இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0559



முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:559)

பொழிப்பு (மு வரதராசன்): அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

மணக்குடவர் உரை: முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

பரிமேலழகர் உரை: மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
(இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

குன்றக்குடி அடிகளார் உரை: முறைமை தவறி குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு உள்ள நாட்டின் பருவ மழையும் பெய்யாது. முறை தவறிய அரசு நிலவும் நாட்டில் பருவ மழை பொய்க்கும்' என்பது நம்பிக்கை மட்டுமல்ல. உண்மையும் கூட.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மன்னவன் முறைகோடி செய்யின் வானம் உறைகோடி பெயல் ஒல்லாது.

பதவுரை: முறை-நீதி, நீதிமுறை, ஒழுங்கு, ஆளும் நெறி; கோடி-தவறி, தப்ப. கெட; மன்னவன்-ஆட்சியாளன்; செய்யின்-செய்தால்; உறைகோடி-பருவமழை மாறுபட்டு; ஒல்லாது-இயலாது; வானம் பெயல்-(மேகம்)மழை பொழிதல்.


முறைகோடி மன்னவன் செய்யின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறைமைகோட மன்னவன் செய்வனாயின்;
பரிப்பெருமாள்: முறைமைகோட மன்னவன் செய்வனாயின்;
பரிதி: செங்கோல் முறைமை நடவாத அரசன்;
காலிங்கர்: உலகத்து வேந்தனானவன் நீதி வழுவி நெறியல்லன செய்யுமாயின்;
காலிங்கர் குறிப்புரை: முறைகோடி என்பது நீதி வழுவி என்றது.
பரிமேலழகர்: மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; [முறை தப்ப-நெறி தவற]

'முறைமை தப்ப மன்னவன் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால்', 'மன்னவன் முறை தவறி ஆட்சி செய்தால்', 'மன்னவன் தன்னுடைய முறை தவறி ஆட்சி நடத்தினால்', 'அரசன் நெறி தவறி ஆட்சி செய்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சியாளன் முறை தவறி நீதி செலுத்தினால் என்பது இப்பகுதியின் பொருள்.

உறைகோடி ஒல்லாது வானம் பெயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
பரிப்பெருமாள்: மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, முறைமை கோடினால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி: மண்டலத்துக்கு மழை பெய்ய நாணும் என்றவாறு.
காலிங்கர்: கொண்டலானது பருவம் கோடி மற்று ஈண்டு மழை பெய்தலைச் செய்யாது என்றவாறு. [கொண்டல்- மேற்குப் பருவமழை; கோடி-மாறுபட்டு]
காலிங்கர் குறிப்புரை: உறை என்பது மழைத்துளி என்றது. ஒல்லாது என்பது அதனைச் செய்யாது என்றது வானம் என்பது கொண்டல் என்றது.
பரிமேலழகர்: அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
பரிமேலழகர் குறிப்புரை: இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.

'பருவம் கோடி மழை பெய்தலைச் செய்யாது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழை பருவமுறையோடு பெய்யாது போம்', 'பருவமழை தவறும். மேகம் மழை பொழியாது', '(அவனுடைய நாட்டில்) வானமும் தன்னுடைய பெருமையான முறையில் தவறி மழை பொழிய இணங்காது', 'மழை மாறி வேண்டுங் காலத்தே மேகம் பொழிதலைச் செய்யாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பருவமழை பொய்த்துப் பெய்யாது போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சியாளன் முறை தவறி நீதி செலுத்தினால் பருவமழை பொய்த்துப் பெய்யாது போகும் என்பது பாடலின் பொருள்.
ஆட்சிநெறிக்கும் மழை பொய்த்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

முறைசெய்யா ஆட்சியாளனது நாட்டை இயற்கையும் இகழும்.

