இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0145



எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:145)

பொழிப்பு (மு வரதராசன்): இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

மணக்குடவர் உரை: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
இது பழியுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
(இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

இரா சாரங்கபாணி உரை: எய்துதல் எளிதென என்று பிறன் மனைவியிடம் நெறி கடந்து நடப்பவன் எப்பொழுதும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எளிதென இல்இறப்பான் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்.

பதவுரை: எளிது-எளிது, எய்துதற்கு எளிது, வருந்தாமல் கிட்டக்கூடியது; என-என்று கருதி; இல்இறப்பான்-இல்லின்கண்ணே நெறி கடந்து நடப்பவன்; எய்தும்-அடையும், அடைவான்; எஞ்ஞான்றும்-எப்போதும், என்றும்; விளியாது-இறவாது, அழியாது, மாய்தலின்றி; நிற்கும்-நிலைத்திருக்கும்; பழி-பழி.


எளிதென இல்இறப்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன்; [மிகுமவன் - எல்லைகடந்து செல்லும் அவன்]
பரிப்பெருமாள்: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன்;
பரிதி: பிறர் மனையாள் இன்பம் எளிது என விரும்புவான்;
பரிமேலழகர்: 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; [பின் விளைவு - பின்னர் உண்டாகும் பகை, பாவம், அச்சம், பழி]
பரிமேலழகர் குறிப்புரை: இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல். [இல்லின்கண் இறத்தல் - பிறன் மனைவியிடத்து நெறிமுறை கடந்து நடத்தல்]

'எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன்' என்று மணக்குடவரும் 'பிறர் மனையாள் இன்பம் எளிது என விரும்புவான்' என்று பரிதியும் ''எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லாள்கண் நெறிகடந்து சேர்பவன்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன்', 'இவளைச் சேர்தல் எளிதென்று நினைத்துப் பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன்', 'மதித்துப் பிறனுடைய மனைவியிடத்துக் கொண்ட காம ஆசையினால் நெறி கடந்து நடந்து கொள்ளுகிறவன்', 'மிக எளிது என்று கருதி பிறன் மனைவியிடம் செல்பவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எளிதென்று கருதிப் பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது பழியுண்டா மென்றது
பரிப்பெருமாள்: எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழியுண்டா மென்றது.
பரிதி: மரணாந்த மட்டும் பழியும் பாவமும் எய்துவான் என்றவாறு. [மரணாந்த மட்டும் - இறக்கும் வரை]
பரிமேலழகர்: மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.

'எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'இறக்கும்வரை பழியும் பாவமும் எய்துவான்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் தீராத பழியை எய்துவான்', 'என்றைக்கும் நீங்காது நிற்கும் குடிப்பழிப்புக்கு உள்ளாவான்', 'எளிதாகக் கிடைக்கிறதென்று இலேசாக என்றும் நிலைக்கக் கூடிய பழியை அடைவான்', 'எப்பொழுதும் நீங்காத பழியை அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எளிதென்று கருதி இல்இறப்பான் என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது பாடலின் பொருள்.
'இல்இறப்பான்' யார்?

எளிதாக இருந்தாலும் பிறன்இல் விரும்பி நுழையாதே!

பிறனொருவன் மனைவியை அடைவது தனக்கு எளிதென்று நினைத்து அவனுடைய இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன் என்றும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
இவளைச் சேர்தல் எளிதென்று என்று கருதி பிறன் மனையிடத்து நெறி கடந்து செல்பவன் அவளுடைய தனிமை மற்றும் துணையின்மையை தனக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, அவளது மனஉறுதியைக் குலைத்து, நெறியினைக் கடந்து பெண்டாள்வான்; சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகக் கொள்வான்; தன்னிடமிருக்கும் அனைத்து வலியையும் பயன்படுத்துவான். தனக்கிருக்கும் செல்வம், ஆள் அம்பு படை போன்றவற்றால் பிறன் மனையாளை அடைவது எளிது என்று கருதுவான். நாடாள்வோர், சமய நிறுவனத் தலைவர், செல்வவலிமை படைத்தோர் ஆகியோர் இதில் அடங்குவர்.
நாமக்கல் இராமலிங்கம் எளிதென என்பதற்கு 'சுலபமாகக் கிடைக்கிறதென்றோ, வெகு சாதாரண காரியந்தானே என்றோ இலேசாக மதித்து' என உரை தந்தார். இவ்விளக்கத்தைச் 'சுலபமாகக் கிடைக்கிறதென்று எண்ணியோ என்ற தொடர், பிறன் மனைவி பிறன் பொருளாக இன்றி, நிலைகுலைந்தவளாக இருத்தல், தன் முயற்சிக்கு இடையீடாகக் காலம் இடம் முதலியன ஒத்திருத்தல் ஆகிய இவைகளைக் கருதி நிற்கிறது. அவளைக் காப்பவன் செல்வம், செல்வாக்கு, உடல்வலி முதலியவற்றால் குறைந்தவனாக, எளிதென எண்ணியோ எனவும் கருதலாம்' என விரித்துரைத்தார் தண்டபாணி தேசிகர்.

