இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1246



கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்:1246)

பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.

மணக்குடவர் உரை: என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

பரிமேலழகர் உரை: (தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: புலவியைக் கலவியால் நீக்கும் காதலரைக் கண்டால் நீ புலந்து கூறமாட்டாய்; அவரை முன்னரே சென்று கூடுவாய். அவ்வியல்பு உடைய நீ, அவரைக் கண்டு இப்பொழுது கொடியரென ஏன் பொய்யாகச் சினங்கொள்கின்றாய்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு! கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தி.

பதவுரை: கலந்து-ஒன்றுசேர்தல்; உணர்த்தும்- ஊடல் நீக்கித் தெளிவிக்கும், உணர்ந்து (புலவியை) நீக்கும்; காதலர்-காதலையுடையவர்; கண்டால்-பார்த்தால்; புலந்து-பிணங்கி; உணராய்-(புலத்தலையே) அறிய மாட்டாய், தெளிய மாட்டாய்; பொய்-பொய்யாக, மெய் அல்லாதது; காய்வு-வெறுப்பு; காய்தி-சினந்துகொள்கின்றாய், வெகுள்கின்றாய்; என்நெஞ்சு-எதற்காக நெஞ்சே, எனது உள்ளமே.


கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை:
பரிப்பெருமாள்: காதலர் கொடுமையை உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை:
பரிதி: கூடின நேரத்திலே அன்பு சொல்லும் நாயகர் பிரிந்தபோது காய்வை;
காலிங்கர்: நம் விதி வாய்ப்பாய் நீங்கும் காதலரைக் காணப்பெற்றால் உட்கலந்து உணர்ந்து வைத்தும் புறத்து உடன்று ஊடிப் பின்னும் ஆவம் என்று கருதாய்,
பரிமேலழகர்: (தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; [கழறியது-இடித்துரைத்தது; கலவி தன்னானே-புணர்ச்சியாலே]
பரிமேலழகர் குறிப்புரை: 'கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல்.

'காதலர் கொடுமையை அறிந்தும் அவரைக் கண்டால் புலக்காமல் கலப்பாய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடியுணர்த்தும் அவரைக்கண்டால் வெறுக்காய்', 'புணர்ந்து இன்பமூட்டும் காதலரைக் கண்டுவிட்டால் பிணங்குவதே அறியாத நீ', 'அவர் நம்மோடு கலந்து ஊடலை நீக்குதல் காலத்திலே ஒருதரமாவது பிணங்கி விடாத நீ', 'நம்மோடு கூடி நம் புலவியைத் தீர்க்கும் நம் காதலரைக் கண்டால் புலவியுற்று அறியாய்!', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூடி ஊடலை நீக்கும் தலைவரைக் கண்டால் பிணங்குவதை அறியமாட்டாய் என்பது இப்பகுதியின் பொருள்.

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய் என்நெஞ்சே! .
பரிப்பெருமாள்: இப்பொழுது பொய்யே காயாநின்றாய் நெஞ்சே!.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'கண்டால் புலக்க மாட்டாத நீ காணாவிடத்து வெறுக்கின்றது எற்றுக்கு?" என்று கூறியது. காட்சி-கனவின்கண் கண்ட காட்சிபோலும். முன்பு ஒருகாலத்துப் பிரிந்த தலைமகனைக் கண்ட காட்சி என்னும் அமையும்.
பரிதி: அவர் கூடியிருக்கிற இடத்தில் காயாய் நீ ஏன்? நெஞ்சே! என்றவாறு.
காலிங்கர்: கேளாய், என் நெஞ்சமே! வறிதே ஒரு பொய்க்காய்வு காய்க்கடவை, அவர் புடைப்பு அறிய என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே, அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. [அதுவும் மாட்டாத -பொய்யேயாயினும் ஒருகால் புலத்தலும் செய்ய மாட்டாத; இதனை-பொய்க்காய்வு காய்தலை]
பரிமேலழகர் குறிப்புரை: பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம். [பொய்க் காய்வு-நிலையில்லாத வெறுப்பு]

'அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய் என் நெஞ்சே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! இப்போது பொய்யாக வெறுக்கிறாய்', 'மனமே!(இப்போது) எதற்காக இந்தப் பொய்ப் பிணக்கம் பிணங்குகிறாய்?', 'இப்போது அவரிடத்தில் பொய்யான வெறுப்புக் கொள்ளுகின்றாய்! இதனாற் பயன் என்ன?', 'என் நெஞ்சே! பொய்யாக வெறுக்கின்றாய்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சே! இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் நெஞ்சே! கலந்துணர்த்தும் தலைவரைக் கண்டால் பிணங்குவதை அறியமாட்டாய்; இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது பாடலின் பொருள்.
'கலந்துணர்த்தும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இப்பொழுது ஏன் காய்கிறாய் நெஞ்சே? தலைவர் வரும்பொழுது உன்னை ஊடவிடாது கூடிவிடுவார்!

