இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0741



ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்

(அதிகாரம்:அரண் குறள் எண்:741)

பொழிப்பு (மு வரதராசன்): (படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

மணக்குடவர் உரை: வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்.
ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

பரிமேலழகர் உரை: ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
(பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வலிமையினால் பிறர்மேல் செல்வார்க்கும் கோட்டையானது வேண்டிய துணையே; பகைவர்களுக்குப் பயந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவார்க்கும் அது பயன் தரும் பொருளே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் பொருள்.

பதவுரை: ஆற்றுபவர்க்கும்-செய்யவல்லவர்க்கும்; அரண்-கோட்டை; பொருள்-மதிப்புமிக்கது, இன்றியமையாதது; அஞ்சி-பயந்து; தன்-தன்னை; போற்றுபவர்க்கும்-அடைபவர்களுக்கும்; பொருள்-சிறந்தது.


ஆற்று பவர்க்கும் அரண்பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது;
பரிப்பெருமாள்: வலி ஆற்றுவார்க்கும் அரண் பொருளாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வலி உடையோர்க்கும் ஒரு காலத்தே வேண்டுதலின் வேண்டும் என்றார்.
பரிதி: வீரர்க்கும் அரணே பொருள்;
காலிங்கர்: சோர மன்னரைப் போர் ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; [சோரமன்னர்- திருட்டு அரசர்]
பரிமேலழகர்: மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; [மூவகை ஆற்றல்- தன்வலி, துணைவலி, படைவலி, ஆகிய மூவகையாற்றல்; அறிவு, ஆண்மை, பெருமை எனவும் கூறுவர்]

'வலியுடையார்க்கும்/வலி ஆற்றுவார்க்கும்/வீரர்க்கும்/போர் ஆற்றுபவர்க்கும்/மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் பொருள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போர்மேற் செல்வார்க்கும் மதில் வேண்டும்', 'பிறர்மேல் போர்புரியச் செல்பவர்க்கும் அரண் சிறந்தது', 'இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பவர்களுக்கும் கோட்டை அவசியமான பொருள்', 'பிறர் மேல் படையெடுத்துச் செல்வார்க்கும் தம் நாட்டுக் காப்பு இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்க பொருளாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்.
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.
பரிப்பெருமாள்: வலிவு இன்மையான் அஞ்சித் தம்மைக் காப்பார்க்கும் அரண் பொருள்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும் என்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது. அரண் செய்யவேண்டும் என்றது.
பரிதி: பொருள் படைத்தார்க்கும் அரணே பொருள் என்றவாறு.
காலிங்கர்: இனி இங்ஙனம் போர் ஆற்றாது அஞ்சி அகம்புக்குத் தம்மைப் பேணிக்கொள்பவர்க்கும் அரண் பொருள்.
காலிங்கர் குறிப்புரை: ஆதலால் அதனை இகழ்தல் ஆகாது.
பரிமேலழகர்: அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.

'பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் தன் போற்றுபவர் என்றதற்கு தன்னை (அரணை) அடைவார் எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும்', 'பகைவர்க்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்பவர்க்கும் அரண் சிறந்தது', 'இன்னொருவர் படையெடுத்து வந்துவிட்டால் அதற்கஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களுக்கும் அது அவசியமான பொருள்', 'பிறர் படையெடுத்து வருங்கால் தம்மைக் காத்துக்கொள்பவர்க்கும் காப்பு இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது இன்றியமையாதது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்க பொருளாகும்; அஞ்சித் தன்போற்றுபவர்க்கும் அது இன்றியமையாதது என்பது பாடலின் பொருள்.
'தன் போற்றுபவர்' என்ற தொடரின் பொருள் என்ன?

தாக்குதலுக்கும் தடுத்தலுக்கும் அரணே துணை.

