இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0173



சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:0173)

பொழிப்பு (மு வரதராசன்): அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்.
இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை: சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர்.
['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]

வ சுப மாணிக்கம் உரை: சிறுநலத்தை விரும்பிக் கொடியவை செய்யார் பெருநலத்தை நாடுபவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்.

பதவுரை: சிற்றின்பம்-விரைந்து அழியும் இன்பம்; வெஃகி-விரும்பி, கவர விரும்பி; அறன்-நற்செயல்; அல்ல-அல்லாதன, ஆகாதவைகள்: செய்யாரே-செய்யமாட்டார்களே; மற்றின்பம்-பிறிதொன்றாகிய இன்பம்; வேண்டுபவர்-விரும்புபவர்.


சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார்;
பரிதி: அழிகின்ற சிற்றின்பத்தை ஆசைப்பட்டு மறுமைக்கு முத்தி தருகின்ற தன்மத்தை விடார்;
பரிமேலழகர்: பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; [நிலையில்லாத இன்பம்-விரைந்தழியும் இன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார்.

'சிற்றின்பமாகிய பொருளை விரும்பி/அழிகின்ற சிற்றின்பத்தை ஆசைப்பட்டு/வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர்வதால் வரும் நிலையற்ற சிற்றின்பத்தை விரும்பி அறமல்லாத தீய செயல்களைச் செய்யமாட்டார்கள்', 'உடனே கிடைக்கக் கூடிய சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டுப் பிறருடைய பொருளைக் கவரும் தர்மமல்லாத காரியத்தைச் செய்ய மாட்டார்கள்', 'பிறர்பொருள் கவர்வதால் வரும் சிறுநயத்தைக் கருதிக் குற்றமான செயல்களைச் செய்ய மாட்டார்கள்', 'கவரும் பொருளால் அடையும் நிலையற்ற சிறிய இன்பத்தை விரும்பி அறத்தோடு படாத செயல்களைச் செய்யார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றின்பம் வேண்டு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். [காமிப்பவர்-விரும்புபவர்]
மணக்குடவர் குறிப்புரை: இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
பரிதி: பரலோகத்தை இச்சிப்பவர் என்றவாறு. [இச்சிப்பவர்-விரும்புபவர்]
பரிமேலழகர்: அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். [நிலையுடைய இன்பம் - தாம் வாழும்வரைத் துய்க்கப்படும் இன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.

'பேரின்பமாகிய வீடுபேற்றை/பரலோகத்தை/நிலையுடைய இன்பத்தை விரும்புபவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தால் வரும் நிலைத்த இன்பத்தை விரும்புபவர்கள்', 'பேரின்பத்தை விரும்புகிறவர்க்ள்', 'அறத்தால் வரும் நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள்', 'நிலையான பேரின்பத்தை விரும்புபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறத்தால் வரும் நிலையான நலத்தை நாடுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்தால் வரும் நிலையான நலத்தை நாடுபவர் கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
சிற்றின்பம்-மற்றின்பம் குறிப்பவை எவை?

பிறர் பொருளைப் பறித்துக் கொள்வதால் பெறப்படும் மகிழ்ச்சி சிறுமைப்பட்ட இன்பமாகத் தானிருக்கும்.

