இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1183



சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1183)

பொழிப்பு (மு வரதராசன்): காமநோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்

மணக்குடவர் உரை: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையால் கூறியது.

பரிமேலழகர் உரை: ('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: துன்பத்தையும் பசலை நிறத்தையும் எனக்குத் தந்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக என் அழகையும் நாணத்தையும் அவர் கொண்டு போய்விட்டாரே!


பொருள்கோள் வரிஅமைப்பு:
கைம்மாறா நோயும் பசலையும் தந்து சாயலும் நாணும் அவர்கொண்டார் .

பதவுரை: சாயலும்-மேனி அழகும்; நாணும்-வெட்கமும்; அவர்-அவர்; கொண்டார்-கொண்டு சென்று விட்டார்; கைம்மாறா-மாற்றாக; நோயும்-துன்பத்தையும்; பசலையும்-பசப்பையும், நிறவேறுபாட்டையும்; தந்து-கொடுத்துவிட்டு.


சாயலும் நாணும் அவர்கொண்டார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்;
மணக்குடவர் குறிப்புரை: மென்மை- பெண்மை.
பரிப்பெருமாள்: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மென்மை- பெண்மை.
பரிதி: அழகும் நாணத்தையும் அவர் கொண்டார்;
காலிங்கர்: தோழி! மயில்போலும் சாயலும் உயிர் போலும் நாணமும் என் காதலாகியவர் கொண்டு ஏகினார். தாம் அவை கொண்டு ஏகினார்;
பரிமேலழகர்: ('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.

''மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போனார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சாயல் என்பதற்குப் மென்மை என்று பொருள் கொண்டனர் மணக்குடவர்/பரிப்பெருமாள்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாயலையும் நாணையும் எடுத்துக் கொண்டார்', 'பிரிகின்றபோது அவர் என்னிடமிருந்த மேனியழகையும் நாணத்தையும் கொண்டு சென்றார்', 'என் மேனியழகினையும் வெட்கத்தையும் அவர் என்னிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார்', 'என் மேனியழகினையும் நாணினையும் கொண்டு போயினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் மேனியழகினையும் நாணினையும் கொண்டு போயினார் என்பது இப்பகுதியின் பொருள்.

கைம்மாறா நோயும் பசலையும் தந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையால் கூறியது.
பரிப்பெருமாள்: அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை:. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு தலைமகள் ஆற்றாமையால் கூறியது.
பரிதி: எனக்கு விரகமும் பசலையும் தந்து என்றவாறு.
காலிங்கர்: அதற்குக் கைம்மாறாக எனக்கு இவ்வுறுதுயரும் பசப்பு என்னும் இவை இரண்டும் ஒருங்கு தந்து என்றவாறு.
பரிமேலழகர்: பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; [அவ்விரண்டற்கும்- அழகு நாண் என்னும் இரண்டினுக்கும்; தலைமாறாக- ஈடாக (பரிமாற்றாக).
பரிமேலழகர் குறிப்புரை (எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம். [அவை உளவாகலும் - அழகும் நாணும் தோன்றுதலும்; இவை இலவாகலும் - நோயும் பசலையும் மறைதலும்]

'தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து', 'கைம்மாறாக காம நோயினையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு', 'நோயையும் பசலையையும் எனக்குக் கொடுத்து விட்டு', 'அவற்றிற்கு மாற்றாக பிரிகின்ற பொழுதே காதல் நோயையும் பசலையையும் எனக்குத் தந்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மாற்றாக காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் சாயலும் நாணும் அவர்கொண்டார்; மாற்றாகக் காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது பாடலின் பொருள்.
'சாயலும் நாணும் அவர்கொண்டார்' குறிப்பது என்ன?

நிறம் மாறியதால் உடலழகும், காமநோயால் நாண்குணமும் தலைவியிடமிருந்து நீங்கின.

