இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0560



ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:560)

பொழிப்பு (மு வரதராசன்: நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின்.
இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரசன் குடிகளைக் காவானாயின், முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம். அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்.

பதவுரை: ஆ-ஆகும், பசு; பயன்-கொள்ளும் பயன், (பயம்=)பால்; குன்றும்-குறையும்; அறு-ஆறாகிய, அறி; தொழிலோர்-தொழிலை உடையவர்; நூல்-நூல், நூலறிவு; மறப்பர்-நினைப்பொழிவர், இழப்பர்; காவலன்-காப்பவன், ஆட்சியாளன்; காவான்-காக்கமாட்டான்; எனின்-என்றால்.


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்;
பரிதி: ஆவின் பயன் குன்றும், வேத நீதியும் கெடும்;
காலிங்கர்: உலகத்து முந்நிரைப் பசுக்களானவை கறவையும் கன்றுமாகப் பயன்பட்டு வருகிற பயனும் குன்றும்; மற்று அதுவேயும் அன்றி அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணரும் அருமறை ஓதலும் மறந்துவிடுவர்; [முந்நிரை பசுக்கள் - பசு, எருமை, ஆடு மூவிலாமான மந்தைகளில் ஒன்றாகிய பசுக்கள்]
பரிமேலழகர்: அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. [அவி - வேள்வித்தீயில் கொடுக்கப் பெறும் உணவுவகைகள்; மந்திரம் - வேதத்தில் தெய்வங்களை அழைப்பதற்குப் பயன்படும் ஒருயாகம். அது மந்திர யாகம் என்றே அழைக்கப்பெறும்; கற்பம்-வேள்வி முதலியவற்றை நடத்தும் வகையைக் கூறுவது]

ஆபயன் என்றதற்கு அனைத்துப் பழம் ஆசிரியர்களும் 'பசுக்கள் பால் குறையும்' என்ற பொருளில் உரை கூறினர். அறுதொழிலோர் என்பதற்கு மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர் மூவரும் 'அந்தணர்' எனப் பொருள் கண்டனர். பரிதி 'வேதநீதி' என்றார். நூல்மறப்பர் என்ற தொடர்க்கு மணக்குடவர் 'ஓதார்' என்றும் பரிதி 'கெடும்' என்றும் காலிங்கர் 'மறை ஓதல் மறந்துவிடுவர்' என்றும் பரிமேலழகர் 'நூல்களை மறந்துவிடுவர்' உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசு பயன் தாராது; எத்தொழில்களும் இரா', 'பசுக்கள் பால் குறையும். அறுதொழில் புரியும் அந்தணர் மறைநூல் ஓத மறப்பர்', 'அந்த நாட்டில் பசு இனத்தால் அடையக்கூடிய பலன்களும் அறிவினால் நடக்கக்கூடிய கல்வி கற்றல், பொதுநல வேள்வி செய்தல், செய்வித்தல், கொடுப்பது, வாங்குவது ஆகிய ஆறு தொழில்களும் அவற்றிற்கான அறிவும் இல்லாது போகும்', 'பசுக்கள் பால் தருவதில் குறைவு ஏற்படும். அறுவகைப்பட்ட தொழிலோரும் தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர். (அறுதொழில்- உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

காவலன் காவான் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் காவானாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிதி: மன்னவன் செங்கோல் குன்றின்.
காலிங்கர்: என்னை எனின் வையம் காவலன் ஆகிய மன்னவன் செங்கோல் முறையால் பாதுகாவாது கொடுங்கோன்மை செய்து ஒழுகின் என்றவாறு.
பரிமேலழகர்: காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.

'அரசன் உயிர்களைக் காவானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காத்தற்கு உரிய அரசன் காவாவிடின்', 'நாட்டினை நன்முறையில் காவல் புரியக்கூடிய அரசன் அங்ஙனம் காவாவிடின்', 'காக்கவேண்டிய முறையில் அரசன் குடிகளையும் அறங்களையும் காக்கத் தவறினால்', 'காவலன் அறநெறியில் நாட்டைக் காக்கவில்லையேல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் ஆகும் பயன் இல்லாமற்போம்; அறுதொழிலோர் நூல் கற்பதைச் செய்யார் என்பது பாடலின் பொருள்.
'அறுதொழிலோர்' யார்?

கொடுமையான ஆட்சியில் தொழில்கள் முறையாக நடவா.

