நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்:
மணக்குடவர் குறிப்புரை: இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
பரிப்பெருமாள்: நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
பரிதி: நிறைந்த அறிவில்லார் வரைவின் மகளிர் தோள் சேர்பவர்;
காலிங்கர்: தமது நற்குணம் நிறைவுடைய நெஞ்சம் இல்லாதார் முயங்குவர்;
பரிமேலழகர்: நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். [நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்; திருந்திய - நெறிப்படுத்திய]
பரிமேலழகர் குறிப்புரை: பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார். [அதுவழி - புணர்ச்சியின்வழி]
'நிறையுடைய நெஞ்சில்லாதார்/நிறைந்த அறிவில்லார்/நற்குணம் நிறைவுடைய நெஞ்சம் இல்லாதார்/நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சுறுதியற்றவரே தீண்டுவர்', 'நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாத தீயவர்களே முயங்குவர்', 'மனதை அடக்கும் திறமையில்லாதவர்கள்தாம் தழுவுவார்கள்', 'மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவர்களே சேர்வர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாதவர்களே தீண்டுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறநெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை.
பரிப்பெருமாள்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை.
பரிதி: அது ஏதெனில் நம்மனத்துக்கு உவந்த நாயகரை மனதிலே வைத்து, இவரை மரப்பாவை போலப் புணர்வார் என்றவாறு. [உவந்த நாயகர் - மகிழ்ந்த தலைவர்; மரப்பாவை - பொம்மை]
காலிங்கர்: பிறவற்றை நெஞ்சின்கண் பேணிப் புணரும் பொதுமகளிர் தோளை என்றவாறு. [பேணி -விரும்பி]
காலிங்கர் குறிப்புரை: பிற என்ற பன்மை, பொன்னும் ஆடையும் பூவும் சாந்தும் முதலியன என அறிக.
பரிமேலழகர்: நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை;
'பிறவற்றை நெஞ்சின்கண் பேணிப் புணருமவரது தோளை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலவற்றைக் கருதிக்கூடும் பரத்தையரின் தோள்களை', 'மனத்தால் பிற பொருள்களை விரும்பி அவற்றைப் பெறுவதற்காக அன்புடையார் போல் நடித்து முயங்கும் பொது மகளிர் தோள்களை', '(கலவி இன்பத்துக்காக அல்லாமல்) வேறொன்றாகிய (பண ஆசைக்காகவே) புணருகின்ற விலைமாதருடைய தோள்களை', 'உள்ளத்தினால் பொருளை விரும்பி உடம்பினால் பிறரைப் புணரும் பெண்டிர் தோள்களை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உள்ளத்தினால் பிறவற்றை விரும்பி உடம்பினால் புணர்பவரது தோள்களை என்பது இப்பகுதியின் பொருள்.
|