இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0163



அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:163)

பொழிப்பு: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்.

மணக்குடவர் உரை: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.
இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

வ சுப மாணிக்கம் உரை: தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவனே மற்றவன் வளர்ச்சிக்குப் பொறாமைப்படுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்:
பதவுரை: அறன்-நல்வினை; ஆக்கம்-செல்வம்; வேண்டாதான்-விரும்பாதவன்; என்பான்-என்று சொல்கிறவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான்;
பரிதி: தனக்குத் தன்மத்தின் ஆக்கமாகிய செல்வம் வேண்டாதார் என்பார்;
காலிங்கர்: தனக்கு மறுமை இன்பக் காரணமாகிய அறனும் மற்று இம்மை இன்பக் காரணமாகிய செல்வமும் என்னும் இவை இரண்டினையும் விரும்பாதான் என்று சான்றோரால் சொல்லப்படும் அவன் யாவனோ எனின்;
பரிமேலழகர்: மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்;

'அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான்' என்றபடி மணக்குடவரும் பரிதியும் இப்பகுதிக்கு உரை நல்க, காலிங்கரும் பரிமேலழகரும் இம்மைக்கு செல்வமும் மறுமைக்கு அறமும் விரும்பாதவன் என உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் செல்வமும் வேண்டாதவன் எனப்படுபவன்', 'தர்ம பலத்தை இகழ்ந்து விடுகிறவன்தான்', 'தனக்கு அறத்தையும் பொருளையும் விரும்பாதவன் என்று கருதப்படுவான்', 'அறனும் செல்வமும் விரும்பாதவன் என்று கருதப்படுவான் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறவாழ்வு விரும்பாதவன் எனப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்:
பதவுரை: பிறன் -மற்றவன்; ஆக்கம்-செல்வம்; பேணாது-விரும்பாமல்; அழுக்கறுப்பான்-பொறாமைப்படுகிறவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.
பரிதி: பிறர் செல்வங்கண்டு அழுக்கு மனத்தாராவார் என்றவாறு.
காலிங்கர்: பிறனொருவன் ஆக்கத்தை விருமபாது மற்றவன் கண்ணே தமது உள்ளத்து உள்ள அழுக்கினை விடுகின்றவன் என்றவாறு.
பரிமேலழகர்: பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.

'பிறர் செல்வங்கண்டு அழுக்கு மனத்தாராவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனது செல்வத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்', 'இன்னொருவனுடைய நல்வாழ்வை விரும்பாமல் பொறாமைப்படுவான்', 'பிறருடைய செல்வத்தைக் கண்டு உவந்திராது பொறாமை கொள்வான்', 'பிறனுடைய செல்வம் கண்டு பொறாமைப்படுகிறவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறவாழ்வு வேண்டாம் என்பவனே பிறன் பெற்ற நலங்களைக் கண்டு பொறாமைப்படுவான்.

அறனாக்கம் வேண்டாதான் எனப்படுபவன் மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'அறனாக்கம் வேண்டாதான்' யார்?

என்பான் என்ற சொல்லுக்கு என்று சொல்லப்படுபவன் என்பது பொருள்.
பிறனாக்கம் என்ற தொடர்க்கு மற்றவர் செல்வம், பிறர் வளர்ச்சி, மற்றவர் நலங்கள் எனப் பொருள் கூறுவர். மற்றவர் வளர்ச்சி என்பது பொருத்தம்.
பேணாது என்ற சொல்லுக்கு மகிழாது, பாராட்டாது, பாதுகாக்காது எனப் பலவாறாகப் பொருள் உரைப்பர். இங்கு பாராட்டாது என்பது பொருந்தும்.
அழுக்கறுப்பான் என்ற சொல்லுக்குப் பொறாமை கொள்பவன் என்று பொருள்.

மற்றவர் நலன் கண்டு மனம் பொறாமைப்படுபவன் அறவழியில் உண்டாகும் நல்வளர்ச்சியை விரும்பாதவனாக இருப்பான்.

