இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1247



காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

(அதிகாரம்:நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்:1247)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

மணக்குடவர் உரை: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது.
இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)

சி இலக்குவனார் உரை: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தைவிடு. அல்லது நாணத்தை விட்டுவிடு. இவ்விரண்டினையும் உடன் தாங்கும் வலிமை எனக்கு இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன் இவ்விரண்டு.

பதவுரை: காமம்-காதல் விருப்பம்; விடு-ஒழி, விட்டுவிடு; ஒன்றோ-(ஒன்று காமம் விடு, ஒன்று நாண்விடு) நாண்-வெட்கம்; விடு-விட்டுவிடு; நல்-நல்ல; நெஞ்சே-உள்ளமே; யானோ-நானோ; பொறேன்-தாங்கும் ஆற்றல் இல்லாதேன்; இவ்விரண்டு-இவை இரண்டு.


காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்று காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்;
பரிதி: ஒன்றோ காமத்தை விடு; அல்லது நாணத்தை விடு; நெஞ்சே என்றவாறு.
காலிங்கர்: நல்வழி அறியும் நெஞ்சமே! ஒன்றேயாம் அவர்வயின் உற்ற காம நோய்ப் பாரத்தைக் கைவிடுவாயாக; இனி ஒன்றோ இதனால் வரூஉம் அலர் நாணுகின்ற நாண்பாரத்தைக் கைவிடுவாயாக;
பரிமேலழகர்: (நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல்ல நெஞ்சே; ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; [அச்செலவு ஒழிவாள்-அச்செல்லுதலைத் தவிரும் தலைமகள்]

'நல்ல நெஞ்சே; ஒன்றின் காம வேட்கையை விடு; ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; நெஞ்சே!', 'நல்ல நெஞ்சே! ஆதலால் நீ காமத்தை விடுக. அல்லது நாணத்தை விடுக', '(என் நன்மையைக் கருதவேண்டிய) நல்ல மனமே! ஒன்று காம ஆசையை விட்டுவிட்டு (சும்மா இரு): இல்லையானால் (பிணங்குகிற உன்) நாணத்தை விட்டுவிட்டு (அவரிடம் போ)', 'நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது வெட்கத்தை விட்டுவிடு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு என்பது இப்பகுதியின் பொருள்.

யானோ பொறேன்இவ் விரண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.
பரிப்பெருமாள்: என்னால் அவ்விரண்டும் கூடப் பொறுத்தலரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.
பரிதி: யான் இரண்டையும் சுமக்கமாட்டேன், நெஞ்சே என்றவாறு.
காலிங்கர்: அல்லது மற்று யான் இவ்விரண்டு பாரமும்கூடப் பொறுக்கல் ஆற்றேன் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே கணவன் மாட்டுக் காதலும் பிறர்மாட்டு நாணமும் பெண்டிர்க்கு இயல்பு. ஆதலால் ஒழித்தற்கு அருமையின் உறுகின்ற உள்ளுறு துயரம் உணர்த்தியவாறாயிற்றே என அறிக.
பரிமேலழகர்: அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். [இரண்டும் - காமமும் நாணமும் என்னும் இரண்டனையும்; மறுதலையாய-மாறுபட்ட; இவ்விரண்டனையும்-காமம், நாண் என்னும் இவ்விரண்டையும்; உடன் தாங்கும் மதுகை-ஒருமித்துத் தாங்கும் வலிமை (திறமை); நல்லை - நற்குணம் உடையாய்; .
பரிமேலழகர் குறிப்புரை: 'யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. [இரண்டையும்-காமம், நாண் என்னும் இரண்டையும்; அது - பெண்மையை நிலைபெறச் செய்தற்கு; அதற்கு - பெண்மையை நிலைபெறச் செய்தற்கு]

'யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரண்டையும் நான் தாங்கேன்', 'நானோ காமம், நாணம் என்னும் இரண்டையும் தாங்கும் ஆற்றல் இலேன்', 'நான் இந்த இரண்டு துன்பங்களையும் (சேர்ந்தாற் போல்) சகிக்க முடியாது', 'ஒன்றுக்கொன்று மாறுபட்ட அவ்விரண்டினையும் நான் ஒருங்கே தாங்கமாட்டேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறுத்துக் கொள்ளேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறேன் என்பது பாடலின் பொருள்.
'பொறேன்' குறிப்பது என்ன?

