செறிவறிந்து சீர்மை பயக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வடக்கம் நன்மை பயக்கும்;
பரிப்பெருமாள்: அவ்வடக்கம் நன்மை பயக்கும்;
பரிதி: இன்னார் என்ற கீர்த்தியும் உண்டாய் செல்வமும் தரும்; [கீர்த்தி-புகழ்]
காலிங்கர்: அஃது எல்லா மேம்பாட்டையும் தரும் என்றவாறு;
பரிமேலழகர்: அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்; [விழுப்பம் - பெருமை]
'அடக்கம் நன்மை பயக்கும்/கீர்த்தியும் புகழும் முண்டாக்கும்/ மேம்பாட்டைத் தரும்/ விழுப்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதனை உலகம் தெரிந்து சிறப்பிக்கும்', 'அவ்வடக்கம் உயர்ந்தோரால் அறியப்பட்டு மேன்மையைத் தரும்', 'அந்த அடக்கம் எவ்வளவு மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்குச் சிறப்புண்டாகும்', 'அவ்வடக்கம் நல்லோரால் அறியப்பட்டுப் பெருமை தரும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அடக்கத்தின் தன்மை உணரப்பட்டு மேன்மை உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின். [நெறியினாலே - வழியாலேயே]
மணக்குடவர் குறிப்புரை: அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.
பரிப்பெருமாள்: அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவறிந்தாற்றினடங்கப் பெறின் செறிவறிந்தெனக் கூட்டுக.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.
ஆற்றினடங்குதலாவது தத்தம் நிலைமைக்கும் இல்லறத்திற்கும் சொல்லுகின்ற நெறியினானஏ சுவைமுதலான ஐந்தின் கண்ணும் மெய் முதலான பொறிகள் வழியாகச் செல்லும் காதலை அடக்குதலும் அக்காதல் காரணமாகச் செல்லும் வெகுளியை அடக்குதலும் முதலாயின. நன்மை பயக்கும் என்று பொதுப்படக் கூறினார். எல்லா நன்மையும் பயக்கும் என்றதற்கு மேல் அடக்கம் வேண்டும் என்றார். இஃது அடக்கும் திறன் கூறிற்று. .
பரிதி: அறிவறிந்த நெறியிலே அடங்குவானாகில் என்றவாறு. [அறிவறிந்தநெறி - அறியவேண்டியன அனைத்தையும் அறிந்தமையால ஆன முறைமை]
காலிங்கர்: இவ்வடக்கம் உடையானை நன்மையும் தலையளியாது; அது தங்குதற்கு ஓராங்குநின்று கருதி இகன் பாட்டு அறியத் தகுவனவற்றறை எல்லாம் குறிக்கொண்டு அறிந்து மற்றிங்கனமறிந்து நெறியின் வழுவாதே அடங்கி ஒழுகப் பெறின் மற்று. [தலையளியாது- கருணை செய்யாமல்; இகல் - பகை]
பரிமேலழகர்: அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல். [தன்வயத்தவாதல்- சுதந்தரமுடைமை]
'அறியப்படுவன அறிந்து நெறியினால் அடங்கிநடந்தால்' என்றும்' 'அடங்குதலே நமக்கு அறிவாவது என்றறிந்து நெறியானே அடங்கப் பெறின்' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவன அறிந்து முறையோடு அடங்கின்', 'அறிவினால் அறியப்படுவனவற்றை அறிந்து ஒருவன் நெறிப்படி அடங்கி நடப்பானாயின்', 'கற்க வேண்டியதைக் கற்று அறிய வேண்டியதை அறிந்து அக்கல்வியறிவின் நெறியில் அடக்கமுள்ளவனாக இருந்தால்', 'அடங்கியிருத்தலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நல்ல வழியில் ஒருவர் அடங்கி இருந்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
|