இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1178



பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1178)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

மணக்குடவர் உரை: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?

பரிமேலழகர் உரை: ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

இரா சாரங்கபாணி உரை: மனத்தால் விரும்பாமல் காதலித்தவர் உள்ளார் எனினும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறவில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.

பதவுரை: பேணாது-விரும்பாது, போற்றாது, வைத்துக்காவாது; பெட்டார்-விழைந்தவர், விரும்புபவர்; உளர்மன்னோ-இருக்கின்றார்களா, இருக்கின்றனர் அன்றோ?-மன்னோ-(ஒழியிசை); மற்று-ஆனால், பின்; அவர்-அவர்; காணாது-பாராது, காணாமல்; அமைவு- பொருந்தி இருப்பதாக, போதும் என்று அமைதல்; இல-இல்லாதவை; கண்-கண்.


பேணாது பெட்டார் உளர்மன்னோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?;
பரிப்பெருமாள்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?;
பரிதி: பேணாது துயரமுறுத்தவராகிய;
காலிங்கர்: தோழீ! இதற்கு என்னை காரணம்? உலகத்து தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ? எங்கும் கண்டது இல்லை;.
பரிமேலழகர்: ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்;
பரிமேலழகர் குறிப்புரை: செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, [நலம் பாராட்டல்-தலைவியைப் புணரா முன் நின்ற வேட்கையன்பு புணர்ந்த பின்பும் மிகுதலால் அப்புணர்ச்சி நலத்தைத் தலைமகன் புகழந்து சொல்லுதல்; பிரிவச்சம்-பிரிதற்கு அஞ்சுதல். தலைவன்தான் பிரிய அஞ்சுதலும் அவளைப் பிரிய அஞ்சுவித்தலும் பிரிவச்சமாகும்; வன்புறை-தலைமகள் தலைவன் பிரிவனோ என்று ஐயுறவிடத்து ஐயம்தீர அவன் வற்புறுத்திக் கூறுதல்]

'விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?' என்றும் 'விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ?' என்றும் 'நெஞ்சால் விழையாது சொல்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர்', 'என்மீது உண்மையான காதல் இல்லாமல் என்னுடன் பொய்யுறவு காட்டியவர் (என்னைப் பிரிந்து) எங்கோ இருக்கிறாராம்!', 'நெஞ்சால் விரும்பாது சொல்லால் மாத்திரம் விருப்பங் காட்டினவர் இருக்கின்றார். (அவரால் என்ன பயன்?)', 'நெஞ்சால் விரும்பாமல் சொல்லால் மாத்திரம் விரும்பியவர் இவ்விடத்தே உளர்', என்ற பொருளில் உரை தந்தனர்.

தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றவர்க் காணாது அமைவில கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிப்பெருமாள் ('காணாதமைவில என்பதற்குக் 'காணாதிமையல' பாடம்): நம்மைக் கண்டால் விருப்பமின்றிப் போனவரைக் காணாது இமைக்கின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: சொல்லாது பிரிந்த தலைமகனது பெருமையை உட்கொண்டு வேட்கையால் கூறியது. விரும்பத் தகாது என்றமையால் சொல்லாது பிரிதலாயிற்று.
பரிதி: நம் நாயகரைக் காணாமல் கண் துயிலாது என்றவாறு.
காலிங்கர்: ('கொண்கணை' பாடம்) தோழீ! இவ்விடர் இரக்கத்திற்கு ஏதுவாகிய கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை.
பரிமேலழகர்: அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
பரிமேலழகர் குறிப்புரை: மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை' என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை. ['மற்று' என்னும் இடைச்சொல் உளர் என்னும் வினையை மாற்றி இலர் என்னும் வினையைத் தந்தமையின் வினைமாற்று ஆயிற்று; மன்னோ-என்பதிலுள்ள ஓகாரம் அசைநிலை]

'விருப்பமின்றிப்போனாலும் அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்' என்றும் 'கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை' என்றும் 'அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லை; என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'மற்றவர்க்' என்பதற்குக் 'கொண்கணை' எனப் பாடம் கொள்கிறார். பரிப்பெருமாள் காணாதமைவில என்பதற்குக் 'காணாதிமையல' என்று பாடம் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைப் பாராது கண்கள் தூங்கா', 'அவரைக் காணாமல் (உறக்கமின்றி அழுது) தவிக்கின்றன. என்னுடைய கண்கள். என்ன வஞ்சனை', 'அவரைக் காணாமற் கண்கள் அமைதி யடையமாட்டா', 'அவரைக் காணமுடியாமல் கண்கள் வருந்துகின்றன' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவரைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையமாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேணாது பெட்டார் உளரோ? விரைந்து வராதவராயிருந்தாலும் காதலரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறா என்பது பாடலின் பொருள்.
'பேணாது பெட்டார்' என்றால் என்ன?

அவரைப் பார்க்கும்வரை என் கண்கள் அமைதியுறா என்கிறாள் தலைவி.