காமமா, நாணா? இந்த ஊசலாட்டத்திலிருந்து விடுபடுவது எப்படி?

நல்ல நெஞ்சமே! ஒன்று காதல் வேட்கையை விடு. அல்லது நாணத்தை விட்டுவிடு. இரண்டையும் ஒன்றாக என்னால் தாங்க இயலாது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவர் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார். அவள் அப்பிரிவை ஆற்றமுடியாதவளாய் இருக்கிறாள். அவரையே எந்த நேரமும் நினைத்து உறக்கம் தொலைத்து உடல் மெலிகிறாள். அவர் திரும்பி வருவது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அவரை எப்படியாவது நேரில் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். என்ன செய்வது என்று தெரியாத் குழப்ப நிலையில் உள்ள வள் தன் நெஞ்சு துணையாக உதவும் என எண்ணித் தன் உணர்ச்சிகளை அதனுடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள்.
பிரிவுத் துன்பத்தை நீக்க தக்க மருந்து ஏதாவது ஒன்றை ஆராய்ந்து பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயா?'; 'அவர் நம்மிடம் அன்பில்லாதவராக இருக்கும்போது, நீ அவர் வருகை நோக்கி வருந்திக் கொண்டிருப்பது அறியாமை'; 'துன்புறுத்தும் நோயை உண்டாக்கியவர்க்கு நமக்கு அளி செய்யவேண்டும் என்ற நினைப்பு இல்லாதபோது அவரை நினைத்து நாம் ஏன் வருந்தவேண்டும்?'; 'நெஞ்சே! நீ அடுத்து அவரைக் காணச் செல்லும்போது 'தலைவரைக் காட்டு, காட்டு' என்று என்னைத் தின்னும் இக்கண்களையும் உன்னுடன் கொண்டு போ'; 'நாம் துன்பப்படுவது அறிந்தும் அவர் வருந்தியதுபோல் தெரியவில்லை என்பதற்காக அவர் நம்மை வெறுத்தார் என்று கைவிடலாமா?'; 'கூடும்போது புலவி தீர்க்கும் அவரை பிணங்கி அறியாய். இப்பொழுது அவரைப் பொய்யாகச் சினந்துரைக்கின்றாய்!'; என்றபடி தன் நெஞ்சத்தை வினவி தன் துயரத்தைத் தணிக்க முயன்றுகொண்டிருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
தலைவி இரண்டுங்கெட்ட நிலையில் உள்ளாள். ஒருபுறம் காம உணர்வுகள் தன் கணவர் தன் அருகிலேயே இருக்க வேண்டும் எனத் துன்புறுத்துகின்றன. மறுபுறம் தொலைவில் உள்ள தலைவரை நாடி நின்றால் அது அவளது நாணுக்கு மிகவும் இழுக்காகுமே என்ற எண்ணமும் தோன்றுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக அதாவது இரண்டு பக்கமும் நெருப்பு சூழ நடுவில் மாட்டிக்கொண்ட எறும்புபோல குழப்பமான நிலையில் என் செய்வது என்றறியாமல் இருக்கிறாள் தலைவி. எதற்கு முதல் முன்னுரிமை தருவது? எதைத் தேர்ந்தெடுப்பது? இது ஒரு கடினமான தேர்வு. அப்பொழுது தன் உள்ளத்தை நோக்கிக் கூறுகின்றாள்: ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண்டு பாரங்களையும் ஒருசேரத் தன்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒண்ணு காமத்தை விடு அல்லது நாணத்தை விடு மனமே! என்கிறாள்.

