இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1307



ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று

(அதிகாரம்:புலவி குறள் எண்:1307)

பொழிப்பு (மு வரதராசன்): கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

மணக்குடவர் உரை: ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும்.
('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண்¢ விரைவித்தல் கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: கூட்டுறவு நீட்டியாதோ என்று கருதுவதால், இன்பத்திற்கு வேண்டப்படும் ஊடலின் கண்ணும் ஒரு துன்பம் உண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புணர்வது நீடுவது அன்றுகொல் என்று ஊடலின் உண்டாங்கோர் துன்பம்.

பதவுரை: ஊடலின்-பிணங்குதலின்; உண்டு-உளது; ஆங்கு-அப்போழுது; ஓர்-ஒரு; துன்பம்-துயரம்; புணர்வது-கூடுவது; நீடுவது-நீளுவது; அன்று-இல்லை; கொல்-(ஐயம்) என்று-எனக் (கருதலால்).


ஊடலின் உண்டாங்கோர் துன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிப்பெருமாள்: ஊடல் செவ்வி இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிதி: புலவிக்கு ஒரு துன்பம் உண்டு;
காலிங்கர்: ஊடற்செவ்வி இன்பம் உண்டாயினும் அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும்.
சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'ஆங்கு' என்பது அசைநிலை;

'ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் உண்டு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு', 'இன்பத்திற்கு வேண்டத்தக்கதாகிய ஊடலிலும் ஒரு துன்பம் நிகழ்கிறது', 'பிணங்கினால் அதிலும் ஒரு துன்பம் இருக்கிறது', 'பிணக்கிலேயும் புணர்ச்சி விருப்பமாகிய ஒரு துன்பமுண்டாகும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

புணர்வது நீடுவது அன்றுகொல் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
பரிப்பெருமாள்: புணருங்கால் அது நீடுங்கொல்லோ? நீடாது கொல்லோ? என்று ஐயுறுதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகள் புலவி கண்டு சொல்லியது.
பரிதி: புணர்வது நாட்செல்லும் என்னும் துயரம் அது என்றவாறு.
காலிங்கர்: புணருங்கால் நீடுவது கொல்லோ நீடாது கொல்லோ என்னுதல் என்றவாறு.
பரிமேலழகர்: இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. ஊடல் - கூடற்கண்¢ விரைவித்தல் கூறியவாறு.

'புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று ஐயுறுதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டம் நீளாதா என்று ஐயப்படுதலின்', 'முயங்குவது நீட்டிக்காதோ என்னும் கருத்து எழுதலால்', 'என்னவெனில் புணர்ச்சி இன்பம் நேரம் கழித்தாயினும் கிடைக்குமோ அல்லது புணர்ச்சி இல்லாமலேயே போய்விடுமோ என்று (ஏங்கும் துன்பம்)', 'புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று நினைத்தலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புணர்ச்சி நீட்டியாதோ என்று நினைத்தலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புணர்வது நீடுவது அன்றுகொல் என்று நினைத்தலால் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்பது பாடலின் பொருள்.
'புணர்வதுநீடுவது அன்றுகொல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இப்படியே ஊடிக்கொண்டிருந்தால் எப்பொழுதுதான் கூடுவது?

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது எப்பொழுது கூடுவது? எவ்வளவு நேரம் கூடல் நீட்டிக்கும்? என நினைத்து வருந்துவது.
காட்சிப் பின்புலம்:
நீண்ட பிரிவிற்குப் பின்னர் தலைவர் இல்லம் திரும்பியுள்ளார். இரவு வந்துவிட்டது. தலைவி பள்ளியறையில் இருக்கிறாள்.
தலைவர் வரும்போது அவரைத் தழுவாமல், ஊடல் கொண்டு, அவருறும் துன்பநோய் கண்டு மகிழ எண்ணுகிறாள் மனைவி; உணவுக்கு உப்பு அமைந்தது போன்று ஊடலளவும் அமையவேண்டும் என்பதையும் மிகுந்தால் கெட்டுவிடும் என்பதையும் அவள் அறிவாள்; கணவரும் இவளது ஊடலை அறியாதவர்போல் இருந்து அவளைத் தழுவாதிருந்து துன்பமடையச் செய்தால் அது துன்பமுற்றாரை மேலும் துன்புறுத்துவது போலாகுமே; தலைவி ஊடல் கொண்டுள்ளாள் என்பதைக் கணவர் உணராதேயிருந்தால் அது வாடிய வள்ளிக் கொடியை அடியோடு அரிந்துவிடுவது போலாம்; தலைவியிடம் ஊடல் எண்ணம் மிகுந்திருந்தால் நல்ல கணவருக்கு அது அழகாம்; ஊடல் முதிர்ச்சியும் (துனியும்) தொடக்கநிலை ஊடலும் (புலவியும்) இல்லாவிட்டால் காமம் மிகவும் பழுத்த கனியும் இளங்காயும் போன்றது;
இவ்வாறு தான் தொடங்கப்போகும் ஊடுதல் பற்றிய எண்ணங்களில் ஈடுபட்டுள்ளாள் தலைவி.

