இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0201



தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:201)

பொழிப்பு (மு வரதராசன்): தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

மணக்குடவர் உரை: என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை.
இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

பரிமேலழகர் உரை: தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.
('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: தீவினை என்னும் செருக்கோடு கூடிய செயலுக்குத் தீயனவே செய்யும் தீயவர்கள் அஞ்சமாட்டார்கள்; நன்மதிப்புடைய சான்றோர்கள் அஞ்சுவர்.
இது ஒரு மனப்பழக்கமே. கடவுளுக்கு காணிக்கை செலுத்திவிடலாம்; கழுவாயைத் தேடிவிடலாம்; யாராலும் எதனாலும் அசைக்க முடியாது என்ற செருக்கு-ஆணவம் ஏற்படின், தீவினை செய்வோர் அஞ்சாது செய்வர். 'என்னை யார் என்ன செய்யமுடியும்' என்ற செருக்கே தீமை செய்யத் தூண்டுகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தீவினை என்னும் செருக்கு தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்.

பதவுரை:
தீவினையார்--கொடிய செயல்புரிபவர், பாவச்செயல்களில் ஈடுபடுவோர்; அஞ்சார்-நடுங்கமாட்டார்; விழுமியார்-மேலோர்; அஞ்சுவர்-பயப்படுவர்; தீவினை-கொடிய செயல், பாவச்செயல்; என்னும்-என்கின்ற; செருக்கு-அகந்தை.


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
பரிதி: சென்மாந்திரத்திலே பாவிகள் பாவத்துக்குப் பயப்படார்கள்; புண்ணிய சிந்தையரான பேர் பயப்படுவார் என்றவாறு. [சென்மாந்திரத்திலே- வேறு பிறவிகளில்; பாவிகள் - தீவினைகளைச் செய்தோர்கள்; புண்ணிய சிந்தையரான பேர்- நல்வினையே செய்யும் மனமுடையவர்கள்] .
காலிங்கர்: உலகத்து முற்பிறப்பின்கண் கொண்டமைந்த முறையானே தீவினையாளராகிய மறப்பண்பினர் எஞ்ஞான்றும் அஞ்சுவதிலர்; மற்றும் நல்வினையாளராகிய விழுமிய பண்பினர் மிகவும் அஞ்சுவர் [மறப்பண்பினர்-கொடுந்தன்மையினர்]
பரிமேலழகர்: முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.;
பரிமேலழகர் குறிப்புரை: மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.

'தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் முற்பிறப்பு பற்றிய கருத்துக்களைக் கொணர்ந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடியவர் அஞ்சாது செய்வர்; நல்லவர் செய்ய அஞ்சுவர்', 'தீவினைகளைச் செய்ய அஞ்சமாட்டார். ஆனால், மேலோர் பழக்கம் இன்மையால் தீவினை புரிய அஞ்சுவர்', 'தீவினை செய்து பழகினவர்கள் மேற்கொள்ளற்கு அஞ்சமாட்டார்கள்; உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர்', 'கெட்ட செயல்களைச் செய்கின்றவர் அஞ்சார்; பெரியோர் அஞ்சுவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடியதொழிலார் அஞ்சாது செய்வர்; மேலோர் செய்ய அஞ்சுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

தீவினை என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீவினையாகிய களிப்பை.
காலிங்கர்: யாதினை எனின் தீவினை என்று சொல்லப்பட்ட மறத்தினை என்றவாறு.
பரிமேலழகர்: தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை,
பரிமேலழகர் குறிப்புரை: தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது.

தீவினையாகிய களிப்பு/மறம்/மயக்கம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீவினைகளை', 'கொடுஞ்செயல் புரிவோர் முன் செய்து வந்த பழக்கத்தால் செருக்கினால் வரும்', 'தீவினை செய்தற்குக் காரணமாகிய அகந்தையை', 'தீய செயல்களைச் செய்தல் என்னும் இறுமாப்பினை', என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தீச்செயல்களைச் செய்தல் என்னும் அகந்தை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீச் செயல்களைச் செய்தல் என்னும் அகந்தையால் கொடியதொழிலார் அவற்றை அஞ்சாது செய்வர்; மேலோர் செய்ய அஞ்சுவர் என்பது பாடலின் பொருள்.
செருக்கு-தீச்செயல்கள் இவற்றிடை என்ன இயைபு?

தீவினையார் களிப்பால் அஞ்சுவது அஞ்சமாட்டார்.