'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நல்ல நெஞ்சு என்று பாராட்டியவாறாம்.
முன்னரும் காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து (படர்மெலிந்து இரங்கல் 1163 பொருள்: துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் காதலுணர்வும் நாண் குணமும் சுமைகளாக உயிர் என்னும் காத்தண்டின் இருபுறமும் தொங்குகின்றன.) என்று காமத்தையும் நாணத்தையும் சமன் நிலையில் வைத்து உயிர் காக்கப் போராடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள் தலைவி. அந்தப் பிரிவுநிலை இன்னும் முடியவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்து இப்பொழுது வேகம் எடுக்கிறது. தலைவி நாணத்திற்கும், காமத்திற்கும் நடுநின்று வேதனையுறுகிறாள். நாண் என்பது பெண்ணுக்கியற்கையாக அமைந்துள்ள உயரிய பண்பாகும். காதல் உயிர் போன்றதாகும். காதலுக்காக நாணத்தை விட்டு அவர்பால் செல்ல வேண்டும். நாணம் இருக்க வேண்டுமென்றால் அவரிடம் செல்லுதல் இயலாது. காலிங்கர் 'எனவே கணவன் மாட்டுக் காதலும் பிறர்மாட்டு நாணமும் பெண்டிர்க்கு இயல்பு. ஆதலால் ஒழித்தற்கு அருமையின் உறுகின்ற உள்ளுறு துயரம் உணர்த்தியவாறாயிற்றே என அறிக' என இரண்டுமே ஒழித்தற்கு அருமை என உரைத்தார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்ணின் நாணமே வெல்லும் அதாவது கணவர் திரும்பி வரும்வரையில் காதல் எண்ணங்களைப் பெண்கள் விட்டுவிடுவர்.

கம்பரும் இப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொண்ட தலைவி பற்றிப் பாடுகிறார். வள்ளுவரின் தலைவி தன் நெஞ்சிற்குச் சொல்வதைத் தோழிக்குச் சொல்வதாக கம்பர் காட்டுகிறார்:
மெல்லியல் ஒருத்தி. தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள். ‘போதி தூது’ எனச்
சொல்லுவான் உறும்; உற. நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து. விம்மினாள்
(கம்ப இராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலம், 1007 பொருள்: மென்மைத் தன்மைபொருந்திய ஒருத்தி தன் விருப்பத்திற்குரிய ஒருதோழியைத் தழுவிய கையினையுடையவளாய் தனக்காகக் கணவனிடம் தூது போவாயாக எனச் சொல்ல வருவாள்; அப்படிச் சொல்லவருமிடத்து நாணம் வந்து தடுக்கும். அதனாற் சொல்லமாட்டாள். இவ்வாறு அவள் காதலால் சொல்ல நினைப்பதும். நாணத்தால் சொல்லாமல் விடுவதுமாக நெடுநேரம் வீணே கழித்து வறிதே இருந்து புலம்பினாள்.) அதாவது தலைவரிடம் தூது போய்வா என்று சொல்ல முடியாமல் தலைவி நின்றுகொண்டே இருக்கிறாள். அவளுக்கு நாணத்தால் சொற்கள் வெளிவரவில்லையாம். இரவு முழுதும் இருந்து அழுதே கழித்தாளாம் பொழுதை.

'பொறேன்' குறிப்பது என்ன?

'பொறேன்' என்றதற்கு பொறுத்தலரிது, சுமக்கமாட்டேன், பாரமும்கூடப் பொறுக்கல் ஆற்றேன், உடன் தாங்கும் மதுகை இலன் [மதுகை-வலிமை/திறமை], தாங்கும் ஆற்றல்இல்லை, தாங்கேன், தாங்கும் ஆற்றல் இலேன், சேர்த்துச் சகிக்க முடியாது, தாங்கமாட்டேன், தாங்கும் வலிமை இல்லை, பொறுக்க மாட்டேன், தாங்க முடியாது, சமாளிக்க முடியவில்லை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘பொறேன்’ அதாவது பொறுக்க இயலாதிருக்கிறேன் என்று தலைவி சொல்வதால் காலிங்கர் காம நோயையும் நாணுகின்றதையும் சுமைகள் எனக் கொண்டு உரை வரைந்தார். காமுற்ற தலைவி அதை ஆற்றவும் முடியாளாய், உரைக்கவும் இயலாதவளாய் இருப்பதைக் குறள் இவ்விதம் காட்டுகிறது.

'பொறேன்' என்றதற்குத் தாங்கமாட்டேன் என்பது பொருள்.

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறுத்துக் கொள்ளேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியானவள் காமத்தையும் நாணத்தையும் விடாத தன் நல்நெஞ்சொடுகிளத்தல்.

பொழிப்பு

ஒன்று காதல் விருப்பத்தை விடு அல்லது நாணத்தை விட்டு விடு; நல்ல நெஞ்சே! இரண்டையும் நான் தாங்கமாட்டேன்.