இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1136



மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1136)

பொழிப்பு (மு வரதராசன்): மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

மணக்குடவர் உரை: பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.
இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: ('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.
('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மடலேறுதலை நடுயாமத்தும் நினைப்பேன்; ஏன்? காதலியை நினைத்து என் கண்கள் மூடா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதைக்குஎன் கண் படல்ஒல்லா யாமத்தும் மன்ற மடல்ஊர்தல் உள்ளுவேன்.

பதவுரை: மடல்-பனங்கருக்கு; ஊர்தல்-ஏறிச் செலுத்துதல்; யாமத்தும்-நள்ளிரவிலும்; உள்ளுவேன்-நினைப்பேன்; மன்ற-உறுதியாக, திண்ணமாக; படல்-மூடுதல், துயிறல்; ஒல்லா-பொருந்தா; பேதைக்கு-பெண்ணுக்கு, களங்கமற்றவளுக்கு; என்-எனது; கண்-விழி.


மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்;
பரிப்பெருமாள்: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.
பரிதி: (மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்;
காலிங்கர்: இன்று யான் மடலூர்தலைச் சென்ற நள்ளிருள் யாமத்துங்கூடக் கருதுவேன்;
பரிமேலழகர்: ('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.

'மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியாக எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் யான் மடலூர்தலை நினைந்திருப்பேன்', 'நள்இரவிலும் மடலூர்தலையே நினைத்துக் கொண்டிருப்பேன்', 'அதனால் எல்லாம் உறங்கும் நடு இரவிலும் மடலேறுதலையே கருதுவேன்', 'அதனால் நடுச்சாமத்திலும்கூட மடலூர்வதையே எண்ணுகிறேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மடலூர்தலை உறுதியாக நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருப்பேன் என்பது இப்பகுதியின் பொருள்.

படல்ஒல்லா பேதைக்குஎன் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது.
மணக்குடவர் குறிப்புரை: இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: பேதை பொருட்டு என் கண்கள் உறங்குதலை இசையா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்கா ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
பரிதி: என்னை மயல் செய்து கூடாமல் போன பேதைக்கு என் கண்.
காலிங்கர்: மற்று என்னை காரணம் எனின், என்னுயிராகிய அப்பேதை பொருட்டுக் கழிந்த யாமம் எல்லாம் என் கண் படல் ஒல்லா ஆகலான் என்றவாறு.
பரிமேலழகர்: நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா.
பரிமேலழகர் குறிப்புரை: 'பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம். [மடமை-அறியாமை]

'பேதை பொருட்டு என் கண்கள் உறங்குதலை இசையா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பெண் காரணமாக என் கண்கள் ஒருகாலும் உறக்கம் கொள்ளவில்லை', 'இம்மடந்தைக் காரணமாக என் கண்கள் தூக்கத்தைப் பொருந்தமாட்டா', 'அறியாப் பெண் காரணமாக என் கண்கள் ஒருகாலும் உறங்குதலைப் பெறா', 'என் காதலியை நினைத்திரங்கி என்னுடைய கண்கள் எப்போதும் உறங்குவதே இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

களங்கமற்ற காதலியின் பொருட்டு என் கண்கள் உறங்குதலைப் பெறா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மடலூர்தலை உறுதியாக யாமத்தும் உள்ளுவேன்; களங்கமற்ற காதலியின் பொருட்டு என் கண்கள் உறங்குதலைப் பெறா என்பது பாடலின் பொருள்.
'யாமத்தும் உள்ளுவேன்' குறிப்பது என்ன?

'அவளைப் பெறும்வரை இரவானாலும் பகலானாலும் எனக்கு ஒன்றுதான்' என்கிறான் காதலன்.

