குறிப்பின் குறிப்புணர் வாரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை;
பரிப்பெருமாள்: முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை;
பரிதி: அரசன் நினைத்த நினைவை அறிவானை;
காலிங்கர்: அரசரது முகங்கொண்ட குறிப்பினான் அவர் யாதானும் ஒரு கருமத்தை அவர் உள்ளம் கொண்ட குறிப்பினை அறிவார் யாவர்;
பரிமேலழகர்: தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை;
பரிமேலழகர் குறிப்புரை: உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று,
'முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'அரசன் நினைத்த நினைவை அறிவானை' என்றார். பரிமேலழகர் 'தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை' என்று வேறுபாடான உரை தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறரது முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிவாரை', 'ஒருவனுடைய குறிகளிலிருந்தே அவனுடைய கருத்தை அறியக் கூடியவர்களை', 'முகக்குறிப்பினாலே உள்ளக்குறிப்பை அறிய வல்லவரை', 'முகக் குறியினால் அகக் குறிப்பை அறிய வல்லவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை என்பது இப்பகுதியின் பொருள்.
உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.
பரிப்பெருமாள்: தன் உறுப்பினுள் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்துத் துணையாகக் கூட்டிக் கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும். குறிப்பறிவாரை அறிதல் குறிப்பறிதலாயிற்று. குறிப்பறிவாரை அரசன் கடியப்படுமோ கூட்டப்படுமோ என்று ஐயமுற்றார்க்குக் கூறப்பட்டது. இவை இரண்டும் அரசன் மேலன.
பரிதி: கரணம் வேண்டினாலும் கொடுத்து உறவு கொள்வான் என்றவாறு. [கரணம்-உறுப்பு]
காலிங்கர்: மற்று அவர் தம்மை அவ்வரசரானோர் தாம் படைத்துளவான அவற்றுள் பெரிதும் உறுப்பு உடையவாகச் சிறந்தனவற்றால் யாதானும் கொடுத்துக் கைக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.
'அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். உறுப்பு என்பதற்கு மெய்யுறுப்புகள் எனவும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன் உடலுறுப்புகளுள் எதுவும் கொடுத்து ஒருவன் துணையாகக் கொள்வானாக', 'என்ன வேண்டுமானாலும் கொடுத்துத் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்', 'அரசன் தனக்கு உறுப்பான பொருள், படை முதலியவற்றுள் எதனை யாவது கொடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்', 'அவர் விரும்பும் பொருள் எதையும் கொடுத்து அடைக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
|