முறையற்ற ஆட்சியில் குடிமக்கள் முயற்சிக்கான பயன் இராது. தொழில் புரிவோர் அவரவர் தொழில் அறிவினை இழப்பர்.
குடியுள் நாடு அடங்கும் என்பது வள்ளுவம். அக்குடிமக்களைக் காக்கவேண்டியது நாட்டுத்தலைவனது முதற்கடமையும் பொறுப்பும் ஆகும். அவர்களைக் காவாதிருந்தால் அந்நாட்டில் கொடுங்கோன்மை ஆட்சி நடைபெறுகிறது எனக் கருதப்படும். குடிகளுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் அவர்கள் ஆர்வம் குன்றி ஊக்கம் இழப்பர். அவர்களது முயற்சிக்கு உண்டான பயன் கிடைக்காது. தொழில் செய்வோர் தம் திறன் முன்னேற்றம் கருதார். இது வள்ளுவர் இப்பாடல்வழி கூறவந்த கருத்தாகும்.
ஆனால் குறளில் உள்ள ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற இரண்டு தொடர்களால் வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின.

ஆபயன் குன்றும்;
இத்தொடர்க்கான விளக்கங்களை இரண்டு பெரும்பிரிவாகப் பகுக்கலாம். முதற்பிரிவினர் ஆபயன் என்பது ஆ+பயன் என விரிந்து பசுவினால் பெறும் பால் ஆகிய பயன் எனப் பொருள்படும் என்பவர்கள். ஆபயன் குன்றும் என்றது பசுவினால் பெறும் பயன் குறையும் என்பதைக் குறிக்கும் என்கிறார்கள் இவர்கள். ஆநிரையால் வரும் செல்வம் குன்றுதல் என்பது பொருள். கொடுங்கோலர் ஆட்சியில் பால் வளம் அதாவது பால், தயிர், வெண்ணெய், நெய் இவை குறையும். இதனால், அவற்றைப் பயன்படுத்தி அவியுணவு படைத்துச் செய்யப்படும் வேள்விகள் தடைப்படும். வேள்விகளால் என்ன பயன் விளையும்? தேவர்களை நோக்கி அக்கினியிற் செய்யப்படும் ஓமங்கள் சூரியனை அடைகின்றன; சூரியனிடமிருந்து மழை உண்டாகிறது; அதனால் தானியங்கள் விளைகின்றன; அவற்றால் உயிரினங்கள் வளர்கின்றன; இவை பயன்கள் என வேதம் சொல்கிறது; ஆபயன் குன்றலால் வேள்வி நடவாமையும் வேள்வி நடவாமையால் மழைபெய்யாமையும் உண்டாகும் என்பது இவர்கள் கருத்து. வேள்வி பற்றிச் சொல்லவிரும்பாதவர்கள் ஆட்சியாளன் அரசு முறை செய்யானாயின் முந்தைய குறளில் சொல்லப்பட்டதுபோல அவன் நாட்டில் வானம் பெயல் ஒல்லாது; மழை பெய்யாவிட்டால் பசும்புல் தலைகாட்டாது, ஆவினங்கள் மேய்தலின்றி பால் வற்றும் என்று வேறுவகையாக விளக்கம் கூறினர். ஆவினது பயன் என்பதற்குப் பசு கன்றீனாமை என்றபடியும் உரை உள்ளது. 'ஆபயன் குன்றும்' என்பதற்கு பசுக்கள் பாலாகிய பயனைத் தருதலிற் குறைவுபடும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகிறது.
இரண்டாவது பிரிவினர் ஆபயன் குன்றும் என்பதற்கு 'நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும்' என்றும் 'ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும்' என்றும் 'அரசனுக்கு ஆகும் பல வருவாய்கள் குறையும்' என்றும் உரை தருவர். கா சுப்பிரமணியம் பிள்ளை 'முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம்' என உரை கூறுவார்.
பயன் என்பதற்குப் 'பயம் என்பதன் போலி. 'பயசு துத்தம் பயம் பால்' என்பது நிகண்டு. ஆதலால் பயனாகிய பால் எனல் வேண்டா. பயம் என்பதே பாலின் பெயர்' என விளக்குவார் தண்டபாணி தேசிகர்.

