இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1169



கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1169)

பொழிப்பு (மு வரதராசன்): (பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.

மணக்குடவர் உரை: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.
இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிரிந்திருக்கும் இந்நாள்களில் நெடியவாய்ச் செல்லும் இராக் காலங்கள் எல்லாம் பிரிந்து சென்ற கொடியவர் செய்யும் கொடுமைக்கு மேலே கொடுமை செய்கின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இந்நாள் நெடிய கழியும் இரா கொடியார் கொடுமையின் தாம்கொடிய.

பதவுரை: கொடியார்-கொடியவர், கொடுமை புரிபவர்; கொடுமையின்-கொடுமையைக் காட்டிலும்; தாம்-தாம்; கொடிய-கொடியனவாய் உள்ளன. கொடுமை செய்கின்றன; இந்நாள்-இந்த நாட்கள்; நெடிய-நீண்டவாய்; கழியும்-செல்கின்ற; இரா-இரவுகள், கங்குல்கள்.


கொடியார் கொடுமையின் தாம்கொடிய:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன;
பரிதி: கொடிய நாயகனிலும்;
காலிங்கர்: நெஞ்சே! நமக்கும் பிரிவு என்பதோர் கொடுமை செய்த அக்கொடியாரது கொடுமையினும் தாம் சாலக் கொடியவாய் இருந்தன யாவை எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம். [கடிதின் - விரைந்து; கண்ணோடாமை - முகங்கொடாமை; பண்டையின் -முன்னையினும்]

'கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன', 'என்னைப் பிரிந்து என் காதலர் எனக்குச் செய்துவிட்ட கொடுமைகளைவிட இந்த இரவு அதிகம் கொடுமை செய்கிறது', 'பிரிந்து போன கொடியவரது கொடுமையைப் பார்க்கிலும் அதிகக் கொடுமை செய்கின்றன', 'கொடியாரது கொடுமையை விடக் கொடியனவாய் உள்ளன' என்ற பொருளில் உரை தந்தனர்.

கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இப்பகுதியின் பொருள்.

இந்நாள் நெடிய கழியும் இரா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நெடிய இரா என்றவாறு.
காலிங்கர்: நம்மை ஒருபொழுதும் அறியாது இன்னாவாய் நெடியவாய்ப் பெருகிச் செல்லும் பல யாமங்களை நிலையுறுப்பாக உடைய இந்நெட்டிரா என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே அன்று நெடுகாமையும் இன்று நெடுகுதலும் கண்டு மெலிந்துரைத்தவாறாயிற்று.
பரிமேலழகர்: காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; குறியவாய் - குறியனவாய்; நெடியவாய் - நீண்டனவாய்; கங்குல்கள் - இரவுகள்]

'இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்போது நேரமாகி விடியும் இரவுகள்', '(என் காதலர் என்னுடன் இல்லாத) இந்த நாட்களில் இரவும் மிகவும் நீண்ட நேரம் தாமத்து விடிகின்றது. அதனால்', 'பிரிவாற்றாமையால் வருந்தும் இக்காலத்திலே நெடுநேரஞ்சென்று கழிகின்ற இரவுகள்', 'தலைவரைப் பிரிந்திருக்கும் இந்நாளில் நீண்டனவாய்க் கழிக்கின்ற இரவுகள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இந்நாட்களில் நெடிய கழியும் இரா கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது பாடலின் பொருள்.
'நெடிய கழியும் இரா' என்றால் என்ன?

'இப்பவெல்லாம் விடியும் நேரம் நீண்டுகொண்டே போகிறதே ஏன்?' எனப் பிரிவின் கொடுமை தாங்க முடியாமல் அரற்றுகிறாள் தலைவி.

பிரிவுத் துயரால் வருந்திக்கொண்டிருக்கும் தலைவிக்கு இரவுப் பொழுதானது மிக நீண்டது போலக் கழிகின்றதாம், எனவே இரவுக்காலம் பிரிந்து போன காதலரினும் மிகக் கொடுமையானது என்கிறாள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. பிரிவின் துன்பத்தை அவள் எவ்வளவுதான் முயன்றாலும் அது அடங்காமல் மிகுதிப்படவே செய்கிறது. அவரையே எப்பொழுதும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்துப் போய்விடுகிறது. அவரின்றி காதல்துன்பத்தை எப்படிக் கடக்க முடியும்? ஊரெல்லாம் துயில உதவிசெய்யும் இராப்பொழுது, என்னை மட்டும் தனக்குத் துணையாக்கித் தூங்கவிடாமல் செய்து துன்பத்தை மிகுவிக்கிறது என்கிறாள் தலைவி. தனிமை உணர்வால் அவள் உறும் காமவேதனைகளையும், இரவுவேளைகள் தரும் துயரையும் அவளே இரங்கல் குரலில் கூறிக் கொண்டிருக்கிறாள். இந்நோய் பற்றி யாரிடமும் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காதல், நாண் என்ற சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் வேதனையுறுகிறாள். காதல் கொண்டவரே வீடு திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, காமத் துன்பக் கடலை அவரின்றி எப்படிக் கடப்பேன்! எனத் தவிக்கிறாள்.

