இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0784



நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:784)

பொழிப்பு (மு வரதராசன்): நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.



மணக்குடவர் உரை: ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
(பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவரோடு ஒருவர் நகைத்து விளையாடுதல் பொருட்டல்ல நட்புச் செய்தல். பழகும் நண்பர் பொருந்தாச் செய்கையில் ஈடுபடும்பொழுது இடித்துக் கூறி திருத்துதலுக்கும் நட்பு பயன்படவேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்டல் நகுதற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு.

பதவுரை: நகுதல்-சிரித்து மகிழ்தல்; பொருட்டுஅன்று-என்பதற்காக அல்ல; நட்டல்-நண்பு கொள்ளல்; மிகுதிக்கண்-வேண்டாச் செயல் உள்ளபோது; மேற்சென்று-விரைந்து முற்பட்டு; இடித்தல்-கடிந்து சொல்லல்; பொருட்டு-என்பதற்கு.


நகுதற் பொருட்டன்று நட்டல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று;
பரிப்பெருமாள்: ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று;
பரிதி: இடுக்கண் வந்தால் நிந்தித்துச் சிரிப்பனவும் நன்றான காலத்து மகிழ்ந்து சிரிக்கவும் அல்லது; [நிந்தித்து-இகழ்ந்து]
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர் நட்டலாவது புறமே நகை செய்தல் பொருட்டு அன்று;
பரிமேலழகர்: ஒருவனோடு ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று;

'ஒருவனோடு ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புச் செய்தல் அரட்டை அடிப்பதற்கன்று', 'ஒருவனோடு நட்புச் செய்தல் கூடி மகிழ்வதற்காக மட்டுமன்று', 'ஒருவரோடொருவர் நட்பாக இருப்பது, தம்முன் இன்பமான விஷயங்களைப் பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருப்பதற்காக (மட்டும்) அல்ல', 'ஒருவனோடொருவன் நட்புச் செய்தல் சிரித்து விளையாடுவதற்காக அன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. [கழறுதற் பொருட்டு- இடித்துரைத்தற் பொருட்டு]
மணக்குடவர் குறிப்புரை: இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: மிகையாயின செய்யுமிடத்து கழறுதற் பொருட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மனமகிழ நட்டலே அன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.
பரிதி: துன்பம் வருமுன்னே பரிகாரம் பண்ணுவது நட்பு என்றவாறு. [பரிகாரம் - நீக்கும்வழிகள்]
காலிங்கர்: மற்று யாதிற்கோ எனின், அவர் நடக்கும் முறைமைக்கும் இங்கு அமையதாகியதோர் குற்றம் கண்டால் அப்பொழுதே அவர் தம்மைப் பெரிதும் அடர்த்துக் கழறுதல் பொருட்டு; [யாதிற்கோ - எதற்கு; கழறுதல் - இடித்துக் கூறுதல்]
காலிங்கர் குறிப்புரை: எனவே அவர் கேடு தம் கேடு என்றவாறு.
பரிமேலழகர்: அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.

'மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'மேற்சென்று' என்றற்கு மணக்குடவர், பரிமேலழகர் 'முற்பட்டு' என்றும் பரிதியார் 'துன்பம் வருமுன்னே' என்றும் உரை கூறினர்; காலிங்கர் 'அப்பொழுதே' எனக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிழை செய்யும்போது முன்வந்து இடித்தற்காம்', 'அவன் தவறு செய்தவழி முற்பட்டு இடித்து அறிவுரை கூறுவதற்கேயாம்', '(ஒருவர் ஒரு) குற்றம் செய்யும்போது (மற்றவர் அதை எடுத்துக் காட்டி) இடித்துக் கூறித் தீமையை விலக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது', 'அளவுக்கு மிஞ்சிய செய்கை ஏற்படக் கூடியதானால், முற்பட்டு அதனைக் கடிந்துரைப்பதற்காகவேயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை நண்பனாகத் தானே முன்வந்து கடிந்து திருத்தற்பொருட்டு என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல; வரம்பிறந்தன செய்வராயின், அவரை நண்பனாக மேற்சென்று இடித்தற் பொருட்டு என்பது பாடலின் பொருள்.
'மேற்சென்று இடித்தல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

கூடிக் கொண்டாடுவதற்கு மட்டுமன்று நண்பர்களாயிருத்தல்; அளவு மீறுபவரை அடக்கவும் வேண்டும்.