அறத்தின் பயனை நற்பேறு (புண்ணியம்) என்று கூறுவது மரபாகும். நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கும் 'புண்ணியத்தை' அறம் எனக் கூறும் வழக்குத் தொன்மையானது. அதையே வள்ளுவர் இங்கு அறனாக்கம் என்கிறார் எனத் தோன்றுகிறது.
'பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்' என்றதனால் பிறர் வளர்ச்சியைப் பாராட்டாமல் இருப்பதும் பொறாமை எனக் கருதவேண்டும் என்றும் அப்படிப் பொறாமை கொண்டவனுக்கு அறப்பெருக்கம் தரும் வாழ்வு அமையாது என்றும் கூறுகிறார் வள்ளுவர். அவ்வாழ்வினால் விளையக்கூடிய நன்மைகளையும் தனக்குத் தேவையில்லை என்று நினைப்பவர்களாக அவர்களைக் கருதலாம். யாரும் அப்படி நினைக்கமாட்டார்கள் எனினும், பொறாமைக்காரர்களுக்கு அறவாழ்வு கிட்டாது என்பதை அவர்களுக்கு உணர்த்தும்விதமாக, அவர்கள் அதை வேண்டாமென்பார்கள் என்கிறார் வள்ளுவர். ஆக்கம் என்ற சொல் பரந்துபட்ட பொருள் கொண்டது. பணம், செல்வம், வீடு, வாசல், நில, புலன் இவை மட்டும் அல்ல ஆக்கம் என்பது. ஒருவனின் புகழ், கல்வி, பிள்ளைகள், குடும்பம் எல்லாமே ஒருவனின் ஆக்கம்தான். மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்கு, அறிவுடைமை போன்றவற்றைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். அதுவே பாராட்டுகின்ற குணமாம். அதுவே அறவாழ்வை நல்குவதுமாம்.

'அறனாகிய வாழ்வு வேண்டாதான்' எனப் பண்புத் தொகையாகவும் 'தன்மத்தின் ஆக்கமாகிய செல்வம் வேண்டாதார்' என ஆறாம் வேற்றுமையாக விரித்தும் 'மறுமையின்பக் காரணமாகிய அறனும் இம்மையின்பக் காரணமாகிய செல்வமும்' என உம்மைத் தொகையாகவும் கொண்டு பொருள் கண்டதால் பொருள் வேற்றுமை உண்டாயிற்று. 'பிறனாக்கம்' என்பதற்குப் 'பிறனது ஆக்கம்' என்று கொள்வ்து போல 'அறனாக்கம்' என்றதற்கு அறத்தினது ஆக்கம் என்று கொள்வதே ஏற்றது (இரா. சாரங்கபாணி).

'அறனாக்கம் வேண்டாதான்' யார்?

'அறனாக்கம் வேண்டாதான்' என்ற தொடர்க்கு அறனாகிய வாழ்வு வேண்டாதான், தன்மத்தின் ஆக்கமாகிய செல்வம் வேண்டாதார், இன்பக் காரணமாகிய அறனும் மற்று இம்மை இன்பக் காரணமாகிய செல்வமும் என்னும் இவை இரண்டினையும் விரும்பாதான், மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான், அறமாகிய ஆக்கம் வேண்டாமென்பவன், தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவன், அறமும் செல்வமும் வேண்டாதவன், அறத்தின் நன்மைகளை விரும்பாதவன், தனக்கு அறத்தையும் பொருளையும் விரும்பாதவன், இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன், அறத்தையும் பொருளையும் விரும்பாதவன், அறமும் பொருளும் வேண்டாதவன், (உயிர்த்துணையாம்) அறத்தையும் (வாழ்வுத்துணையாம்) நலங்களையும் தனக்கு வேண்டாதவன் என உரையாசிரிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் 'அறனாகிய வாழ்வு வேண்டாதான்' என்ற பொருள் சிறந்து நிற்கிறது. அறவழியில் செல்ல விரும்பாதவன் என்பது கருத்து.

'அறனாக்கம் வேண்டாதான்' என்ற தொடர் அறநெறி வாழ்க்கையால் பெறக்கூடிய உயர்வை அல்லது மேன்மையை விரும்பாதவன் எனப் பொருள்படும்.

அறவாழ்வு விரும்பாதவன் எனப்படுபவன் மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறர் வளர்ச்சி பாராட்டத் தெரிந்த அழுக்காறாமை இல்லாதானுக்கு நற்பேறுகள் உண்டாகா.

பொழிப்பு

தனக்கு அறவாழ்வு வேண்டாம் என்பவனே மற்றவன் ஆக்கத்துக்குப் பொறாமை கொள்வான்.