அறுதொழிலோர் நூல்மறப்பர்
இத்தொடர்க்கும் வேறுபட்ட பல விளக்கங்கள் உள.
அறுதொழிலோர் என்ற சொல்லுக்கு அந்தணர் என்று தொல்லாசிரியர்கள் அனைவரும் மற்றும் பிற்காலத்தவர்களுள் பலரும் பொருள் கூறினர். இதற்கு..அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்... என்ற புறநானூற்றுச் செய்யுளையும் (397:20) ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்... என்ற பதிற்றுப்பத்துப் பாடலையும் (24) சான்றாகக் காட்டுவர். கற்பதும், கற்பிப்பதும், வேள்விகளைச் செய்வதும், வேள்விகளைச் செய்வித்தலும், ஈதலும், இரத்தலும் என்ற ஆறு தொழில்கள் அவர்க்குரியதெனக் கருதப்பட்டன என்பர். நூல்மறப்பர் என்றதற்குக் கொடுங்கோல் ஆட்சியில் அந்தணர் மறைகள் ஓதலை மறப்பர் எனவும் அவர்கள் தம் நூலை மறப்பின் அது சமுதாயத்திற்குத் தீங்காகும் அதனால் சமுதாயம் ஒரு நற்பயனை இழக்கின்றது எனவும் விளக்கம் தருவர். மறப்பர் என்ற சொல் நோக்கி மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை 134) என்ற குறளை ஒப்புநோக்கச் சொல்வர்.
அறுதொழிலோர் என்போர் அந்தணர் அல்லர் என்று சொல்பவர்கள் அறுதொழிலோர் என்றதற்கு 'முதன்மையான தொழிலுடையோர்' எனவும், 'இன்றியமையாத சிறந்த தொழிலென அறுதி செய்யப்பட்ட தொழில்களாவன: உழவு, வணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன' எனவும் மற்றும் வேறுவேறு தொழில்கள் கொண்ட தொகுப்புகளுடன் உரைகள் வகுக்கப்பெற்றன. நூல்மறப்பர் என்றதற்கு இவர்கள் 'தம் கொள்கையை விடுவர்' எனவும் 'தத்தம் கடமைகள் முறையாக செய்யமாட்டார்' எனவும் 'மறத்தல் என்பது முயன்று செய்யாமையையும் நூல் என்பது அத்தொழில்களின் நுட்ப அறிவையும் உணர்த்திற்று' எனவும் 'தம் தொழில் முறையை மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலுக்குரிய அறிவை மறந்து விடுவர்' எனவும் 'தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்' எனவும் பொருள் கூறினர்.
கா சுப்பிரமணியம் பிள்ளை அறிதொழிலோர் எனப்பாடங்கொண்டு 'அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர்' என முற்றிலும் மாறுபாடான பொருள் கூறுவார்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்... (புறநானூறு 9 பொருள்: பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்...) என்ற சங்கச் செய்யுளை மேற்கோள் காட்டி இக்குறள் முறைதவறிய ஆட்சியில் ஆவும் அந்தணரும் தம் இயல்பு குன்றி உலகம் துன்புறும் என்பதைச் சொல்கிறது என்றனர். ஆனால் கொடுங்கோல் அரசின் கீழ உள்ள அனைவருக்கும் நேரும் தீங்குகளைக் கூறாது அந்தணர்க்குண்டானவை மட்டும் கூறுதல் வள்ளுவர் எண்ணமாயிருக்க முடியாது.
இப்பாடலில் அறுதொழிலோர் என்போர் அந்தணர் என்றோ அவர்தம் தொழில்கள் இவைஇவை என்றோ எவையும் பட்டியலிடப்பட்டுச் சொல்லப்படவில்லை. எனவே இக்குறளுக்குப் பொதுமையில் பொருள் காண்பதே பொருத்தம். நாட்டை ஆள்பவன் அனைத்து மக்களையும் காக்க வேண்டுமேயன்றி, அந்தணர்களை மட்டும் காப்பாற்ற அரசாட்சி செய்யமாட்டான்.
முறையற்ற ஆட்சியில் இன்றியமையாத தொழில்கள் ஆறைச் செய்பவர்கள் தத்தம் கடமையை முறையாகச் செய்ய முடியாதவராகி, தமது தொழில் குறித்த நூல்களை நாளடைவில் மறப்பர் என்பது பொருளாகலாம்.
ஒருங்கிணைத்து நோக்கும்போது இக்குறளுக்கு ஆள்வோர் முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றாவிட்டால், செய்தொழில்களால் ஆகின்ற பயன்கள் குன்றும்; முயற்சிக்கேற்ற பலனும் செய்யும் தொழில்திறனில் முன்னேற்றமும் இல்லாமற் போகும்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் எனப் பொருள் கொள்வது சிறக்கும்.

'அறுதொழிலோர்' யார்?

