இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0143



விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:143)

பொழிப்பு (மு வரதராசன்): ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.

மணக்குடவர் உரை: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
(அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)

இரா சாரங்கபாணி உரை: நம்பியவர் மனைவியை விழைந்து தீமை செய்வோர் செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார் விளிந்தாரின் வேறல்லர் மன்ற .

பதவுரை: விளிந்தாரின்-இறந்தவரைக் காட்டிலும்; வேறுஅல்லர்-பிறர்ஆக மாட்டார், வேறுபட்டவர் அல்லர்; மன்ற-திண்ணமாக (உறுதிப் பொருள் தரும் இடைச்சொல்); தெளிந்தார்-ஐயுறாதவர் அதாவது நம்பியவர், ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவர்; இல்-இல்லாள், இல்லத்தில்; தீமை-கெடுதி; புரிந்து-விரும்பி, செய்து; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.


விளிந்தாரின் வேறல்லர் மன்ற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
பரிப்பெருமாள்: மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
பரிதி: செத்தாரோடு ஒப்பான் என்றவாறு.
பரிமேலழகர்: உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
பரிமேலழகர் குறிப்புரை: அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும்;

'உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செத்தவரல்லது வாழ்பவர் அல்லர்', 'செத்த பிணத்துக்கு ஒப்பாவான்', 'இறந்தாரின் வேறாகார். (அது திண்ணம்.)', '(உயிருடையவரேனும்) இறந்தவரே' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திண்ணமாக செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர் என்பது இப்பகுதியின் பொருள்.

தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
பரிப்பெருமாள்: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
பரிதி: தம்மை நம்பினார் மனைவியை விரும்புவான்.
பரிமேலழகர்: தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.

'தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர்', 'தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பியலைகிற ஒருவன்', 'நம்பினவரது மனைவியிடத்தே தீயன விரும்பிச் செய்தொழுகுவார் உயிருடைய ரேனும் அறிவிலராகலின்', 'தம்மைப் பற்றி ஐயம் கொள்ளாதார் மனைவியிடம் தீய ஒழுக்கத்துடன் நடந்து கொள்பவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மைப் பற்றி ஐயம் கொள்ளாது நம்பினவர் இல்லாளிடம் தீய காமஒழுக்கத்துடன் நடப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மைப் பற்றி ஐயம் கொள்ளாது நம்பினவர் இல்லாளிடம் தீய காமஒழுக்கத்துடன் நடப்பவர் திண்ணமாக விளிந்தாரின் வேறுபட்டவர் அல்லர் என்பது பாடலின் பொருள்.
'விளிந்தார்' என ஏன் அவர் பழிக்கப்படுகிறார்?

நம்பியவரின் மனைவிமேல் காமம் கொண்டு வஞ்சனை செய்பவர்கள் மனித உணர்ச்சிஇல்லாதவர்கள்.

தம்மை நம்பினவர் மனைவியிடம் தீய எண்ணங்களுடன் ஒழுகுபவர்கள், உயிருடையரென்றாலும் திண்ணமாகச் செத்தாரினும் வேறுபட்டவரல்லர்.
நல்லவனென்று நம்பிக் கள்ளமில்லாமல் தெளிந்த மனதுடன் ஒருவர் அவனுடன் நம்பிக்கையோடு பழகுகிறார். அவன் நண்பனாகவோ உறவினனாகவோ இருக்கலாம். அவனோ அவருடைய மனைவியைக் காமுற்று தீய விதத்தில் உறவு கொள்ள விரும்பியொழுகுகிறான். அவன் பிணமே அல்லாமல் வேறல்லன்; இது உறுதி என்கிறார் வள்ளுவர். அவன் உயிரோடு நடமாடிக்கொண்டிருந்தாலுங்கூட விளிந்தார் கூட்டத்துடன் சேர்க்கத்தக்கவர்; அவனைப் பிணம் போல் கருதி ஒதுக்க வேண்டும் என்பது கருத்து.
வள்ளுவர் மிகச்சினந்து திட்டுமிடங்களில் இது ஒன்று. அவர் மிகவும் வெறுப்பது நம்பிக்கைக்கு உரிய இடத்தை வஞ்சித்தற்கு உரிய இடமாய் மாற்றிவிடும் கயவரை. உணர்ச்சிகெட்ட அறிவிலி ஒருவன், ஒழுக்கமானவன் என்று ஐயமறத் தெளிந்தோர் வீட்டில் தீமை புரிந்தொழுகுகிறான்; அவனைப் பிணம் எனச் சாடுகிறார் வள்ளுவர். தீமை புரிதல் என்பது இங்கு பிறன்மனைவிமேல் ஆசை கொள்வது, வஞ்சக எண்ணத்துடன் அவளை அணுகுதல், உடல் உறவு கொள்ளுதல் என்றிவை.

