ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம்:
பதவுரை: ஓஒ-(மிகுதிப் பொருளில் குறிப்பு); இனிதே-நன்றானதே; எமக்கு-நமக்கு; இந்நோய்-இந்தப் பிணி; செய்த-இயற்றிய; கண்-கண்; தாஅம்-தாங்கள். .
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகவும் இனிது எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் .
பரிப்பெருமாள்: மிகவும் இனிது எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும்;
பரிதி: ஓகோ நல்லதே நமக்கு விரகத்தைக் காட்டித் தந்து பின்பு தாமே;
காலிங்கர்: தோழீ! நான் வியப்ப இனியது ஒன்றே; யாது எனின், முன்னம் தாம் அவரைக் கண்டு பின் எமக்கு இவ்வாறு இடந்தரும் நோய் செய்த கண் தாம்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மிகவும் இனிதாயிற்று எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.
'மிகவும் இனிது, எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவோ மகிழ்ச்சி.; எனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும் ', 'மிகவும் இனிதாயிற்று எமக்கு இக்காம நோயினைச் செய்த கண்கள் தாமும் ', 'மிகவும் இனிதாயிற்று எமக்கு இந்த் நோயை உண்டாக்கிய கண்கள் தாம்', ' மிகவும் இனியதே எமக்கு இக் காதல் நோயைச் செய்த கண்கள் தாமும் .', என்ற பொருளில் உரை தந்தனர்.
ஓகோ நல்லாத்தான் இருக்கிறது! நமக்குக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் என்பது இப்பகுதியின் பொருள்.
இதன்பட்டது:
பதவுரை: இதன்-இதன்கண்; பட்டது-அகப்பட்டுக் கொண்டது..
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயகத்துப்பட்டது
மணக்குடவர் கருத்துரை: இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: இந்நோயகத்துப்பட்டது
பரிப்பெருமாள் கருத்துரை: இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது
பரிதி: கலுழ்ந்து அழுவது. இதற்கு என் செய்வேன் என்றவாறு.
காலிங்கர்: (இடர்ப்பட்டது என்பது இவரது பாடம்) இப்பொழுது அழுதும் துயிலாதும் இங்ஙனம் இடர்ப்பட்ட இது என்றவாறு.
பரிமேலழகர்: இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது;
'இந்நோயகத்துப்பட்டது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் இப்பகுதிக்கு 'இடர்ப்பட்டது' எனப் பாடங்கொண்டு அழுதும் துயிலாதும் இடர்ப்பட்ட இது' எனப் பொருள் கூறினார். பரிதியும் பரிமேலழகரும் 'அழுதற் கண் பட்டது' என்று உரைத்தனர்
இன்றைய ஆசிரியர்கள் ' அத்துன்பப்படுவது', 'துயிலாமல் துன்பப்பட்டது', 'தூங்க முடியாது. இந்நோயுளகப்பட்டுக் கொண்டது', 'துயிலாமல் அழுதல் துன்பத்தின்கண்ணே பட்டுள்ளன. இந்நிலை' என்றபடி பொருள் உரைத்தனர்.
அழுதும் துயிலாமலும் துன்பப்பட்டது என்பது இப்பகுதியின் பொருள்.
|