இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1164



காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1164)

பொழிப்பு (மு வரதராசன்): காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை

மணக்குடவர் உரை: காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.
இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது

பரிமேலழகர் உரை: (தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை.
(இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை' என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: காமக் கடல் உறுதியாக என்னிடம் உண்டு. ஆனால் அதனை நீந்திக் கடத்தற்குரிய துணையாகிய தெப்பம் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.

பதவுரை: காமக்-காமமாகிய கடல்-கடல். மன்னும்-மிகுதியாக; உண்டே-உளதே; அது-அது; நீந்தும்-கடக்கும், கடத்தற்கு; ஏம-அரணாகிய, பாதுகாப்பான; புணை-தெப்பம், தோணி; மன்னும்-உறுதியாக; இல்-இல்லை.


காமக் கடல்மன்னும் உண்டே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமக்கடல் நிலையாக உண்டே;
பரிப்பெருமாள்: காமக்கடல் நிலையாக உண்டே;
காலிங்கர்: தோழி! அவரால் ஆகிய காமநோய் என்னும் பெருவெள்ளமானது மிகவும் உளதே;
பரிமேலழகர்: (தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; [ஏற்ற புணையான் - கடத்தற்குத் தக்கதாய தோணியால்; இவ்விரண்டனுள்ளும் - காமக்கடல் அதனை நீந்திக் கடத்தற்குரிய புணை என்னும் இரண்டனுள்ளும்]

'காமநோய் என்னும் கடல் மிகவும் உளதே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'காமக் கடல் மட்டும் உண்டு', 'காமம் கடல்போல் இருக்கிறது!', 'காமக் கடலே நிலைத்திருக்கின்றது', 'காதல் கடல் நிச்சயமாக உண்டே!' என்ற பொருளில் உரை தந்தனர்.

காமநோய் கடலாக மிகுந்துதான் உள்ளதே! என்பது இப்பகுதியின் பொருள்.

அதுநீந்தும் ஏமப் புணை மன்னும் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது
காலிங்கர்: மற்று இனி அது நீந்திக் கரை ஏறு நிலைமைத்தாகிய இறுதி மிதவை ஈண்டு இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை' என்பது கருத்து. [இதற்கு- காமக் கடலை நீந்திக் கடப்பதற்கு; புணையாகற்பாலையாய நீயும்-புணையாதற்குரிய நீயும்]

'அது நீந்திக் கரை ஏறு நிலைமைத்தாகிய இறுதி மிதவை ஈண்டு இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைக் கடக்கச் சேமத் தெப்பம்தான் இல்லை', 'ஆனால் அக்கடலைக் கடக்க எனக்குப் பாதுகாப்பளிக்கும் மரக்கலமாகிய என காதலர் இங்கில்லையே', 'அதனைக் கரைஏறுவதற்கு உதவும் பாதுகாப்பாகிய தெப்பம் யாதும் இல்லை', 'ஆனால் அதனை நீந்திக் கடக்கும் காவலமைந்த தெப்பம் இல்லையே' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனைக் கடக்கத் துணையாகிய தெப்பம் இங்கு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காமநோய் கடலாக மிகுந்துதான் உள்ளதே! அதனைக் கடக்கத் துணையாகிய தெப்பம் இங்கு இல்லை என்பது பாடலின் பொருள்.
'மன்னும்' என்றால் என்ன?

அவரின்றி கடல் அளவிலான காமத்துன்பத்தை எப்படிக் கடப்பேன்? - தலைவி.

