இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0643



கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:643)

பொழிப்பு (மு வரதராசன்): சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.



மணக்குடவர் உரை: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது.
இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது.
(அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கேட்பவரது உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளுந் தன்மை உடையதாய்ப் பகைவருஞ் சொல்நயத்தை விரும்பும் வண்ணஞ் சொல்லப்படுவதே சிறந்த சொல் எனப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.

பதவுரை:
கேட்டார்-சொல்கேட்டவர்; பிணிக்கும்-ஈர்க்கும், கட்டிப் போடும் எனவும் கொள்வர்; தகையவாய்-இயல்பினை யுடையவாய்; கேளாரும்-(அச்சொல்) கேட்காதபிறரும். பகைவர் எனவும் பொருள் உண்டு; வேட்ப-விரும்பும் வண்ணம்; மொழிவதாம்-சொல்லப்படுவதாம் அல்லது உரைக்கப்படுவதாம்; சொல்-சொல்வன்மை.


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்;
பரிப்பெருமாள்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகைமையவாய்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமையும்; சொல்லக்கேட்டார் எனினும் அமையும்.கேளாமையும் அவ்வாறே கொள்ளப்படும்.
பரிதி: கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்;
காலிங்கர்: பலவகைப்பட்ட நூல்களையும் பாடம் ஓதி அவற்றின் பொருட்பயன் தெளியக் குரவரை வழிப்பட்டுக் கேட்ட குற்றமற்ற சான்றோரையும் தம்மாட்டுப் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்;
பரிமேலழகர்: நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி;
பரிமேலழகர் குறிப்புரை: அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது.

'வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் கேட்டார் என்பதற்குக் கூடுதலாக 'சொல்லக் கேட்டார்' எனவும் பொருள் கூறினார். 'கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்' என்றார் பரிதி. 'தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோரையும் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'நண்பரைப் பிரிந்துவிடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி' என்றார். இவ்வாறு பல வேறுபட்ட பொருள்களைத் தந்தனர் தொல்லாசிரியர்கள்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டாரைக் கவர்ந்து', 'பேசக் கேட்டவரைக் கவரும் வண்ணமும்', 'கேட்பவர்களை வசீகரிக்கக் கூடியதாகவும்', 'தாம் சொல்வதைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினைப் பெற்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சொற்களைக் கேட்டவர்களைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய் என்பது இப்பகுதியின் பொருள்.

கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்:
.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது.
மணக்குடவர் குறிப்புரை: இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நயம்படக் கூறவேண்டும் என்றது.
பரிதி: கேளாதாரும் சத்துருக்களும் நாலு புலன்களும் விரும்பச் சொல்லுதல் சொல் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் அங்ஙனம் பொருந்தக் கேளாது புவியிடைத் திரியும் புல்லறிவாளரும், யாமும் இவ்வாறு கேட்டு ஒன்று அறிய வேண்டும் என்னும் விருப்பம் உளதாகச் சொல்லுமது அமைச்சரது சொல்வன்மை என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாவது.
பரிமேலழகர் குறிப்புரை: இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.

கேட்டார் என்பதற்குப் போலவே கேளாரும் என்றதற்கும், வினாவாதாரும்(மணக்குடவர், பரிப்பெருமாள்), பேச்சைக் கேளாதவர்களும் (பரிப்பெருமாள், பரிதி), பாடம் கேளாதவரும் (காலிங்கர்), பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் (பரிமேலழகர்) விரும்புமாறு சொல்வதே சொல் என்று வேறு வேறு பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர். பிற்பகுதிக்கு 'விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது' என்று அனைவரும் பொருள் கூறுவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே சொல்வன்மை', 'கேளாதவரைக் கேட்க விரும்பும் வண்ணமும் பேசுவதே சொல்லாற்றலாகும்', 'பகைவர்களும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளக் கூடியதாகவும் பேசுவதுதான் சொல்வன்மை எனப்படுவது', 'கேட்காமலிருப்போரும் எப்பொழுது கேட்போம் என்று விரும்பும் வண்ணம் சொல்வதே சொல்வன்மை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கேளாதவரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொற்களைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினவாய், கேளாரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது பாடலின் பொருள்.
கேட்டார், கேளார் யாவர்?

சொற்களைக் கேட்டவர் தம் உள்ளத்தை வயப்படுத்துவதோடு அவ்வாறு கேட்க இயலாதவரும் கேட்க விரும்புமாறு சொல்வதே சொல்வன்மை ஆகும்.

சிறந்த சொல் எது என்று உணர்த்த, இரு தன்மைகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவை கேட்டுக் கொண்டிருப்பாரைத் தன்பால் ஈர்த்து முழுக்கவனமும் செலுத்த வைக்கும் தன்மை; மற்றும் சொற்கேளாதவர்களும் அவற்றில் விருப்பம் கொள்ள அல்லது கேட்டு விரும்பிப் பின்பற்றத் தூண்டக்கூடியதாகவுள்ள சொற்திறமை என்பன.
மேடைப் பேச்சு, கலந்துரையாடல், மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலான இடங்களில் உரைக்கப்படுவனவற்றைக் குறிப்பதாக இக்குறளைக் கொள்ளலாம். சொல்வன்மை வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒன்றைச் சொல்லும்போது, அங்கு இருந்து கேட்டோரெல்லாரும் அவன் சொல்லில் ஈடுபட்டுப் பிணிப்புற்றிருப்பர்; அவன் பேசக் கேளாதாரும் நன்றாகப் பேசினான் என்று கேட்டார்ச் சொல்லக் கேட்டுத் தாமும் அவனது சொல் கேட்க விரும்புவது இயல்பாகும். இதுவே சொல்வன்மை எனப்படுவது.

