இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1174



பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1174)

பொழிப்பு (மு வரதராசன்: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டுவிட்டன

மணக்குடவர் உரை: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன.
கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.
(நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: மை பூசப்பெற்ற கண்கள் நான் பிழைக்க முடியாத வகையில் தணியாத நோயை என் கண்ணே தங்க வைத்துத் தாமும் அழமுடியாதவாறு கண்ணீர் வற்றி விட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

பதவுரை: பெயல்ஆற்றா-பெய்ய முடியாத; நீர்-நீர்; உலந்த-வற்றிய; உண்-உண்ட; கண்-கண்; உயல்-தப்புதல்; ஆற்றா-மாட்டா வண்ணம்; உய்வுஇல்-ஒழிவு இல்லாத; நோய்-துன்பம்; என்கண்-என்னிடத்தில்; நிறுத்து- (நிறுத்தி) நிலை பெறச்செய்து.


பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்கண்கள் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன;
பரிப்பெருமாள்: உண்கண்கள் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன;
பரிதி: மழை பெய்வதுபோலக் கண்ணீர் சொரிந்து;.
காலிங்கர்: தோழீ! தாமும் அகத்துள்ள நீர் ஒழிந்தன என மையுண்டு அகன்ற கண்ணானவை
பரிமேலழகர் (இதுவும் அது): உண்கண்கள் தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.

'உண்கண்கள் அழமாட்டாவாய் நீர் உலர்ந்தன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்கள் இனி அழமுடியாமல் வறண்டன', 'என் மையுண்ட கண்கள் தாமும் அழ இயலாதவாறு நீர்வற்றி விட்டன', 'அழுது அழுது கண்ணீரற்று வறண்டு போய்விட்டனவே இந்தக் கண்கள்', 'என் கண்கள் தாமும் அழுதழுது, நீர் சொரிய முடியாது வற்றிவிட்டன', என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலரை உண்ட கண்கள் அழமாட்டாவண்ணம் கண்ணீர் வற்றிவிட்டன என்பது இப்பகுதியின் பொருள்.

உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி.
மணக்குடவர் குறிப்புரை: கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.
பரிப்பெருமாள்: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி.
பரிப்பெருமாள் குறிப்புரை: கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியது..
பரிதி: என் ஆவியைக் காமநோய் செய்தது இக்கண் என்றவாறு.
காலிங்கர்: உய்தற்கு ஓர் உபாயம் இல்லாத உறுதுயரத்தை என் கண்ணும் மருவுறுத்தி வைத்து. இனி யாதோ செயத்தக்கது என்றவாறு.
பரிமேலழகர்: அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; [உய்யமாட்டாமை - பிழைக்க மாட்டாமை; ஒழிவில்லாத நோய் - நீங்காத நோய்]
பரிமேலழகர் குறிப்புரை: நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம். [அதனால் - காட்டுதலால்; தமக்கு- கண்களுக்கு]

'உய்ய மாட்டாத உறுதுயரத்தை என்கண் நிறுத்தி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தப்ப முடியாத நோயை எனக்குத் தந்து விட்டு', 'அன்று தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து', 'சகிக்கமுடியாத ஓயாத காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு', 'பிழைக்க முடியாதபடி உய்வில்லாத வருந்துகின்ற நோயை என்னிடத்திலே நிறுத்திவிட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலரை உண்ட என் கண்கள், உயல்ஆற்றா தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து, அழமாட்டாவண்ணம் கண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டன என்பது பாடலின் பொருள்.
'உயல்ஆற்றா' என்றால் என்ன?

பிரிவாற்றாமையால் அழுது அழுது இனி அழமுடியாமல் வற்றி வறண்டு போய்விட்டன கண்கள் என்கிறாள் தலைவி.

