தலைவியின் கண்கள் காதலரைக் காணும் விருப்பம் மேம்பட்டு விரைதலைக் குறிப்பது விதும்பலாகும். அவரைக் காட்டியவை அவளது கண்கள்தாம். இப்பொழுது உறக்கமின்மையாலும் அழுகையை அடக்கமாட்டாமையாலும் ஊரறியப் பிரிவின் துன்பத்தைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதும் அவைதாம். .தலைவியின் கண்களின் நலம் குறைவதையும் தலைவனைக் காண்டற்கு விரைதலையும் விளக்குகிறது இவ்வதிகாரம்
கண்விதுப்பு அழிதல்
இவ்வதிகாரத்துப் பாடல்கள் அனைத்தும் தலைவி கூற்றாக அமைந்துள்ளன.
தொழில் காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவுத் துன்பத்தால் உள்ளம் வாடுகின்றது. உடலும் அழிகின்றது. உடம்பு உறும் துயரத்தை தூக்கமொழிந்த அவள் தோற்றமும் அவளது கண்கள் சொரியும் நீரும் மறிக்க முடியாதபடி ஊருக்கே பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
தான் அனுப்வைக்கும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதான் காரணம். பின் ஏன் அவை இப்பொழுது அழுகின்றன. சரி. ஆராயாமல் காதல் கொண்டுவிட்டன அப்பொழுது. அதன்பிறகு பழகிய நாட்களில் நன்கு புரிந்துகொண்டோமே. இன்று ஏன் அவரிடம் பரிவு காட்டாமல் கண்கள் துன்பம் கொண்டு அழுகின்றன. இக்கண்கள்தாம் முதலில் அவரைச் சடக்கென்று பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்தன. அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம். தீர்வு காண முடியாத காதல்நோயினைத் தந்து தன்னைத் தூங்கவிடாமல் செய்ததும் இதேகண்களே. தனக்குத் துன்பத்தினை உண்டாக்கிய கண்கள் நன்றாகத் துன்பம் அடையட்டும் என நிலைதடுமாறிய மனத்துடன் கதறுகிறாள். அவளை விரும்பி விரைந்து வாராவிட்டாலும் கொழுநரைக் காணுவதற்காகக் அவளது கண்கள் அமைதியற்று அலைமோதுகின்றன.என்று கூறுகிறாள். அவர் வரவு பார்த்துக்கொண்டே கண்கள் உறங்குவது இல்லை; வந்தால் மீண்டும் பிரிவு ஏற்படுமே என்ற கலக்கத்தில் தூக்கமும் இல்லாமல் போகப் போகிறது. இரண்டுவழிகளிலும் உறக்கம் தொலைந்தது. தனது காதல்நோயினை தமது கண்களே பறை அறைவித்துதுப் பலரறியச் சொல்லுகின்றன என்று வருத்தம் மேலிடச் சொல்கிறாள் அவள்..
கலுழும் கண், உணராவாய் பைதல் உழப்பும் கண் என்று கண்ணீர் சொரியும் கண்களையும், நீருலந்த கண், உழந்துழந்து உள்நீர் அற்ற கண் என்று அழுதழுது கண்ணீர் வற்றிய கண்களையும், இமைகள் மூட இயலா கண், ஆரஞர் உற்ற கண் என்று துஞ்சா கண்களையும், அமைவிலா கண் என்று அலைந்துதேடும் கண்களையும், அறைபறை கண் என்று மறைக்க இயலாமல் துயர் பறைசாற்றும் கண்களையும் வரைந்து தலைவி துன்புறும் வடிவைக் காட்சிப்படுத்தி, படிப்போர் மனதில் கண்ணீர் மல்கச் செய்கின்றன அதிகாரத்துக் குறட்பாக்கள்,
காதல் கொண்டவர்கள் ஒருவர்க்கொருவர் அருகில் இருப்பதையையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதையுமே பெரிதும் விரும்புவார்கள். காதலர் பிரிந்துள்ள வேளையில் அவரை மீண்டும் எப்பொழுது காணப்போகிறோமோ என்ற விழைவில் இருக்கும் தலைவியின் மனநிலையை நன்கு காட்டுகிறது இவ்வதிகாரப் பாடல்கள். மிகுந்த சோர்வுடன் உள்ள அவள் துயரம், அழுகை, சினம், வெறுப்பு, சலிப்பு, நகைச்சுவை என்று ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றோர் உணர்ச்சிக்கு மாறிக் கொண்டே இருப்பதைக் கண்கள்வழி கவிதை நயத்துடன் காட்டுகிறது கண்விதுப்பு அழிதல் அதிகாரம்.
பரிந்துணரா, கதுமென, பெயலாற்றா, படலாற்றா, ஓஓஇனிதே, உழந்துழந்து, பெட்டார், அறைபறைகண்ணார் என்பன நினையத்தக்க சொற்களாக உள்ளன.