இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1227



காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1227)

பொழிப்பு (மு வரதராசன்): இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

மணக்குடவர் உரை: இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.

பரிமேலழகர் உரை: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.
(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)

வ சுப மாணிக்கம் உரை: காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாகும்; மாலையில் மலரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.

பதவுரை: காலை-விடியற்காலம்; அரும்பி-அரும்பாகத் தோன்றி, மொட்டாகி; பகல்-பகற்பொழுது; எல்லாம்-முழுவதும்; போதாகி-பேரரும்பு ஆய்; மாலை-மாலைப்பொழுது; மலரும்-விரியும், பூவாகிவிடும்; இந்நோய்-இந்த (காதல்)துன்பம்.


காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து;
பரிப்பெருமாள்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ்த்து;
பரிதி: காலை அரும்பிப் பகற்பொழுது முகிழ்த்து;
காலிங்கர்: நெஞ்சே! காலை வந்து அரும்பிப் பகற் பொழுதாகிய அளவு இறந்த நாழிகை எல்லாம் பூ வடிவுகொண்டு, விம்மி, மணம் பொதிந்து;
பரிமேலழகர்: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து;

'காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் மொட்டாய் முதிர்ந்து', 'காலையில் அரும்புவிட்டுப் பகல் முழுதும் சிறுகச் சிறுக முதிர்ந்து மொட்டாகி', 'காலைப் பொழுதில் அரும்புபோலத் தோன்றிப், பகற்பொழுதெல்லாம் பேரௌம்பாய் முதிர்ந்து', 'காலையில் தோன்றி, பகல் முழுவதும் உருவாகி' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விடியற்காலையில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

மாலை மலரும்இந் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.
பரிப்பெருமாள்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மாலையால் வருத்தமுற்ற தலைமகள் வேறுபாடு கண்டு, 'விடியலும், நண்பகலும் ஆற்றி இப்பொழுது வேறுபட்டாய்; இதற்குக் காரணம் என்' என்ற தோழிக்குத் தலைமகள் காரணம் கூறியது.
பரிதி: காமமாகிய மலர் அந்திக்காலம் மலரும் என்றவாறு.
காலிங்கர்: யாம் உறுகின்ற இக்காம நோயானது, மற்று இம்மாலைப் பொழுதின்கண் வந்து மலராகி நிற்கும் என்றவாறு.
பரிமேலழகர்: இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.

'இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோயாகிய பூ மாலைப் பொழுதில் நன்கு மலர்ந்து விடும்', 'இந்தக் காமநோய் என்னும் மலர், மாலை நேரத்தில்தாம் மலராக விரிகிறது. (அதனால் தான் காலை வேளையில் இந்தக் காமத் துன்பம் வருத்துவதில்லை)', 'இந்தக் காமநோயானது மாலைப் பொழுதின்கண் மலர்கின்றது', 'இக்காதல் நோய் மாலைப்பொழுதில் மிகும். (காதல் பூ காலையில் காயரும்பாகி பகலில் பேரரும்பாகி மாலையில் மலராக விரியும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதல் என்னும் இத்துன்பம் மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பம் உண்டாக்கும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்.
'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன?

காமப்பூ மாலைப்பொழுதில் விரிகிறது.