தாங்க முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டு தாமும் மீளமுடியாமல் இன்றைக்கு அழக்கூட முடியாமல் நீர்வற்றிப் போயின என் கண்கள்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தொலைவு சென்றுள்ள கணவர் எப்பொழுது திரும்பி வருவார் என்று அவரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள் தலைவி. பிரிவின் ஆற்றாமையால் உடல் மெலிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள்; அவரை நினைத்தவுடன் அவள் கண்கள் நீரால் நிறைந்துவிடுகின்றன. அவள் அழுகிறாள். அப்பொழுது காதல் கணவரை முதன் முதலில் கண்ட நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றுகின்றன. காதல்நோயைத் தந்த காதலவரை இதே கண்கள்தாமே அப்பொழுது காண்பித்தன? தாமே குற்றம் செய்துவிட்டு இப்பொழுது தாமே ஏன் அழுகின்றன?' தலைவி மேலும் எண்ணிப் பார்த்து 'அன்று அவரைக் கண்கள் கண்டபோது அவரைப் பற்றி ஆய்ந்தறியாமல் காதல் கொண்டேன். ஆனால் இவ்வளவு நாள் பழகி அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னர் அவரைப் பரிவுடன் எண்ணாது கண்கள் ஏன் இப்பொழுது நீர் சொரிந்து துன்பப்படுகின்றன?' எனத் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறாள். ஆராய்ந்து பார்த்தா காதல் நிகழ்கிறது? ஆனாலும் தலைவிக்குப் பழைய நினைவுகள் நாளும் தோன்றி அவளை வாட்டுகின்றன. இக்கண்கள்தாம் முதலில் அவரைச் சடக்கென்று பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்தன. அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம். இங்ஙனம் கணவர் வரவை நோக்கியிருக்கும் தலைமகள் துயரமும் சினமும் மாறிமாறித் தன்னை ஆட்கொள்ள மனம் நிலை கொள்ளா நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவர் நினைவு கண்முன் தோன்றித் தோன்றி தலைவியின் உள்ளத்தை நிலைகுலையச் செய்கிறது. அது பொறுக்கமுடியாமல் கண்கள் அழுதுகொண்டேயிருக்கின்றன. சொரியும் கண்ணீரும் நின்றுவிட்டன. அவரை முதலில் பார்த்துக் காதல் நோயைத் தன்னிடம் தந்துவிட்டு இந்தக் கண்கள் தாமும் தாங்கமுடியாமல் கண்ணீர் வற்றும் அளவு அழுது தீர்த்துவிட்டனவே என்கிறாள் தலைவி.

அழுதற்கு இயலாத கண்ணீர் வற்றிய நிலையில் இருக்கின்றன அவள் கண்கள்; தனது ஆற்றாமையை மறுபடியும் கண்ணின்‌ மேலிட்டுச் சொல்கிறாள். இக்கண்கள் தலைவரைப் பார்த்ததனால்தானே உய்வில்நோய் உண்டானது. ஒழிவில்லாத காதல்நோயினை ‘உய்வில் நோய்’ என்று அவள் கூறுகிறாள். 'அன்று காதலரைக் காட்டிக் காதல் நோயில் விழவைத்து அதிலிருந்து மீள வழி இல்லாமல் செய்து விட்ட என் கண்கள் இன்றைக்கு அவரை எண்ணி எண்ணித் தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே!' எனப் புலம்புகிறாள் அவள்.

'உயல்ஆற்றா' என்றால் என்ன?

'உயல்ஆற்றா' என்ற தொடர்க்கு உயல் ஆற்றாத என்மாட்டு, உய்தற்கு ஓர் உபாயம் இல்லாத, யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய, தப்பிப் பிழைக்க முடியாத, யான் உயிர்பிழைக்க மாட்டாத, தப்ப முடியாத, சகிக்க முடியாதபடி, தப்பிப் பிழைக்க முடியாத, பிழைக்க முடியாதபடி, நான் பிழைக்க முடியாத வகையில், நான் தப்பமுடியாமைக் கேதுவான, தீராத நீக்கவும் முடியாத என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'உயல்ஆற்றா என்றதற்கு நேர்பொருள் உய்ய இயலாத அதாவது தப்பிப் பிழைக்க முடியாத என்பது.
உயலற்றா உய்வில்நோய் என்னிடம் தந்து என்றபடி மற்ற பழம் உரையாசிரியர்கள் பொருள் கூற, மணக்குடவர் உயலாற்றா என்கண் எனக் கொண்டுகூட்டிப் பொருள் கூறியுள்ளார். இவர் உரைப்படி தப்பமுடியாத என்னிடம் நோய் தந்து என்றாகிறது.
நான் தப்பமுடியாமைக் கேதுவான நோயைத் தந்த கண்களைக் குற்றம் சொல்கிறாள் தலைவி. அவள் சொல்வது இக்கண்கள்தாமே அவரைக் காண்பித்துக் காதல் கொள்ளச் செய்தன என்ற பொருளில். ஏன் தப்ப முடியாத நோய் என்கிறாள். தலைவி கணவருடன் நன்கு பிணிக்கப்பட்டுவிட்டாள் என்பது சொல்லவந்த கருத்து. அதைக் காதல்துன்பத்திலிருந்து தப்ப முடியாத நோய் எனச் சொல்கிறது பாடல். இத்தொடர்க்கு தாங்கமுடியாத (காமநோய்) எனப் பிறர் உரை செய்தனர்.

'உயல்ஆற்றா' என்றதற்குத் தப்பிச் செல்ல வழியில்லாத என்பது பொருள்.

தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து அழமாட்டாவண்ணம் கண்னீர் வற்றிவிட்டன காதலரை உண்ட என் கண்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிந்து சென்றுள்ள கணவரை நினைந்து நினைந்து தன் கடைசித் துளிக் கண்ணீரும் தீர்ந்து போனதே என்னும் தலைவியின்கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

மீட்சி காண இயலாத நோயை என்னிடம் நிலைபெறச் செய்த என் கண்களின் நீர் இன்னும் அழ இயலாதவாறு வற்றிப்போயின.