இல்லாரை எல்லாரும் எள்ளுவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்;
பரிப்பெருமாள்: பொருளில்லாதாரை எல்லாரும் இகழ்வர்;
பரிதி: பொருளற்றாரை எல்லாரும் இகழ்வர்;
காலிங்கர்: கைப்பொருள் இல்லாதாரை யாவரும் இகழ்வர்;
பரிமேலழகர்: எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்;
'பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்', 'எல்லா நலமும் உடையவராயினும் வறியவரை எல்லாரும் இகழ்வர்', 'பணமில்லாதவர்களை எல்லாரும் அலட்சியம் செய்வார்கள்', 'பொருட்செல்வம் இல்லாதாரை எல்லாரும் இகழ்வர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செல்வம் இல்லாதவரை யாவரும் இகழ்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
மணக்குடவர் குறிப்புரை: இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறப்பெய்தலும் இதனானே வரும் என்றது.
பரிதி: செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
காலிங்கர்: கைப்பொருள் உடையோரை யாவரும் இன்பம் உற்றுச் சிறப்புச் செய்வார்கள் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.
'பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர்', 'எல்லாத் தீமையும் உடையவராயினும் செல்வரை எல்லாரும் புகழ்வர்', 'பணம் உள்ளவர்களை எல்லாரும் பெருமைப்படுத்துவார்கள்', 'பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்பாக நடத்துவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
|