நீதிமுறை பிழைத்த நாட்டில் மழையும் பருவத்தே பெய்யாது விலகிப் போகும்.
நீதிமுறையோடு ஆட்சி நடக்காவிட்டால் அந்நாட்டில் மழை பருவமுறையோடு பெய்ய இயலாது போய்விடும்.
முறை கோடி உறை கோடி என்ற இரண்டிடத்தும் 'கோட' என்பது கோடி எனத் திரிந்தது. முறைகோடி என்ற தொடர் நீதிமுறை தவறி என்ற பொருள் தரும். குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, கண்ணோட்டம்இன்றி, நடுவுநிலைமையில் நின்று, செய்யத்தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும். உறை என்ற சொல்லுக்கு பருவமழை என்பது பொருள். உறை கோடி என்பது பருவமழை தவறி எனப் பொருள்படும். ஆட்சியாளர் முறை தவறினால் இயற்கையும் முறை மாறும் என்று இக்குறள் சொல்கிறது.
'உறைகோடல்' என்றதற்கு 'பெய்யுங் காலத்து மழையே பெய்யாமை' என்றும் 'பெய்ய வேண்டிய காலத்துப் பெய்யாமையும், வேண்டாத காலத்து மிகுதியால் பெய்தலுமாம்' என்றும் பொருள் கூறினர்.

ஆட்சிநெறிக்கும் மழை பொய்த்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு (செங்கோன்மை 545 பொருள்: இயல்பாகவே செங்கோல் ஆட்சியுள்ள நாட்டில் மழை தவறாது பெய்து விளைச்சலும் பெருகி நிற்கும்) என முன்னர் செங்கோல் ஆட்சியில் மழையும் விளைச்சலும் பெருகும் என்றது குறள். அரசாட்சி முறை தவறி நடக்குமாயின் அந்நாட்டில் மழை பொய்த்துப் போகும் என்று இங்கு சொல்லப்படுகிறது.
இயற்கையின் இயக்கங்கள் ஆட்சியாளர்களின் அறச்செயல்களை அடிப்படையாகக் கொண்டவையா? முறை வழுவா ஆட்சியை உணர்ந்து அந்நாட்டில் மழை பெய்யும் என்றும், அநீதியைக் கண்டு பெய்யாது போகும் என்றும் சொல்வது ஏற்கக்கூடியவையா? இக்கேள்விகளுக்கு இல்லை என்பதுதான் பதில். இவை மக்களிடையே இருந்த நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள். அவ்வளவே. இன்றும் அவ் அறம் சார்ந்த நம்பிக்கைகள் நம்மிடையே இருக்கின்றன.
நாமக்கல் இராமலிங்கம் 'உறை கோடி' என்பதற்கு 'பெருமை தவறி' என்பது பொருள் எனக் கூறி, வானமும் தன் இயல்பான பெருமை தவறி அங்கே மழைபொழிய மறுத்துவிடும் என்பது கருத்து என விளக்கம் தருவார்.

பகுத்தறிவு பேசும் சிந்தனையாளர்கள் 'அரசு முறை தவறி ஆட்சி செய்யுமானால் நாட்டில் மழை தங்குமிடமான (உறை) ஏரி குளம் போன்றவை (கோடி) கெட்டுக் கரையிலாக் காரணத்தால் பெய்த மழை நீரானது நீர் நிலையில் தங்கிய பயனளிக்காமல் வறிதே ஓடி வீணாகும்' என்றும் 'அரசு முறை தவ(றி)றாது நடக்குமாயின், நீர்த் தேக்கங்கள் சீர்கேடு அடையும் காரணத்தால் அந்நீர்த்தேக்கங்கள் வானம் பெய்வதைத் தேக்கி வையா' என்றும் விளக்கம் செய்வர். மற்றும் சிலர் 'வேறுபாடு கருதாது கைம்மாறு வேண்டாது பெய்யும் மழை என்பதே வள்ளுவம்; ஆகவே இக்குறட்பாக்கள் செங்கோன்மையின் சிறப்பினைக் குறித்ததாகக் கொள்ளவேண்டுமே அன்றி மழையின் இயல்பு உரைத்ததாகக் கொள்ளக் கூடாது' என உரைப்பர்.

ஆட்சிநெறிக்கும் மழை பொய்த்தலுக்கும் உள்ள தொடர்பு மக்களது நம்பிக்கை சார்ந்தது.

ஆட்சியாளன் முறை தவறி நீதி செலுத்தினால் பருவமழை பொய்த்துப் பெய்யாது போகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொடுங்கோன்மை நிலவும் நாட்டில் வளங்குன்றும்.

பொழிப்பு

ஆட்சியாளன் முறை தவறி ஆட்சி செய்தால் மழை பருவமுறையோடு பெய்யாது போகும்.