அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (குறள் எண்: 35) என்று குறளின் பாயிர அதிகாரத்துள் ஒன்றான அறன் வலியுறுத்தலில் கூறினார் வள்ளுவர். அழுக்காறு மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இடமாக விளங்குவதினால்தான் வள்ளுவர் தவிர்க்க வேண்டுவனவற்றுள் அழுக்காற்றுக்கு முன்னிடம் தருகின்றார். பெருமைமிக்க மனிதனாகத் திகழ்வதற்கு வேண்டிய அறப்பண்புகளுள் இன்றியமையாததாக விளங்குவது அழுக்காறின்மை. இவ்வதிகாரம் பிறராக்கம் கண்டு தன்உள்ளத்தில் கோணல்கள் அதாவது தீய எண்ணங்கள் தோன்றாமற் செய்தலை அறிவிக்க வந்தது.
அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயரானது எனக் கூறுவர். அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது. அழுக்காறாமை என்பதற்குப் பொறாமைப்படாதிருத்தல் என்பது பொருள்.
புகழ், அறிவு, வலி, வெற்றி, பொன், நல்லூழ், நுகர்ச்சி, அழகு, பெருமை, துணிவு, நோயின்மை, போன்ற பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. இவற்றை மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாமலும் அவற்றைப் பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவது அழுக்காறு. அழுக்காறுடையர் இவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து களங்கப்படுத்தவும் செய்வர்.
'கல்வி, புகழ், தொழில் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்' என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர். ஆனால் பொறாமை என்பது வேறு; பிறரை ஒப்பீடு செய்து அவரினும் மிஞ்சவேண்டும் என நினைக்கும் போட்டி மனப்பான்மை வேறு. போட்டி மனப்பான்மை ஊக்கம் பெறுவதற்காக எழுவது; பொறாமை, கொண்டவனது அழிவுக்கே வழிகோலும்.
பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். பிறரின் நலனில் மனம் புழுங்குவான். மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க, தட்டிப் பறிக்க, அல்லது பழி தூற்றச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்வான். அவனுக்கு முன்னேற்றம் இருக்காது. போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு ஆக்கத்தில் குறைவு இல்லை.
பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் கடையாயவனுக்கு வள்ளுவர் வழங்கும ஒறுப்பு மிகக் கடுமையானது. அவன் சுற்றம் இழந்து உண்ணவும் உடுக்கவும் இன்றி கெட்டலைவான் என்கிறார்.
பொதுவாகப் பொறாமைக் குணத்தையும் ஆக்கம் பெறுதலையும் தொடர்புபடுத்தியே பேசுகிறது குறள். இங்குள்ள பாடல்களிலும் மிகுதியாக ஆக்கம் அல்லது செல்வம் பெருகுதல் இவற்றுடனே அழுக்காறு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. பொறாமை நெஞ்சம் கொண்டு வளம் பெருக்கியவரும் இல்லை; அழுக்காறு இல்லாதவர்களாய் இருந்தவர்கள் தாழ்ந்து போனதும் இல்லை என்பது வள்ளுவர் துணிபு.