சொல்வன்மை என்ற தொடர்க்கு பொருள் வரையறை கூறும் சுவை மிகும் கவிதையாக இப்பாடல் அமைகிறது. வள்ளுவர் இங்கு கூறிய சொல்லின் இயல்புகளும் கருத்துரைக்கும் பாங்கும் அவர்தம் படைப்பிலேயே பொதிந்து கிடப்பதை நாம் அறிவோம்.
ஆக்கம் அளிக்கவல்ல கருத்துக்களை உரைப்போரின் சொல்வன்மை பற்றிக் குறிக்க வந்தது இது. சொல்வன்மை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்கவேண்டிய குணமே. சிறப்பு வகையில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்க்குத் தன் கருத்தைக் கேட்பவர்களைத் தன் பக்கம் ஈர்த்துப் பிணிக்கும் தன்மை உடையதாயும் கேட்க வாய்ப்பற்றவர்களை விரும்பிக் கேட்க வைக்கக்கூடியதாய் சொல்திறன் இருத்தல் வேண்டும்.

கேட்டார், கேளார் யாவர்?

கேட்டார் என்பதற்கு வினவினார், சொல்லக் கேட்டார் அல்லது கேள்வியுடையர், தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோர், நட்பாய் ஏற்றுக் கொண்டார், கேட்பவர் நேரில் பேசக்கேட்டவர், காதில் கேட்கிறவர்கள் எனவும் கேளார் என்பதற்கு அவற்றிற்கு மறுதலையாக, வினவாதார், கேள்வியுடையரல்லர் அல்லது சொல்லக் கேளார், சத்ருக்களும் கேளாதவரும், பல நூல்களைப்படித்துப் பொருட்பயனை ஆசிரியனிடம் வழிபட்டுக் கேளாதவர்களாய்ப் புவியிடைத்திரியும் புல்லறிவாளர்கள், பகையாய் ஏற்றுக்கொள்ளாதார் (தம் சொல்லை உடன்படாதவர்), தமது அரசியல் சமயக் கோட்பாட்டை எதிர்ப்பவர் எனப் பலவாறாகப் பொருள் கூறினர்.

கேட்டார் என்றதற்கு நேரில் கேட்டவர் என்பது பொருள். அப்படிக் கேட்டவர் பேசுபவரின் சொற்சுவையை நயந்து கேட்டு பிணிப்புண்டு போவார்.
கேளார் என்ற சொல்லுக்கு அவையிலிருந்து கேட்காத பிறர், பகைவர் என இரு பொருள்கள் உண்டு. 'இவ்விரண்டுள் பகைமை காரணமாக எதிலும் குறைகாணும் பகைவரும் விரும்புவர் என்பதிலேயே பொருட்சிறப்பிருத்தல் காண்க' என்பார் தண்டபாணி தேசிகர். இது மாற்றாரையும் மனக்கொள்ள வைத்தல் என்பதைக் குறிக்கிறது. பகைவர்கள் மனம் மாறுபட்டு அவர் சொல்பவை அனைத்தும் சரியே என்று ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறும் வகையில் கருத்துக்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவுதல் வேண்டும். அதனால் அவர் பகைவர்களும் பகைமை உணர்வைத் தவிர்த்து நட்புக் கொண்டாடும் நிலையை உருவாக்குவர். என்னென்ன வகையில் பேசினால் நண்பர்களாகவே இருப்பர் என்று எண்ணி ஆய்ந்து நண்பர்மாட்டுப் பேசுதலும், பகைவர் மாட்டுப் பேசுங்கால் அவர்களை நண்பராக்கும் வண்ணம் அல்லது பகைமிகா வண்ணம் செய்யும் வழிமுறைகளை ஆய்ந்து அதற்கேற்பப் பேசுதலும் வேண்டும் என்றும் விளக்குவர்.

'கேட்டார்,' 'கேளார்' என்பவற்றிற்கு, வினாவினார் வினாவாதார் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் கூறினர். கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் அதாவது சொல்லக் கேட்டார் எனினும் அமையும் என்றும் உரைப்பர் பரிப்பெருமாள். வினவுதலும் விடையிறுத்தலும் ஆசிரியர் மாணாக்கர் இடையே நிகழ்வது. ஐயத்தோடு வினவுவானைத் தெளிவாக்கவும், உணர்ந்தவற்றை நுண்பொருள் அவாவத்தூண்டும் வண்ணம் ஆசிரியர் விடையிறுக்க வேண்டும். அடுத்துக் காலிங்கர் கூறுவது நூல் கேட்டார், கேளார் என்பதாகும். நூலறிவு இல்லார்க்கு மேலோட்டமாகவே சொல்லி அவரைக் ஈர்த்துவிட முடியும். சொல்வன்மை அங்குத் தேவையற்றதாகி விடுகிறது. இவற்றைவிட 'கேட்டார்,' 'கேளார்' என்ற சொற்களுக்கு நேரே பேசக் கேட்டவர், கேட்காத பிறர் அல்லது பகைவர் என்ற பொருள் சிறக்கும்.

கேட்டார் என்ற சொல் சொல்லக் கேட்டவர் என்ற பொருளும் கேளார் என்ற சொல் 'அவையிலிருந்து கேட்காத பிறர் அல்லது பகைவர்' என்ற பொருளும் தரும்.

சொற்களைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய், கேளாரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்வன்மையின் திறன் சொல்வது.

பொழிப்பு

கேட்டவர்களைத் தன் வசமாக்கிக் கேளாரையும் கேட்கவேண்டும் எனத் தூண்டும்படி செய்வதே சொல்ஆற்றல் ஆகும்.