இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1133



நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1133)

பொழிப்பு (மு வரதராசன்): நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்

மணக்குடவர் உரை: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

பரிமேலழகர் உரை: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.
(நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நாணமும் நல்ல வீரமும் யான் முன்னர்ப் பெற்றிருந்தேன். இப்பொழுது காமம் கொண்டவர் துணை எனக் கருதி ஊரும் மடலைத் துணையாகக் கொண்டுள்ளேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் காமுற்றார் ஏறும் மடல் இன்றுடையேன்.

பதவுரை: நாணொடு-நாணத்துடன், வெட்கத்துடன்; நல்-நல்ல; ஆண்மை-திண்மையான உள்ளம், ஒன்றற்கும் தளராது நிற்றல்; பண்டு-முன்பு; உடையேன்-உடைத்தாயிருக்கின்றேன்; இன்று-இன்றைக்கு; உடையேன்-உடைத்தாயிருக்கின்றேன்; காமுற்றார்-காதல் மிக்கவர்; ஏறும்-ஊருகின்ற; மடல்-பனங்கருக்கு (குதிரை).


நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிப்பெருமாள்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிதி: நாணமும் நல்லாண்மையும் எமக்குப் பண்டு துணையாயிருந்தன.
காலிங்கர்: நாணொடு நல்லாண்மைப்பாடு என்னும் இவை இரண்டுமாய் யான் பண்டு உடையேன்.
பரிமேலழகர்: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;

'நாணமும் நல்லாண்மையும் நான் பண்டு உடையேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமும் வீரமும் முன்பிருந்தன', 'இதுவரையிலும் வெட்கமுள்ளவனாகவும் நல்ல ஆண்மையுள்ளவனாகவும் இருந்த நான்', 'வெட்கமும் மிகுந்த வீரமும் முன்நாள் உடையவனாயிருந்தேன்', 'நாணமும் மிக்க ஆண்தன்மையும் முன்பு பெற்றிருந்தேன்', என்ற பொருளில் உரை தந்தனர்.

நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய சொற்கேட்டு, 'நீர் உலகத்துப் பன்மக்களோடு ஒப்பார் ஒருவரன்றே. நாணமும் ஆண்மையும் இயல்பாக உடையீர். ஆதலான் நுமக்கு இது கூடாது' என்ற தோழிக்கு, 'இவை இரண்டும் இப்பொழுது இல்லேன்' என்று தலைமகன் கூறியது.
பரிதி: இன்று இப்பேதை தந்த ஆசையினாலே மடலே துணையானது என்றவாறு.
காலிங்கர்: அதனால் என்னை பயன்? அவை விடுத்து இன்று உடையேனாவேன்; யாதினை எனில் இவ்வுலகத்துக் காமுற்றவர் ஏறும் மடலினை என்றவாறு.
பரிமேலழகர்: அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். [அவை-நாணும் நல்லாண்மையும்]
பரிமேலழகர் குறிப்புரை: நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம். [அவை-நாணும் நல்லாண்மையும்; இதுவே-மடலேறுதலே; கடிதின் -விரைவில்]

'காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு', 'இப்போது அவற்றை விட்டுவிட்டு மடலேறுவதை எண்ண வேண்டியவனாக இருக்கிறேனே!' 'இப்போது காமமிகுந்தவர் ஏறும் மடலினைத்தான் உடையேன்', 'காதல் உற்றார் ஏறும் மடல் குதிரையை இப்பொழுது உடையேன்', என்றபடி பொருள் உரைத்தனர்.

இன்று காமங்கொண்டார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன்; இன்று காமுற்றார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது பாடலின் பொருள்.
'காமுற்றார்' யார்?

காதலன் சொல்கிறான்: 'அவளை அடைவதற்காக என்னுடைய பெருமிதங்களையும்கூட இழக்க முன்வந்துள்ளேன்'.

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர் உடைமைகளாகப் பெற்றிருந்தேன்; இன்று இன்று அவற்றை விட்டுவிட்டு காமநோய் மிக்கார் ஏறும் மடல்மாவை உடையேன் என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் களவுக்காதலில் ஈடுபட்டு களிப்படைந்தனர். இதை அறியவரும் தலைவியின் பெற்றோர் இவர்களது காதலை ஒப்பாமல் சந்திப்பதற்கும் தடை போடுகின்றனர். அவள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாள் எனத் தெரிகிறது. அவளைப் பார்க்க அவன் பலவழிகளில் முயன்றும் பலனில்லை. எப்பொழுதும் அவள் நினைவாகவே உள்ளான். காதல் நோய் அவனை மிகவும் வருத்துகிறது. இந்நிலையில் அவளை அடைவதற்கு உறுதியான வழியாக மடலேறி மன்றம் செல்லலாம் என எண்ணுகிறான். மடலேறுதல் என்னும்போது அது நாண் துறந்த செயலாகக் கருதப்படும். எனினும் அவ்வழியையே துணிகிறான். அவளைப் பார்க்காமல் இருப்பதால் அவனது உயிரும் உடலும் ஒருங்கே உறும் துயரத்தை வெல்ல தன் நாண் குணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மடல்மாவில் ஏறுகிறான்.