நல்லின்பத்தை நாடுபவர்கள் தனக்குரியதல்லாத பொருளைக் கவர்வதால் கிடைக்கும் விரைந்தழியும் இன்பத்தை விரும்பி பிறர்மாட்டு அறமற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
முற்குறள் வெஃகுதலால் உண்டாகும் பழிச் சொல்லுக்கு அஞ்சுவதைச் சொல்லியது, இக்குறள் வெஃகுதல் என்பது தீச்செயல் என்று கூறுகிறது. பெருமை தரும் இன்பத்தை விழைபவர் கவர்ந்து கொண்ட பொருளால் உண்டாகும் சிற்றளவான இன்பத்தை விரும்பி அறமல்லாதனவற்றைச் செய்ய மாட்டார். தனக்கு உரிமையில்லாத பொருளைப் பிறர் ஒருவரிடமிருந்து பறித்துக் கொள்ளுவது அறத்திற்கு மாறான செயல். பிறர் பொருளை விரும்புவதால், வஞ்சனை, களவு கொலை முதலிய தீச்செயல்கள் விளைகின்றன. எனவே அறமற்றவை. அப்பொருளால் வரும் இன்பம் நீடித்து நிற்காது. சிற்றின்பம் குறுகிய கால எல்லையில் மட்டுமே இன்பமாக அமைவதைக் குறிப்பது; அது அப்பொழுதைக்கான இன்பம்; விரைந்து அழியத்தக்கது. இச்சிறுமை காலமும் அளவும் பற்றியது. மற்றின்பம் நீண்ட கால இன்பத்தைக் குறிக்கும். சிற்றின்பம் வெஃகி என்றது பிறர் பொருளை வௌவுதலால் வரும் குறுகிய இன்பத்தை விரும்பி எனப்பொருள்படும். குற்றம் செய்து பெறும் இன்பம் என்பதால் சிற்றின்பம் சிறுமைப்பட்ட இன்பமாம். அறநெறியில் வரும் இன்பமோ பெருமைப்படத்தக்கது; நிலைத்து நிற்கக் கூடியது. பிறரிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்ட பொருளால் தாம் அடையக்கூடிய இன்பம் நிலையில்லாதது. நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறமல்லாத முறையற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்கிறது இப்பாடல். அறத்தான் வருவதே இன்பம்... (குறள் 39) என்று முன்னரும் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து இன்பம் துய்க்க எண்ணுவது இழிவானது. அதுபோன்ற எண்ணம், அறநெறியில் கிடைக்கின்ற உண்மையான மகிழ்ச்சியினைக் கொடுக்காது. அது பொருளைப் பறிகொடுத்தவர் வருத்தத்தில் வரும் இன்பமாகும். கைப்பற்றிய பொருளால் வரும் இன்பம் நீண்ட காலத்திற்கு வராது; அதனால் நிறைவான வாழ்வையும் கொடுக்க முடியாது; நாடும் நன்மைகளும் உண்டாகா; அப்பொருள் அனைத்தும் தமக்கும் வல்லவனால் பறித்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. நேர்மையாக ஈட்டிய பொருளே நிறைவான வாழ்வையும் நீடித்த இன்பத்தையும் தர வல்லது.

சிற்றின்பம்-மற்றின்பம் குறிப்பவை எவை?

சிற்றின்பம்-மற்றின்பம் என்னும் இருமைக்கு, சிற்றின்பமாகிய பொருள்-பேரின்பமாகிய வீடுபேறு, அழிகின்ற சிற்றின்பம்- மறுமைக்கு முத்தி தருகின்ற தன்மம், நிலையில்லாத இன்பம்- நிலையுடைய இன்பம், சிறுபொழுது இன்பம்-சிறந்த இன்பம், சிறுநலம்-பெருநலம், நிலையற்ற சிற்றின்பம்-நிலைத்த இன்பம், சிறிய இன்பம்-மற்ற பெரிய இன்பம், உடனே கிடைக்கக் கூடிய சிற்றின்பம்-பேரின்பம், சிற்றளவாக உண்டாகும் இன்பம்-நிலையான இன்பம், சிறுநயம்-நிலையான இன்பம், நிலையற்ற இன்பம்-நெடிது நிலைக்கும் இன்பம், சிறுது காலம் நிலைக்கும் இன்பம்-நிலையான இன்பம், நிலையில்லாத சிற்றளவான தீய இன்பம்-நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.

இன்பம் என்ற சொற்குப் பொருள் வரையறுத்துக் கூறல் இயலாது. மாந்தர் அனைவரும் இன்பத்தை நாடுபவர்களே. துன்பத்தைக் காணின் ஒதுங்கி விடுவர். உண்பது, உறங்குவது, இணைவிழைச்சு ஆகியன இன்றிமையாதமைந்து இன்பம் தருவன. இவை தவிர்த்து உலகில் வேறுவகை இன்பங்களும் உள. அறிவைப் பெருக்குதலில் சிலர் இன்பம் காண்பர். ஆற்றலை வளர்த்துக்கொள்வதில் சிலர் இன்பங் காண விழைவர். கலைஉலகில் திறன் காட்டுவர் இன்னும் சிலர். மேலும் சிலர் பொருள் ஈட்டுதல், புகழ் தேடுதல் போன்ற இன்பங்களில் ஈடுபடுவர். இன்பங்களை வள்ளுவர் இங்கு சிற்றின்பம், மற்றின்பம் எனப் பாகுபடுத்திச் சொல்கிறார்.

