இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0164



அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:164)

பொழிப்பு (மு வரதராசன்): பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

மணக்குடவர் உரை: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

பரிமேலழகர் உரை: அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின் பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.

பதவுரை: அழுக்காற்றின்-பொறாமையினின்றும், பொறாமையினால்; அல்லவை-அறமல்லாதவை, தீயசெயல்கள்; செய்யார்-செய்யமாட்டார்கள். இழுக்காற்றின்-தவறான வழி, குற்றத்தின் நெறியால்; ஏதம்-துன்பம்; படுபாக்கு-உண்டாதல், படுதல், தோன்றல்; அறிந்து-தெரிந்து, உணர்ந்து.


அழுக்காற்றின் அல்லவை செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்;
பரிப்பெருமாள்: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்;
பரிதி: அழுக்கு மனத்தை அகற்றி நல்ல மனத்துடன் இருப்பான்; இருப்பானாகில் சீர்த்தியும் புகழும் உண்டு; [சீர்த்தி-மிகுபுகழ்]
பரிமேலழகர்: அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.

'அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லோர் அத்தீய நெறியால் பிறர்க்குத் தீங்கிழைக்க மாட்டார்', 'அறிவுடையோர் பொறாமைப்பட்டு அதர்மமான காரியங்களைச் செய்தவிடமாட்டார்கள்', 'பொறாமை காரணமாகப் பிறர்க்குத் தீங்கு இழையார்', 'பொறாமை கொண்டு தீங்குகள் செய்யார் அறிவுடையார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
பரிப்பெருமாள்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அழுக்காறு செய்யாமை விழுமிய பொருள் என்றார். அஃதாயினவாறு என்னை என்றார்க்கு. அஃது இல்லாதார் அறம் அல்லாதன செய்யார் ஆதலின் பாவம் வாராது என்றுமாம்.
பரிதி: மனத்தில் அழுக்காறுடையான் யார் ஒருவர்க்கும் பொல்லாங்கு செய்ய விசாரிப்பான் தினமும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.

'அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமையினால் துன்பம் வருதலை அறிந்து', 'ஏனெனில் பொறாமையினால் உண்டாவது பாவம் என்பதை அவர்கள் அறிந்தவர்கள்', 'தவறிய வழியால் துன்பம் உறுதலை அறிந்து அறிவுடையார்', 'பொறாமை கொள்ளும் தீய வழியால் துன்பம் உண்டாதலை அறிந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவறிய வழியால் துன்பம் வருதலை அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தவறான வழியினது ஏதம் படுபாக்கு அறிந்து பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'ஏதம் படுபாக்கு அறிந்து' என்றால் என்ன?

அழுக்காறு ஒரு ஒழுக்கமற்ற வழி.

இழிவான நெறி செல்வதால் துன்பம் உண்டாதலை உணர்ந்தவர் பொறாமைகொண்டு தீய செயல்களைச் செய்யமாட்டார்.
பிறரது ஆக்கம் அதாவது வளர்ச்சி, வெற்றி, உடைமை கண்டு பொறுக்காத தன்மையாகிய பொறாமை வழிப்பட்டு அறமல்லாதவற்றை செய்யாமலிருப்பது அறிவுடைமை. பொறாமை எனும் மனமாசை அகற்றாமல், இழுக்க நெறியின்கண் செல்வதால் உண்டாகும் குற்றத்தின் கடும் விளைவை அறிந்தவர்கள் தீயன மேற்கொள்ளமாட்டார்கள். நெஞ்சத்தில் பொறாமை இருந்தால் அது பிறர்க்குத் தீங்கு செய்யத் தூண்டும். அவ்வாறு தீங்கு செய்தால் அது துன்பத்தை விளைவிக்கும். இதை உணர்ந்தவர்கள் பொறாமை காரணமாக அறமற்றவற்றைச் செய்யமாட்டார்கள்.
செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் அழுக்காற்றால் விளையும் அறனல்லவை என விளக்குவர். ஒருவனுக்குக் கிடைக்கப்பெறுவதை யாரும் தடுக்க முடியாது. அதுபோல அவனுக்கு மறுக்கப்படுவதை யாராலும் கொடுத்துவிடவும் இயலாது. இதை நன்கு புரிந்துகொண்டால், அடுத்தவன் முன்னேற்றம் நமக்குப் பொறாமையை உண்டாக்காது.
அழுக்காறு அற்றவர் அறம் அல்லாதன செய்யாராதலால் தீவினைகளிலிருந்து காக்கப்படுவார்.
பொறாமை எண்ணத்தால் பிழைகள் செய்தால், குற்றம் உண்டாகி துன்பமான நிலைக்குள்ளாக நேரிடும். அழுக்காறு இன்றி இருப்பதும் ஒரு ஒழுக்க நெறிதான் என்கிறது இப்பாடல்.

'ஏதம் படுபாக்கு அறிந்து' என்றால் என்ன?

'ஏதம் படுபாக்கு அறிந்து' என்றதற்குக் குற்றம் வருவதை யறிந்து, பொல்லாங்கு செய்ய விசாரிப்பான் தினமும், இருமையினும் துன்பம் வருதலை அறிந்து, துன்பம் வருதல் அறிந்து., துன்பம் ஏற்படுதலை அறிந்து, துன்பம்‌ உண்டாதலை அறிந்து, ஏற்படும் கடும் விளைவுகளை எண்ணிப்பார்த்து, தீதுவரும் ஆதலின், உண்டாவது பாவம் என்பதை அறிந்தவர்கள், துன்பம் உண்டாம் என்பதை உணர்ந்த அறிவினர், துன்பம் உறுதலை அறிந்து, படப்போகும் கடுந்துயரங்களை அறிந்திருப்பதால், துன்பங்களே விளையும் என்பதனை அறிந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஏதம் என்ற சொல்லுக்குத் துன்பம் என்பது பொருள். அதற்குக் குற்றம் எனவும் பொருள் உண்டு. படுபாக்கு என்பது படுதல் (உண்டாதல்) எனப்பொருள்படும். ஏதம் படுபாக்கு அறிந்து என்பது துன்பம் வருதலை அறிந்து என்ற பொருள் தரும்.
பிறரது முன்னேற்றம் கண்டு பொறுக்கமுடியாதவர்கள் தாமும் அவர்போல் ஆக்கம் பெறவேண்டும் என்ற விரைவுஎண்ணத்தில் தீச்செயல்களைச் செய்து விடுவர். யார்மீது பொறாமைப்பட்டாரோ அவர்க்குத் தீங்கு செய்யவும் ௮வரைப்‌ புறம்‌பழித்துக்‌ கூறவும் மனம் தூண்டும். இவற்றால் குற்றம் உண்டாகித் அழுக்காறு கொண்டவர்க்கே துன்பம் வந்தடையும். இதை உணர்ந்தவர்கள் பொறாமை காரணமாகத் தீங்கு செய்யமாட்டார்கள்.

தவறான வழியால் துன்பம் வரும் என்பதைத் தெரிந்தவர்கள் பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமையால் துன்பம் வராமல் காக்கலாம்.

பொழிப்பு

தீயவழியால் தமக்குத் தீங்குவரும் என்பது அறிந்து பொறாமையால் தீயனவற்றைச் செய்யமாட்டார்.