நட்புச் செய்தல் தங்களுக்குள் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; ஒருவர் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்தவும் வேண்டும்.
நண்பர்கள் என்றவுடன் அவர்கள் கூடி சிரித்து மகிழ்வதுதான் எல்லோரது மனக்காட்சியிலும் தோன்றும். இதனால்தான் தம்முள் கலந்து மகிழ்ந்து காலம் தள்ளுவதுதான் நண்பர்களுக்கு அழகு என்று பலர் எண்ணுகின்றனர். நட்புவகைகளில் பெரும்பான்மை உண்பதும் குடிப்பதுமாகிய செயல்களுக்குத் துணையாக இருப்பது போன்ற பொழுதுபோக்கிற்காகவே அமைகின்றன. நட்புப் பண்ணும்போது கூடலாம், கும்மாளமிடலாம். ஆனால் நட்பாளர்களுக்கு வேறு ஒரு கடமையும் உள்ளது என்கிறார் வள்ளுவர். அது குற்றமான செயல்களில் ஈடுபடும் தோழனைக் கடிந்து அவனை நேர்வழியில் நெறிப்படுத்திக் காப்பது என்பது.
நட்பில் இருக்கும் தன் நண்பன் ஒழுக்கக்கேடான அல்லது அறமற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தால், உடனே, அவற்றைச் சுட்டிக்காட்டி, அவனைக் கடிந்துரைத்து, நல்வாழ்க்கைக்குத் திருப்பித் திருத்த வல்லதே நட்பு. நண்பன் தவறான வழியில் செல்கின்றான் என்று தோன்றினால், உடனே அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும். அப்படிச் செய்யா விட்டால் அது நட்பு அல்ல.
மிகுதிக் கண் என்றது வரம்பு மீறி போகும் போது என்ற பொருள் தருவது; அளவுக்கு மீறிய நடத்தையைக் குறிப்பது. வரம்பு மீறல் என்பது சட்ட வரம்பு மட்டும் அல்ல ஒழுக்கநெறி மீறும் தவறுகளையும் சேர்த்தே சொல்லப்பட்டது.

நகுதற்பொருட்டன்று என்றதற்குப் பரிதி 'நன்றான காலத்து மகிழ்ந்து சிரிப்பதற்கும் இடுக்கண் வந்தால் நிந்தித்துச் மகிழ்வதற்கும் அல்ல' என்று உரை தருகிறார். இது ‘நகுதல்’ என்பதற்குத் துன்பக் காலத்து எள்ளி நகையாடுதல், செல்வக் காலத்துக் கூடி மகிழ்தல் என இருபொருளும் தோன்றக் கூறப்பட்டது. அதாவது எல்லாக் காலங்களிலும் சிரித்து இன்புறதலே நட்பு அல்ல என்று பொருளில் உள்ளது. மு கோவிந்தசாமி, 'குற்றம் புரிந்துழிச் சிரித்து அவரைத் தூண்டிவிடுவதற்கு அன்று' என இத்தொடர்க்குப் பொருள் கூறினார். 'நட்பாளனுடைய செல்வம் முதலிய தகுதி குறித்து அவன் எது செயினும் சிரித்துச் சிரித்து அவனைக் கெடுத்ததாகவும் கருதிக் கூறப் பெற்றது' என இக்குறளுக்கு விளக்கம் தருவார் தண்டபாணி தேசிகர்.

'மேற்சென்று இடித்தல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'மேற்சென்று இடித்தல்' என்ற தொடர் நண்பர் நெறிகடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று கழறுதலை அதாவது மனம் நோகும் படி பேசுதலைக் குறிக்கிறது. நண்பன் ஆகாத பிழைபட்ட செய்கைகளில் இருக்கக் கண்டபோது விரைந்து இடித்துரைக்க வேண்டும் என்பதைச் சொல்ல வந்தது இக்குறள். குற்றமான வழியில் செல்பவனைத் தடுத்துத் தட்டிக் கேட்பது இடித்துரைத்தல் ஆம். நண்பனது தீக்குணங்களை அவன் தானே அறிந்து கொள்ள முடியாதிருக்கலாம் அல்லது பின்னாளில் பெரும் தீங்கு நேரும் என்று உணராமல் இருக்கலாம். எனவே குற்றம் நேர்வதற்கு முன்னர் வலியச் சென்று இடித்துக் கூறி திருத்தி நண்பனை மீட்க உதவ வேண்டும். 'மேற்சென்று' என்றது நண்பர் தவறு செய்வது கண்டபோது, வாளா இராமல், தானாக முன்சென்று, அத்தவற்றினைச் சுட்டிக்காட்டுவதைச் சொல்வது. நண்பன் கேட்டால்தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதில்லை. தானே முற்பட்டு அவன் குற்றம் புரிவதற்கு முன்னே தடுத்து நிறுத்த முயலவேண்டும்.
இடித்தல் என்றது தாம் கூறிய அறிவுரையைச் செவிமடுக்காது இருந்தால். மென்சொற்கு வயப்படாமல் இருந்தால் கடுஞ்சொற்களும் கூறியாவது தவற்றிலிருந்து நண்பனை மீட்க வேண்டும் என்பதைக் கூறுவது. 'அடித்துக்கூடத் திருத்தலாம் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது' என்பார் திருக்குறளார் வீ முனுசாமி.
தவற்றை எடுத்துக்காட்டி இடித்துரைப்பதற்கு நட்புறவில் முழு உரிமை உண்டு. நண்பனது தீச்செயல் நீக்கி நல்வழியில் திருப்பிக் காப்பதுதான் நட்புக்கு அழகு.

'மேற்சென்று இடித்தல்' என்றது முந்திச்சென்று கழறுதல் எனப்பொருள்படும்.

ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல; வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை நண்பனாகத் தானே முன்வந்து கடிந்து திருத்தற்பொருட்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறியாமை போக்கி அறிவு நல்குவதும் நட்புகொண்டவரின் கடமையாம்.

பொழிப்பு

நட்புக் கொள்வது கூடிக் களிக்க மட்டுமல்ல; நண்பன் வரம்பு மீறும்போது தானாக வலிய முன் வந்து அவனைக் கடிந்து திருத்துவதற்கும்தான்.