காதலியின் பொருட்டு என் கண்கள் துயில்வதற்காக மூடா; நள்ளிரவிலும் மடலேறுதலை நான் நினைத்துக் கொண்டிருப்பேன்! என்று உறுதியுடன் நிற்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
காதலன் - காதலியின் களவு வாழ்வில் இடர் உண்டாகிறது. தலைவி வீட்டுச்சிறையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதனால் இருவரும் சந்திக்க முடியாமல் போகிறது. அவர்களது மணவினைக்குத் தடை உண்டாகும் சூழல் உள்ளதாக உணர்கிறான் தலைவன். அவளைக் காண முடியாத துன்பத்தைத் தாங்கமாட்டாமல் இருக்கிறான். இந்த நிலையில் தன் காதலை ஊரார்க்குச் சொல்லித் தலைவியை மணக்கும் நோக்கத்துடன் நாண் துறந்து மடலேறத் துணிகிறான். மடலேறுதலில் ஊர்பவன் உடலுக்கு ஊறுவிளைவதோடு, மானம், நல்லாண்மை இழப்பதால், அது அவனது உள்ளத்திலும் ஆழமான காயத்தையும் உண்டாக்கும் என்பதையும் அறிந்தவந்தான் அவன். காதலின் துயரத்தை மிகுவிக்கும் மாலை நேரமும் நெருங்குகிறது. இப்பொழுதில் அவள் நினைவும் அவளுடன் பழகிய நிகழ்வுகளும் தோன்றின. மடலேறும் எண்ணத்தையும் மாலைக்காலம் தரும் துயரையும் அவள் எனக்குத் தந்துள்ளாள் என வருந்திக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தன் காதலியை எப்படியும் அடைந்தே தீர்வது என்று உறுதி கொண்டுவிட்ட தலைவன் தனது நாணையும் நல்லாண்மையையும் இழந்து மடல் ஊர்தல் மேற்கொள்ளும் முடிவில் இருக்கிறான். அதன் பின்னர் எந்த நேரமும் அவன் எண்ணத்தில் மடலூர்தலே முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. ஊர் உறங்கும் வேளையில் கூட அது பற்றிய நினைப்புத்தான். இதனால் அவனது தூக்கமும் தொலைந்தது. 'அவளுக்காக எதையும் செய்வேன். மடல்ஊர்தலின் இழிவையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்தபின் இரவு பகல் எந்த நேரமும் என் நினைவெல்லாம் அதுபற்றித்தான். அதனால் அவளுக்காக என் கண்கள் உறங்குதலும் இல்லாது போயின. போகட்டுமே!' என்கிறான்.

அவள்மீது அளவு கடந்த காதலில் இருக்கிறான் தலைவன். அவளைப் பெற்றாலன்றி அது அடங்காது என்ற நிலையில் இருப்பதால், அவளை நினைத்து நினைத்து அவன் கண்கள் உறக்கமும் கொள்ளவில்லை. அவளை மீட்கும் வழியான மடலூர்தலையே எண்ணிக்கொண்டிருக்கிறான். மடலேறுதல் என்பது, அவளது உருவப்படம் வரைந்த துணியொன்றைப் கையில் பிடித்துக் கொண்டு, கீழே உருளைகள் பொருத்தப்பட்ட பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊராரறியத் தெருவழியே வருதல்; அவனது காதல் வன்மையை ஊர் மன்றத்தோர் கண்டு, தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள்.
ஊரெல்லாம் தூங்குகிறது ஆனாலும் இரவிலும் மடலூரும் எண்ணமே இவன் எண்ணம் முழுவதும் நிறைந்து இருக்கிறது.

'யாமத்தும் உள்ளுவேன்' குறிப்பது என்ன?

யாமத்தும் உள்ளுவேன் என்பதற்கு இரவிலும் நினைப்பேன் என்பது பொருள். இங்கு இரவிலும் மடல் ஊர்தல் பற்றி கருதிக் கொண்டிருக்கிறேன் என்று காதலன் சொல்வதாக உள்ளது.
மடல் ஊர்தல் என்பது இளம் வயதான தலைமகனுக்குப் பல வழிகளில் துயரம் தருவது; உடல் துன்பம் உறுவது மட்டுமல்லாமல் அவன் தனது மானத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழக்க வேண்டியவனாயிருக்கிறான். இருப்பினும் இப்பொழுதுள்ள நிலைமையில் அவளைத் தனக்குள்ளவளாக ஆக்கிக்கொள்ள மடலேறுதல் ஒன்றுதான் ஒரே தீர்வாக அவனுக்குத் தெரிகிறது. மடலூர்தல் பற்றிய எண்ணங்கள் இரவு பகல் எந்நேரமும் நினைவில் சுழன்று உளைச்சல் தந்து கொண்டிருப்பதால் அவனது கண்கள் பொருந்த இயலவில்லை. எனவே தனது தூக்கமும் கெட்டுப் போய்விட்டது என்று சொல்கிறான்.

'இரவு முழுக்க மடலூர்தலைப் பற்றியே நினைத்துகொண்டு இருக்கிறேன்' எனவும் 'உறங்காமல் வருந்தும் தலைவன் நள்ளிரவானாலும் என்ன? ஏன் மடலை ஊர்ந்து வெளிப்படுதல் கூடாது என்று எண்ணுகின்றான்' எனவும் இத்தொடரை விளக்கினர்.

'யாமத்தும் உள்ளுவேன்' என்ற தொடர் இரவிலும் மடல்ஊர்தல் பற்றியே நினைப்பேன் என்ற பொருள் தருவது.

மடலூர்தலை உறுதியாக நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருப்பேன்; களங்கமற்ற காதலியின் பொருட்டு என் கண்கள் உறங்குதலைப் பெறா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நள்ளிரவில் கூட மடலூர்தலை எண்ணுவேன் என்னும் காதலனது நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

மடலேறுதலை நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; காதலிக்காக என் கண்கள் தூங்குவதும் இல்லை.