இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0039



அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:39)

பொழிப்பு (மு வரதராசன்): அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

மணக்குடவர் உரை: அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்.
இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

பரிமேலழகர் உரை: அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.
('ஆன' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நன்னெறியால் வரும் இன்பமே இன்பம். பிற வழியால் வரும் இன்பங்கள், துன்பத்தோடு பொருந்தியனவே; மேலும் அவை புகழையுந் தரமாட்டா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழு மில.

பதவுரை: அறத்தான்-அறத்தால், அற வழியால், அறவழி வாழ்வினால், அறத்தோடு பொருந்தி; வருவதே-வருவதே, நிகழ்வதே; இன்பம்-மகிழ்ச்சி; மற்றெல்லாம்-(அறமல்லாத வழியில் வரும்) பிறவெல்லாம்; புறத்த-புறம்பாவன, அறத்துக்குப் புறம்பாவன, நீக்கத்தக்கன, (இன்பத்துக்கு) வேறாயுள்ளவை; புகழும்-புகழும்; இல-இல்லை.


அறத்தான் வருவதே இன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்;
பரிதி: தன்மத்தினாலே வந்த இன்பமே இன்பம்;
காலிங்கர்: இம்மைக்காயினும் மறுமைக்காயினும் இல்லறத்தினால் விளைவதே சிறந்த இன்பமாவது;
பரிமேலழகர்: இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும்.

இப்பகுதிக்கு மணக்குடவரும் பரிதியும் 'அறத்தால் வருவதே இன்பம்' என்று உரை பகன்றனர். காலிங்கரும் பரிமேலழகரும் 'இல்லறத்தினால் விளைவதே இன்பம்' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறவழியில் வருவதே இன்பம்', 'அறநெறியால் வருவதே இன்பம்', 'அறங்களைச் செய்து அதனால் அடைகின்ற மகிழ்ச்சிதான் நல்ல இன்பம்; அது புகழும் தரும்', 'அறநெறியில் பொருந்தி அடைவதே இன்பம்' என்றபடி உரை நல்கினர்.

அறவழியில் பொருந்தி வருவதே இன்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றெல்லாம் புறத்த புகழு மில:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிதி: அஃது அன்றியிலே தன்னிடத்திலுண்டான பொறையுங் கீர்த்தியும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: ஒழிந்தன எல்லாம் அவ்வின்பத்தின் புறத்தன; புகழும் இல்லாதன என்றவாறு.
பரிமேலழகர்: அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'அறவழியின்றி வருவன எல்லாம் துன்பம் தருவன; புகழும் இல்லாதன' என்று பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மற்றவையெல்லாம் புறம்பானவை; புகழுக்குரியனவும் இல்லை', 'பிறவழியால் வருவன துன்பம்; பழி', 'மற்ற இன்பங்களெல்லாம் அப்படிப்பட்ட நல்லவையல்ல. அவற்றால் புகழும் கிடைக்காது', 'அறமல்லாப் பிறவழியில் அடைவது துன்பம்; புகழும் உண்டாகாது' என்றவாறு உரை தந்தனர்.

பிறவழியால் வருவன இன்பத்துக்கு வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; மற்றவை எல்லாம் வேறானவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது பாடலின் பொருள்.
அறமல்லாத வழியில் வந்தனவற்றாலும் இன்பம் பெறுகிறார்களே?

இன்பத்தின் ஊற்று அறவழிகளில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

அறநெறியில் நின்று அதனால் எய்தும்இன்பம் மட்டுமே இன்பமாகும். அறமல்லாத வேறுவழிகளில் அடைவன எல்லாம் இன்பமாகா; அவற்றால் நற்பெயரும் நீங்கும்.
இன்பம் என்ற சொல்லுக்கு வரையறை உரைப்பது இயலாதது. இன்பம் பலவழிகளில் கிடைப்பது. சிலர் அறிவால் இன்பம் பெறுகின்றனர்; இன்னும் சிலர் செல்வத்தாலும், செல்வாக்கால் உண்டாகும் பெருமிதத்தாலும் இன்பம் காண்கின்றனர்; மற்றும் சிலர்க்கு காமநுகர்ச்சியால், கள்ளால், சூதால் இன்பம் கிடைக்கிறது. ஒறுத்தார்க்கும் இன்பம் உண்டு. எந்தவகையில் இன்பம் பெற்றாலும் அறத்தான் வருவதை மட்டுமே இன்பமெனக் கருதவேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆகையால் எந்த இன்பத்தைத் தேடினாலும் அதை அறவழியிலேயே அடைய முயல வேண்டும். அறவழியில் அடைவது என்பது நல்லொழுக்கம், நற்செயல்கள் இவற்றின் மூலம் கூடிவருவதாம்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பது வள்ளுவம். உள்ளத்துள் மாசின்றி செய்வனவெல்லாம் அறமே; தூய எண்ணம் கொண்டவனுக்கு அதன் வழிப்பிறக்கும் சொல், அதைத் தொடரும் செயல் என எல்லாமே தூயதாகிவிடும். அச்செயல்கள் மூலம் பெறப்படுவதே இன்பமாகின்றது.
தூயதல்லாத மனத்தோடு செய்வன எல்லாம் அறமற்றவை; பழி உண்டாக்கக்கூடியன.
இன்பம் தரக் கருவிப் பொருளாக உதவும் செல்வத்தையும் அறநெறியில் பெறவேண்டும் என்பது சொல்லாமலே பெறப்படும். இங்கு இன்பம் என்பது பொதுப்படக் கூறப்பட்டுள்ளது. இல்லறம், துறவறம் - சிற்றின்பம், பேரின்பம் இவற்றில் எது சொல்லப்பட்டது என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.
பலர் இப்பாடலில் இன்பம் என்று கூறப்பட்டது காம இன்பத்தையே என்று கொண்டனர். ஆனால் இங்கே இன்பம் என்று சொல்லப்பட்டது காம இன்பத்தை மட்டும் அல்ல. காம இன்பம் வெறும் உடல் பற்றியது. ஊறுணர்வு அல்லாது வாய், கண், மூக்கு, செவி என்ற மற்ற நான்கு பொறிகளும் தனித்தனியே துய்க்கின்ற, காமம்தவிர்த்த இன்பங்களும் உள. எல்லா இன்பங்களும் அறத்தால் பெறப்பட்டனவாக இருக்கவேண்டும் என்பதே வள்ளுவர் விரும்புவது. அங்ஙனம் துய்க்கப்படும் இன்பம் மனச்சான்றுக்கு எதிரானதாக இல்லாமல், நிறைவாக எய்துகிற தூய இன்பமாக இருக்கும்.

