகள்தன் நாண்துறவு உரைத்தல் என்றும் பல உரையாளர்கள் கூறுவர். ஆனால் பாக்கள் அனைத்தையும் தொல்லாசிரியர் காலிங்கர் உரைப்பதுபோலத் தலைவன் கூற்றாகக் கொள்வதே பொருத்தம். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாத தலைவன், தலைவியை மணப்பதற்காகத் தன் காதலை ஊரார் அறியச் செய்வதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் இங்கு. ஊரார் எள்ளி நகையாடுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறியதால் இந்த அதிகாரம் 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் பெயர் பெற்றது.
அதிகாரம் முழுமையுமே மடலேறுதல் பற்றிய ஒரு கருத்தாடலாக அமைந்துள்ளது.

மடலேறுதலானது, மடல், மடலூர்தல் என்றும் அறியப்படும். தான் காதலித்துக் கலந்தவளைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து தன்னைத்தான் ஒறுத்து-வருத்தி அழித்துக் கொள்ள முயல்வது மடலேறுதலாம்.
தன் உள்ளங் கவர்ந்த பெண்ணை அடைவதில் இடையூறுகள் ஏற்படுவதை உணர்ந்த காதலன், அதை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று, அவற்றில் தோற்று, இறுதியாக மடலேறுதலே தனக்குள்ள ஒரேவழி என்ற முடிவுக்கு வருகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வருத்தம் உண்டாக்கும் மடலூர்தல் ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன் நோக்குவதில்லை; இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர்.
மடல் பற்றி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மடல் என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையைக் (மடல்மா) குறிக்கும். இக்குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிவர். மடலேறுதல் என்பது காதலன், இக்குதிரையின் மீதேறி அதைச் செலுத்துவதைக் குறிக்கும். இக்குதிரையின் கீழ் உருளைகளைப் பொருத்தி கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். அவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான். தன் காதலி யார் என்று ஊருக்குச் சொல்லும் வகையில் கையில் அவள் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியை (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஏந்திக் கொண்டு, உடம்பெங்கும் சாம்பல் பூசி, அரைகுறை ஆடையில் தெருக்களில் திரிந்து, அவன் ஊர் மன்றம் செல்வான். அப்பொழுது மடலூர்பவன் உடலெங்கும் பனங்கருக்குக் குத்திக் குருதி வெளிவரும். மடலேறுதல் ஒரு தற்கொலை முயற்சி என்றும் சொல்வர்.
தலைவனின் காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துதலே மடல் ஏறுவதன் நோக்கம் ஆகும். தலைவனின் துன்பத்தை ஊர் மன்றத்தோர் கண்டு, அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். அதன் பயனாக தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு இருந்தது. மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் உதவும் என்று கருதப்பட்டதால் மடல் என்பதைக் காமக்கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று பழம்நூல்கள் கூறுகின்றன.
தலைவியின் காதலொழுக்கம் பற்றி ஊர்மகளிர் கூடியிருந்து முணுமுணுத்துப் பேசுவது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் சொல்லப்படும். தலைவன் மடலூர்ந்ததால் தலைமக்களின் காதல் அம்பலும் அலருமாயிற்று அதாவது ஊர் முழுக்க அச்செய்தி பரவிவிட்டது. இதைக் குறிப்பால் உணர்த்துகிறது ஒரு பாடல் (1139). மடலூர்தல்வழி தலைவனது காதல் திட்பத்தையும் அவன் காதலில் வீழ்ந்த தலைவியையும் ஊரார் அறிவர்.
மடலேறுதல் காமநோயைத் தணிக்கும் என்றும் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன.

காதலன் மடலேறுவது குறிப்பால் இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகிறது.
மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மடல் ஊர்தலும் ஆடவர்க்கு உரிய என்றும், மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மகளிர்க்கு உரிய என்றும் கூறுவர். மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம் எனவும் உரைத்தனர். வள்ளுவர் ஒருதலைக் காதலை குறளில் எங்கும் பேசவில்லை. வள்ளுவரின் தலைமக்கள் மனம் ஒன்றிய காதலர்களாகவே காணப்படுகின்றனர்; எனவே இது பொருந்தாக் காமம் ஆகாது.
மடலூர்தலைப் பெண்ணானவள் ஏற்றுச் செய்யாமையும், காமத்தால் தன் உடலும் உள்ளமும் உணர்வும் அழுத்தப்படுகின்ற நிலையை வெளிப்படுத்தாமையும் பெண்ணுக்குள்ள சிறந்த குண நலன்களாகக் கருதப்படும். பெண்ணானவள் தன்னுடைய காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பை இவ்வதிகாரத்து ஒரு குறள் (1137) சிறப்பாகப் போற்றுகிறது.

மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி இணைய மடல் பயன்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். மடலேறுதல் குரூரமான முறையாகத் தோன்றினாலும் இது ஒரு நேர்மையான அணுகுமுறை எனலாம். ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைச் சிறைஎடுத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபடாது அமைதியான வழியில் அவளைப் பெற முயற்சிக்கிறான். ஆயினும் செப்பமற்ற அணுகுநெறி என்பதாலும் காதலி, அவரது வீட்டார் ஆகியோரது நற்பெயர் களங்கப்பட வாய்ப்பு உள்ளதால் மடலேறல் விரும்பத்தக்கது அல்ல என்பது விளங்கும்.
நாண், நல்லாண்மை இவற்றைக் காதலன் இழப்பான் என்றும், ஊரார்முன் அவன் நகைப்புக்குள்ளாகிறான் என்றும் குறட்பாக்கள் சொல்வதால், மடலேறுதலை வள்ளுவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
இவ்வழக்கு தற்போது இல்லை.

