அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன்;
பரிப்பெருமாள்: அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எஞ்ஞான்றும் என்றது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்.
பரிதி: தன்மநெறி யறிந்தும், ஒழுக்கம் பொருந்திய சொல்லும் உள்ளவன்;
காலிங்கர்: இராச தன்மத்து இயல்பு அறிந்த அறிவினை உடையனுமாய், அதற்கு ஏற்ற சமைவு என்கிற நிறைவினை உடையனுமாய், மற்ற அரசன் விருப்புற்று கேட்குமாறு அரிய சொல்லாலானுமாய், நாட்டகத்தும் புறவிடத்தும் வாழ்வோர் வினைத்திறம் அனைத்தும் நெறிபட அறிந்து அறிவு நிறைவு ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் நாற்பெருங்குணனும்; [சமைவு-பொருத்தம்; அறிவு - நன்மை, தீமை பயப்பன அறிதல்; நிறைவு - அமைதி; ஓர்ப்பு-ஆராய்ந்துணர்தல்; கடைப்பிடி-உறுதி]
பரிமேலழகர்: அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்;
பரிமேலழகர் குறிப்புரை: தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார் 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். [சுருங்கிய காலம்-பொருள், படை முதலியவற்றால் சுருங்கிய காலத்தும்; பெருகிய காலம்-பொருள், படை முதலியவற்றால் நிறைந்த காலத்திலும்; இடைநிகராய காலம்-பொருள், படை முதலியவற்றால் மிகாமலும் நிறையாமலும் உள்ள நடுத்தரமான காலம்]
'அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் செய்யும் அறங்களை அறிந்து கல்வியில் நிறைந்தமைந்த சொல்லை உடையனாய் எப்பொழுதும் வினை செய்யும் திறங்களையும் அறிந்தவன்', 'தர்மாதர்மஙகளைச் சீர்தூக்கி, நிறைந்த அறிவுடன் பொருத்தமான யோசனை சொல்லுகிறவனாகவும் (தன்னுடைய அரசனுடைய) சக்திகளை எந்த நேரத்திலும் கணக்கறிந்தவனாகவும் உள்ளவனே', 'நீதியைத் தெரிந்து பொருள் நிறைந்த அடக்கமான சொல்லை உடையவனாய், எக்காலத்துங் காரியஞ் செய்யும் வழிகளை நன்குணர்ந்தவனாய் இருப்பவனே', 'அரசியல் அறனை நன்கு அறிந்து கல்வியால் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய் எப்பொழுதும் வினை செய்யும் திறங்களை அறிந்தவனே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அரசியல் அறனை நன்கு அறிந்து, அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எப்பொழுதும் செயல் ஆற்றும் திறங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
தேர்ச்சித் துணை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.
பரிப்பெருமாள்: அறியவல்லவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தேர்ச்சிக்குத் துணையாதலின் தேர்ச்சித்துணை என்று பெயர் இட்டார்.
பரிதி: எப்போதும் உத்தியோகம் உள்ள மந்திரியாம்.
காலிங்கர்: நன்குற அமைந்த அமைச்சனே அரசனது கருமத்திற்கு அமைந்த துணை ஆவான் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.
'சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசர்க்கு ஆராய்ந்து கூறும் துணைவனாவான்', 'சரியான மந்திரியாவான்', 'அரசனுக்குச் சிறந்த சூழ்ச்சித் துணையாதற்கு உரியவன்', 'அரசாள்வோர்க்கு ஆராயும் துணையாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அரசாள்வோர்க்கு கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|