மனமே! கூடிப் பிணக்கத்தை நீக்கும் கணவரைக் கண்டவுடன் ஊட நினைத்ததை அறியமாட்டாய்; இப்போது பொய்யாக அவரிடம் சினங்கொள்கின்றாய்!
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் திரும்பி வரவில்லை. காதலிக்குப் பிரிவுத் துயரம் தாங்கமுடியவில்லை. உறக்கம் இழந்து உறுப்புநலன் அழிகிறாள். எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். சோர்வடைந்த நிலையில் தன் மனதுடன் பேசி ஆறுதல் பெறுகிறாள்.
'பிரிவைத் தாங்கமுடியாத எனக்கு நல்ல மருந்து ஒன்றை நீ ஆய்ந்து பார்த்து எனக்குச் சொல்வாயா'?; 'அருள் காட்டாத தலைவர் பற்றி நீ எண்ணி வருந்திக் கொண்டிருப்பது அறிவற்ற தன்மையே'; 'துன்புறுத்தும் நோயைச் செய்தவர்க்கு நம்மிடம் அன்பு செய்யவேண்டும் என்று நினைக்காதபோது அவரை நினைத்து இங்கு நாம் ஏன் வருந்தவேண்டும்?'; 'நெஞ்சே! நீ அவர்பால் சென்றாயானால் 'அவரைக் காட்டு, காட்டு' என்று என்னைத் தின்னும் இக்கண்களையும் உன்னுடன் கொண்டு போ'; 'நாம் துயருறுவதை அறிந்தும் அவர் வருந்துவார்போன்று தெரியவில்லையே. அதற்காக அவர் நம்மை வெறுத்தார் என்று அவரைக் கைவிடும் வலிமை நமக்கு உண்டோ?'; இவ்விதம் தன் உள்ளத்திலிருப்பதை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
விரைந்து மீளாத காதல்கணவருடைய கொடுமையை நினைத்து அவர்மீது சினம் கொள்கிறாள் தலைவி. அதுசமயம் தன் நெஞ்சை விளித்துத் தன்னுள்ளத்தை வெளிப்படுத்துகிறாள். அவள் சொல்கிறாள்: 'நெஞ்சே! முன்பெல்லாம் தலைவர் உன்னைக்கூடி ஊடலைத் தீர்க்க முயலும்போது நீ பிணங்காமலே அவர் கூடலுக்கு முன்நின்றாய். இப்போது அவர் வராததை நினைத்து அவர்மீது வெறுப்புக் காட்டுகிறாய். இது பொய்யான காய்வு'.

