இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0205



இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:205)

பொழிப்பு (மு வரதராசன்): யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

மணக்குடவர் உரை: நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது.
இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

பரிமேலழகர் உரை: இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பொருள் இல்லாதவன் என்பதற்காகத் தீங்கு செய்துவிடக் கூடாது. செய்தால் பொருள் இல்லாமை மட்டுமல்ல. அவனிடம் உள்ள மற்ற எதுவும் இல்லாமற் போய்விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் மற்றும் பெயர்த்து இலன்ஆகும் .

பதவுரை:
இலன்-இல்லாதவன்'; என்று-என்பதாக; தீயவை-கொடிய செயல்கள்; செய்யற்க-செய்யாதொழிக; செய்யின்-செய்தால்; இலன்-வறியவன்; ஆகும்-ஆம்; மற்றும்-(அசைநிலை).


இலன்என்று தீயவை செய்யற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக;
பரிதி: ('இலம்'-பாடம்) வறுவியோம் என்று பாவமான காரியத்தைச் செய்து பொருள் தேட வேண்டாம்; [வறுவியோம்-ஏழையேம்]
பரிமேலழகர்: யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக;

'வறுமையுற்றேம்/வறியன் என்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லை என்பதற்காகத் தீமைகள் செய்யாதே', 'ஏழை என்று ஒருவன் தீய செயல்களைச் செய்யக்கூடாது', 'தான் வறியவனென்று எண்ணித் தீவினைகளைச் செய்தல் கூடாது', ''பொருள் அற்றேன்' என்று கருதிப் பொருளினை அடைவதற்காகக் கேடான செயல்களைச் செய்யாது ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது.
மணக்குடவர் குறிப்புரை: இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
பரிதி: தேடின பொருளும் நில்லாது மறுமைக்கும் வறியனாம் என்றவாறு.
பரிமேலழகர்: செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.

'செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யின் திரும்பவும் பெரிய ஏழையாவாய்', 'செய்தால் மீண்டும் ஏழையாவான்', 'அவற்றைச் செய்வானாயின் மீட்டும் அதிகமாக அவன் வறியவனாவான்', 'செய்தால் மீண்டும் மேலும் வறியவனாக நேரிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்வானாயின் இன்னும் மிகையாக இல்லாதவனாக நேரிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம்; செய்வானாயின் இன்னும் பெயர்த்து இல்லாதவனாக நேரிடும் என்பது பாடலின் பொருள்.
'பெயர்த்து' என்றதன் பொருள் என்ன?

'பொருள் இல்லை என்பதால் தீயசெயல்கள்வழி அதைத்தேட முயலாதே; அப்படிச் செய்தால் நீ இழக்கப்போவது இன்னும் மிகையாம்.
ஒன்றும் இல்லா வறுமையாளன் பிறன் பொருளைக் கவர நினைத்தும், பொய்த்தும், களவாடியும், கொலைசெய்தும் பொருள் தேட விழைகின்றான். இத்தீச் செயல்களினால் அவன் கடைசியில் அடைவது என்ன? ஒன்றுமில்லை. உள்ள நிலையும் குறைந்து இழிபெயர் எய்தி வெறும் ஆளாய் விடுவான் என்கிறது இப்பாடல்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (வினைத்துய்மை குறள் 658 பொருள்: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது) எனச் சான்றோர் பழிக்காத வேறுவழிகளில் பெற்றவள் பசியாற்ற அறிவுரை வழங்கக்கூடியவர் வள்ளுவர். அதேபோல் பிறர்க்குத் தீங்கு செய்து பொருளீட்டுவதை இங்கு விலக்கச் சொல்கிறார்.

இல்லாமை இருக்குமிடத்து தீவினை செய்யும் எண்ணம் தோன்ற வாய்ப்புகள் மிகையாகும். 'இலர்' என்ற சொல்லுக்கு நேர் பொருள் 'இல்லாதவர்' அதாவது 'வறுமையாளர்' என்பது. வறுமையைக் காரணம் காட்டி. தீய செயல்களில் ஈடுபட்டு அவற்றை நியாயம் என்று கூறுவது கூடாது என்கிறது பாடல். வறுமையுடையோம் என்று களவு, கொள்ளை, கொலை போன்ற தீயவினைகளைச் செய்யக்கூடாது; செய்தால் மேலும் இல்லாதநிலை அடையக்கூடும் என அச்சப்படுத்துகிறார். அப்படிப் பொருள்பெற்றவன் நற்குண நற்செய்கைகளும் இல்லாதவனாகி விடுவான் என்கிறது பாடல். முன்னர் இலம் என்று வெஃகுதல் செய்யார்... (வெஃகாமை குறள் 174 பொருள்: வறுமையைக் காரணம் காட்டிப் பிறர்பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்) என்ற குறளிலும் இது போன்ற கருத்து கூறப்பட்டது.

'இவன் பொருளில்லாதவன் என்று அலட்சியம் செய்து வறியவனுக்குத் தீயவை செய்யற்க', 'பிறனது இல்லாமையைப் போக்கவும் தீயவை செய்யற்க', 'தடுக்கும் ஆற்றல் இலன் என்று ஒருவனுக்கு தீமை சேய்யற்க', 'இவன் துணையிலன் என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்' என்றபடியும் பொருளுரைத்தனர். இவை யாவும் ஏற்கக்கூடியன அல்ல.

'பெயர்த்து' என்றதன் பொருள் என்ன?

'பெயர்த்து' என்பதற்கு பின்பும், மறுமைக்கும், பிறவிதோறும், மீண்டும் மீண்டும், திரும்பவும், மேலும், மீட்டும் அதிகமாக, மீண்டும் மேலும், உள்ளதும் நீங்கி, நிலைவிலகி, மேலும், பின்வரும் பிறவிகளிலும் என உரைகாரர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் மீண்டும் என்ற பொருள் பொருத்தமானது.

வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம்; செய்வானாயின் இன்னும் மிகையாக இல்லாதவனாக நேரிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வறுமை நிலையிலும் தீவினையச்சம் கொள்க.

பொழிப்பு

இல்லாதவன் என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்யின் மீண்டும் மிகையாக வறியவனாவாய்.