இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0166



கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:166)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.
இது நல்குரவு தருமென்றது.

பரிமேலழகர் உரை: கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)

வ உ சிதம்பரனார் உரை: (ஒருவனுக்கு மற்றொருவன்) கொடுப்பதன்கண் பொறாமை செய்பவன், சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பதவுரை: கொடுப்பது-கொடுத்தல்; அழுக்கறுப்பான்-பொறாமைப்படுகிறவன், பொறாமையால் தடுப்பவன்; சுற்றம்-சுற்றத்தார், கிளைஞர்; உடுப்பதூஉம்-உடுத்திக் கொள்வதும், உடுக்க உடையும்; உண்பதூஉம்- உண்ணப்படுவதும், உண்ண உணவும்; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம்;
பரிதி: ஒருவர்க்கொருவர் செய்யும் உபகாரம் கண்டு பொறாதமனத்தனுக்கும் அவன் சுற்றத்தார்க்கும்; [உபகாரம் - உதவி]
காலிங்கர்: ஒருவர்க்கொருவர் செய்யும் உபகாரம் கண்டு பொறாத மனத்தனுக்கும் அவன் சுற்றத்தார்க்கும்;
பரிமேலழகர்: ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;
பரிமேலழகர் குறிப்புரை: கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். [அழுக்கறுத்தல் -பொறாமையுறுதல்]

'கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம்' என்று மணக்குவர் இப்பகுதிக்கு உரை நல்கினார். மற்றவர்கள் 'ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்' எனப் பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனது சுற்றத்தாரும்', 'பிறர்க்குக் கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் மட்டுமன்றி, அவனுடைய சுற்றமும்', 'பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவனுடைய குடும்பம்', 'பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனும் அவனது சுற்றமும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் என்பது இப்பகுதியின் பொருள்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்குரவு தருமென்றது.
பரிதி: உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம். [இழப்பிக்கும் - இழக்கச் செய்யும்]

'உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உணவுஉடை இன்றி அழிவர்', 'உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும்', 'உடையும் உணவும் இல்லாது வருந்தி ஒழியும்', 'உணவும் உடையுமின்றிக் கெடுவார்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடையும் உணவும் இல்லாது கேடு அடையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடையும் உணவும் இல்லாது கேடு அடையும் என்பது பாடலின் பொருள்.
'சுற்றம்' ஏன் கேடுறவேண்டும்?

யாரோ யாருக்கோ எதையோ கொடுக்கிறார்கள், அதில் உனக்கென்ன ஆற்றாமை?

பிறருக்குக் கொடுக்கப்படுவதைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உடுப்பதற்கு உடையும், உண்பதற்கு உணவும் இல்லாமல் அழிவர்.
ஒருவர் நல்ல உள்ளத்துடன் தேவைப்படும் மற்றவர்க்குப் பொருளுதவி செய்ய முன்வருகிறார். அந்தப் பொருளையும் பெறுபவரையும் கண்டு பொறமை கொண்டு கொடுப்பவரைக் கொடுக்கவிடாமல் தடுக்கிறான் இன்னொருவன். பொறாமைப்படுவது மட்டுமல்லாமல் தரப்படுவதையும் தடுப்பவனைக் 'கொடுப்பதுஅழுக்கறுப்பான்' என அழைத்து அவன் சுற்றத்தொடு வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உடுப்பதூஉம் உண்பதூஉம் கிடைக்க வழி வகை இல்லாத வறியநிலை எய்தி அழிவான் என வெவ்வுரை கூறுகிறார் வள்ளுவர்.
இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுக்கிறான். தனக்கும் வேண்டியிருந்தால், அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து இன்னொருவன் பெறுகிறானே என்ற ஆற்றாமையால் அதை ஏன் தடுக்க வேண்டும்? இதைக் கொடிய குற்றமாகக் கருதி கடுஞ்சொற்களால் திட்டுகிறார் வள்ளுவர். அந்தக் கீழானசெயலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் வள்ளுவர் கூறிவிடுகிறார்.

கொடுப்பது என்பதற்கு நேர் பொருள் ஈகையாகப் பொருள் தருவது.
'கொடுப்பது அழுக்கறுப்பான்' என்றதற்குக் 'கொடுப்பது கண்டு பொறாமை கொள்பவன்' என்றும் 'கொடுப்பதைப் பொறாமை கொண்டு தடுப்பவன்' என்றும் இருவிதமாகப் பொருள் கூறுவர். ஈவது விலக்கேல் (ஆத்திச்சூடி 4: பொருள்: ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே) என ஔவையார் கொடை தருவதைத் தடுப்பது பற்றியே சொல்வார். இங்கும் 'கொடுப்பதைப் பொறாமை கொண்டு தடுப்பவன்' எனக் கொள்வதே சிறக்கும்.

