இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0162



விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:162)

பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை.
இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

பரிமேலழகர் உரை: யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.
(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: யார் மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை.

பதவுரை: விழு-சீரிய, விழுமிய; பேற்றின்-பேறுகளுள், பெறுகின்ற வாய்ப்புகளுள்; அஃது-அது; ஒப்பது-போல்வது, ஒப்பானது; இல்லை-இல்லை; யார்மாட்டும்-எவரிடத்தும். எல்லார் இடத்தும்; அழுக்காற்றின்-பொறாமையினின்றும்; அன்மை-அல்லாமை; பெறின்-பெற்றால், அடைந்தால்.


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விழுமிய பேறுகளுள் அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை; [விழுமிய பேறுகள் -சிறந்த பேறுகள்]
காலிங்கர்: தாம் விழுமியவாகப் பெறும் பேற்றின் மற்றதனை ஒப்பது ஒன்றும் இல்லை;
பரிமேலழகர்: மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை; [மற்று-பின்பு; பேறு-பெறப்படுவது]

'தாம் விழுமியவாகப் பெறும் பேற்றின் மற்றதனை ஒப்பது ஒன்றும் இல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அடையும் சிறந்த பேறுகளுள் அதனை ஒப்பது வேறில்லை', 'விரும்பத்தக்க மேலான செல்வங்களுள் அதற்கு இணையானது வேறில்லை', 'அவன் பெறுதற்குரிய மேலான ஊதியங்களுள் அதனைப் போல்வது பிறிதியாதும் இல்லை', 'அதுவே பெருஞ்செல்வம்; அச்செல்வத்திலும் சிறந்த செல்வமில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் பெறுதற்குரிய சிறந்த பேறுகளுள் அதனை ஒப்பது வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
பரிதி: பெருமை, கல்வி, அறிவுடைமைக்கு மனத்தில் அழுக்காகிய ஒருவர்க்குப் பொல்லாங்கு செய்வோம் என்பதை விடுதல் நன்று என்றவாறு. [பொல்லாங்கு - தீமை]
காலிங்கர்: யாவர் மாட்டாயினும் தமது உள்ளத்து அழுக்காறு இல்லாமையாகிய பெறும்பேறு உளதாகப் பெறுவார் அல்லது.
காலிங்கர் குறிப்புரை: பெரிய கல்வி யறிவுடைமைக்கு மனத்தில் அழுக்காகி ஒருவர்க்குப் பொல்லாங்கு செய்வோம் என்பதை விடுதல் நன்று என்பது கருத்து.
பரிமேலழகர்: யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.

'யாவர் மாட்டாயினும் தமது உள்ளத்து அழுக்காறு இல்லாமையாகிய பெறும்பேறு உளதாகப் பெறுவார் என்றால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால்', 'யாருடைய நன்மை கண்டும் பொறாமை கொள்ளாத மனப்பண்பை அடைந்துவிட்டால்', 'யாரிடத்திலும் பொறாமை யற்றிருத்தலை ஒருவன் பெறவல்லனாயின்', 'எவரிடத்தும் பொறாமை கொள்ளாமலிருந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால், ஒருவன் பெறுதற்குரிய விழுப்பேற்றின் அதனை ஒப்பது வேறில்லை என்பது பாடலின் பொருள்.
'விழுப்பேற்றின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

பொறாமை நுழையாத மனம் கொண்டவன் பெரும் பேறு பெற்றவன்.

எவரிடமும் பொறாமை இல்லாமல் இருக்கும் பண்புக்கு இணையான விழுப்பம் வேறு எதுவும் இல்லை.
பொதுவாக அழுக்காறு பிறருடைய பெருமை, செல்வம், அறிவுடைமை போன்றவை பற்றி எழுவது. அந்தப் பிறர் யாவர்? அதாவது யார் மீதெல்லாம் பொறாமை வரும்? பெரும்பாலும் பொறாமை நம் அருகில் இருக்கும் மாந்தரிடம் பாயும். அண்டை வீட்டார், அன்றாடம் நாம் பழகுவோர் போன்றோரிடமும் ஏன் நண்பர்களுக்கிடையேயும் தோன்றும். 'யார் மீதும் பொறாமை கொள்ளாதே' என்பது வள்ளுவர் கூறும் அறிவுரை. இப்பாடல் நண்பர், பகைமை பாராட்டுபவர், அருகில் இருப்பவர், தொலைவில் உள்ளோர் என்ற வேறுபாடு இல்லாமல், யாரிடத்திலும் பொறாமை இல்லாமல் வாழும் தன்மையை வலியுறுத்துகிறது. அத்தன்மை பெற்றால் அது விழுமிய பேறுகளில் அதாவது மிகச் சிறந்த பேறுகளுள் ஒப்பில்லாத பேறு ஆகும். யாவரிடத்திலும் அழுக்காறு கொள்ளா நிலையை ஒருவன் பெறுவானாயின், மனத்தில் அழுக்கில்லாமல் எவர் ஒருவர்க்கும் தீமை செய்வோம் என்னும் மனப்பான்மை அகன்று உள்ளத்துள் கலக்கமின்றி அமைதியுடன் திகழ்வான். அதுவே ஒருவன் பெறத்தக்க பெருஞ் செல்வமாகும்‌ என்கிறார் அவர்.

மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் எங்காவது ஓரிடத்தில் பொறாமை என்கிற மாசு ஓரளவாவது இருந்துகொண்டே இருக்கும் என்பர். குற்றங்கள் நிகழ்வதற்கு ஒரு ஏதுவாக அழுக்காறு இருப்பதாலேயே, அது இல்லாதிருத்தலை ஒரு சிறந்த பேறாக வள்ளுவர் குறிக்கிறார்.

'விழுப்பேற்றின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'விழுப்பேற்றின்' என்ற தொடர்க்கு விழுமிய பேறுகளுள், சிறந்த பேறுகளுள், விழுமியவாகப் பெறும் பேற்றின், சீரிய பேறுகளுள், சீரிய நன்மதிப்புகளில், மானுட நன்மதிப்புகளில், சிறந்த மேன்மை, நன்மை மிகுந்த செல்வங்களுள், மேலான ஊதியங்களுள், பெருஞ்செல்வம், சீரிய பேறு, மேலான பேறு, மேன்மைச் செல்வம், சிறந்த பாக்கியம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

விழுமிய பேறுகள் பதினாறு என்றும் அவை புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்னும் பதினாராம் எனப் பழம் நூல்கள் கூறும்.
இன்றைய உலக வாழ்வில் பெறற்கரியனவாகக் கருதப்படும் செல்வங்களாக கல்வி, மக்கட்பேறு, நலம்பொருந்திய உடல், புகழ் மிக்க நிலை போன்றவற்றை மாந்தர் எண்ணுவர். ஆனால் அழுக்காறு இல்லாத மனத்தைக் கொண்டிருப்பதினும் சிறப்பான செல்வம் வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

'விழுப்பேற்றின்' என்ற தொடர் விழுமிய பேறுகளுள் என்ற பொருள் தரும்.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால், ஒருவன் பெறுதற்குரிய சிறந்த பேறுகளுள், அதனை ஒப்பது வேறில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

யாரிடத்தும் அழுக்காறாமை ஒரு மதிப்புமிக்க செல்வமாம்.

பொழிப்பு

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால் அதனினும் சிறந்த மேன்மை வேறில்லை.