இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1175



படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1175)

பொழிப்பு (மு வரதராசன்): அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன

மணக்குடவர் உரை: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன.
இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன.
(காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது.

சி இலக்குவனார் உரை: எனக்குக் கடலும் சிறிதாகுமாறு பெரிதாய் காதல் நோயைச் செய்த என் கண்கள் தாமும் துயிலமுடியாதனவாய் துன்பப்படுகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்.

பதவுரை: படல்ஆற்றா-துயிறல் மாட்டா வண்ணம்; பைதல்-துன்பம்; உழக்கும்-உறும்; கடல் ஆற்றா-கடலும் போதாதபடி, கடலும் நிறையாற்றா, கடலும்(சிறிதாகும்) கடலினும் பெரிதாகிய, கடல் கொள்ளாதபடி; காம-காமமாகிய; நோய்-பிணி; செய்த-இயற்றிய; என்-எனது; கண்-கண்.


படல்ஆற்றா பைதல் உழக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிப்பெருமாள்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிதி: துயரமாற்றாமல் அழும்;
காலிங்கர்: தோழீ! ஒருபொழுதும் துயில மாட்டாமல் இங்ஙனம் சால உறுதுயர் உழக்கும்; யாவை எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது) அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன; [அத்தீவினையால் - காமநோயைச் செய்த அத்தீவினையால்; தாமும் -கண்களும்; துயில்கிலவாய்-தூங்காதனவாகி]

'உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூங்கமுடியாது துன்பப் படுகின்றன', 'அக்கொடுஞ் செயலால் தாமும் துயில் கொள்ளாதனவாகித் துயருறும்', 'இமை மூடாமல் விழித்துக் கொண்டிருந்து தாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே', 'அத்தீவினையாலே தாமும் தூக்கமில்லாது துன்புறுகின்றன' என்ற பொருளில் உரை தந்தனர்.

இமைகள் மூடமுடியாமல் துன்பமுறுகின்றன என்பது இப்பகுதியின் பொருள்.

கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்
மணக்குடவர் குறிப்புரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார் தமக்கும் இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. இவை எல்லாம் ஒன்றின் ஒன்று வந்ததாகக் கொள்ளப்படா. இவ்வதிகாரத்து காமவேதனையால் கண்ணுக்கு உறுவன எல்லாம் கூறப்பட்டது என்றவாறு.
பரிதி: கடலினும் பெரிதாகிய காமநோய் செய்த கண்கள் என்றவாறு.
காலிங்கர்: கடலும் நிறையாற்றாப் பெருவெள்ளம் ஆகிய காமநோய் உற்ற என் கண்களானவை. காலிங்கர் குறிப்புரை: யான் இதற்கு என் செய்யத் தகுவது என்றவாறு.
பரிமேலழகர்: எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது. [காட்சியான் - தலைமகனைக் காணுதலால்; அதனை - காமநோயை]

'கடலினும் மிக்க காமநோயைச் செய்த என் கண்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடலினும் பெரிய காமம் தந்து என் கண்கள்', 'கடலைவிடப் பெரிதாய்க் காமநோயைச் செய்த என் கண்கள்', 'சமுத்திரத்தைவிடப் பெரிய காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு என் கண்கள்', 'கடலும் ஒப்பாகாது சிறிதாகும்படி பெரிதாகிய காம நோயை எனக்குச் செய்த கண்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கடல் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கடல் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் படல்ஆற்றா துன்பமுறுகின்றன என்பது பாடலின் பொருள்.
'படல்ஆற்றா' என்றால் என்ன?

'தாங்கமுடியாத காதல்நோய் வாட்டுவதால் கண்மூடித் தூங்கமுடியவில்லை' - தலைவி.