படையெடுத்துச் செல்வார்க்கும் அரண் மிகவேண்டியது; தம்மேல் படையெடுத்து வருவார்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக்கொள்பவர்க்கும் அரண் சிறந்தது.
ஆற்றுபவருக்கும் போற்றுபவருக்கும் அரணே பொருள் என்கிறது இப்பாடல். ஆற்றுபவர் என்ற சொல் ஆற்றல் உடையவர் என்று பொருள்பட்டு போர்மேற் செல்லுவாரைக் குறிக்கும். அரண் பொருள் என்பது 'அரண் தேவையான பொருளாகும்' எனப் பொருள்படும். அஞ்சி என்றது படையெடுத்து வருவோர்க்கு அஞ்சி எனப் பொருள் தரும். 'தன் போற்றுபவர்க்கும் பொருள்' என்ற தொடர் 'தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர்களுக்கு' என்ற பொருள் தருவது.
அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் தேவையானது.

அஞ்சி என்றதற்குப் பரிதி 'பொருளழிவிற்கு அஞ்சி' என்ற பொருளில் 'பொருள் படைத்தார்க்கும் அரணே பொருள்' எனப் பொருள் கூறினார்.
'பொருள் ஆற்றுபவர்க்கும், பொருள் போற்றுபவர்க்கும் அரணே பொருள் எனக்கொண்டு பொருள் கூற இடம் உண்டு. ஆக்குதற்கும் காவல் அரணேயாம்; காப்பதற்கும் காவல் அரணேயாம் என்றவறாயிற்று. பொருளாதாரப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் முதலிய எல்லாவற்றினின்றும் நாட்டினைக் காப்பது அரணாகும்' என விளக்கி படைப்போராட்டமும் இதில் அடங்கும் எனவும் கூறுகிறார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.

அரண் என்பது பகைவரால் துன்பம் நேரும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது. பகைவர் மேலேறிப் பாயும் ஆற்றுபவர் தமது நாட்டையும் உடைமைகளையும் பிறர் கைப்பற்றிக் கொள்ளாமல் பாதுகாவலான நிலையில் விட்டுச் செல்ல அவர்க்கு அரண் வேண்டும். அதுபோல் மேலேறிப் பாய்வதனின்றும் தப்பித் தற்காப்பு தேடும் போற்றுபவர்க்கு அரண் துணைசெய்யும் பொருளாகும்.

'தன் போற்றுபவர்' என்ற தொடரின் பொருள் என்ன?

‘தற்போற்றுபவர்’ என்பதற்கு அரணுக்குள் இருக்கும் தன்னையே காத்துக் கொள்பவர் என்ற பொருளில் மணக்குடவர் உரை தந்தார். இவ்வுரையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர் என்று பொருள் கொள்ளப்படுவதால், 'தன்' என்ற ஒருமை, போற்றுபவர் என்ற பன்மை தழுவியது ஆதலால் மணக்குடவர் உரை வழுவாம் என்றனர் சிலர். இதனால்தான் பரிமேலழகர் ‘தன்’ என்பதற்கு அரண் எனப் பொருள் கூறி தன்னிடம் அடைவார் அதாவது அரணிடம் வந்து சேர்வார் என்றவாறு உரை செய்தார் போலும். ஆனால் தண்டபாணி தேசிகர் 'பரிமேலழகர் போற்றற்குரிய சொற்பொருளை விட்டு 'அடைவார்க்கு' என்றமையே வலிந்து கோடலை விளக்குதலானும் தன்னைப்போற்றிக் கொள்வார் பலராதலின் தன்+போற்றுபவன் -தற்போற்றுபவன் என்ற ஒருமைப் பெயர் அனைத்தும் ஒரு சொல்லாய்ப் பலர் பால் விகுதி ஏற்றுத் தற்போற்றுபவர் என வருதல் கூடுமாகையானும் வழு என்ற மறுப்பு இயையாதெனலாம்' எனக் கருத்துரைப்பார். எனவே மணக்குடவர் உரையே தகும்.

'தன் போற்றுபவர்' என்றதற்குத் தற்காப்பவர் அதாவது தம்மைக் காத்துக் கொள்பவர் என்பது பொருள்.

போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்கது; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது இன்றியமையாதது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காப்புப் பெருமை அரண்.

பொழிப்பு

போர்மேற் செல்வார்க்கும் அரண் வேண்டும்; அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்பவர்க்கும் அரண் சிறந்தது.