நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல;
பரிப்பெருமாள்: நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல;
பரிதி: முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும்;
காலிங்கர்: நகையாகிய முகமலர்ச்சியும் உவகையாகிய மனமகிழ்ச்சியும் இவை இரண்டினையும் கொன்று விடுவதாகிய சினத்தைப்போல;
பரிமேலழகர்: துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது,
'நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும்' என்றபடி பரிதி, காலிங்கர் பரிமேலழகர் ஆகியோர் உரை செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினும்', 'முக மலர்ச்சியையும் உள்ளத்தின் மகிழ்ச்சியையும் அழித்தொழிக்கும் சினத்தைப் போல', '(முகம் மலர்ந்து) சிரிப்பதையும் (அகம் மகிழ்ந்து) சந்தோஷப்படுவதையும் அழித்துவிடுகிற கோபத்தைக் காட்டிலும்', 'முகத்தில் உளதாகிய புன்சிரிப்பையும் அகத்தில் உளதாகிய அன்பையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட என்பது இப்பகுதியின் பொருள்.
பகையும் உளவோ பிற:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
மணக்குடவர் குறிப்புரை: இஃது இன்பக்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: பகையா யிருப்பனவும் வேறும் சிலவுளவோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்பக்கேடு வருமென்றது. இவையைந்தும் வெகுட்சியால் வரும் குற்றம் கூறிற்றன.
பரிதி: தனக்கு வேறே பகைவேணுமோ; சினமே அமையும் என்றவாறு.
காலிங்கர்: வேறு சில (பகையும் உள்)வோ?
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனைப் போல இவ்வுலகத்தைப் பெருங்கேடு செய்யவல்லனவாய் இருப்பன சில பகையாகவும் இல என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.
'பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறபகை உண்டோ?', 'வேறு பகைகளும் இருக்கின்றனவா? (இல்லை)', 'பகைவனும் வேறு உண்டோ?', 'கொடிய பகைப் பொருள்கள் வேறும் உண்டோ? இல்லையென்றவாறு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வேறு பகைகளும் உளவோ? என்பது இப்பகுதியின் பொருள்.
|