இக்காட்சி:
கணவர் வருகின்றார். இருவருமே புணர்ச்சிக்கு விரையும் மனநிலையில்தான் உள்ளனர். ஊடினால்தான் பின்வரும் கூடுதலில் இன்பம் மிகுதியாக இருக்கும் என்று தான் ஏற்கனவே எண்ணியபடி தலைவி புலக்கத் தொடங்குகிறாள். அந்த வேளையில் அவளுக்குள் இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. ஊடலின்பம் நுகர்ந்தால் அங்கும் ஒரு சிக்கல் எழுகிறதே? ஊடல் கொண்டு பின்னர் அது நீங்கிக் கூடும்போது அக்கூட்டம் நீட்டித்திராது; நீண்ட நேரம் கூடியிருக்க முடியாதே என்ற துன்ப உணர்வு எழுகின்றது. ஊடலினால் இன்பம் மிகுந்தாலும் கூட்ட நேரம் குறைந்து விடுமே என்று தலைவி அஞ்சுகிறாள். விரைந்து வந்த தலைவர்க்கும் அதுபோன்ற எண்ண ஓட்டம்தான். 'இது என்ன இந்த நேரம் ஊடி நிற்கிறாளே? ஊடலும் இன்பம் தருவதுதான். ஆனாலும் அந்த இன்பம் பெற வேண்டுமானால் கூடல் இன்பத்தைச் சிறுது இழக்க வேண்டுமே' என அவரும் துன்பம் கொள்கிறார். ஊடல் செய்து நேரம் செல்வதால், கூடித் திளைக்கும் காலம் குறைவுபடுமே என்பதால் ஊடலை விரைவாக முடித்துக் கொள்ள வேண்டும் என்றே இருவரும் விழைகின்றனர். இதையே காமஇன்பத்தை மிகுவிக்கத் துணைபுரியும் தன்மை வாய்ந்த ஊடல் கொள்வதிலும் ஒரு துன்பம் உண்டு எனக் குறள் கூறுகிறது. கூடி மகிழ்தற்குரிய நேரம் குறைந்துவிடுமே எனக் கருதுவதே ஊடலால் உண்டாகும் துன்ப உணர்வு. விரைந்து கூடற்கேதுவான ஊடலே பயன்தருவது.

பிரிவினால் தலைவர்-தலைவி இருவருமே நெடுநாட்களாகப் புணராத் துன்பம் துய்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது ஊடல் செய்தால் அதைத் தொடர்ந்து அவர்கள் கூடிப் பெறும் கலவியின்பக் காலம் குறுகிவிடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் ஊடல் கூடாது என்பது பொருளா? இல்லை. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை (வினைத்திட்பம் 669 பொருள்: துன்பம் மிகுதியாக வரினும் உறுதியொடு பொருந்திச் செய்க முடிவில் இன்பந்தரும் செயலை) என்னும் பொருட்பால் கருத்தை இங்கு பொருத்திப் பார்ப்பதில் குற்றம் ஏதுமில்லை. இன்பம் மிகுதற்கான செயலைத் துன்பத்தை ஏற்றுக் கொண்டே செய்யலாம்.

'புணர்வதுநீடுவது அன்றுகொல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'புணர்வதுநீடுவது அன்றுகொல்' என்றதற்குப் புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதல், புணருங்கால் அது நீடுங்கொல்லோ? நீடாது கொல்லோ? என்று ஐயுறுதலால், புணருங்கால் நீடுவது கொல்லோ நீடாது கொல்லோ என்னுதல், இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதல், கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவது, புணருமின்பம் காலம் நீட்டித்துப் போய்விடுமோ அல்லது விரைந்து ஊடல் தீர்ந்து கூடுதல் வாய்க்குமோ என்னும் ஐயம் காரணமாக மனத்திலேற்படும் அச்சம், கூட்டம் நீளாதா என்று ஐயப்படுதல், முயங்குவது நீட்டிக்காதோ என்னும் கருத்து எழுதல், புணர்ச்சி நடக்க நெடு நேரம் ஆகுமோ அல்லது இல்லாமலேயே போகுமோ என்று (ஏங்குவது), கூடியிருக்கக் கூடிய பொழுது நீட்டித்திராதோ, புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று நினைத்தல், கூட்டுறவு நீட்டியாதோ என்று கருதுவது. கூடி மகிழும் இன்பம் நீளுமா, குறைந்துவிடுமா என்ற வீணான கவலை, இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதல், கூடி மகிழும் நேரம் தள்ளிக்கொண்டு போகிறது என்ற காரணத்தால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘நீடுவ தன்றுகொல்’ என்ற தொடர்க்கு நீடுவது கொல், அன்றுகொல் என இயைத்துப் பழைய ஆசிரியர்கள் பொருள் கண்டனர். இதன் கருத்து: ஊடல் நீட்டிக்கவே புணருமின்பம் காலம் நீட்டித்துப் போய்விடுமோ அல்லது நீட்டியாதோ? என்பது. ஒருவேளை ஊடல் உணரமுடியாது, புணர்ச்சியின்பமே கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஊடுபவர் நெஞ்சில் கிடந்து துன்புறுத்துமாம் என்றும் சிலர் உரை கூறினர். ‘நீடுவதன்று கொல்’ என்பதனை ஒரு தொடராகக் கொண்டு நீட்டிக்காதோ என்பது மு வரதராசன் உரை; இது 'கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ' என்று ஏங்கி எண்ணுவதால் ஊடற்கண்ணும் ஒரு துன்பம் உண்டு' என்ற பொருள் தருகிறது. இவ்வுரையே சிறந்து நிற்கிறது.

'புணர்வதுநீடுவது அன்றுகொல்' என்ற தொடர்க்குப் புணர்ச்சி நீட்டம் இல்லாமல் போய்விடுமோ அதாவது கலவியின் கால அளவு குறைந்துபோய் விடுமோ என்பது பொருள்.

புணர்ச்சி நீட்டியாதோ என்று நினைத்தலால் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவியால் கலவி நேரம் குறைந்துவிடுமே!

பொழிப்பு

கூட்டம் நீட்டிக்காதோ என்னும் கருத்து எழுதலால் ஊடல் செய்வதிலும் ஒரு துன்பம் உண்டு.