ஒருவன் பெற்று வாழ்ந்துவிடக் கூடாது என்று கொடுக்கும் கையை வஞ்சித்துத் தடுப்பவன் பொறாமைக்காரர்களுள் மிகவும் இழிவானவன். எனவேதான் கேடு அடைவதில் கடையான உண்பதற்கும் உடுத்துவதற்கும் எதுவுமே கிடைக்காத ஏழ்மை நிலையை அந்த அழுக்காறுடையான் அடைவான் என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு உணவும் உடையும் இல்லாத நிலை, வீடு, நிலம், தொழில், பணம், பண்டம் முதலிய அனைத்தும் இழந்த பிறகே ஏற்படும். ஆதலின் இக்கேடு பெருங்கேடு ஆகும். அருள் நெஞ்சம் கொண்ட வள்ளுவரே கடும் சினம் கொண்டு கொடுப்பது அழுக்கறுப்பான் இந்நிலை எய்துவான் என வெவ்வுரை கூறுகிறார். குறள் சில இடங்களில் அறம் ஒறுத்தலைச் சொல்லிச் செல்லும். அவற்றில் இது ஒன்று.

கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம், உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண் (கம்பஇராமாயாணம் பாலகாண்டம்.வேள்விப்படலம்-33: பொருள்: ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக) என்று மகாபலி சுக்கிரனைப் பார்த்துக் கூறுவதாகக் கம்பரும் இக்குறட்கருத்தை நினைந்து பாடினார்.


'சுற்றம்' ஏன் கேடுறவேண்டும்?

இப்பாடல் சுற்றம் கெடும் என்றுதான் சொல்கிறது. தேவநேயப்பாவாணர் சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது அதாவது சுற்றமும் கெடும் என இதை வாசிக்கவேண்டும் என்கிறார். பொறாமை கொண்டவனது சுற்றம் கெடும் எனின் பொறாமைக்காரனுக்கு என்ன ஆகும்? காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (இறைமாட்சி குறள் 386) என்னும் பாடலில் நிலத்தை மீக்கூறும் எனவே மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாமலே பெறப்பட்டது என்பது போல இங்கும் பொறாமைக்காரனது கேடும் சொல்லாமலேயே பெறப்பட்டது என்பர். அதாவது 'பொறாமையாளனும் அவனது சுற்றமும்' பற்றி இக்குறள் பாடுகிறது என்பது பொருள்.
இக்குறளில் கூறப்பட்டுள்ள சுற்றம் சேர்ந்தாரையும் சார்ந்தாரையும் குறிப்பதாகவே பெரும்பான்மை உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். சுற்றம் என்பது குடும்பத்திலுள்ளோர், நண்பர்கள், உறவுகள் ஆகியோர் அடங்கியதும் எனக் கூறி, பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்பட்டுத் தடுப்பவனும், அவனது சுற்றமும் உண்பதற்கும், உடுத்துவதற்கும் வழி வகையின்றிக் கெடும் என விளக்குவர்.

அழுக்காறு கொண்டவன் கொடுப்பதைத் தடுப்பது தீதாதலால் அவன் கெடுவான் என்பது சரி. அவனது சுற்றம் ஏன் கெடவேண்டும்? இது என்ன வகை அறம்? என்ற கேள்விகள் எழுகின்றன. ஓரிடத்து நீர் பக்கத்துக்குக் கசிந்து செல்லுமாப் போல, ஒரு குடும்பத்தின் நல்லவும் தீயவும் உறவுக் குடும்பங்களைச் சார்ந்து பற்றும்; செய்தவினை செய்தவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்த அனைவரையும் சமுதாயத்தையும் கெடுக்கும், என்பன போன்றவை வள்ளுவர் கருத்தாக இருக்கமுடியாது என்று எண்ணிய சிலர் மாற்றுரையாகச் 'சுற்றம் உடுப்பதூஉம்' என்பதற்குச் சுற்றமாகிய ஆடையையுடுப்பதும்' என உருவமாகக் கொண்டு உரைத்தலும் ஆம்' என உரைத்தனர். இவை போன்றவை பொருத்தமாகப் படவில்லை.
வேறு சிலர் 'ஒருவனுடைய ஒழுகலாற்றுக்கு அவன் வாழும் சுற்றமும் சமுதாயத்தின் சூழ்நிலைகளும் காரணம் என்பதால் 'சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉமின்றிக் கெடும்' என்றார்' எனப் பொருள் கூறினர். வ உ சிதம்பரனார் 'சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் என்பதற்கு சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவன்' எனப் பொருள் கூறினார். சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் என்பதை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு 'கொடுப்பது அழுக்கறுப்பான் தன் ஆக்கத்திற்கு ஆதாரமான சுற்றத்தையும், தன் உடையையும் உணவையும் இழப்பன்' எனக் கருத்துரை வழங்கினார். இதேபோன்று 'பொறாமை கொள்ளும் குணம் படைத்த ஒருவனை, அவனது சுற்றத்தாரும் வெறுத்து ஒதுக்கி விடுவர்; அவனைச் சுற்றி எவருமே இரார்; ஆதலின் அவனுக்கு 'சுற்றம் கெடும்' என அவன் சுற்றத்தாரையும் இழப்பர்' என்ற பொருளில் கி ஆ பெ விசுவநாதம் இக்குறளை விளக்குவார்.

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடையும் உணவும் இல்லாது கேடு அடைவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமை வறுமையினின்று காக்கும்.

பொழிப்பு

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றிக் கெடும்.