இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1197



பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1197)

பொழிப்பு (மு வரதராசன்): (காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

மணக்குடவர் உரை: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ?
காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ.
('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: (பொதுவாக இருக்க வேண்டிய) மன்மதன் ஒரு பக்கத்தில் சேர்ந்துகொண்டு (என் காதலர் மீது பாணம் விடாமல்) என் மீது மட்டும் பாணம் விட்டுப் பாரபட்சமாக நடந்து கொள்ளுகிறானே அவன் நான் படும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான்கொல்?

பதவுரை: பருவரலும்-வருத்தமும்; பைதலும்-துன்பமும்; காணான்கொல்-.-அறிய மாட்டானோ; காமன்-காமன், காதல் தெய்வம்; ஒருவர்கண்-ஒருவர் இடத்து; நின்று-நிலை நின்று; ஒழுகுவான்-செயலாற்றுபவன், இயங்குபவன்.


பருவரலும் பைதலும் காணான்கொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ?
பரிப்பெருமாள்: நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணாதான்;
பரிதி: மயலான கிலேசமும் பசலையும் காணானோ;
காலிங்கர்: நெஞ்சே! யாம் உறுதுயரமும் இதனால் உள்ளுறும் இரக்கமும் கண்டிலன் போலும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ; [அவ்விடத்து -காதலர் உள்ள இடத்தில்; பருவரல்-வருத்தம்; படர்மிகுதி - துன்பமிகுதி]

'யாம் உறுதுயரமும் இதனால் உள்ளுறும் துன்பமும் கண்டிலன் போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத் துன்பமும் வருத்தமும் அறியானோ?', 'அவன் நான் படும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா?', 'பசப்புத் துன்பத்தையும் தனிமைத் துன்பத்தையும் அறியாதவர் போலும்', 'அவரிடத்தில் துன்பமும் பசலையும் அறிய மாட்டானோ?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானோ என்பது இப்பகுதியின் பொருள்.

காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்.
மணக்குடவர் குறிப்புரை: காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
பரிப்பெருமாள்: ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாதலான்
சேய்மைக்கண் பிரிதலே அன்றி அணுமைக்கண் பிரியும் பிரிவும் உள; அவையாவன்: அவைக்களனும் மாசவையும் அத்தாணியும் புகுதவும் நல்லிசை நயந்து வந்தோர் காணவும், பணை நிலைப் புரவி காணவும் வாரியுள் யானை காணவும், நாட்டகத்துப் பிரியும் பிரிவு. அவற்றுள் யாதானும் ஒன்றானால் தலைமகன் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சேய்மைக்கண் பிரிந்தான் ஆயின் பருவம் காணின் அல்லது இக்கூற்றினால் பயன் இல்லை. பரத்தையிற் பிரிவு ஆயின், புலவி தோன்றும். ஆதலால் அணுமைக்கண் பிரிந்தானைப் பற்றிக் கூறப்பட்டது என்று கொள்ளப்படும். இவ்வுரை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.
பரிதி: காமன்; என்னையேன் சண்டையிடுவது என்றவாறு,
காலிங்கர்: இங்ஙனம் ஒருவர் கண்ணே நின்று இடம் செய்து ஒழுகுவானாகிய இந்தக் காமன் என்கின்றவன்; .
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனை அவன் கண்டானாகில் ஆண்டும் சென்றும் அடர்ப்பன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்;
பரிமேலழகர் குறிப்புரை: விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம். [கடவுள்-காமக் கடவுள்; என் கண் - என்னிடம்; யான் உய்யுமாறு என்னை? -யான் பிழைக்கும் வழி எது?]

'தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றான் ஆதலின்', 'இருபாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய காமக் கடவுளான மன்மதன் ஒரு பக்கத்தில் சேர்ந்துகொண்டு (என் காதலர் மீது பாணம் விடாமல் என் மீது மட்டும் பாணம் விட்டு) பாரபட்சம் செய்கிறானே', 'இருவரிடத்திலும் சமமாக நில்லாது ஒருவரிடத்து மாத்திரமே நின்று இயங்கும் காமக்கடவுள், அங்ஙனஞ் செய்ததா லுண்டாகும்', 'காதற்கடவுள் ஒருவரிடத்தே பொருந்தி வருத்துகின்றான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணிய காமன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணிய காமன், அவர் உறும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானோ என்பது பாடலின் பொருள்.
'ஒருவர்' யார்?