துன்பத்தையும் பசலையையும் கொடுத்து என் அழகையும் நாணையும் உடன் எடுத்துச் சென்று விட்டாரே! - மனைவி.
காட்சிப் பின்புலம்:
தன்னை விரும்பும் கணவர் பணி காரணமாகப் பிரிய நேரிட்டபொழுது விடை கொடுத்த தலைவி அதை நினைந்து நினைந்து வருந்துகிறாள்; அவர் பிரிய உடன்பட்டது தன் குற்றம்தானே என்று. இப்பொழுது இதை யாரிடம் போய்ச் செல்வேன் எனக் கேட்கிறாள் அவள். பிரிவுத் துன்பம் வாட்டுகிறது. உடல் மெலிகிறது. இரவில் உறக்கம் கெடுகிறது; கண்கள் சோர்ந்து நீர் மல்குகிறது; அழகு கெட்டுவிட்டது; உடல் நிறம் மாறியது; பசலை படர்ந்துவிட்டது. இத்தகைய துயரத்திலும் அவளுக்கு ஓர் ஆறுதல் உண்டு. அவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானது. எனவே இது அவர் கொடுத்ததுதானே! அவர் தந்த உரிமையுடன் பசலை வந்து தன் மீது ஊர்வதாக எண்ணித் தன்னைத்தானே ஆற்றிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
இங்கு 'கணவர் பிரியும்போது கைம்மாறாகக் காமநோயையும், பசலையையும் தந்துவிட்டு எனது அழகையும் நாணத்தையும் கொண்டு போயினாரே!' எனத் தலைமகள் புலம்புகிறாள். அவளிடமிருந்து நாண் அகன்று சென்றுவிட்டது. காதல்துன்பம் பெருகுகிறது. அப்பொழுது இந்தப் பிரிவுத் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்துவிட்டு என் மென்மைத் தன்மையையும் நாணினையும் கொண்டு சென்றுவிட்டாரே; இரண்டுக்கு இரண்டு என்று இதைப் பணடமாற்றாகச் செய்து விட்டாராக்கும் என்று அவள் உள்ளுக்குள் உணர்வதை இப்படி வெளியிடுகிறாள். பெண்மைக்குரிய மென்மையையும் உயிரினும் மேலான நாணினையும் அவர் கவர்ந்து கொண்டு சென்று விட்டார். அதற்கு எதிர் ஈடாக அவர் எனக்குக் காமத் துன்பத்தையும். பசலை என்ற நிற வேறுபாட்டையும் தந்திருக்கிறார் எனத் தலைவி கூறுகிறாள். தனது அழகும் நாணும் தொலைந்தன; பதிலுக்கு பிரிவுத் துன்பமும் உடல் பசலையும் பெற்றேன் என்கிறாள்.

‘கைம்மாறு’ என்னும் சொற்கு, மாற்றுதவி (எதிருதவி) என்பது பொருள். அச்சொல் இங்கு பொருள்பரிமாறுதல் (பண்டமாற்று) என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.
'சாயலும் நாணும், நோயும் பசலையும்' என்று இருபொருள் அடுக்கு எண்ணும்மையால் இக்குறள் அமைந்தது.
நாணை எடுத்துக்கொண்டு நோயையும், அழகை எடுத்துக் கொண்டு பசலையும் தந்தார் எனக் கூட்டி எதிர்நிரனிறையாகக் கொண்டால் பொருட்சிறப்பு தெரியும். நோய்க்கு நாணும் பசலைக்குச் சாயலும் ஆக மாறி நிற்றலால் இக்குறள் எதிர்நிரல் நிறையாயிற்று. நிரல்நிறையாவது வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்புடையவற்றை அம்முறையே சொல்லுதலாம். எதிர் நிரல் நிறை இவ்விதியில் மாறி வருவது. நோயைத் தந்து நாணினையும் பசலையைத் தந்து சாயலையும் கொண்டார் என்று கொள்க (இரா சாரங்கபாணி).

'சாயலும் நாணும் அவர்கொண்டார்' குறிப்பது என்ன?

சாயல் என்ற சொல்லுக்கு மென்மை, அழகு, நிறம், போன்ற பல பொருள் உண்டு. இங்கு மென்மை அல்லது அழகு என்று கொள்வர். சாயல்-மென்மை; மென்மை-பெண்மை என்று மணக்குடவர் பதவுரையும் விளக்கமும் தந்தார். நாண் என்ற சொல் வெட்கம் என்ற பொருள் தரும். மயில்போலும் சாயலும் உயிர் போலும் நாணமும் என் காதலாகியவர் கொண்டு ஏகினார் என உவமை தந்து உரை பகர்வார் காலிங்கர்.
சாயல், நாண் என்னும் இரண்டையும் கொண்ட தலைவியிடமிருந்து, அவற்றைக் கவர்ந்து கொண்டு மாறாகக் காமநோயினையும் பசலையையும் நல்கினார் கணவர். அதாவது பிரிவு உடலுக்கும் உள்ளத்துக்கும் துன்பம் தருகிறது என்கிறாள் தலைவி.
தம்முடைய அழகும் நாணமும் இழப்பதைப் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. சாயல் என்ற மென்மை பெண்ணுக்குரிய தனி இயல்பு. காதலரைப் பிரிந்திருக்கும் துன்பத்தால் தலைவியின் முகம் வாட்டமுற்றுத் தோன்றுகிறது. தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை. இதனாலும் அவள் சாயல் அதாவது அழகு கெடுகிறது. நாணமும் பெண்ணுக்கே உரியது. காதலரை நினைத்து அழுது கொண்டிருப்பதால் ஊரார் அவளது காதல்நோயை அறியும்படி ஆயிற்று. இதனால் அவள் நாணும் இழந்தாள் என்றாகிறது. எனவே சாயலும் நாணும் காதலர் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறுகிறாள் தலைவி.
அவளது உடலும் உள்ளமும் அவருடன் சென்றுவிட்டன என்று கூறி அவர் திரும்பி வரும்பொழுது தன்னுடைய அழகையும் நாணையும் திரும்பத் தருவார் என்பதை உணர்த்தி நின்றாள்.

என் மென்மையையும் நாணினையும் கொண்டு போயினார், மாற்றாகக் காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பசலை படர்ந்ததால் வெருட்சியுற்ற தலைவியின் பசப்புறுபருவரல்.

பொழிப்பு

துன்பத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து என் மென்மையையும் நாணத்தையும் கொண்டு சென்றுவிட்டார்.