நயனிலன் என்பது சொல்லும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும்;
பரிதி: நயமில்லாதவன் என்று சொல்லப்படும்;
காலிங்கர்: நயமில்லாதவன் என்று சொல்லப்படும்;
பரிமேலழகர்: இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.
'நயனுடையன் அல்லன் என்பதனை அறிவிக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் நயனிலன் என்றதற்கு வாளா நயமில்லாதவன் என்று கூற பரிமேலழகர் நீதி இலன் எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவன் அறமற்றவன் என்பதைக் காட்டும்', 'விரும்பத் தகுந்தவன் அல்லனென்பதை வெளியாக்கிவிடும்', 'அவன் சிறப்பில்லாதவன் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும்', 'நீதியொடு பொருந்தாதவன் என்பதனை அறிவிக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவன் விளங்காதவன் என்பதனை அறிவிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
பயனில பாரித்து உரைக்கும் உரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது. [இயம்பப்படார் - சொல்லப்படார்]
பரிதி: பயனில்லாத வார்த்தையை எல்லார்க்கும் சொல்லுவானை என்றவாறு.
காலிங்கர்: பயனில்லாத வார்த்தையை எல்லார்க்கும் சொல்வானை என்றவாறு.
பரிமேலழகர்: பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே.
'பயனில்லாதவற்றை விரித்து உரைக்கும் உரை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது வெற்றுரை', 'ஒருவன் வீண் வார்த்தைகளை அதிகமாகப் பேசுகின்ற செய்கையே அவன்', 'பயனில்லாதவற்றை ஒருவன் விரித்துரைத்துக் கொண்டிருப்பானாயின், அவ்வுரை தானே', 'பயன் இல்லாத சொற்களை விரித்துப் பேசும் சொல்லே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது சொல் என்பது இப்பகுதியின் பொருள்.
|