இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1020



நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1020)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

மணக்குடவர் உரை: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும்.
இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

பரிமேலழகர் உரை: அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும்.
(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: மனதில் (பழிபாவங்களைச் செய்யக்கூசும்) நாணம் இல்லாதவர்கள் செய்கின்ற காரியங்களெல்லாம் உயிரற்ற மரப்பொம்மை சூத்திரக் கயிற்றினால் ஆட்டப்பட்டு உயிருள்ளது போல நடிப்பதற்கே சமானம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அகத்து நாண்இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று.

பதவுரை: நாண்-பழிக்கு வெட்கப்படுந் தன்மை; அகத்து-உள்ளத்தில், மனதில்; இல்லார்-இல்லாதவர்; இயக்கம்-நடமாட்டம், அசைவு, போக்குவரவு; மரப்பாவை-மரத்தாலான பொம்மை; நாணால்- கயிற்றால்; உயிர்-உயிர்; மருட்டி-மயக்கி(யது); அற்று-போலும், அத்தன்மைத்து.


நாண்அகத்து இல்லார் இயக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்;
பரிப்பெருமாள்: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்;
பரிதி: நாணமில்லாதவன் நட்பு எப்படி என்றால்;
காலிங்கர்: தமக்குத் தகுவதனைச் செய்யாமைக்கும், தகாததனைச் செய்கைக்கும் நாணுவது அன்றே ஒருவர்க்கு நாணமாவது. மற்று அது தம் உள்ளத்து இல்லாதார் உளர்போல இயங்கித் திரிகின்ற இயக்கம் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்;

'மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'நாணமாவது. மற்று அது தம் உள்ளத்து இல்லாதார் உளர்போல இயங்கித் திரிகின்ற இயக்கம்' என்றும் பரிமேலழகர் 'மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்' எனவும் விரித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணம் இல்லாதாரின் நடமாட்டம்', 'மனத்தில் நாணமில்லாதவனது நடமாட்டம்', 'உள்ளத்திலே நாணமில்லாதவர் நடக்கை', 'மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று நடமாடுகின்ற தன்மை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளத்து நாணமில்லாதவர் நடமாட்டம் என்பது இப்பகுதியின் பொருள்.

மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். [மரப்பாவை - மரத்தாற் செய்யப்பட்ட பொம்மை]
மணக்குடவர் குறிப்புரை: இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
பரிப்பெருமாள்: மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
பரிதி: மரப்பாவை கயிற்றினாலே விழிமருட்டி ஆடுதற்கு ஒக்கும் என்றவாறு. [விழிமருட்டி - விழியால் மயக்கி]
காலிங்கர்: மரத்தினான் மக்களைப் போலும் வடிவு பாவித்த பாவையானது ஊடு சென்று இயக்கும் கயிற்று வலியான்4 உயிருடை உருபு என்று தன்னையும் பிறர் மதிக்குமாறு அவர் மதியினை மருட்டிய அத்தன்மைத்து. [ஊடு சென்று - இடையே சென்று; வலியான் - வலிமையினால்]
காலிங்கர் குறிப்புரை: எனவே இவரும் ஊழ்வலியினால் ஒரு மக்கள் உருபுபோல இயங்கித் திரியும் இத்துணையல்லது அகத்து ஓர் உணர்வு இன்று என்பது பொருள் என்றவாறு,
பரிமேலழகர்: மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். [இயந்திரக்கயிறு - இயந்திரங்களை இயக்கும் கயிறு, சூத்திரக்கயிறு; நாணுடைய - கயிற்றையுடைய]
பரிமேலழகர் குறிப்புரை: கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.

'மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மரப்பாவை கயிற்றால் நடமாடியது போலும்', 'மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருடையதுபோல மயக்கியது போலும்', 'மரத்தினால் செய்த பதுமை, கயிற்றினால் ஆடி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம்', 'மரத்தினால் செய்த பாவை இயந்திரக் கயிற்றினாலாய தன் ஆட்டத்தால் உயிருடைத்தாக மயங்கினால் போன்றதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்து நாணமில்லாதவர் நடமாட்டம் மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

நாணமில்லாதவர் பொய்த்தோற்றம் தந்து உலவுபவராவர்.