'எங்கள் இருவரில் நான் மட்டும்தான் தனிமைத் துயர் எய்த வேண்டுமா?' எனக் கேட்கிறாள் தலைமகள்.

காமன் ஒருவரிடத்தே நின்று காமக்கணை தொடுத்து வருத்துகின்றான்; அவர் அடையும் துயரத்தையும் துன்பத்தையும் அறிய மாட்டானோ?
காட்சிப் பின்புலம்:
தொழில் தொடர்பாகக் கணவர் பிரிந்து தொலைவு சென்றிருக்கிறார். தனிமையின் துயர் தாங்க முடியாமல் தலைவியின் உடல் கெடுகிறது. பசலை படர்கிறது. தலைவன் நினைவாகவே இருப்பதால் தூக்கமின்றி இருக்கிறாள். அவ்வேளையில் உலகத்து மற்ற இணையர்களது உறவுநிலைகளை எண்ணிக் கொள்கிறாள்.
தம்மால் காதலிக்கப்படும் தலைவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் இவர்கள் வாழ்வு விதையில்லாத கனி போன்று முழுவதும்‌ சுவைக்கப்பட்டு முழுமையான காம இன்பம்‌ பெறுமே; தன் வாழ்க்கைத் துணைவிக்குச் சமயம் அறிந்து கணவர் செய்யும் அன்புச்செயலானது வேண்டும் காலத்தில் கிடைக்கும் மழை போன்றதாகும்; ஒருவர்க்கொருவர் விருப்பத்துடன் வாழும் வாழ்க்கை அமையும்போது 'நாம் வாழ்கிறோம்' என்னும் செருக்குடன் இருக்கலாம்; தாம் காதலிக்கும் கணவரின் விருப்பம் இல்லா இல்வாழ்வு உரிமையற்ற வாழ்க்கையாகும்; அவ்வாழ்வில் இன்பம் இராது. மகளிர் ஆடவர் என்னும் இருபக்கத்தும் காவடியினது பாரம்போல ஒத்த அளவில் காதல் இல்லாமல் காதல் அமைந்திருந்தால் வாழ்வு இருவர்க்கும் துன்பமாகவே இருக்கும்; இவ்வாறாக அவளது மனதில் இல்வாழ்வில் உள்ளவர்களது காதல்நிலைகளை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இக்காட்சி:
ஒருபக்கமாகக் காதல் உடையவர்களையும் நினைத்த தலைவி இப்பொழுது தன் நிலையை உள்ளிப்பார்க்கிறாள்.
தனிமையில் வாடும் அவள் தான் மட்டும்தான் துயருறுகிறோமா அல்லது பணி காரணமாக அயல் சென்றிருக்கும் கணவருக்கும் அத்துயரம் உண்டா என எண்ணத் தொடங்குகிறாள். காமன். காதல்கொண்ட இருவர்பாலும் காம விருப்பத்தை உண்டு பண்ணி இருவரையும் கூட்டுவிக்க வேண்டியவன். ஆனால் என்மாட்டு விருப்பத்தை உண்டுபண்ணி விட்டு என் காதல்கணவர் பக்கம் செல்லவில்லைபோல் தோன்றுகிறதே. கணவர்மீதும் காம இச்சையை காமன் உண்டுபண்ணி வருத்தமும் துன்பமும் உண்டாக்கியிருந்தால் அவர் இந்நேரம் இல்லம் திரும்பியிருப்பாரே! என எண்ணுகிறாள். காமன் தனக்கு மட்டும்தான் பருவரலும் பைதலும் தந்தவாறு செயல்படுகிறான்; தன் கணவருக்குக் காமன் தரும் வருத்தமும் துன்பமும் இல்லை போலும் என்று சொல்கிறாள். காமன் ஒருவரிடத்தே பொருந்தி மற்றவரை விட்டுவிடுவானோ எனக் கேட்கிறாள். அந்த ஒருவர் துய்க்கும் மனவருத்தத்தையும் உடல் துன்பத்தையும் (பசலை) காமன் அறியமாட்டானோ? எனத் தனிமைத் துயர் தாங்கமுடியாமல் இங்கு தலைவி ஏக்கத்துடன் புலம்புகிறாள். கணவர் விரைந்து இல்லம் திரும்பவேண்டும் என்ற கருத்தில் அவர் காமம் தரும் துன்பமில்லாமல் இருக்கிறார் என இவளாகவே கற்பனை செய்து கொள்கிறாள்.