நம்பிக்கைக்கு மாறாக நடவாத மாந்தர்கள் தோன்றும் 'மகாபாரத' தொன்மைக் கதைகளுள் வரும் நிகழ்வு ஒன்றை நினைக்கலாம். சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்றுக்கொண்டிருக்கும் துரியோதனது மனைவி பானுமதி விளையாட்டில் தொடர்ந்திருக்க விரும்பாது எழுந்து செல்லமுற்பட, அவளுடன் ஆடிக்கொண்டிருந்த துரியோதனின் நண்பனான கர்ணன், அவள் கையை உரிமையுடன் பிடித்துத் தடுத்த பொழுது அவளுடைய மேகலையையும் தவறுதலாகப் பற்றி இழுத்துவிட்டான். மேகலையில் கோர்த்திருந்த மணிகள் அறுந்துவிழுந்து விட்டன. அப்பொழுது அங்கே வந்த துரியோதன் அம்மணிகளைப் பொறுக்கக் குனிந்து, “எடுக்கவோ, கோக்கவோ” என்று கேட்கிறான். இங்கு சொல்லப்பட்ட காட்சியிலுள்ள மூவரது உறவுநிலையில் களங்கம் இல்லை. நண்பனின் நடத்தையில் ஐயம் கொள்ள இடமுமில்லை. எனவேதான் துரியோதனன் சினம் கொள்ளவில்லை; மற்றபடி முறையற்றதாகவே கருதப்படும் அவன் நண்பனின் செயலை துரியோதனன் ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை.
ஆனால் எல்லோரும் கர்ணன்போல் நல்லவராக இருப்பதில்லை. சிலர் தம்மை நல்லவர் என்று தெளிந்து ஐயப்படாமல் வீட்டில் இடம் கொடுத்தவரின் மனைவியை அடைய முனைந்து நம்பிக்கைக்கு உரிய இடத்தை வஞ்சனைக்கு உரிய இடமாய் மாற்றி விடுகின்றனர்.

இப்பாடலில் வரும் 'மன்ற' என்ற சொல்லை தெளிந்தார் என்பதுடன் இயைத்து அதாவது திண்ணமாக நம்பியவர் என்பதாகச் சிலர் பொருள் கூறினர். மன்ற என்ற சொல்லின் முன்வரும் தொடரோடு இயைத்துப் பொருள் காண்பதுதான் குறள் வழக்கு. எனவே விளிந்தார் என்பதுடன் இயைத்து திண்ணமாக இறந்தவரே எனக் கொள்வதே இயல்பு (இரா சாரங்கபாணி).
தெளிந்தார் இல் தீமை புரிந்தொழுகுவார்' (143) என்று பிறனில் விழைபவர்கள் பலர்பாலால் குறிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் செயலைத் 'தீமை புரிந்தொழுகுதல்' என்றும், அவர்கள் 'விளிந்தாரின் வேறு அல்லர்' (செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர்) என்றும், கருத்துநிலையில் தாழ்வைக் குறிக்கும் தொடர்களைக் கையாண்டு அவர்களின் இழிவு புலப்படுத்தப்பட்டது (செ வை சண்முகம்).

'விளிந்தார்' என ஏன் அவர் பழிக்கப்படுகிறார்?

'விளிந்தார்' என்ற சொல்லுக்கு மெய்யாகச் செத்தார், செத்தவர், செத்தாரோடு ஒப்பான், செத்தவர், செத்த பிணங்களுக்கு சமானமானவர், இறந்தவர், பிணங்களுக்குச் சமமானவர், சவம் என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

விளிந்தார் என்பதற்கு இறந்தவர், மாண்டவர் என்பது பொருள். இங்கு அவர் விழித்துக்கொண்டு உயிருடன் இருக்கிறார் அவ்வளவே; மற்றப்படி மாந்தர்க்குள்ள பண்புகள் எதுவும் இல்லை என்ற பொருளில் ஆளப்பட்டது.
நம்பிக்கைக்கு பெருங்கேடு விளைவிக்கும் வண்ணம் தகாத உறவில் ஈடுபடுபவனை மனிதனாக ஏற்கமறுத்து அவனை வாழ்வு அழிந்தவன் எனப் பழிக்கிறார் வள்ளுவர், மனிதத் தன்மையற்றவனை விலங்கு, மரம், மரப்பொம்மை, மண், மண்பொம்மை, மயிர், பதர் என்றெல்லாம் வள்ளுவர் திட்டுவார். இங்கு பிணம் என ஏசுகிறார்.
தன்னை நம்பியவரின் மனைவியை விரும்புகிறவன், உடல் இன்பம் ஒன்றையே மனதில் கொண்டவனாயிருப்பான். அவன் தன் மனச்சான்றை உறைய வைத்துவிடுகிறான். காமம் மட்டும் சார்ந்த உறவில் காதல் இருப்பதில்லை. காதல் இல்லாக் காமம் என்பது பிணத்துடன் உடலுறவு கொள்வதை ஒக்கும். எனவே பிணம் என்றார்.
செத்துப் போனவன் வைக்கப்படும் இடம் சுடுகாடு அல்லது இடுகாடுதான். எனவே செத்தாருள் வைக்கப்பட வேண்டிய பிறன்மனை விழைபவன் இருக்க வேண்டிய இடம் இல்லமல்ல; அவன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.
'விளிவாரின் வேறல்லர்' என்று கூறாது விளிந்தாரின் வேறல்லர் என இறந்த காலத்தாற் கூறியது விளிதல் உறுதி என்பதைத் தெரிவிப்பதற்காக.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (ஒப்புரவறிதல் 214) என்ற இடத்தில் செத்தாராகக் கருதப்படவேண்டிய மற்றொரு மனிதன் பற்றிக் குறள் கூறும். துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் (கள்ளுண்ணாமை 926) என மற்றோரிடத்தில் உறக்கத்தில் அறிவிழத்தலால் அவர் இறந்தவரோடு ஒப்பர் எனவும் குறள் கூறிற்று.

தம்மைப் பற்றி ஐயம் கொள்ளாது நம்பினவர் இல்லாளிடம் தீய காமஒழுக்கத்துடன் நடப்பவர் திண்ணமாக செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நம்பியவன் வீட்டில் வஞ்சகத்துடன் நடப்பவன் பிணம் என்று பிறனில் விழையாமை அறிவுறுத்தல்.

பொழிப்பு

நம்பினவர் இல்லாளை விழைந்து தீமை செய்வோர் செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர்.