இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0264



ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

(அதிகாரம்:தவம் குறள் எண்:264)

பொழிப்பு (மு வரதராசன்): தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

மணக்குடவர் உரை: இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை: ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
(முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அறத்திற்குப் பகையாய் உள்ளவரைத் தண்டித்துத் தொலைத்தலும் அறத்தை விரும்பியவரை உயர்த்தலும் ஆகிய இரண்டும் தவமுடையார் நினைப்பின் அவரது தவவலியால் நேரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.

பதவுரை:
ஒன்னார்-பகைவர்; தெறலும்-கெடுத்தல்; உவந்தாரை-வேண்டியவரை; ஆக்கலும்-மேலாகச் செய்தலும்; எண்ணின்-நினைத்தால்; தவத்தான்-தவவலியால்; வரும்-வந்தடையும்.


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய;
பரிப்பெருமாள்: இவ்விடத்துப் பகைவரை தெறலும், நட்டாரை யாக்குதலுமாகிய;
பரிதி: சத்துருக்களைச் செயிப்பதும், மித்துருக்களை அழிப்பதும்;
பரிமேலழகர்: அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்;

'பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் ஒன்னார் என்றதற்கு 'அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தார்' எனப் பொருள் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரை அழிக்கலாம்; நண்பரை ஆக்கலாம்', 'வேண்டாதாரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும்', 'அவனுக்கு விருப்பமில்லாதவர்களுக்குச் சாபமிட்டுக் கெடுப்பதும், அவனுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு வரம் கொடுத்து வாழ வைப்பதும்', 'பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் என்பது இப்பகுதியின் பொருள்.

எண்ணின் தவத்தான் வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
பரிதி: தவத்தால் வரும் என்றவாறு.
பரிமேலழகர்: தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.

'ஆராயின்/நினைப்பராயின் தவத்தினாலே வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இந்த ஆற்றல் நினைப்பின் தவத்தால் வரும்', 'நினைத்த அளவிலே தவ ஆற்றலால் கைகூடும்', 'தவசி நினைத்தால் செய்ய முடியும்', 'நினைத்தால் தவத்தால் முடியும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நினைத்தால் தவத்தால் முடியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் நினைத்தால் தவத்தால் முடியும் என்பது பாடலின் பொருள்.
தவத்தால் அழிக்கவும் ஆக்கவும் முடியுமா?

தவத்தின் வலியால் கெட்டவரைத் திருத்தவும் வேண்டியவர்க்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் எந்நேரமும் முடியும்.

தவம் செய்வோர்க்குத் தாம் நினைத்தால் தீங்கு செய்யும் பகைவரை ஒடுக்கவும், தமக்கு நன்மையாயிருப்போருக்கு உதவுதலும் ஆகிய ஆற்றல் தவ வலிமையாலே கிடைக்கும்.
ஒருவர்க்குத் தன் செல்வ பலத்தாலோ செல்வாக்கினாலோ ஒன்னாரைத் தெறலும் உவந்தாரை ஆக்கலும் ஆகும் என்பது உலகியல் உண்மை. ஆனால் தவம் செய்வோர்க்கும் அவ்வலிமை உண்டு என்கிறார் வள்ளுவர். தீயோரை அடக்கித் திருத்துவதற்கும் அன்பிற்குரியவர்களை மதித்து உயர்த்துவதற்கும் ஆற்றல் தவத்தால் அதாவது தன் துன்பம் பொறுத்து, பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் வாழும் இல்லறத் தவவாழ்க்கையால் கிடைக்கும் என்கிறது பாடல்.
ஒன்னார்த் தெறல் என்பதற்கு பகைவரைத் தண்டிக்க, ஒறுக்க தவம் ஒரு கருவியாகக் கொள்ளப்படும் என்பதினும் அவர்களைத் திருத்தித் தீமைகளை அழித்தலுக்குத் தவம் பயன்படும் என்பது பொருத்தமான பொருளாகும்.
புறத்துறவுத் தவமுடையார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் இருத்தல் இயலாது என்பதால் இக்குறள் இல்லறத் தவம் மேற்கொண்டோர் பற்றியது என்பர்.
'எண்ணின்' என்றதனால், தவம் செய்வார் தெறலும் ஆக்கலும் இயல்பாகவே எண்ணமாட்டார் என்பது பெறப்படும்.

