இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0281



எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:281)

பொழிப்பு (மு வரதராசன்): பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்

மணக்குடவர் உரை: பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க.
இது களவு ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தௌ¤ந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பிறரால் தான் இகழப்படாதிருத்தலை விரும்புகிறவன், பிறரை வஞ்சித்து யாதொரு பொருளையும் கொள்ளக் கருதாதபடி தன் நெஞ்சினைத் தடுத்துக் கொள்ளவேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க.

பதவுரை:
எள்ளாமை-இகழப்படாமை; வேண்டுவான்-விரும்புபவன்; என்பான்-எனப்படுபவன்; எனைத்தொன்றும்-எதையும்; கள்ளாமை-வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை; காக்க-காப்பாற்றுக; தன்-தனது; நெஞ்சு-உள்ளம்.


எள்ளாமை வேண்டுவான் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்;
பரிப்பெருமாள்: பிறரா லிகழாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்;
பரிதி: பர சமயத்தார் தந்த வசை இகழாமல் வேண்டுமாகில்;
காலிங்கர்: அறநூலாலும் சான்றோராலும் எஞ்ஞான்றும் இகழாமை வேண்டுவான் என்பான் ஒருவன்;
காலிங்கர் குறிப்புரை: எள்ளாமை என்பது இகழாமை.
பரிமேலழகர்: வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல்.

'பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பர சமயத்தார் தந்த வசை இகழாமல் வேண்டுமாகில்' என்கிறார். பரிமேலழகர் 'வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்' என்று வீட்டை இணைத்துப் பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வசைவேண்டாம் என்பவன்', 'பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் எனப்படுவான்', 'தனக்கு இகழ்ச்சி வரக்கூடாதென்று விரும்புகின்ற ஒருவன்', 'பிறரால் இகழப்படாமையை விரும்புவான் என்று சொல்லப்படுபவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க.
மணக்குடவர் குறிப்புரை: இது களவு ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்கா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது களவு ஆகாதென்றது.
பரிதி: கபடுள்ளது விடுக.
காலிங்கர்: உலகத்து யாதானும் ஒன்றினையும் தனது நெஞ்சமானது கள்ளாதவண்ணம் காக்க; எனவே அதனை யாண்டும் செல்லாமை மீட்க என்றே பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.

'யாதானும் ஒன்றினையும் தனது நெஞ்சமானது கள்ளாதவண்ணம் காக்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகச் சிறுதும் கள்ளமின்றித் தன் நெஞ்சைக் காக்க', 'யாதொரு பொருளையும் வஞ்சித்துக் கொள்ளாமல் மனத்தினைக் காப்பானாக', 'எந்தப் பொருளையும் திருடி எடுத்துக் கொள்வதைத் தன் மனம் நினைக்காமலிருக்கும்படி காக்க வேண்டும்', 'யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்து அடைய நினையாத வகையில் தன் நெஞ்சினைக் காப்பற்ற வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'எனைத்தொன்றும்' என்றதன் பொருள் என்ன?

ஏச்சும் பேச்சும் கேட்க விரும்பாதவன் என அறியப்பட வேண்டுபவன் பிறர் பொருளைக் களவாடமாட்டான்.

தான் இகழப்படாதிருக்க விரும்புகின்றவன், பிறரது எந்தப் பொருளையும் திருடாமல் இருக்குமாறு தன்மனத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
பிறருடைய உடைமைகளை வஞ்சித்துக் கொள்வது இகழ்ச்சிக்குரிய செயல் ஆகும். பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், பிறருடைய எந்தப் பொருளையும் வஞ்சனையால் கொள்ளக் கருதாதவாறு தன்நெஞ்சைக் காக்க வேண்டும்.
எண்ணத்தில் உருவாவதுதான் செயலில் முடியும். எனவே பிறர் பொருளைக் களவிற் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எழும் மனநிலையிலேயே அதைத் தடுத்துவிடவேண்டும். களவு செய்வதற்கான காரணங்கள் பல இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் தனக்கு உரிமையில்லாத எந்த ஒரு பொருளையும்- சிறிதோ பெரிதோ மதிப்பு உள்ளதோ அற்றதோ- கவர்ந்து கொள்ள விரும்பாமல் தன் மனதைக் காத்துக் கொள்ள வேண்டும். மனத்தை அடக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை மிக இனிதாய் அமைந்துவிடும். களவு செய்யும் பண்பு ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் அவனை அனைவரும் எள்ளி நகைப்பர்.
பின்வரும் விளைவை எண்ணாமல், களவுத் தொழில் செய்து சமுதாயத்தில் இகழ்ச்சிக்குரியவனாக வாழ வேண்டுமா என்பதை எண்ணுக என்று கள்வாரைப் பார்த்துக் கேட்கிறார் வள்ளுவர்.

'எனைத்தொன்றும்' என்றதன் பொருள் என்ன?

'எனைத்தொன்றும்' என்ற தொடர்க்கு யாதொரு பொருளையும், யாதானும் ஒன்றினையும், எத்தன்மையான பொருளையும், எந்த ஒரு பொருளையும், பொருள் யாதொன்றையும், மிகச் சிறுதும், எந்தப் பொருளையும், எத்தகைய பொருளையும், எவ்வளவு சிறிய பொருளானாலும், எவ்வகைப் பொருளையும், எந்த வகையான சிறிய பொருளையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எவ்வகைப் பொருளையும் - தினையளவு சிறியதாயினும், பயனற்றதும் மதிப்புக் குறைந்த தன்மைகொண்டதாயினும் களவு செய்தல் கூடாது என்கிறது பாடல். பரிமேலழகர் 'அறிவுக்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார்' என இத்தொடரை விளக்குவார். மற்றவர்கள் எள்ளின் பிளவையொத்த மிகமிகச் சிறிய அளவினதாயினும், ஆவிற்கு நீர் என்றாலும் என இத்தொடர்க்குப் பொருளுரை கூறுவர். அறிவு போன்ற கருத்துப் பொருளும் 'எனைத்தொன்றும்' என்பதில் அடங்கும். 'அறிவார்ந்த சொத்து திருட்டு' (Intellectual property (IP) theft), தரவு திருட்டு (data theft) போன்றவையும் இதில் அடங்கும்.

எனைத்தொன்றும் என்ற தொடர் யாதொரு பொருளையும் என்ற பொருள் தரும்.

பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் கருதுபவர் கள்ளாமை கடைப்பிடிப்பர்.

பொழிப்பு

இகழப்படவேண்டாம் என்பவன் எந்தப் பொருளையும் வஞ்சித்துக் கொள்ளாமல் மனத்தினைக் காப்பானாக