சிற்றின்பம்:
சிற்றின்பம் நிலையற்றது என்றும் துய்க்கும்போது நன்றாக இருந்தாலும் இறுதியில் தீங்கைத்தருவது என்றும் கொடுக்கும் விலைக்குரிய மதிப்பற்ற வரவு என்றும் பலர் பொருள் கூறினர். வெஃகிய பொருளால் கிடைப்பன ஐம்புல இன்பங்களே; அவை சிற்றின்பம் சிறுதன்மையாய் சிறிது பொழுது நிற்பன; சிற்றளவின் இன்பம்; எனவே அது சிற்றின்பம் என்றனர் சிலர்.
'வெஃகிய பொருளால் விளையும் இன்பம், துய்க்கப்படுகின்ற காலத்திலேயே இப்பொருள் இன்னாரை ஏமாற்றிப் பெறப்பட்டது என்ற எண்ணம் தோன்றுகிறபோது, துன்பமாய்ச் சிற்றின்பத்தையும் இடைகிடைத்துன்பமாக்குதலின் கூறினர் என்பது சிறந்த கருத்தாகலாம். பிறன் பொருளாளைத் துய்க்கும்போது பல்வகை அச்சங்களிடையே துய்க்கப்பெறும் இன்பம் போல இது பல துன்பங்களுக்கிடையே துய்க்கப்பெறும் இன்பம் ஆதலால் சிற்றின்பம் எனப்பட்டது' என்பது தண்டபாணி தேசிகர் தரும் கருத்துரை. 'ஈண்டுச்‌ சிறிதும்‌ பிறிதுமாகப்‌ பகுத்தோதியது ஐம்புல இன்பமே; காம வின்பத் தினையும்‌ வீட்டின்பத்தினையு மெனக்‌ கொள்‌ளற்க' என்றார் சொ தண்டபாணிப் பிள்ளை.
இங்கு சொல்லப்பட்ட சிற்றின்பம் காமஇன்பம் அன்று; அப்பொழுதைக்கான இன்பம் பெற அறமல்லாத சிறுமைச் செயலால்‌ வரும்‌ இன்பம் சிற்றின்பம் எனப்பட்டது.

மற்றின்பம்:
இச்சொற்றொடரை மற்று+ இன்பம் எனப் பிரிக்காமல் மற்றை இன்பம்-மற்றின்பம் என வாசிக்க வேண்டும். ''மற்றை' என்னும் இடைச்சொல், சிற்றின்பம் என்று குறிக்கப்பட்டதை நீக்கி, அதற்கு இனமாகிய பேரின்பத்தைக் குறித்து நின்றது. 'மற்றை யின்பம்' என்பது மற்றின்பம் எனக் கூறப்பட்டது. 'மற்றைய' என்னும் இடைச்சொல் குறிக்கப்பட்டதை ஒழித்து அதற்கு இனமானதைக் குறிக்கும். மற்றையது என்னும் கிளவி தானே, சுட்டுநிலை ஒழிய இனம்குறித் தன்றே (749 இடையியல்) என்பது தொல்காப்பியம்.' (இரா சாரங்கபாணி).
சிற்றின்பம் தவிர்த்த மற்ற இன்பங்கள் 'மற்றின்பம்'. சிற்றின்பம் என்பது நடுவுஅற்ற செயல்களால் வரும் என்றால் மற்றை இன்பம் என்றது சிற்றின்பம் ஒழித்து அதற்கினமாகிய பிறஇன்பங்களைக் குறிக்கும். அதாவது அறச் செயல்களால் பெற்ற பொருளால் உண்டாகும் இன்பத்தைக் குறிக்கும். இது உழைப்பு, ஆற்றல் இவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி, அன்பு காட்டுதலால் உண்டாகும் இன்பம் முதலியன.

சிற்றின்பம் என்ற சொல்லை வள்ளுவரே முதன்முதலில் கையாண்டார்; இச்சொல்லுக்கேற்ப மற்றின்பம் என்ற சொல்லையும் தேர்ந்து குறளில் பயன்படுத்தினார்; வள்ளுவர்க்கு முன்னுள்ள இலக்கியங்களில் சிற்றில், மற்று என்னும் சொற்கள் இடம் பெற்றன; ஆனால் சிற்றின்பம், மற்றின்பம் போன்ற சொற்கள் இல்லை; எனவே இந்தக் குறளின்வழி இரண்டு வகையான புதிய சொல் வடிவங்கள் பெறப்பட்டன என்பர் சொல் ஆய்வாளர்.

சிற்றின்பம்-மற்றின்பம் என்றிவை சிறுமையானமகிழ்ச்சி-நிலையான மகிழ்ச்சி கொடுக்கும் (சிற்றின்பம் அல்லாத) வேறு இன்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

நிலையான நலத்தை நாடுபவர் கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறர் பொருள் வெஃகாமை பெருநலம் தரும்.

பொழிப்பு

அறத்தால் வரும் பெருநலத்தை விரும்புபவர்கள் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள்.