காமன் என்பவன் தொன்மங்களில் காதல் தெய்வமாகப் புனையப்பட்டவனாவான். மன்மதன் என்றும் அறியப்படும் இவன் மக்களுக்கு காமவிருப்பத்தை உண்டாக்குபவனாக விளங்குகின்றான்; இவன் காதலைத் தோற்றுவிப்பவன் என்று கருதப்படுபவன்; வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக காட்டப்படுபவன்; அவனுடைய வில் கரும்பால் ஆனது, காமனின் அம்பு நறுமண மலர்களால் ஆனது. அவன் காமக்கணை தொடுப்பான்.

பருவரல், பைதல் என்னுஞ் சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கூறப்பட்டது. பருவரல் என்பதற்கு வருந்தும் என்பதுவும் ‘பைதல் என்பதற்குத் துன்பம் என்ற பொருளும் பொருந்தும் என்று கூறி வருத்தத்தைக் காரணமாகவும் துன்பத்தைக் காரியமாகவும் கொள்க எனத் தெளிவுபடுத்துவார் இரா சாரங்கபாணி

'ஒருவர்' யார்?

ஒருவர் பக்கமாகநின்று இயங்கித் துன்பஞ்செய்கின்றானே காமன் என்ற பொருளில் அமைந்துள்ளது பாடல். இந்த ஒருவர் ஆண்-பெண் இருவரில் ஒருவரைக் குறிப்பதால் பலர்பால் விகுதி பெற நின்றது என்பர். அந்த இருவரில் யார் இங்கு சொல்லப்பட்ட 'ஒருவர்'?
உரையாசிரியர்களில் பெரும்பான்மையோர் இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதி 'தான் மட்டும் துயரும் துன்பமும் அனுபவிப்பதாக' பொருள் கூறியதால் இவர்கள் உரையின்படி 'ஒருவர்' என்பது தலைவியைக் குறித்ததாகிறது. மிகச் சிலர் குறளில் கிடந்தாங்கு பொதுவில் பொருள் செய்தனர். இது ஆடவர்-பெண்டிர் இருவர்க்கும் ஒருதலைக்காதல் பொருந்துவதே என்ற கருத்துடையது.
ஆடவர் - மகளிர் இருவருமே தனிமைத் துன்பத்துக்குள்ளாகக் கூடியவர்களே. ஆனால் தனிப்படர் மிகுதி அதிகாரம் துணைவரைப்‌ பிரிந்து வாழும்‌ தலைமகளுக்கே இத்துயர மிகுதி உளதாம் என்பதைச் சொல்வது. எனவே ஒருவர் என்றது இணையின்றித் தனிமையில் துயருறும் தலைவி பற்றியதே. தலைவி தன்னையே 'ஒருவர்' எனச் சுட்டி பொருமுகிறாள் இங்கு.

'ஒருவர்' என்பது இங்கு தலைவி குறித்தது.

ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணிய காமன், அவர் உறும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானோ என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உள்ளத்தாலும் உடலாலும் துயருறும் தலைவி தனிப்படர் மிகுதியில் காதல்தெய்வம் மீது சினம் கொள்கிறாள்.

பொழிப்பு

ஒருவரிடத்தே நின்று காதலை உண்டுபண்ணிய காம தெய்வம் அவரது வருத்தத்தையும் துன்பத்தையும் காண மாட்டானோ?