இப்பாடல்:
'இந்நாட்களில் இரவுகள் கழிய நெடுநேரமாகின்றது. கொடியவரது கொடுமையைவிட அந்த இரவுநேரங்கள் மிகக் கொடுமை செய்கின்றன' எனத் தலைவி புலம்புகிறாள். கொடியவர் என்று யாரைச் சொல்கிறாள்? பிரிந்து சென்ற கணவரையே கொடியவர் என்கிறாள். பணி காரணமாகத்தான் சென்றிருக்கிறார். அவளிடம் விடைபெற்றுத்தான் சென்றார். ஆயினும், பிரிந்தால் தான் ஆற்றமாட்டேன் என்றறிந்தும் தன்னை விட்டு நீங்கிச் சென்ற கொடுமை, இன்னும் வாராது இருக்கிற கொடுமை செய்கிற அவர் கொடுமைக்காரரே என்கிறாள். அவளை விட்டுப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் முகங்காட்டாமல் இருக்கின்றதாலே அவர் இரக்கமில்லாக் கொடியவர் ஆனார்.
அவருடன் கூடியிருக்கும் காலத்து விரைந்தோடி மறைந்த இரவுகள் தனிமையில் தவிக்கும் இப்போது அவளுக்கு நெடிதாய் நெடிதாய் நீண்டு தெரிகின்றனவாம். அவளுக்கு இராக்காலங்களில் தூக்கம் பிடிக்காமல் போவது மட்டுமல்லாமல் இரவுகள் நீண்டு விடிவதற்கு நேரம் மிகையாக ஆவது போல் உணர்கிறாள்.
நெடிய இரவுகள் என்பதால் கொடுமையும் மிகையாம். அன்பு செய்யக் கணவர் இல்லாத கொடுமையைவிடவும், நெடிதாகும் இரவுப் பொழுது இன்னும் கொடியதாகத் தெரிகிறது தலைவிக்கு. இதனால் அந்தக் கொடியவர் செய்த கொடுமையை விடக் கொடியவை இவ்விரவுகள் என்கிறாள்.

'நெடிய கழியும் இரா' என்றால் என்ன?

நெடிய கழியும் இரா என்பதற்கு நீட்டித்து முடியும் இரவுகள் என்பது பொருள்.
கணவருடன் கூடியிருந்த காலத்து, நெடுகாமல் விரைந்து கழிந்த இந்த இரவுப்பொழுதுகள், இப்பொழுது அவர் உடன் இல்லாத நிலையில் மிக நெடியவாய் நீண்டு கொண்டே போகின்றன என்கிறாள் தலைவி. எப்பொழுது விடிவெள்ளி முளைக்கும்? எப்பொழுது சேவல் கூவும்? என்று பொறுமையிழந்து இரவுகளைக் கழிக்கிறாள் அவள். அவர் அருகில் இல்லாத காலத்து இரவின் வரவே கொடுமையாக உள்ளது. அதிலும் இராப்பொழுது நெடியவாய்ப் பெருகிச்சென்றால் என்னாகும்? மிகக் கொடுமையாகிறது. அவர் நினைவுகளோடு தூங்காத அவளது கண்ணுக்கு விடியற்காலை விடுதலை அளித்ததுபோல் காட்சி தரும். ஆனால் விடியும் நேரம் நீட்டிப்பதாகத் தோன்றுவதால் அது தலைவிக்கு மிகக் கொடுமை செய்கிறது .

இயற்கை நிகழ்வுப்படி எப்பொழுதும் போலத்தான் இரவு மறைகிறது; என்றைக்கும் போலவே பகலும் தோன்றுகிறது. ஆனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நேரமும் காலமும் மிக விரைவாகக் கழிந்துபோவதுபோலவும், அதற்கு மாறாக, உள்ளம் துன்பத்தால் வருந்தும்போது அவை மெல்லச் செல்வதாகவும் தோன்றும். ஒருவரது மனநிலைக்கு ஏற்பவே அவரது வாழ்வும், வாழும் காலம் முதலியனவும் உணரப்படுகின்றன. இது எல்லார்க்குமுண்டான பொதுவான இயல்பு.
தலைவிக்குக் கணவருடன் கூடியிருக்கும்போது இராப்பொழுது இன்பமாக இருந்தது. அதனால் அது குறுகி விரைவில் கழிந்தது போல் இருந்தது. இப்பொழுது அவர் உடன் இல்லாதிருப்பதால், காதல்வலியால், இரவு வேளைகள் இப்பொழுதெல்லாம் நீட்டித்து நிற்பதாக அவள் உணர்கிறாள். எனவே இந்நாள் 'நெடிய கழியும் இரா' என்கிறாள்.

நீண்ட இரவைச் சொல்லும் பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. அது: துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே (குறுந்தொகை 145 பொருள்: தலைவி தோழியிடம் '(இவ்வூர் இனியாம் இன்புற்று வாழ்வதற்குத் தகுதியுடையதன்று) தலைவன் பிரிவாலே வருந்தும் என்னைத் தேற்றுவதற்கு நினையாது உறங்குகின்ற மக்களும் நீண்ட இரவும் உடையது இவ்வூர்' என்று நெடிய இராப்பொழுதின் தன்மையை எடுத்துரைக்கிறாள்) என்பது.

இந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விடியாத இரவுகள் மிகக் கொடியன எனும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

இப்பொழுதெல்லாம் நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்து சென்றுள்ள கொடியவர் செய்யும் கொடுமையை விடக் கொடியவாக உள்ளன.