இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0124



நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

(அதிகாரம்: அடக்கமுடைமை குறள் எண்:124)

பொழிப்பு (மு வரதராசன்): தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.



மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.
நிலை- வன்னாச்சிரம தன்மம்.

பரிமேலழகர் உரை: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
(திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)

இரா இளங்குமரனார் உரை: கால இட நிலைகளுக்குத் தக்கவாறு அசையாத அடக்கத்தை உடையவனது உயர்வு, தன்னியற்கையால் உயர்ந்து தோன்றும் மலையினும் மிக உயர்ந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

பதவுரை: நிலையின்-தன் நிலையினின்று, வாழும் ஒழுக்கநெறியிலிருந்து; திரியாது-மாறாது, வேறுபடாமல்; அடங்கியான்-அடங்கினவன்; தோற்றம்-காட்சி; மலையினும்-மலையை விட, மலையைக் காட்டிலும்; மாண பெரிது-மிகப் பெரியது.


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி;
மணக்குடவர் குறிப்புரை: நிலை- வன்னாச்சிரம தன்மம்
பரிதி: தான் பிடித்த நிலைமையில் நிற்பவன் பெருமைக்கு;
பரிமேலழகர்: இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி;
பரிமேலழகர் குறிப்புரை: திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல்.

'தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி' என்றும் 'தான் பிடித்த நிலைமையில் நிற்பவன் பெருமைக்கு' என்றும் 'இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம்', 'தன் நிலையினின்று வேறுபடாது அடங்கி நடப்பவனது உயர்ச்சி', 'தன்னுடைய கொள்கையை விட்டு விடாமல் பிறரிடம் தணிவாகப் பேசி அடங்கி நடந்து கொள்கிறவனுடைய புகழ்', 'இல்வாழ்க்கை வழியில் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய தோற்றப்பொலிவு என்பது இப்பகுதியின் பொருள்.

மலையினும் மாணப் பெரிது :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மலையினும் மிகப் பெரிது.
பரிதி: மகாமேருவும் நிகரல்ல; மகாமேருவும் அளவுபடும்; இவன் பெருமை அளவுபடாது என்றவாறு.
பரிமேலழகர்: மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மலை' ஆகுபெயர்.

'மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'மகாமேருவும் அளவுபடும்; இவன் பெருமை அளவுபடாது' எனப் பரிதி விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலையினும் பார்வைக்குச் சிறந்தது', 'மலையினும் மிக உயர்ந்ததாகும்', 'மலையைவிட மிகப் பெரிதான தோற்றமுண்டாக்கும்', 'மலையின் உயர்ச்சியிலும் மிகப்பெரியது. (தானே உயர்வுடைய மலையினும் தமது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன் என்றவாறு)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மலையைவிட மிகப் பெரிதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய தோற்றம் மலையைவிட மிகப் பெரிதாகும் என்பது பாடலின் பொருள்.
'தோற்றம்' என்றால் என்ன?

அடக்கமுடையவன் மலையைவிட உயர்ச்சியும் வீறும் கொண்டவனாகக் காட்சி அளிப்பான்.

தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையினும் மிகவும் பெரியதாகும்.
தன் நிலை என்பது எந்த நிலை? 'நிலையின் திரியாது' என்ற தொடர்க்குத் தனது நிலையில் கெடாது, தான் பிடித்த நிலைமை, இல்வாழ்க்கையாகிய தன்நெறியில் வேறுபடாது, தான் கொண்ட விரதசீலங்களின் வழியே நின்று, இல்வாழ்க்கை ஆகிய நன்னெறியின் வேறுபடாது. தரத்திலே குறையாது, அறநெறியிலிருந்து மாறுபடாது, தன் கொள்கையில் மாறுதல் வந்துவிடாதபடி, இல்வாழ்க்கை வழியில் வழுவாது நின்று, தம் நிலையில் வேறுபடாது, தன் நிலையிலிருந்து மாறுபடாமல், தனது பெருமித நிலையினின்றும் சிறுதும் திரிவுபடாது எனப் பலவாறாகப் பொருள் கூறினர்.
வாழ்க்கையில் பெருமைக்குரிய நிலையை அடைந்த/ நிலையில் உள்ள ஒருவன் அதிலிருந்து மாறாது அடங்கி நடப்பானானால் அவன் உலகோர்க்கு மலையினும் பெரிதான பெருமிதத் தோற்றத்துடன் தெரிவான். வெளிப்படையாய்ப் பெருத்த அளவில் தெரியக் கூடியதும் காண்போரை மலைக்கச் செய்யும் வகையில் ஓங்கி உயர்ந்திருப்பதும் மலை ஆகும்; நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதும் அதுவேயாகும். அதன் பெருமை அளப்பரிது. மலையினை அதன் கிட்டத்தில் நின்று நேரே நோக்குவார்க்கும், காணாது அதுபற்றிக் கேட்போர்க்கும் உயர்ச்சியும் பெருமையும் இன்னும் சிறந்து தோன்றும். மலையின் தோற்றத்தை ஒர் பழம் பாடல் இவ்விதம் புனைந்துரைக்கிறது:
அளக்கலாகா அளவும் பொருளும்
துளக்கலாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே
(நன்னூல்: 28 பொருள்: அளக்க முடியாத அளவும் பொருளும் அசைக்கமுடியாத உருவத்தின் நிலையும் காட்சியும், வறட்சியிலும் வளத்தைக் கொடுக்கும் கொடையும் மலைக்கு உள்ள சிறப்புகள் ஆகும்.)
தன் நிலை என்பது தன் பெருமித நிலையைக் குறிக்கும்.

