இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0094



துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:94)

பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்

மணக்குடவர் உரை: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

பரிமேலழகர் உரை: யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். >
(நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேயாம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)

மயிலை சிவமுத்து: உரை: எல்லாரிடத்தும் மகிழ்ச்சியை விளைவிக்கும் இனிய சொற்களைச் சொல்ல வல்லார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை நிலை இல்லையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்

பதவுரை: துன்பு உறூஉம்-துயரம் உறுவிக்கும்; துவ்வாமை-நுகர முடியாமை, வறுமை, வெறுப்பு; இல்லாகும்-இல்லாததாகும்; யார்மாட்டும்-எவரிடத்தும், எல்லாரிடத்தும்; இன்பு-மகிழ்ச்சி; உறூஉம்-மிகுவிக்கும்; இன்-இனிய; சொலவர்க்கு-சொல்லையுடையவர்க்கு.


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்;
பரிப்பெருமாள்: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்;
பரிதி: தரித்திரமேற்கொண்டு துயர் உறுந் துன்பமில்லை;
காலிங்கர்: தம்மைத் துன்புறுத்துவதாகிய வறுமை இலதாகும். யார்க்கெனின்;
பரிமேலழகர்: துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
பரிமேலழகர்: நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். [துவ்வாமை-துய்க்க முடியாமையால் அது வறுமையாயிற்று]

'துன்புறுத்துவதாகிய வறுமை இலதாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பந்தரும் வறுமை வாராது', 'துன்பம் தருகிற பசிப்பிணியே வராது', 'துன்பத்தை மிகுவிக்கும் வறுமை இல்லையாம்', 'துன்பத்தைக் கொடுக்கும் வறுமை இல்லை', என்ற பொருளில் உரை தந்தனர்.

துன்பமுறச் செய்யும் வறுமை இல்லையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
பரிப்பெருமாள்: யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லார்மாட்டும் இன்சொற் கூறவேண்டும் என்பதூஉம் அதனானே பொருளுண்டாம் என்பதூஉம் கூறப்பட்டது.
பரிதி: யாரிடத்திலும் இன்சொல் கூறுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: யாவர்மாட்டும் நேரொக்க மற்றவர் நெஞ்சத்து இன்பம் உறுத்தும் இனிய சொல்லினை உடையார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேயாம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து. [நொதுமல் - அயன்மை]

யாவர்மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக', 'யாரிடத்திலும் இன்பம் உண்டாக்கக் கூடிய இனிய சொற்களையே பேசுகின்றவர்களுக்கு', 'எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் கூறவல்லார்க்கு', 'எவரிடத்தும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேச வல்லார்க்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.

எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பமுறச் செய்யும் துவ்வாமை இல்லை என்பது பாடலின் பொருள்.
இன்சொல்கூறலுக்கும் வறுமை அணுகாதிருப்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

யாரிடத்துமே இனிமையாகப் பேசுக.

எல்லோரிடத்திலும் இன்பத்தை மிகச்செய்யும் இனிய சொற்களைச் சொல்பவர்களுக்குத், துன்பமுறச்செய்யும் வறுமைநிலை இல்லாதொழியும்.
நட்பினர், பகைவர், அயலார் ஆகிய எவரிடத்தும் மகிழ்ச்சியூட்டும் இன்சொற்களையே பேசுக; செல்வம் உடையவரோ அல்லரோ, கற்றோரோ மற்றோரோ, ஆடவரோ பெண்டிரோ, அதிகாரம் படைத்தவரோ இல்லையோ, இளையோரோ முதியோரோ எல்லாரிடத்தும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பாராமல் இனிய சொல்க; இங்ஙனம் இனிமையை மிகுவிக்கும் இன்சொற்களை எல்லாரிடமும் கூறுபவர்க்கு துன்புறுத்துவதாகிய வறுமை இல்லாமல் போகும் என்கிறது பாடல்.