'கடலினும் பெரிதான காதல் நோயை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் உறங்கமுடியாமல் தவிக்கின்றன என் கண்கள்' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தொலைவு சென்றுள்ள கணவர் திரும்பி வருவதைக் காணப் பொறுமையின்றித் துடித்துக் கொண்டிருக்கிறாள் தலைவி. அவரைக் காணாத ஏமாற்றத்தால் உண்டாகும் சினத்தைத் தன் கண்களிடம் காட்ட முற்படுகிறாள். அப்பொழுது காதல் கணவரை முதன் முதலில் கண்ட நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றுகின்றன. தணியாத காதல்நோயைத் தந்த காதலவரை இதே கண்கள்தாமே அப்பொழுது காண்பித்தன? இப்பொழுது அவரைக் காணமுடியவில்லையே என்று அதே கண்கள் அழுகின்றனவே; அன்று ஆராய்ந்தறியாது அவரைக் கண்டு காதலுற்ற கண்கள் 'இது நம்மால்தானே உண்டானது' என்பதை உணராமல் துன்பம் கொள்வது ஏனோ; முன்னம் அவரைச் சடக்கென்று பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்த அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு நகைக்கத்தக்கதாக இருக்கின்றதாம்; கண்கள் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்ததால் சொரியும் கண்ணீரும் நின்றுவிட்டன. அவரைப் பார்த்துக் காதல் கொண்டு காம நோயைத் தன்னிடம் தந்துவிட்டு இந்தக் கண்கள் தாமும் தாங்கமுடியாமல் கண்ணீர் வற்றும் அளவு அழுது தீர்த்துவிட்டனவே என எண்ணிக்கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் விரைந்து திரும்பி வந்து சேராமல் இருப்பதால் காதல்நோய் மிகக் கொண்டு தாங்கமுடியாமல் தவிக்கிறாள் தலைவி. அவள் மனம் வருந்தி நிலை கொள்ளாமல் தவிக்கிறது; உறக்கமும் இல்லாமல் போகின்றது.
வள்ளுவர் பெண்களுக்கு உண்டாகும் காமநோயைச் சொல்லும்போது பலவிடங்களில் (கடலன்ன காமம் உழந்தும்....(1137), காமக் கடல்மன்னும் உண்டே .....(1164), இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனின் பெரிது (1166)) என அது கடலளவு என்று கூறுவார். இங்கும் கடலும் கொள்ளா அளவு என உரைக்கப்பட்டது.
காமநோய் காட்சியால் வந்ததனால், கண்ணே அந்நோயைத் தந்ததாகக் கூறினாள். காமநோய் கண்ணால் வந்தது; காமநோயால் தூக்கம் போனது; உறக்கம் இல்லாது கண்கள் கடும் துன்பம் அடைகின்றன. இத்துயரத்துக் காரணமான காமநோயைத் தந்தது அவள் கண்கள்தாமே எனத் தன் கண்களைக் குற்றம் சாட்டுகிறாள். குறுந்தொகைப் பாடல் ஒன்றும் கண் தர வந்த காமம் ஒள் எரி (305:1 பொருள்: தலைவரைக்கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளியதீ) என்று சொல்லியது.
தலைவி தனது கண்கள்தாம் தங்கள் காதலைத் தொடங்கி வைத்தன என்பதை நினைந்து சொல்கிறாள். ஆனால் அவையும் அவர் வரவை நோக்கித் தூங்காமல் இருக்கின்றன என்பதை உணர்கிறாள். 'எனக்குக் காதல் நோயைச் செய்த என் கண்கள் தாமும் உறங்கமுடியாதனவாய் துன்பத்தில் உழகின்றனவே' எனக் கூறுகிறாள்.

படல்ஆற்றா' என்றால் என்ன?

'படல்ஆற்றா' என்ற தொடர்க்கு உறங்கமாட்டாவாய், துயரமாற்றாமல், ஒருபொழுதும் துயில மாட்டாமல், துயில்கிலவாய், உறங்கமுடியாமல், தூக்கமின்றி இமைபொருந்த இயலாவாய், தூங்கமுடியாது, துயில் கொள்ளாதனவாகி, இமைமூடாமல் விழித்துக்கொண்டு, மூடி உறங்குவதற்கும் முடியாமல், தூக்கமில்லாது, துயிலமுடியாதனவாய், இமை பொருந்தாமல், தூக்கம் பெறாதனவாய், படமுடியாத துன்பத்தைப் பட்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

படல்ஆற்றா என்ற தொடர்க்கு மூட இயலாத என்பது பொருள். இங்கு இமைகள் மூட இயலாததைக் குறிக்கிறது. கண்படல் என இயைந்து உறக்கத்தைக் குறிக்கும் எனச் சொல்லி கண்படல் என்பது கண் பொருந்துதல் எனப் பொருள்பட்டு உறக்கத்தைக் குறிக்கும் என படல்ஆற்றா' என்ற தொடரை விளக்குவார் இரா.சாரங்கபாணி.
கண்கள் மூட இயலாமல் நாளும் துயில மாட்டாமல் தவித்தாள் தலைவி. அதனாலும் அழுதலாலும் கண்கள் துன்புறுகின்றன.

படல் ஆற்றா' என்ற தொடர் '(கண்கள் உறங்குவதற்கு) மூட இயலாத' எனப் பொருள்படும்.

கடலும் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் இமைகள் பொருந்தாமல் துன்பமுறுகின்றன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரை நினைந்து ஒருபொழுதும் உறங்கமாட்டாதவளாய் தலைவியின் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

கடல் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் இமைகள் மூடமுடியாமல் துன்பம் உறுகின்றன.