காதல் என்னும் நோய் காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றிப் பகற்பொழுதெல்லாம் மொக்குப் போல் முதிர்ந்து, மாலைப் பொழுதில் மலர்கிறது.
காதல்நோய் காலையில் மொக்கு விட்டுப் பகற்பொழுதில் மொட்டாகி மாலையில் மலர்ந்து விடுகிறது.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவனை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாள் மனைவி. தன் துயரத்திற்குக் காரணம் மாலைப் பொழுதுதான் என்று எண்ணி 'நீ நல்லா இரு!' என்று வாழ்த்துவது போல அதைப் பழிக்கிறாள் அவள். உயிருண்ணும் வேல், மருள்மாலை, பைதல்கொள் மாலை, கொலைக்களத்துக் கொலைஞன், நோய் செய்யும் மாலை என்று சொல்லித் தன் வெறுப்பை அப்பொழுதின்மீது கொட்டித் தீர்க்கிறாள். மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமைதான் என்னவோ? என அரற்றுகிறாள். அவர் உடன் இருந்தபோது மாலைப்பொழுது இந்த அளவு வருத்தம் செய்யும் என்று அறிந்திருக்கவில்லையே எனவும் கூறிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
இரவுக்காலம் கழிந்து விடிந்த பொழுது காதல் துன்பம் துவங்குகின்றது; காமநோய் அரும்புகின்றது. நண்பகல் நேரத்தில் இன்னும் மாறுபட்டு இருக்கிறாள்; விடியற்காலை பார்த்த தோற்றத்தில் அவள் இல்லை. மயங்கும் மாலை நெருங்கினால் துன்பம் மேலும் மிகுந்து அதைத் தாங்கமாட்டாமல் துவண்டு போகிறாள் அவள்.
நோய் என்று இப்பாடலில் சொல்லப்பட்டது காமத் துன்பத்தை. நோய் என்னும் இடத்தில் காதல்நோய் எனக்கொண்டு அதைப் பூவின் வளர்ச்சிநிலைகளுக்கு ஒப்புமை கண்டால் குறட்கருத்து விளக்கம் பெறும். காமத்துன்பத்தின் வளர்ச்சி கூறவே பூ மலர்தல் சொல்லப்பட்டது. தலைவனது பிரிவுக்காலத்தில், காமம் காலை புலரும்போது அரும்பும்; பகலில் பொழுது செல்லச்செல்ல போதாகும்; மாலையில் மலரும் அதாவது முழு அளவினதாய்த் தாக்கும் என்கிறது இச்செய்யுள். பூ காலத்தொடு பொருந்தி வளர்வதுபோலக் காம உணர்வும் காலத்தொடு பொருந்தி வளர்வதைக் குறிக்கிறது இது. காமம் மலரைப் போல் அழகானது, இனிமையானது என்றாலும், நோயைப்போல் துன்பம் தருவதால் அதுவே மலரும் நோயுமாம்.
காலையில் சிறிதளவாக இருந்த காமமும் துன்பமும், பொழுதுசாயும் மாலையில் பெரிதாய் வளர்ந்து விடுகிறது. இவ்வாறு மலரையும் காமத்தையும் ஒப்பிட்டிருப்பது கற்போர் உள்ளத்தை ஈர்க்கின்றது.

பரிமேலழகர் இம்முன்று நிலைகளையும் இவ்வாறு விளக்குகிறார்:
காலைஅரும்பி - துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி.
பகலெல்லாம் போதாகி - பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றி.
மாலை மலரும் - தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி.
இக்குறள் காமத்தை ஒரு மலராக உருவகித்துக் கூறியிருக்கின்றது. அரும்புதல், போதாதல், மலர்தல் என்று உருவகத்திற்கு ஏற்ப வினைகள் சுட்டப்பட்டன. 'உருவகங்கள் பெற்ற வள்ளுவரின் சொல்லாட்சிகள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்க்கும் போதுதான் அவர் மொழிநடையில் அவற்றை எத்துணை அளவு நுட்பமாகக் கையாண்டுள்ளார் என்பது தெளிவாகும்' என்பது இ சுந்தரமூர்த்தி கருத்துரை.

'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன?

போதாகி என்றதற்கு முகிழ் முகிழ்த்து, முகிழ்த்து, பேரரும்பாய் முதிர்ந்து, முதிர்ந்த மொட்டாகி, மொட்டாய் முதிர்ந்து, முகை மொட்டாகி, மொக்குப் போல் திரண்டு, பேரரும்பாய் முதிர்ந்து, மலரும் பக்குவத்தில் உள்ள பேரரும்பாகி, மலரத்தக்க மொட்டாகி, மொட்டாக இருந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

போதாகி என்றது 'போது ஆய்' என்ற பொருள் தரும். காலிங்கர் விம்மி, மணம் பொதிந்து என்று விளக்க உரை கூறுவார்.
பூவின் மூன்று நிலைகளான 1. அரும்பு 2. போது 3. மலர் என்பதில் இடையில் இருப்பது 'போது' என்பது. பகலில் மெல்ல வளர்ந்து ‘போது‘ என்று சொல்லும் பேரரும்பாக உருவம் கொண்டது. பின்வரும் முகைமொக்குள் உள்ளது நாற்றம்.... (குறள் 1274 பொருள்: முகை சிறுது முகிழ்க்கும் போது இன்னமும் முற்றிலும் வெளிப்படாது சிறுது தோன்றும் நறுமணம்...) என்ற குறளில் உள்ள முகை மொக்கு என்ற தொடர் 'போது' நிலையைக் குறிப்பதாக உள்ளது.

'போதாகி' என்ற சொல்லுக்கு முகைமொக்காகி அல்லது முகைமொட்டாகி என்பது பொருள்.

துன்பம் தரும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதல்துன்பத்தை மிகுவிக்கும் மாலைப் பொழுதுகண்டு இரங்கல்.

பொழிப்பு

காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாய் முதிரும்; மாலையில் மலர்ந்து விரியும்.