தவத்தால் அழிக்கவும் ஆக்கவும் முடியுமா?

தொன்மங்களில் வரும் முனிவர்கள் சினங்கொண்டு சாபங் கொடுத்து அழிப்பதையும் வரங்கொடுத்து வாழவைப்பதையும் சொல்கிறதா இப்பாடல்? பிறருக்குச் சாபமிடுவதோ அல்லது வரங் கொடுப்பதோ தவம் செய்வதனால் பெற்ற மிகப்பெரும் ஆற்றலால் என்று நம்பப்பட்டது. அதைத் தவவலிமை என்றழைத்தனர். ஆனால் வள்ளுவர் கூறும் ஆற்றல் அது அல்ல. தவ வலிமையால், பகைவரை அடக்கலாம்; நண்பரைப் பெறலாம் என்று அவர் கூறுவது தத்துவம் சார்ந்த அறக் கருத்தும் அல்ல.

பின் தவம் செய்வோரால் தெறலும் ஆக்கலும் எப்படி முடிகிறது?
இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும் என்றும்
துறவுத் தவமுடையார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் இருத்தல் இயலாது. அதற்காக அவர்கள் தவம் செய்யின் அது தவத்திற்கே இழுக்கு. உலகியலில் விடாமுயற்சியால் நம்மிடம் மிகுதியான் மிக்கவை செய்தாரை நாம் நம் தகுதியால் வென்றுவிடலாம். தனக்கு உற்றாரை உறவினரை நண்பரை உயர்த்தவும் நாம் முதலில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றும்
பகையை ஒழித்தல் என்பது பகைமை நீங்கி நண்பராகச் செய்தல் தானே! தவமே தம் துயர் தாங்கிப்பிறர் துயர் தீர்த்தல் அல்லவா! என்றும்
சமுதாய எதிரிகளை (ஒன்னார்) அழிப்பதையும், சமுதாய மகிழ்ச்சியை ஏற்போரை (உவந்தாரை) உண்டாக்குதலையும் விரும்பினால் (எண்ணினால்) அவை இரண்டும் தவத்தால் (உற்ற நோய் நோற்பதாலும் சமுதாயத்திற்கு உறுகண் செய்யாமையாலும்) வரும் என்றும்
பகைவரைக் கெடுத்தல் வேண்டியவர்க்கு ஆக்கம் தருதல் ஆகியன தவமுடையார் எண்ணிய அளவிலேயே செய்ய இயலும். ஆயினும் உண்மைத் தவமுடையார் இதனைச் செய்யார். ஓரோவழி செய்யின் தவம் கெடும் என்றும்
தவத்தார் தீயவரைத் தம் சொல்லால் செயலால் கண்டிக்கும் வல்லமையைப் பெற்றவர்கள். நல்லவரை மேன்மைப்படுத்தவும் அவர்களாலும் இயலும் என்றும் இதை உரையாசிரியர்கள் விளக்கினர்.

முதற்குறளில் (261) தவத்தின் இலக்கணமாகச் சொல்லப்பட்ட- தன் துன்பம் பொறுத்து, பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் வாழ்வதால்தான் இல்வாழ்க்கைக்கு வேண்டிய இத்தகைய ஆற்றல் பிறக்கும் என்பார் மு வரதராசன். இத்துடன் தமிழண்ணல் கூறும் 'விடாமுயற்சியால் (தவத்தால்) நம்மிடம் மிகுதியான் மிக்கவை செய்தாரை நாம் நம் தகுதியால் வென்றுவிடலாம். தனக்கு உற்றாரை உறவினரை நண்பரை உயர்த்தவும் நாம் முதலில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்' என்பதையும் இணைத்து நோக்கினால் 'ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் தவத்தான் வரும்' என்பதற்கு நல்ல விளக்கம் கிடைக்கிறது.

பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் நினைத்தால் தவத்தால் முடியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தவம் செய்வதால் பெறப்படும் பெரும் ஆற்றல் ஒன்று சொல்லப்படுகிறது.

பொழிப்பு

நினைத்தால் பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் தவ ஆற்றலால் கைகூடும்