இன்சொல் பேசுகின்றவர்களை எல்லோரும் விரும்புவார்கள்; இனிய சொற்கள் நயன் ஈனும் என்கிறது இவ்வதிகாரத்து மற்றொரு பாடல். இன்சொற்களையே எப்பொழுதும் பேசுவோர் எவரிடத்தும் வெறுப்பு கொள்ளமாட்டார்கள். அதுபோலப் பிறரும் இனிமையாகப் பேசுவோரிடம் வெறுப்புணர்ச்சி கொள்ள ஏதுக்கள் இல்லை. ஒருவர் மீது ஒருவர்கொள்ளும் காழ்ப்புணர்ச்சி துன்பம் விளைக்கும் தன்மையது. இன்சொல் பேசுவதால் வெறுப்பு இருபக்கமும் மறைந்து நட்புடன் கூடிய நல்லிணக்கம் ஏற்பட்டு நன்மை உண்டாகும். அதனால் துன்பமும் இல்லாமல் போகிறது.
இன்சொலவரை எவ்விதம் வறுமை தீண்டாது என்பதற்கு 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேயாம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' எனப் பரிமேலழகர் விளக்கம் தந்தார். இன்சொல் உடையார்க்கு யாவரும் நண்பராவர். நண்பர்கள் மிகுத்திருப்பராதலால், அவர்களுக்கு வறுமை வந்தபோதும், கேளாமலேயே உதவியும் வரும், வறுமையால் வரும் துன்பம் இருக்காது என்பது இக்குறளுக்கு வழங்கப்படும் பொதுவான உரையாகும். இன்சொல் கூறுவதாலேயே வாழ்க்கையில் வெற்றி பெறும் மனிதர்கள் பலர். முகமலர்ச்சியுடன் பிறர் மகிழ்ச்சியடையும்படியாக இனிமையாகப் பேசிப்பழகுகின்றவர்களுக்கு நல்ல நண்பர்கள் உண்டாவார்கள். அவர்கள் இன்சொற் கூறுமவனது இடுக்கண்‌ களைய முன்வருவார்கள். பலநிலையிலும் அவர்களது இன்னல்கள் நீங்க உதவுவார்கள். மனித உறவு மேம்படும். அவனுக்கு எல்லாரும் நண்பராவர்; துணைநிற்பர்; பகைவர் இல்லாமல் போவார்கள். அதனால் அவர்களைப் பசிப்பிணி தீண்டல் அரிது. .

'துவ்வாமை' என்றால் என்ன? “துவ்வாமை” என்ற சொல் வெறுப்பு, பொறாமை, வறுமை என்ற பல பொருள்களைக் கொண்டது.
துப்பு - நுகர்வு, துவ்வாமை - நுகராமை. துவ்வாமை என்றது எதிர்மறைத் தொழிற்பெயர். ஐம்பொறிகளானும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களையும் நுகராமை என்னும் பொதுப் பொருள் தருவது. பொறிகள்‌ புலன்களை நுகராமைக்குக்‌ காரணமாதல்பற்றி வறுமை துவ்வாமை எனப்பட்டது.
தொல்லாசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்களில் பலரும், துவ்வாமை என்பது துய்க்காமையைக் குறிப்பதால் அது வறுமையாயிற்று என்றனர் துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்... (இல்வாழ்க்கை 42) என்ற இடத்தில் துவ்வாதவர் என்பது வறியவர் என்ற பொருளிலே ஆளப்பட்டது.

இக்குறள் நடையில் அமைந்த பிற குறட்பாக்கள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (இல்வாழ்க்கை 44 பொருள்: பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும்), வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று (விருந்தோம்பல் 83; பொருள்: வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்று கெட்டுப் போவதில்லை), பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது (ஈகை 227 பொருள்: பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை) ஆகியன.