ஊடுதல், உணர்தல், புணர்தல் என்றிவை மூன்றும் ஊடலில் விளக்கமாக அமைவன. தலைவிதான் ஊடலைத் தொடங்குவாள். கணவர் ஊடலைத் தெளிவிக்க முயல்வார். இது உணர்தல் நிலை. பின்னர் அது கூடலில் முடியும். இது வழக்கமான ஊடல் ஆட்டத்தின் நிகழ்வுகள். உணர்தல் இன்றியே கூடல் நடப்பதும் உண்டு. இங்கு சொல்லப்படுபவர் கூடி ஊடலை நீக்கும் தலைவராவார். கலந்துணர்த்தும் காதலர் என்ற தொடர் இதை விளக்கும். அவர் கலந்துணர்த்தும் போது இவள் புலத்தலை எண்ணமாட்டாள். 'புலந்துணராய்' என்ற தலைவியை விளிக்கும் தொடர் இதைச் சொல்கிறது.
கணவர் பிரிவுக்கு முன் நிகழ்ந்துள்ள காட்சிகள் அவள் நினைவுக்கு வருகின்றன. அந்த நேரங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக தலைவி கணவர் மேல் வெறுப்பாய் இருப்பாள். 'அவர் வரட்டும். பார்த்துக்கொள்கிறேன்' என்று அவர் மீது காய்ந்துகொண்டிருக்கும் தலைவி புலத்தலுக்கு ஆயத்தமாவாள். இவள் ஊடுவாள் என எதிர்பார்த்து அவரும் இவளது மனநிலை உணர்ந்து அமைதிப்படுத்த எண்ணுவார். ஆனால் அவள் ஊடினாளா? இல்லை. அவரைக் கண்டவுடன் பிணக்க எண்ணத்தை விட்டுவிட்டு அவனுடன் ஒன்றுபட்டு விடுவாள். இது போன்ற பல முன்னைய நிகழ்வுகளையெல்லாம் நினைத்துத் தலைவி 'என் நெஞ்சே! உன் தலைவரோ புலவியைக் கலவியாலே நீக்க வல்லவர். எனவே அவர் திரும்ப வரும்போது அவருடன் ஊடாமலே கூடி விடுவாய். புலவியைக் கூடச் செய்யமுடியாத நீ இப்பொழுது அவர் மீது பொய்யான சினம் காட்டுகிறாய். கண்டால் சினம்கொள்ளாத நெஞ்சு, காணாதபோது அவர்மீது குற்றம்காண்பது போலப் போலிச் சீற்றம் கொள்கிறது!' எனத் தன் நெஞ்சுடன் கொஞ்சலாகப் பூசலிடுகிறாள். பரிப்பெருமாள் இக்குறட்கருத்தைக் 'கண்டால் புலக்க மாட்டாத நீ காணாவிடத்து வெறுக்கின்றது எற்றுக்கு?" என்று கூறியது' என விளக்கினார்.
ஒருபுறம் காய்தல் உள்ளம், மறுபுறம் காதல் வேட்கை. தலைவியின் இவ்விரு மனங்களை இயைத்துக்காட்டியுள்ள அழகு இப்பாடலில் மிளிர்கிறது.

மற்ற உரையாசிரியர்கள் எல்லாம் ‘என் நெஞ்சு’ என்பதை 'எனது நெஞ்சே' என்று கொள்ள, நாமக்கல் இராமலிங்கம் 'என் பொய்க்காய்வு காய்தி' அதாவது எதற்காகப் பொய்க்காய்வு காய்தி? என, பரிபெருமாள் உரை தழுவியதாக, வினாப் பொருளாகக் கொண்டுரைத்து 'புணர்ந்து மகிழ்ச்சியூட்டும் காதலரைக் கண்ட உடனே பிணக்கத்தையெல்லாம் மறந்துவிட்டு அவரிடம் தாவுகின்ற நீ, இப்போது எதற்காக இந்தப் பாசாங்கு செய்கிறாய்?' என்ற விளக்கமும் தந்தார்.

'கலந்துணர்த்தும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'கலந்துணர்த்தும்' என்ற தொடர்க்கு அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும், கூடின நேரத்திலே அன்பு சொல்லும், உட்கலந்து உணர்ந்து வைத்தும், கலவிதன்னானே நீக்கவல்ல, கூடலின்ப ஆசை காட்டி நீக்கவல்ல, கூடியுணர்த்தும், புலவியைக் கலவியால் நீக்கும், புணர்ந்து இன்ப உணர்ச்சி தருகின்ற, கூடிக் கலந்து ஊடி உணர்த்தும், கலந்து ஊடலை நீக்குதல் காலத்திலே, நம் புலவியைத் தீர்க்கும் என்று உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

'கலந்துணர்ந்தும்' என்பது மணக்குடவர் பாடம்.
''கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது; அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல்" என்பது இத்தொடர்க்குப் பரிமேலழகர் விளக்கவுரை. கலவியின்ப ஆசை காட்டி அதனாற் புலவியை நீக்குதல் என்பது இதன் கருத்து. அதாவது 'கூடி ஊடலை நீக்குதல்' என்பதாம்.

'கலந்துணர்த்தும்' என்ற தொடர் 'கூடி ஊடலைத் தெளிவிக்கும்' என்னும் பொருள் தரும்.

என் நெஞ்சே! கூடி ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் பிணங்குவதை அறியமாட்டாய்; இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவரைக் கண்டால் ஒருவாறாகவும் காணாதவிடத்து வேறாகாவும் நடந்துகொள்கிறாயே நெஞ்சே எனத் தலைவி நெஞ்சொடுகிளத்தல்.

பொழிப்பு

தலைவர் கூடவரும்போது புலக்கக்கூட மாட்டாய்; இப்பொழுது பொய்யாக அவரிடம் சினங்கொள்கின்றாய், என் நெஞ்சே!