காமநோய் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடப்பதற்கான காப்பான தோணியாகிய கணவர்தாம் இப்போது நம்மோடு இல்லையே!
காட்சிப் பின்புலம்:
கணவர் தொழில்முறை காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார். அவர் இங்கு உடன் இல்லாததால் தலைவியைப் பிரிவுத் துன்பம் வாட்டுகிறது. தனிமையிலிருக்கும் அவளுக்குக் கணவர் உடனிருந்தபோது மகிழ்ந்த காதல் நினைவுகள் தோன்றி துன்புறுத்துகின்றன.
தான் துய்க்கும் காமநோயை மற்றவர் அறிந்தால் அது அவள் நாணுக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்து அத்துன்பத்தை மறைக்க முயல்கிறாள், ஆனால் மறைக்க மறைக்க நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று மிகுமாறு துன்பம் மேலும் மேலும் வெளிப்பட்டு மிகுந்துகொண்டே போகிறது; மேன்மேலும் கூடிச்செல்லும் காமநோயை மறைக்கும் ஆற்றல் இல்லாமல் இருக்கிறாள். தனக்கு இந்நோய் செய்த கணவர்க்குச் செய்தியும் அனுப்ப முடியாமல் நாண் தடுக்கின்றது; காமம் ஒருபுறம், நாணம் மற்றொரு புறம். இவ்விருவகை உணர்ச்சிகளும் அவளது உடலின் இருமுனைகளிலும் தொங்க, காவடியைத் தாங்கும் கோலாக அவள் உயிர் அச்சுமைகளைத் தாங்கி நிற்கிறது;
இவ்வாறு காமத்துக்கும் நாணுக்கும் இடையே என்ன செய்வதென்று தெரியாமல் நிலைதடுமாறி நிற்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
தலைவியின் காதல்துன்பம் கரை காணமுடியாத கடலளவு பெருகி நிற்கிறதாக உணர்கின்றாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்: காமக்கடல் மிகுந்தே உள்ளது. 'எப்படி இதைக் கடப்பேன்? பாதுகாப்பான புணை இருந்தால்தான் அது முடியும்? அது இல்லை. என் செய்வேன்?'
எல்லையற்ற காதல் துன்பத்தில் வருந்தும் தலைவி காமக் கடலுள் அகப்பட்டுக்கொண்டாள்போல் இருக்கிறாள். அதைக்கடக்க முடியுமா என்று மலைக்கும்படி உள்ளது அவள் நிலை. காமமாய்ச் சூழ்ந்துள்ள கடலை நீந்திக் கரை ஏறுவதற்குத் துணை செய்யும் பாதுகாப்பான தெப்பம் இங்கில்லையே என்கிறாள். அவள் தெப்பம் என்று குறிப்பிடுவது அவளது கணவரையே. அவர் வந்தால்தான் என் துன்பம் நீங்கும் என வேதனையுடன் கூறுகிறாள் அவள்.

புணை என்ற சொல் தோணி, தெப்பம், மிதவை எனப்பொருள்படும். ஏமப்புணை என்ற தொடர்க்கு பாதுகாப்பான தெப்பம் என்று பொருள். நீந்தும் ஏமப் புணை எனச் சொல்லப்பட்டுள்ளதால் அது நீர்ப்பரப்பில் நீந்துவதற்கு உதவியாகப் பயன்படும் நீரில் மிதக்கும் பொருளைக் குறிப்பதாகிறது.
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுனல் தரூஉம்
(பத்துப்பாட்டு சிறுபாண் ஆற்றுப்படை 116-118 பொருள்: நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் குளிக்குந்துறையிலே புனலாடுமகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகக் கரையைக் குத்துகின்ற நீர் தரும்...),
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவன்
(குறுந்தொகை. 222- 3-4 பொருள்: தெப்பத்தைக் கைசோர விட்டு, நீரோடு இவள் சென்றால், ஆண்டும் வருகுவள்)
ஆகிய சங்கப்பாடல்களில் முறையே நாக, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டங்கள் ஆற்றில் அடித்து வரப்பட்டுத் துறையில் நீராடும் மகளிர் தோளால் அணைத்து நீந்துவதற்குரிய புணையாயின என்றும் மகளிர் புணையைப் பிடித்தும் அதை விட்டும் நீந்துவர் என்றும் சொல்லப்பட்டுள்ளன. எனவே புணை என்பதற்கு மிதவை என்பது பொருத்தமான பொருள்.

'மன்னும்' என்றால் என்ன?

மன்னும் என்னும் சொல் இப்பாடலில் இருமுறை பயின்று வந்துள்ளது. இவை அசைநிலைகள் என்பார் பரிமேலழகர். ஆனால் மன்னும் என்னும் சொல்லுக்கு மணக்குடவர் நிலைத்தல் என்று பொருள் கூறி உரை செய்கிறார். முதல் மன்னும் என்னும் சொல்லுக்கு மிகவும் அதாவது மிகுதியாக எனவும் அடுத்த மன்னும் என்பதற்கு ஈண்டு என்றும் பொருள் கூறுவார் காலிங்கர். இச்சொல்லுக்கு இலக்குவனார் உறுதியாக எனக் கொண்டு உரை வரைகிறார். இவற்றுள் காலிங்கர் கூறும் பொருள் பொருத்தமாகப்படுகின்றது.

'மன்னும்' என்னும் சொல்லுக்கு மிகவும், ஈண்டு என்னும் பொருள்கள் கொள்ளலாம்.

காமநோய் கடலாக மிகுந்துதான் உள்ளதே! அதனைக் கடக்கத் துணையாகிய தெப்பம் இங்கு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதல்கடலுள் அகப்பட்டுத் தத்தளிக்கும் என்னை எப்பொழுது அவர் வந்து கரை சேர்ப்பாரோ என்று தலைவி படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

காதல்நோய் கடலாக மிகுந்து தெரிகிறதே! அதனைக் கடக்கத் துணையாகிய தெப்பம் இங்கு இல்லையே!.