மலை ஆடாமல் அசையாமல் ஆரவாரமில்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது. அதன் வலிமையை அளக்க இயலாது. அதன் நிலையையும் தோற்றத்தையும் புற ஆற்றல்களால் மாற்ற முடியாது. அது பலவகையான பருவ மாறுதல்களையும், புயல், இடி, மழை போன்றவற்றையும் எதிர்கொண்டு காலங்கள் பல கடந்தும் தன் நிலை மாறாமல் அடக்கமாக நிற்கின்றது.
இப்பாடல் தன்னடக்கத்துடன் ஒழுகுபவரது தோற்றம் மலையைவிடப் பெரியதாகும் என்கிறது. வாழ்வில் புகழ், செல்வம். செல்வாக்கு இவற்றில் ஏற்றங்கள் உண்டாகும்போது ஒருவரது அடக்கக் குணத்தில் மாற்றங்கள் தோன்ற உந்துதல்கள் ஏற்படும். ஆனால் அவ்வேளைகளிலும் மாறாத அடக்கத்தன்மையை மேற்கொள்பவர் மேலும் உயர்கிறார். இவர் மன ஊசலாட்டமின்றி, நிலையில் திரியாமல் இருப்பர். கால ஓட்டத்தில் அவ்வப்போது தோன்றும் துன்பம், இன்பம், வெற்றி, தோல்வி, ஏமாற்றம் போன்றவை இவரது மனநிலையில் தாக்குறவு ஏற்படுத்தா; சொல் மாறமாட்டார்; ஒழுங்கு பிறழாதிருப்பர்; சினம் தவிர்த்து புலனடக்கமும் உடையராயிருப்பர். மாறிய நிலை காரணமாக ஆகுலங்கள் (ஆரவாரங்கள்) செய்யார். அடக்கம் என்பதற்காகத் தனது பெருமித நிலைக்கு தாழ்வு உண்டாகும்படியும் ஒழுகமாட்டார். இதுவே நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்.

மாண என்ற சொல் 'மிக' என்ற பொருள் நல்கும். ....ஞாலத்தின் மாணப்பெரிது (102). .... மட்பகையின் மாணத்தெறும் (883) என்ற இடங்களிலும் இப்பொருளில் வந்துள்ளன.

'தோற்றம்' என்றால் என்ன?

தோற்றம் என்ற சொல்லுக்குக் காட்சி என்பது பொருள். இச்சொல்லுக்கு உயர்ச்சி என்று பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் கூறினர். மற்றவர்கள் பெருமை, மதிப்பு, பிறர் மதிக்கும்படி ஒருவன் எய்திய வாழ்க்கை நிலை, மனத் தோற்றம், புகழ், ஆளுமை என்றும் பொருள் கூறினர்.
'அடங்கியவன் தோற்றம் மலையினும் பார்வைக்குச் சிறந்தது' என்று அடக்கமானதைப் பார்ப்பதும் சிறந்தது என்ற பொருளில் உரை செய்தார் வ சுப மாணிக்கம். கா சுப்பிரமணியம் பிள்ளை 'தானே உயர்வுடைய மலையினும், தனது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன்' எனத் தோற்றத்தை விளக்குவார். 'உயிரும் உணர்வும் ஒழுக்கமுடைய பெரியார்க்கு சடப் பொருளான மலையை உவமை காட்டுவது பொருந்தாது என்று கருதியவர் போல, வெறும் தோற்றத்தால் மட்டுமே பெரியார்க்கு மலையை உவமை காட்டுகின்றார்' எனத் தோற்றம் மட்டுமே உவமைக்குப் பயன்படுத்தப்பட்டது என ம பொ சிவஞானம் விளக்கம் தருவார்.

அடக்கமுடையவனது பொலிவு மலைபோன்று எழும்பி நிற்கும் மேன்மையான எழில் கொண்டது. தொலைவில் நின்று காண்பார்க்கும் அருகில் நின்றார்க்கும் உயர்வானதும் பெருமையானதுமான தோற்றம் தரும் மலை என்பதுடன் ஒப்பிட்டுச் சொல்ல வந்த பாடலாதலால் தோற்றம் என்ற சொல் ஆளப்பட்டது.
இங்குள்ள தோற்றம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் உள்ள Image என்ற சொல் இணையாகலாம். ஒருவர் பற்றிய கருத்து உருவம் அல்லது கருத்துப்படிவம் எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது இச்சொல். அவர் உலகத்தாரால் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறார் என்பதை உணர்த்துவது. அவரை மனத்தில் உருவங் கற்பித்துக் காண்பதாகும். இத்தகைய மனத்தோற்றத்தையே தோற்றம் என்ற சொல் இங்கு குறிக்கிறது.

தன் நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய தோற்றம் மலையைவிட மிகப் பெரிதாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அடக்கமுடைமையை மாறாத குணமாகக் கொள்க.

பொழிப்பு

தன் பெருமிதநிலையில் மாறுபடாது அடங்கி இருப்பவன் நெடிதாய் நிற்கும் மலையைவிட உயர்வாகத் தோன்றுவான்.