பல்லார் முனியப் பயனில சொல்லுவான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்;
பரிப்பெருமாள்: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்;
பரிதி: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;
காலிங்கர்: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;
பரிமேலழகர்: அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான்;
'பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பல்லார் என்றதற்கு பரிதியும் காலிங்கரும் தனக்கு வேண்டாதார் என்றும் பரிமேலழகர் அறிவுடையார் பலரும் எனப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை', 'கேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசுபவன்', 'பலபேர் வெறுக்கும்படியாக வீண் வார்த்தைகளைப் பேசுகின்றவன்', 'பலரும் வெறுக்குமாறு பயன் இல்லாத சொற்களைச் சொல்பவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பலரும் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
எல்லாரும் எள்ளப்படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாராலும் இகழப்படுவான்.
பரிப்பெருமாள்: எல்லாராலும் இகழப்படுவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரால் இகழப்பெறுவன் என்கின்றது.
பரிதி: தனக்கு வேண்டினபேரும், வேண்டாதபேரும் இகழ்வர்.
காலிங்கர்: வேண்டினபேரும் வேண்டாதபேரும் இகழ்வார்.
பரிமேலழகர்: எல்லாரானும் இகழப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.
'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எல்லாரும் என்றதற்கு 'வேண்டினபேரும் வேண்டாதபேரும்' என பரிதியும் காலிங்கரும் பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரும் இகழ்வர்', 'எல்லோராலும் இகழப்படுவான்', 'எல்லாராலும் ஏளனம் செய்யப்பட்டு அவமானம் அடைவான்', 'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எல்லாராலும் இகழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|