துவ்வாமை என்பதற்கு வறுமை என்னாமல் வெறுப்பு எனவும் பொருள் கொள்வர். இன்சொல் கூறுபவர்க்கு இயல்பாகவே வெறுப்புணர்ச்சி நீங்கும். வெறுத்தல் இல்லாது இன்சொல் பேசி மகிழ்விப்பவர்களிடம் பிறரும் வெறுப்புக் கொள்ள மாட்டார்கள். எல்லோரிடத்திலும் இன்சொற்களையே பேசுவோருக்கு யார்மீதும் வெறுப்பு இல்லையாதலால், அதனால் வரும் பகையும் இல்லை; துன்பமும் ஒன்றுமில்லை.

'இன்புறூஉம் இன்சொல்' என்ற தொடர் இனிய சொற்கள் பிறர்க்கு இன்பம் பயப்பன என்பதைக் காட்டுவது.
'துன்புறூஉம் இன்புறூஉம்' எனும் அளபெடைச் சொற்கள் துன்பம், இன்பம் ஆகியன மிகுவிக்கும் முறையில் அமைந்து விளங்குவதை குறள் நடையமைப்பிலும் உணரலாம் (இ சுந்தரமூர்த்தி). இவை துன்புறுத்தும் இன்புறுத்தும் என்ற பொருளில் பிறவினையாய் நின்றன. துன்பத்தைத் தரும், துன்பத்தை மிகுவிக்கும் எனத் தன் வாய்ப்பாட்டாயும் சிலர் உரைத்தனர்.

இன்சொல்கூறலுக்கும் வறுமை அணுகாதிருப்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
யாவர்மாட்டும் இன்சொற் கூறுவோர்க்கு வறுமை வாராது என்பது இக்குறளின் கருத்து. இதற்கு இன்சொல் பேசுவோர்க்கு பொருளுண்டாகும் எனவும் சிலர் பொருள் உரைத்தனர்.
வறுமையைப் போக்கவல்லது செல்வப் பொருளா அல்லது இன்சொல் கூறலா என்று வினா எழுப்பினால் எவரும் செல்வப் பொருளே என்று உடன் விடையிறுப்பர். வணிக நிறுவனங்களில் பணிபுரிவோர் வாடிக்கையாளர்களிடம் இன்சொல் பேசுதலால் நிறுவனத்திற்குப் பொருள் பெருகலாம்; ஆனால் தனிப்பட்ட மாந்தர் இன்சொல் கூறினால் அவர்க்கு வறுமை நேராது என்பது மயக்குறச் செய்கிறது. துவ்வாமையை நீக்கும் ஆற்றல் செல்வப் பொருளுக்குள்ளதுபோல் இன்சொல் கூறலுக்கும் உண்டு என்று சொல்வதற்கில்லை. இன்சொல் கூறும் திறனை நல்ல வகையில் பயன்படுத்தினால் பலரை மகிழ்விக்க முடியும். பலர் மகிழ வாழ்கின்றவனுடைய வாழ்க்கைக்கு ஒரு குறைவும் நேராது. ஆகையால் எல்லோரிடத்திலும் இன்பத்தைப் பெருக்க வல்ல இன்சொல் உடையவர்க்கு வாழ்க்கையில் துன்பத்தைச் செய்யக் கூடிய வறுமையும் அணுகாது எனச் சொல்லி அமையலாம் 'பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது' (227) போன்ற பாடல்நடையில் அமைந்தது இக்குறள். பசிப்பிணி ஆற்றும் அறம்போல எல்லோரிடமும் இன்சொல் கூறும் அறம் செய்கிறவனையும் பசித்துன்பம் அணுகாது என்பது அறம் சார்ந்த ஓர் நம்பிக்கை எனவே இக்குறளையும் கொள்ளலாம்.

எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பமுறச் செய்யும் வறுமை இல்லையாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இனியவைகூறல் ஒருவனை நலிவுறாமல் காக்கும்.

பொழிப்பு

எல்லோரிடத்தும் இன்பம் தரும் இன்சொல் கூறுபவர்களுக்குத் துன்பத்தை மிகுவிக்கும் வெறுப்பு இராது.