தம்மைக் காணாது அமைகின்ற கொழுநரைத் தாம் காணாது அமைதி பெறுகின்றதில்லை என் கண்கள்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தொலைவு சென்றுள்ள கணவரது பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்தி உடல் மெலிகிறாள் தலைவி; அவரை நினைத்து அழுகை வரும்பொழுது கணவரை முதன் முதலில் காண்பித்துக் காதல்நோய் உண்டாக்கிய இக்கண்கள் ஏன் அழுகின்றன இப்பொழுது? எனப் பொருமுகிறாள்; இவ்வளவு நாள் பழகி அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னரும் அவரைப் பரிவுடன் எண்ணாது இப்பொழுது ஏன் கண்கள் உகுக்கின்றன? எனக் கேட்கிறாள்; அவரைக் காதலிக்க வைத்த என் கண்களே இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம்; கணவர் நினைவு கண்முன் தோன்றி அவளது உள்ளம் நிலைகுலைந்து அதன் விளைவாக வெளிவரும் கண்களின் நீரும் வற்றிவிட்டது; தனக்குக் காதல் நோயைத் தந்த தன் கண்கள் தாமும் தூங்காமல் துன்பத்தில் உழகின்றனவே என்கிறாள்; நன்றாகத் துன்பப்படட்டும் கண்கள், தனக்குத் துன்பம் நேரக் காரணமான கண்கள் அழுது துயிலாமல் இருப்பது கண்டு தனக்கு இனிமையாகத்தான் இருக்கிறது எனவும் சொல்கிறாள்; தாம் விரும்பியவரைக் கண்டு நெகிழ்ந்த கண்கள் நீரின்றிப் போகட்டுமே எனவும் உரைத்துக் கொண்டிருக்கிறாள்

இக்காட்சி:
பணி காரணமாக மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார் தலைவர். அவர் திரும்பி வரும் காலம் நீட்டிப்பதாக உணர்கிறாள் தலைமகள். காதலர்க்குத் தம் மீது விருப்பம் இருந்தால் விரைந்து திரும்பிவந்து தண்ணளி செய்திருப்பாரே! அவர்க்கு தன்மேல் விருப்பம் இல்லாமல் இருப்பதால்தானே உடன் வீடு திரும்பவில்லை என்று அவளாகவே உண்மைக்கு மாறான ஒரு காரணம் கற்பித்துக் கொள்கிறாள். ஆனாலும் அவரைக் காணாமல் அவள் கண்கள் உறக்கம் கொள்ளாது அலை பாய்கின்றன எனவும் சொல்கிறாள். 'இப்படிக் காதலர் ஒருவர் விரும்பி விரைந்து தம்மைக் காணத் துடிக்காதிருக்கத் தாம் மட்டும் அவரைக் காண விழைவார் உலகத்தில் இருப்பார்களா என்ன (என்னைத் தவிர)?' எனவும் சலிப்புடன் கூறுகின்றாள் தலைவி.

தன் கண்கள் தன் காதலரைப் பார்க்க அவாவுவதை வெளிப்படுத்துகின்றாள் தலைவி. அவர்மேல் சினமும், வெறுப்பும்தானே இக்கண்கள் கொள்ளவேண்டும்? ஆனால் அவரைக் காணமுடியாமல் பரபரத்து இவை அமைதியிழந்து வருந்துகின்றனவே! என வியக்கிறாள் அவள். கண்கள் அவரைக் காணாதிருக்கப் பொறுமையின்றித் தவிக்கின்றன; அவரைக் காணவில்லையே என்று கண்கள் மூடாமல் இருக்கின்றனவாம். அதாவது அவரைப் பாராது கண்கள் தூங்கா எனச் சொல்ல வருகிறாள். தன் சினத்தைக் கண்களின்மேல் ஏற்றிச் சொன்னவள் பின் தன்னை முன்வைத்து 'இவ்வுலகத்தில் தம்மை விரும்பாதவரைத் தாம் காண விழைவாரும் உளரோ? அப்படிப்பட்டவளை எங்கும் காணமுடியாது, நான் மட்டும்தான் அப்படி இருக்கிறேன்!' எனக் கூறுகிறாள்.

'பேணாது பெட்டார்' என்றால் என்ன?

'பேணாது பெட்டார்' என்பதற்கு விரும்பத்தகாததனை விரும்புவார், விரும்பாதவரைத் தாம் விரும்புவார், நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல் மாத்திரத்தால விழைந்தவர், மனமின்றியே காதலித்தார், மனத்தால் விரும்பாமல் காதலித்தவர், உள்ளன்பு இல்லாமல் உறவு கொண்டவர், பேணும் விருப்பமில்லாமலே பேணும் விருப்பமிருப்பதாகக் காட்டியவர், நெஞ்சால் விரும்பாமல் சொல்லால் மாத்திரம் விரும்பியவர், விருப்பத்தை உண்டாக்கிவிட்டு அதைப் போற்றாதவர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பேணாது என்ற சொல்லுக்கு விரும்பாது என்பது பொருள். பெட்டார் என்ற சொல் நண்பர் அல்லது காதலித்தவர் என்ற பொருள் தரும்.
தன் பிரிவை மனைவி தாங்கமாட்டதவள் என அறிந்தும் பிரிந்துபோனார் தலைவர் என்பதைப் 'பேணாது' என்றும் பிரியும் முன் 'விரைவில் திரும்பிவிடுவேன்; அஞ்சேல்' என்று சொன்னவரைப் 'பெட்டார்' என்றும் தலைவி குறிக்கிறாள்.
பின்வரும் பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண் (புணர்ச்சிவிதும்பல் 1283 பொருள்: என்னைக் கருதாமல் தான் விரும்பியவற்றையே செய்தாலும், கணவனைப் பார்க்காமல் என் கண்கள் அமைதியுறுவதில்லை) என்ற குறளில் இங்கு சொல்லப்பட்டுள்ள பொருள் தோன்றுமாறு சொற்றொடர்கள் ஆளப்பட்டுள்ளன.

'பேணாது பெட்டார்' என்ற சொற்றொடர் 'விரும்பாதவரைத் தாம் விரும்புவார்' என்ற பொருள் தரும்.

தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ? விரைந்து வராதவராயிருந்தாலும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விரைந்து வந்து காட்சி அளிக்காமல் காலம் தாழ்த்துகிறாரே என்னும் தலைவியின் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

விரும்பி விரைந்து திரும்பாதவரைக் காதலிப்பார் உள்ளார்களா என்ன? எனினும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறல் இல்லை.