இக்காட்சி:
காதலி கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஐயமுற்ற நிலையில் உள்ள தலைவன் எப்படியாவது அவளை அடைந்தே தீருவது என்ற நோக்கில் இறுதி முயற்சியாக, மடலூர்கிறான். மடலேறுதல் என்ற முடிவால் நாணமும் தறுகண்மையும் அவனிடமிருந்து போய்விட்டதாக நினைக்கிறான். அப்பொழுது வெறித்தநிலையில் 'நாண், நல்லாண்மை ஆகிய உடைமைகளை முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுது காமம் கொண்டவர் துணை எனக் கருதி ஊரும் இந்த மடல் குதிரை ஒன்றுதான் நான் துணையாகக் கொண்டுள்ள உடைமை' என்று தன்னிரக்கமாகக் கூறுகிறான். நாண் என்பது இழிசெயலைத் தடுக்கும் மானஉணர்வு; ஆண்மையென்பது ஒன்றற்குந் தளராத உறுதியோடு இருக்கக்கூடிய குணம். மடலேறத் துணிவது, ஊரார் பழிக்கும்படியான, நாணத்தைக் கடந்த செயலாகும். வேறு வழி தெரியவில்லையே என்ற உணர்வு வந்துள்ளதால் தறுகண்மையும் நீங்கிவிட்டதாக ஆகிவிட்டது. எனவே இயல்பான உடைமையாகிய நாணுடன் நல்லாண்மையும் போய்விட்ட நிலையில் மடலேற வேண்டிய நிலையிலிருக்கிறேனே என்கிறான்.
நாண் துறவும், ஆண்மை விடைபெறுதலும்,‌ மடலேறலும்‌ காதல்‌ மிக்க இடத்து நிகழும்‌ என்பது செய்தி.

மடல் என்பது பனை மட்டையால் குதிரை உருவம் செய்து கீழே உருளை பொருத்தி, கயிறு கட்டி இழுத்துக்கொண்டு போகுமாறு செய்யப்பட்ட வண்டி போன்ற ஒன்றாகும். காதலியைக் காணும்முயற்சியில் தோல்வியுற்று, பொறுமையிழந்த காதலன், குறைவான ஆடை அணிந்து, மடலில் ஊர்ந்து, உடல் காயமுற்று, ஊரார்க்குத் தன் காதலை வெளிப்படுத்துவது மடல்ஊர்தல் அல்லது மடலேறுதல் எனப்பட்டது. மடலேறுதல் என்பது ஓர் வெட்கம் கெட்ட செயல்; நல்ல ஆண்மகனுக்கு அது அழகல்ல; காதல்நோயால் துயறுபவர் நாடும் புகலிடமாக அது அன்று இருந்தது என்பதாகத் தெரிகிறது.

'காமுற்றார்' யார்?

'காமுற்றார்' என்ற சொல்லுக்கு காமமிக்கார், காமுற்றவர், காமம் மிக்கவர், காமம் மிக்கார், காமங்கொண்டார், காமம் கொண்டவர், காமம் அடைந்தவர்கள், காதல் நோயுற்றார், காமமிகுந்தவர், காதல் உற்றார், கழி காமம் உற்றார், காம வேட்கை உடையார் என்று பொருள் கூறினர்.

காதலில் துயறுபவர்கள் என்ற பொருளில் காமுற்றார் இங்கு ஆளப்படுகிறது. காதல் மிகுதியால் இழிவானதைச் செய்ய விலக்கும் நாணமும், எதற்கும் தளராத துணிவாண்மையும் அவனிடமிருந்து நீங்கிவிட்டன; தளர்ந்து போன நெஞ்சம் கொண்டவனானான்; காதல் முற்றி, நம்பிக்கை இழந்த நிலையில், மடல் ஊர்தலைத் துணிகிறான். ஆனால் ஊரார் கண்ணுக்கு அவன் கழி காமம் உற்றானாகத்தான் தோன்றுவான்; காம வேட்கையாலேயே மடலேறத்த துணிந்தான் என அவர்கள் பழித்துரைப்பர். ஊரார் அவனைப்பற்றி காமுற்றார் என்று கருதுவர் என்பதால் அச்சொல்லாட்சி வந்தது.

'காமுற்றார்' என்ற சொல் காமம் மிக்கார் எனப்பொருள்படும்.

நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன்; இன்று காமம் கொண்டார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவன் காமம் மிகுந்து நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

நாணமும் தளராத உள்ளமும் நான் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடல் குதிரையைக் கொண்டுள்ளேன்.