மனித இனத்தின் இயல்பூக்கங்களில் பாலுணர்ச்சி மிகவும் வன்மை வாய்ந்தது என்றும், இதனால் பிற உயிரினங்களை விடக் கூடுதலான புணர்ச்சித் தூண்டுதல்கள் மனிதரைக் கிளரச் செய்கின்றன என்றும் பாலியல் அறிஞர் கருதுவர். நீண்ட காலத்துக்கு முன்னரே, ஒருத்தி தனது பாலியல் செயல்பாட்டை, ஒருவனுக்கு மட்டுமே உடைமையாக்குமாறு செய்ய 'கற்பு' என்னும் விதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அது போலவே, பின்னர், பிறனில் விழையாமை என்ற அறம் ஆடவனுக்கு பாலியல் ஒழுக்கமாக வரையறுத்துச் சொல்லப்பட்டது. ஆண்-பெண் இருவரது முறைகடந்த அதாவது இயல்பான- இயற்கையான பாலியல் உறவுகளைத் தடுக்க இச்செயற்கையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வரம்பு மீறிய பாலியல் உறவுகளை உலகிலுள்ள பிற பண்பாடுகளும் இழிவான செயல்களாகவே பார்க்கின்றன.
வள்ளுவர் முதலான அறநூலோர் வாழ்ந்த காலத்தில்தான் தமிழ் இலக்கிய உலகில், ஆணுக்குப் பிறனில் விழையாமை என்ற பாலியல் அறம் கூறப்பட்டது என்பர். ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது 'பிறனில் விழையாமை' அதிகாரம். மற்றவர் மனைவியை காம மயக்கத்தோடு நோக்குவதற்கு எதிரான வள்ளுவரின் போராட்ட உணர்வு இவ்வதிகாரத்தில் நன்கு புலப்படும். ஆடவரின் பெருமைக்குரிய குணமாக ஆண்மையாக-பேராண்மையாக பிறன்மனை நயவாமையைச் சொல்கிறது குறள்.
பாலுணர்ச்சி சார்ந்த காமக்குறியோடு பிறரது பொருளாளை விரும்புவது பேதைமை எனச் சாடும் வள்ளுவர், இந்தச் செயலைத் தீமை புரிதலுக்கு ஒப்பிடுகிறார்.
'பிறன் மனைவி மீது காமம் கொள்பவர்களுக்கு அறமும் தெரியாது பொருளும் தெரியாது. அவனைவிடப் பெரிய அறிவிலி யாருமில்லை. அவன் இறந்தவனுக்குச் சமம். அவன் எவ்வளவு பெரியவனாக இருந்தும் என்னத்துக்கு? பிறன்மனை புகல் அவனுக்கு எப்பொழுதும் இழிவையே தரும்' என இவ்வதிகாரத்துப் பாடல்கள் அவனை இகழ்ந்துரைக்கும்.
பொறுக்க இயலாத தீயசெயலாக இராவணனும் வாலியும் பிறன் மனைவியர் மீது காமம் கொண்டதைக் கம்ப இராமாயணம் குறிப்பிடும்.
ஆண்மகனை வேறொருவன் மனைவியிடமிருந்து விலகிச் செல்லுமாறு 'பிறனில் விழையாமை'யில் வள்ளுவர் சொல்கிறார். வள்ளுவர் கடிந்த குற்றங்களுள் தலையாயது வஞ்சகம். நம்பிக்கைக்கு உரிய இடமெல்லாம் வஞ்சித்தற்கு உரிய இடங்களாய் மாறும்போது பிறன்மனை புகுதல் நேர்கிறது. தூய்மையான இல்லத்தில் பெருச்சாளி சென்று பாழ் செய்வது போல் 'இவளை எய்துதல் தனக்கு எளிமையான' தென்று எண்ணிப் பிறன்கடை நிற்கிறான் ஆடவன். எளிதில் கிடைக்கிறதென்று எண்ணிய நிலை, அப்பெண் பிறன் பொருளாக இன்றி, நிலைகுலைந்தவளாக இருத்தல், தன் முயற்சிக்கு காலம் இடம் முதலியன ஒத்திருக்கின்றன என்பனவற்றைக் குறிக்கும். அவளைக் கொண்டவன் செல்வம், செல்வாக்கு, உடல்வலி முதலியவற்றில் குறைந்தவனாக இருப்பதும் காரணங்கள். தனது செல்வாக்கை அடாத முறையில் பயன்படுத்துபவர், தன்னை நம்பியவர் மனைவியை விழைந்து தீமை செய்வோர், ஒழுக்கமில்லாச் சான்றோர் போன்றோர் பிறன் பொருளாளைப் பெட்டொழுகும் பேதையராகக் குறிப்பிடப்படுகின்றனர். காம மிகுதியால் பிறனது மனையுள் நுழைந்து தீமை புரிவது, அகல்யையின் இல்லில் புகுந்த இந்திரன் கதையை நினைவிற்குக் கொண்டுவரும்.
பிறர் மனைவியைக் கள்ளத்தனமாகக் கூடுதல் என்பது அப்பெண்ணின் உடன்படுதலுடன்தான் நடைபெறமுடியும். அதாவது இங்கே ஆண்-பெண் இருவரிடம் இலக்கணம் மீறிய காம இச்சைகள் காணப்படுகின்றன. ஆனால் வள்ளுவர் ஆண்மகனின் செயற்பாடுகளை மட்டும் பழித்துக் கூறினாரே தவிர இவ்வதிகாரத்து எந்த இடத்திலும் அப்பெண்ணைப் பற்றி இழிவாகவோ தாழ்த்தியோ குறிப்பிடவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. தன் செல்வாக்கை அடாது பயன்படுத்தி ஆண் இழைத்த தீச்செயலுக்கு ஒத்துழைத்ததால் மட்டுமே அப்பிறன் மனைவி குற்றவாளி அல்லர் என்பதால் அவளைத் தன் காம இச்சைக்கு ஆட்படுத்திய இல்இறப்பானே கண்டிக்கத்தக்கவன் என்பது இவ்வதிகாரத்தின் முடிபாகலாம்.