நாணுத்துறவுரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:


  • 1131.ஆம்குறள் காதலில் இடர் எதிர்கொள்பவர் தம் காதலை ஊரறியச் செய்வதே அவர்க்கு வலிமை தரும் என்கிறது.
  • 1132.ஆம்குறள் காதலனது காமநோவுப் பெருக்கம் நாணத்தை நீக்கி மடலேறத் தூண்டுகிறது என்று சொல்கிறது.
  • 1133.ஆம்குறள் நேற்றிருந்த நாணும் உளத்திண்மையும் இழந்து இன்று இந்த மடல் மாவை உடையேன் என்று காதலன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1134.ஆம்குறள் காமப் பெருவௌ்ளத்தின் முன் நாணமும் ஆண்மையும் தகர்த்தெறியப்படுமே எனக் காதலன் கூறுவதை சொல்கிறது.
  • 1135.ஆம்குறள் மடலேறும் எண்ணத்தினால் உண்டான துன்பத்துடன் மாலைப்பொழுது தரும் காமத்துயரும் சேர்ந்து காதலனை வாட்டுகிறது என்பதைச் சொல்வது.
  • 1136.ஆம்குறள் அவளைப் பெறும்வரை எப்படித் தூங்கும் என் கண்கள்? என்று காதலன் சொல்வதாக அமைந்தது.
  • 1137.ஆம்குறள் நாண் துறந்து மடலேறாது அறத்தொடு நிற்கும் பெண்ணின் பெருமையைப் போற்றுகிறது.
  • 1138.ஆம்குறள் நிறைகுணம் கொண்டவன், இரங்கத்தக்கவன் தான் என்பவை கருதப்படாமல் தன் காமம் ஊரார் முன் வெளிப்பட்டுத் தான் நாணிழக்க நேரிடுமே எனக் காதலன் வேதனைப் படுவதைச் சொல்வது.
  • 1139.ஆம்குறள் 'யாருமே அறிந்ததில்லை என்பதால் என் காதல்செய்தி மயங்கி தெருவெங்கும் சுழன்று திரிகிறது என்கிறது.
  • 1140.ஆவதுகுறள் 'என் கண்பார்க்க எதிரே நின்று அறிவில்லாதவர்கள் நகுகின்றனர்; நாம் பட்ட துயர் அவர்கள் படவில்லையாதலால்' என்று காதலன் கூறுவதைச் சொல்கிறது.

நாணுத்துறவுரைத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்:


இவ்வதிகாரத்தில் காமத்துன்பத்தால் தலைவன் புலம்புவதும் அவனுடைய ஆற்றாமை, துடிப்பு, எதையும் செய்யத் தூண்டும் மனநிலை முதலானவை நன்கு படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

காமத்தின் முன் நாணமும் நல்லாண்மையும் நில்லா என்பதை நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்(1133), காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை (1134) ஆகிய இரண்டு குறள்கள் நன்கு எடுத்துரைக்கின்றன. தம்முள் இயைபுடைய நாண் ஆண்மைத்தன்மை இவற்றின் துணைகொண்டு நல்ல பண்பு உடையவன், ஆண்தன்மை கொண்டவன் என்று ஊரார் புகழும் நிலைமையில் இருந்தான் தலைவன். ஆனால் தன் காதலியைக் காண வழியில்லாமல் போனபின் அவனது காம உணர்வு மேலோங்கி வெள்ளம்போல் வீறுகொண்டதால், அந்நற்பண்புகளும் எங்கோ இழுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக உணர்கிறான். இவற்றைக் கருதிக் கொண்டு இருந்தால் தான் விரும்பும் காதலியை அடைய இயலாது என நினைக்கிறான். தன் காதல் வெற்றி பெற இவ்விரண்டையும் இழந்து மடலேறத் துணிகிறான். காதல்‌ மிகுவதால் நாணம்‌ துறந்து போகின்ற தன்மை புலனாகிறது என்பதை இக்குறள்கள் இயம்புகின்றன.

காமம் மிகுந்து, காதலியை அடைவதற்கு உண்டான தடைகளைக் களையும் பொருட்டு, பொது மன்றில் மடலேறும் காதலன் தன் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுவான். ஆனால் உள்ளலை பாய்ந்து கடலாகக் குமுறும் காம உணர்வு கொண்ட தலைவியோ மடலேற எண்ணாமல் பொறுமை காப்பதை வள்ளுவர் பெண்ணின் பெருமைக்குரிய குணமாகக் காண்கிறார். இதைச் சொல்லும் கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் என்ற குறள் (1137) இவ்வதிகாரத்து உள்ளது.




குறள் திறன்-1131 குறள் திறன்-1132 குறள் திறன்-1133 குறள் திறன்-1134 குறள் திறன்-1135
குறள் திறன்-1136 குறள் திறன்-1137 குறள் திறன்-1138 குறள் திறன்-1139 குறள் திறன்-1140