'அறுதொழிலோர்' என்ற சொல்லுக்கு அந்தணர், அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணர், ஆறு தொழிலுக்குரிய அந்தணர்கள், எத்தொழிலாரும், அறுதொழில் புரியும் அந்தணர், ஆறு தொழில்களைச் செய்ய வேண்டியவர்கள், அறியுந் தொழிலையுடைய கலைஞர், அறுவகைப்பட்ட தொழிலோர், முதன்மையான தொழிலுடையோர், அறுவகைத் தொழில் செய்வோர், அறத்தை வரையறுக்கும் நீதி நூலார், பணி செய்வதே கடமை என்று கருதும் பெரியோர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆறு தொழில்களாக பல தொகுப்புகளை உரையாளர்கள் கண்டு சொல்லியிருக்கின்றனர். வரிசை மாற்றியும் வகை மாற்றியும் கூறப்பெற்ற தொகுதிகளிலிருந்து சில:

  • உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்.
  • கல்வி கற்றல், பிறருக்குக் கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்கான பெரு முயற்சிகளைச் செய்தல், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்தல், அந்த நன் முயற்சிகளுக்காக நன்கொடை கொடுத்தல், அவற்றிற்காக நன்கொடை வசூலித்தல் போன்ற அறிவு முயற்சிகளும் அன்பு முயற்சிகளும்.
  • இன்றியமையாதன என்று அறுதி செய்யப்பட்ட தொழில்கள்; உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன.
  • ஆறு அரசாங்க உறுப்பினர்.
  • உழவர், நெசவாளர், தச்சர், கொல்லர், வணிகர், படைவீரர்.
  • உழவு, கைத்தொழில், வணிகம், கைவினைகள், வடிவமைத்தல், வித்தை.
  • ஒவ்வொரு வருணத்தார்க்குமுரிய ஆறுஆறு தொழில்கள்: வேத மோதல், ஓதுவித்தல், யாகஞ் செய்தல், செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பவை- அந்தணர்க்குரியன. ஓதல், யாகஞ் செய்தல், ஈதல், உலகோம்பல், படியியற்றல், பொருதல் என்பவை அரசர்க்குரியன. ஓதல், யாகஞ்செய்தல், பொருளீட்டல், ஈதல், பசுக்காத்தல் ஏருழல் என்பவை வைசியர்க்குரியன. ஏவல் செய்தல், பொருளீட்டல், உழுதல், பசுக் காத்தல், குயிலுவத் தொழில் செய்தல் (தோற்கருவிகளைக் கொட்டலும் துளைக்கருவிகளி ஊதலுமாம்), காருக வினைகளாக்கல் (பட்டு நூலையும் பருத்தி நூலையும் கொண்டு ஆடையாக்கலும் சுமத்தலும் உழுதலுமாம்) ஆகியவை சூத்திரர்க்குரியன.
திவார நிகண்டு உழவு, வாணிபம், தொழில் ஆகிய மூன்றும் உடலுழைப்புத் தொழில்கள் எனவும் வரைவு, சிற்பம், வித்தை ஆகிய மூன்றும் மூளை உழைப்புத் தொழில்கள் எனவும் ஆறு தொழில்களைக் குறிப்பிடும். ‘அறுதொழிலோர்’ என்பது அறுவைத் தொழிலாளரை- நெசவுத்தொழிலாளரை அதாவது ஆடை நெய்வோரைக் குறிக்கும் என்றும் உரை உள்ளது. 'எத்தொழிலும்' என உரைத்தார் வ சுப மாணிக்கம்.

அந்தணர்க்குரிய ஆறு தொழில்கள் என்று சொல்லப்பட்டனவற்றில் கற்பித்தல் என்பது சரி. ஆனால் ஓதல் (படித்தல்) என்பது எப்படித் தொழிலாகும்? வேள்வி செய்வது ஒரு தொழிலாகலாம், வேள்வி செய்யத் தூண்டுவது எப்படித் தொழிலாகும்? ஈதல் என்பது ஒரு அறம்; அது தொழிலாகாது.

ஆறுதொழில்கள் எவை என்று குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அந்தணர்க்கான தொழில்களே அவை என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆறுதொழில்கள் எனக் கருதத்தக்க வேறுபட்ட பலவகைப் பிரிவுகள் -சான்றுகளுடனோ ஊகங்களின் அடிப்படையிலோ- காணக்கிடக்கின்றன. எனவேதான் 'எத்தொழிலும்' எனக் கருத்துப் பொருளாக வ சுப மாணிக்கம் உரைத்தார் போலும். இதுவே இக்குறளுக்கான பொருத்தமான பொருள்.

ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் தொழில்களால் ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொடுங்கோன்மை ஆட்சியில் உயிர்களும் செழித்தோங்கமாட்டா.

பொழிப்பு

ஆட்சியாளர் குடிமக்களைக் காக்காவிடின் தொழில்களால் ஆகும் பயன் குறையும். அவரவர் தொழில் அறிவு மங்கும்.