கொடியவர் அகந்தையான தீவினைகளை (பாவச்செயல்களை) அஞ்சாது செய்வர்; மதிப்புகளில் நம்பிக்கை கொண்டோர் அவற்றைச் செய்ய அஞ்சுவர்.
தீயவர்கள் செருக்கினால் கொடிய செயல்களைச் செய்ய அஞ்சமாட்டார்கள். இவர்கள் தம்நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருப்பர், பிறர் நலன் பற்றி எண்ணுவது இல்லை. தீயவினையே செய்து கனமேறிய மறப்பண்பினர் பயம்கொள்ளாது தீங்கு இழைப்பதைப் பழக்கமாக்கி பின் அதையே தொழிலாகக் கொள்வர். அகந்தையை நெஞ்சில் ஏற்றியோர் தீவினைகளைச் செய்து, களிப்பும் மயக்கமும் பெருமையும் கொண்டு அதன் விளைவாக மேலும் தீவினையை செய்யவே முனைந்து நிற்பர். அவர்கள் மனித விழுமியங்களைப் பொருட்படுத்துவது இல்லை.
ஆனால் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (அறன் வலியுறுத்தல் குறள் 40) என்ற பாடலில் 'செய்யத்தக்கன அறவினைகளே என்றும் பழிச்செயல்களை விடுத்து நீங்கவேண்டும்' எனச் சொல்லியுள்ளபடி நல்வினை செய்து பழகிய நல்லோர், தீவினைகளைச் செய்ய அஞ்சுவர்; இவர்கள் விழுப்பங்கள் நிறைந்த வாழ்வு மேற்கொள்ள விழைபவர்கள்.

செருக்கு-தீச்செயல்கள் இவற்றிடை என்ன இயைபு?

தீவினையாகிய களிப்பைத் தீத்தொழில் செய்வார் அஞ்சார், தீவினை என்று சொல்லப்பட்ட மறத்தினை தீவினையாளர் அஞ்சுவதிலர், தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையுடையார் அஞ்சார், தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை செய்தற்குக் காரணமாகிய அகந்தையை மேற்கொள்வதற்கு அஞ்சமாட்டார், தீவினை என்னும் மயக்கத்திற்கும் பாவிகள் அஞ்சார், தீவினைகளைச் செய்த பாவம் என்னும் வல்லமைக்குத் தீங்கு செய்கிறவர்கள் அஞ்சுவதில்லை, தீயசெயல்களைச் செய்தல் என்னும் இறுமாப்பினை, தீவினை செய்வார் அஞ்சார், தன் நலனைப் பெரிதென மதிக்கும் அகந்தையால் தீச்செயல் தொடங்குகிறது என்றவாறு செருக்குக்கும் தீவினைக்கும் உள்ள இயைபு விளக்கப்பட்டது.

தீச்செயல்களை மாந்தர் ஏன் மேற்கொள்கின்றனர் என்பதை விளக்க வந்த மணக்குடவர் 'தீத்தொழில் செய்வதில் களிப்பு உண்டாவாதால் அதனைச் செய்ய அஞ்சார்' என உரை செய்தார். 'தீவினை செய்தற்குக் காரணம் செருக்கு (மயக்கம்); செருக்கில்லாவிட்டால் தீவினை நிகழாது' என்றார் பரிமேலழகர். இவரது உரைக்கு நேர்மாறாகச் சிலர் தீவினையைக் காரணமாகவும் செருக்கைக் காரியமாகவும் கொண்டு விளக்கினர்.
செருக்கு என்ற சொல்லுக்குக் களிப்பு (மகிழ்ச்சி), மயக்கம், பாவம் என்ற ஒரு வல்லமை, இறுமாப்பு, அகந்தை, ஆணவம் எனப் பொருள் கூறுவர், செருக்கு என்பது தன்னால் எதையும் செய்ய இயலும்; யாராலும் எதனாலும் தன்னை அசைக்க முடியாது' என்ற மன எழுச்சியாலுண்டாவது. செருக்கு, மனச்சான்றை மழுங்கச் செய்துவிடுவதால் கொடிய நெஞ்சத்துடன் அவர்கள் எதையும் செய்யத் துணிவர். அறியாமையால் வரும் இந்த மயக்கத்தால், ஒருவனது தீச்செயல் தொடங்குகிறது. பின்னால் அச்செயல்களினாலேயே களிப்புற்று, அவற்றில் பழகி அவன் தீயவற்றையே செய்துவிடும் தொழிலுடையனாய் மாறிவிடுகிறான். இது தீயசெயல்களுக்கும் செருக்கிற்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

தீச் செயல்களைச் செய்தல் என்னும் அகந்தையால் கொடியதொழிலார் அவற்றை அஞ்சாது செய்வர்; மேலோர் செய்ய அஞ்சுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செருக்கைக் களைந்து தீவினையச்சம் கொள்ளவேண்டும்.

பொழிப்பு

தீச்செயல் புரிவோர் செருக்கினால் தீவினைகளைச் செய்ய அஞ்சமாட்டார். மதிப்புமிக்கோர் கொடுஞ்செயல் புரிய அஞ்சுவர்