எவ்வழியிலும் இன்பம் அடையலாம் என்று வழிவகைகளைக் கூறாமல் இப்படித்தான் இன்பம் துய்க்க வேண்டும் என்று காட்டுவது குறள். குறள் காட்டும் இன்பங்களுக்கெல்லாம் அடிப்படை அறமாக மட்டுமே இருக்கவேண்டும்.
'அறத்தான் வருவதே இன்பம்' என்ற இந்த ஒரு வரையறைக்கு உட்பட்டு உண்ணல், ஆடல், கண்டு களித்தல், கூடல் எல்லாவற்றையும் மனநிறைவாகத் துய்த்தால் இவ்வுலக வாழ்க்கை இனிதாகும்.

அறமல்லாத வழியில் வந்தனவற்றாலும் இன்பம் பெறுகிறார்களே?

அறமற்ற நெறியில் செல்வம் சேர்த்து இன்பம் துய்ப்போரையும், தீயொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ச்சி பெறுவோரையும் நாம் நாளும் காண்கிறோம்.
அறமற்ற வழிகளிலும் இன்பம் பெறமுடிகின்றதென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவை இகழ்ச்சி பெருக்கும் இன்பங்களாம். பொய் வஞ்ச வழிகளில் பொருள் தேடுவோர், கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் சேர்ப்போர், அடுத்துக் கெடுப்போர், அடுத்தவன் பொருளுக்கு ஆசை கொள்வோர், பிறன்மனை நயப்போர், அயலாரைத் தூற்றுவோர் ஆகியோரை அறமல்லாத வழிகளில் இன்பம் காண்போர்க்குக் காட்டுகளாகக் கூறலாம். இவர்கள் தங்கள் நடத்தையால் செயல்களால் மகிழ்ச்சி அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். அதுபோலவே சூதாடுவோர், போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர், சிற்றினம் சேர்ந்தோர், இவர்களும் தாம் இன்பம் துய்ப்பதாக எண்ணுகின்றனர். ஆனால் அறமில்லா வழியில் இவர்கள் பெறுவன யாவும் பொய் இன்பங்கள்; போலி இன்பங்கள்; அவற்றை மெய்யின்பமாகக் கருதிக்கொள்வர் அவர்கள்.
ஒருவர் மனநிலை, பழக்க நிலை, அறிவுநிலை சார்ந்து அமைவதாலேயே அது இன்பம் ஆகிவிடாது. மனச்சான்றினை மகிழ்விக்கக்கூடியதே உண்மையான இன்பமாகும். அறம் ஒன்றே மனச்சான்றை மகிழ்விக்கும். மனச்சான்றைப் புறக்கணித்துப் எந்தவகையான இன்பம் பெறப்பட்டாலும் அவை உண்மையான இன்பம் ஆகா.

காமநூல் எழுதிய மற்றவர்கள் எல்லாம், பிறர்மனை நயத்தல், பொருட்பெண்டிர் சேர்க்கை போன்ற அறம் அல்லாதவற்றையும் இன்பம் தரக்கூடியதாகக் கூறியுள்ளனர். ஆனால் அது வள்ளுவருக்கு முற்றிலும் ஒவ்வாத கருத்தாகும்.
அறத்தின் புறத்து வரும் துய்ப்பெல்லாம் உளநோயும் உடல்நோயும் விளைக்கக்கூடியன. அறநெறியில் அடையும் நிலைத்த நிறைவான இன்பமே புகழுக்குரியது. போலி இன்பங்கள், ஒரு குறுகிய காலத்தில் மகிழ்வினைத் தந்தாலும், நிலையானதாகவோ, மன நிறைவாகவோ இருப்பதுமில்லை. ஒருவன் தொடர்ந்து தீயொழுக்கத்திலும் தீயசெயல்களிலும் ஈடுபட்டு இன்பம் துய்க்க எண்ணுவானானால் அவை அவனது மன அமைதியைக் கெடுத்து முடிவில் துன்பத்திற்கே வழி கோலும்; அவனுக்குத் தீராப் பழியையும் தருவனவாம்.

அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; பிறவழியால் வருவன வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறநெறியே தன் வாழ்நெறியாகக் கொண்டு இன்பம் துய்க்கவேண்டும் என்னும் அறன் வலியுறுத்தல் பாடல்.

பொழிப்பு

அறநெறியால் வருவதே இன்பம்; மற்றவை இன்பத்துக்குப் புறம்பானதைத் தருவன. புகழும் இல்லை.