தம் உள்ளத்திலே நாணமில்லாத மக்கள் நடமாடுவது, மரப்பாவை கயிறு கொண்டு ஆட்டப்படுவதனால் இயங்கிக் காண்போருக்கு உயிர் உள்ளதாகத் தோற்றம் தந்து மயக்குவதற்குச் சமமாகும்.
'நாண்' என்னும் சொல்லுக்கு நாணம், கயிறு என இருபொருட்கள் உள. பாடலில் முதலிலுள்ள நாண் பழிக்கு வெட்கப்படுந் தன்மையையும் அடுத்ததான நாண் கயிறு என்ற பொருளிலும் ஆளப்பட்டன.
நாணம் இல்லாதார் அதாவது தகாத செயல்களுக்குக் கூச்சப்படாதவர் மக்களே அல்லர்; அவர்கள் மரத்தினால் செய்யப்பட்ட பொம்மை கயிற்றால் ஆட்டுவிக்கப்பட்டு உயிர்ப்புள்ளதாக மயக்குவது போலாம் அதாவது அவர்கள் உயிரற்ற மரக்கட்டை போல்வர் என்கிறது பாடல். நாண் என்பது பழி, இழிசெயலுக்கு வெட்கப்படுதலைக் குறிக்கும். இந்நாண் பண்பு கொண்டவரே உயிர் வாழ்பவராவார். உயிரில்லா மரப்பாவை ஆட்டப்பட்டு ஆடி, உயிருடையதென நினைக்குமாறு மக்களை எவ்வாறு மருட்டுகின்றதோ, அவ்வாறே நாண் என்னும் குணமில்லாதவர் நடமாடுவதும் ஆட்டமாடுவதும் ஆகும், அவர் உயிருள்ளவர் போலப் பிறரை மயக்குகின்றார். நாணுணர்ச்சியற்ற இவர் மனித உணர்வு இல்லாமல் வாழ்கின்றவர்.

உணர்ச்சியற்றுப் போனவர்களே நாணமில்லாதவர்களாயிருப்பர். மனிதர்கள் தகாத செயல்கள் செய்வதற்கு நாணவில்லை என்றால், தீமையைக் கண்டு வெட்கவில்லை என்றால், அவர்கள் மரப்பாவைகள் போல் உணர்ச்சி இல்லாதவர்கள்தாம். அத்தகையவர்கள் வாழ்க்கை, பார்த்தவர்களுக்கு எவ்வாறாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு நன்மை தீமை பாகுபாடோ, இன்ப துன்ப உணர்வுகளோ கிடையா. அவர்களது போக்குவரவு பொம்மலாட்டத்தை போன்ற பொய்த்தோற்றமாம். அவர்கள் மனிதர்கள் அல்லர்; மரக்கட்டை போன்றவர்களே. ஏதோ நடமாடுகிறார்கள். அவ்வளவுதான்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பழிக்கு வெட்குதலை தம் உள்ளத்தில் இல்லாதார் உயிருடையவர்களைப்போல் எப்படி இயங்குகிறார்கள் என வியந்து அதை ஆய்கிறார் வள்ளுவர்.
நாணிலார் இயக்கம் ஆடுகயிற்றில் இயங்கும் மரப்பாவை அன்னது என்கிறார். மரப்பாவை என்பது என்ன?
மரப்பாவை:
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (நிலையாமை 332) என்னும் குறள் கூத்து பற்றியும், அதனைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடுவதையும், அது முடிந்தவுடன் அது கலைந்து செல்வதையும் தெரிவித்து செல்வத்தின் நிலையாமையை விளக்கும். மரப்பாவையை இயக்கும் கலை பாவைக்கூத்து எனப்படுகிறது. இது பொம்மலாட்டம் என்றும் அறியப்படும். ஆங்கிலத்தில் puppet show என்பர். மரத்தாற் பாவை செய்து, கை கால் மூட்டுக்கள் அமைத்து மர பொம்மையை உருவாக்கி, அதை அணிசெய்து, சூத்திரக்கயிற்றினால் கட்டி, நடக்கச் செய்து, ஆடச் செய்து, ஓடச் செய்து, உயிருள்ள மனிதர்கள் போல தோன்ற வைப்பர். இவ்விதம் உயிரற்ற பாவைகளை உயிருள்ள மாந்தரைப் போல் இயக்கி மனிதரால் நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. இக்குறள் தவிர்த்து இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று (இரவு 1058 பொருள்: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்) என மற்றொரு பாடலிலும் மரப்பாவை உவமையாகக் கூறப்படுகிறது.

மனத்தின்கண் நாணம் இல்லாதவர்களாய் இருந்து, உலகில் சிலர் நடமாடி வருகிறார்கள் என்றால் அந்த நிலை மரத்தாலாகிய பொம்மை கயிற்றினால் இயக்கப்பட்டு உயிருள்ளது போலப் பார்ப்பவர் எண்ணுமாறு அவரை மயக்கும் தன்மையை (illusion) ஒத்ததாகும் என்ற கருத்தைச் சொல்லவந்த பாடல் இது.
அரங்கிலாடும் பாவைகள் ஆட்டப்படுவதால் ஆடுமே தவிர, அவற்றுக்கு உயிர்ப்புமில்லை; உணர்வுமில்லை. நாடகத்தில் கயிற்றைக்கொண்டு ஆட்ட அது உயிர்பெற்றதுபோல் தோற்றம் தரும். அது போலவே நாணுடைமையை அகத்திலே கொண்டு வாழாதார் வாழ்க்கை மானுட வாழ்க்கையேயல்ல. அவர்களது வாழ்க்கையெல்லாம், ஆட்டபாட்டங்களெல்லாம் உயிரியக்க வாழ்க்கையல்ல. நாணாகிய உயிர் இல்லாதவரையில் அவ்வாழ்க்கை, உயிர் வாழ்க்கையாகவே கருதப்பெறமாட்டாது. அவர்கள் நடமாட்டங்கள் எல்லாம் வெறும் பொம்மலாட்டங்களே.

இக்குறட்கருத்தை விளக்கிய உரையாசிரியர்களின் குறிப்புகளிலிருந்து சில:
காலிங்கர்: நாணமாவது தம் உள்ளத்து இல்லாதார் உளர்போல இயங்கித் திரிகின்ற இயக்கம் எத்தன்மைத்தோ எனின், மரத்தினான் மக்களைப் போலும் வடிவு பாவித்த பாவையானது ஊடு சென்று இயக்கும் கயிற்று வலியான் உயிருடை உருபு என்று தன்னையும் பிறர் மதிக்குமாறு அவர் மதியினை மருட்டிய அத்தன்மைத்து.
நாமக்கல் இராமலிங்கம்: பழிபாவங்களுக்கஞ்சும் நாணுடைமை இல்லாதவர்கள் யார் எதைச் சொன்னாலும் செய்து பிறர் ஆட்டுகின்றபடியெல்லாம் ஆடுவார்கள். அதனால் மனதில் நாணமில்லாதவர்கள் கயிற்றினால் ஆட்டப்படுகிற பொம்மையைப் போலப் பிறர் ஏவியதை எல்லாம் கூசாமல் செய்வார்கள்- என்பது கருத்து.
தண்டபாணி தேசிகர்: வெட்கமில்லாதவன் வாழ்வு மரப்பாவை கயிற்றால் உயிர் உள்ளதாக நடிப்பது போலாம்.

நாணில்லாதவர்கள் இவ்வுலகில் நடமாடுதல் என்பது மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

உள்ளத்து நாணமில்லாதவர் இயங்குதல் மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருள்ளதாக மயக்குவது போலாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நாணுடைமை இல்லாதவர் உயிரற்ற அஃறிணைப் பொருளை ஒப்பர்.

பொழிப்பு

நாணம் இல்லாதாரின் இயக்கம் மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம்.