பிறன் மனையாளைச் சேரும் இழுக்குடைச் செயலைச் செய்வது எளிதாகக் கைகூடலாம். ஆனால் அதன் விளைவு என்றைக்கும் அழியாத பழியை அடைவது என்கிறது பாடல். பழி என்றதனால் அதனொடு ஒருங்குவைத்தெண்ணப்படும் பாவத்தையும் சேர்த்துச் சொல்வர். 'எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்பதற்கு இறப்புக்குப் பின்னும் பழி நிலைத்து நிற்கும் என்பது பொருள்.
இராமயணத்தில் சொல்லப்பட்டுள்ள அகலிகை தொன்மக்கதையே இக்குறள் கூறும் பழிஎய்துதலுக்குச் சிறந்த காட்டாகிறது. வானுலக தேவர்களின் தலைவனான இந்திரன், முனிவரான கெளதமரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கி சூழ்ச்சி செய்து அவளைக் கூடுகிறான். இதைக் கண்ட கெளதமர் வெகுண்டு சபித்ததால் ("எந்தப் பெண் குறியில் நீ ஆசைப்பட்டு இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்") இழிவுபட்ட தண்டனையை அடைந்து இந்திரன் இறவாப் பழிக்கு ஆளானான்.

பழி வந்து சேர்கிறது என்பது உண்மைதான். ஆனால் பிறனில் விழையும் குற்றம் உடையவர்கள் சிலர் பழிக்கு ஆளாவதில்லை; அவர்களில் செல்வமும் செல்வாக்குமுடையவர்கள் சிலரது பழி மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு அவர்கள் புகழும் நீடிக்கின்றது என்பதையும் உலகியலில் நாம் பார்க்கின்றோம். ஆயினும் இவர்கள் மீது உண்டான சமூகக் கறை (Social stigma) எளிதில் நீங்குவதில்லை என்பதையும் காண்கிறோம்.

நன்னெறியில் நின்று பழி பாவத்திற்கு அஞ்சுபவர் தமக்கு எளிதாகினும், சூழ்நிலை சாதகமாக இருப்பினும் ஒரு போதும் தவறினைச் செய்யார். எளிதாகத் தானே வந்து எய்தும் சூழலிலும் தான் தடுமாறாது நிற்றல் வேண்டும். தவறினால் அழியாத பழியையே அடையநேரும்.

'இல்இறப்பான்' யார்?

'இல்இறப்பான்' என்ற தொடர்க்கு இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன், இல்லாள்கண் நெறிகடந்து செல்லல், வீட்டின்கண் எல்லைகடந்து செல்பவன், மனைவியின்கண் தீச்செயல் செய்தொழுகுபவன், பிறன்மனை நுழைபவன், பிறன் மனைவியிடம் நெறி கடந்து நடப்பவன், பிறனுடைய மனைவியிடம் எல்லை கடந்து நடந்து கொள்ளுகிறவன், பிறன் மனைவியிடத்துக் கடந்து செல்பவன், பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன், பிறன் மனைவியிடம் செல்பவன், பிறன் மனையின் எல்லை தாண்டுபவன், பிறன் மனைவியின்கண் நெறிகடந்தொழுகுபவன், பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன், பிறன் மனையாளிடம் வரைகடந்து நடக்கும் தீயோன், பிறன் இல்லினுள் செல்பவன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இல் என்ற சொல்லுக்கு இல்லம் என்றும் இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே உரைகளிலும் வேறுபாடு காணப்படுகின்றது. சிலர் வீட்டின்கண் எல்லைகடந்து செல்பவன் என்றும் மற்றவர்கள் பிறன் மனைவியிடம் வரை கடந்து நடக்கும் தீயோன் எனவும் உரை பகன்றனர். இரண்டுமே ஒரு பொருள் தருவனவே.
இறத்தல்‌ என்ற சொல் கடத்தல் எனப் பொருள்படும். அது இங்கு பிறன் மனைவியிடம் நெறிகடந்து செல்வதைக் குறிப்பதாயிற்று,
தேவநேயப் பாவாணர்: 'இல்லிறப்பான்' என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது என்றார். ஆனால் 'ஒரு சொல்லையே இரு பொருள் பயக்குமாறு வழங்கும் முறை வள்ளுவர் நெறி யன்றாகலான், ‘இல்லிறப்பான்’ என்பதற்கு இரட்டுற மொழிதல் பொருந்தாது' என்பார் இரா சாரங்கபாணி.
பிறன் மனையாளை, அவளது கணவனுக்குத் தெரியாமல் சேர்பவன் 'இல்லிறப்பான்' என்ற கலைச்சொல்லால் இழித்துரைக்கப்பட்டான்.

'இல்இறப்பான்' என்றது பிறனுடைய மனைவியிடம் எல்லை கடந்து நடந்து கொள்ளுகிறவன் குறித்தது.

எளிதென்று கருதிப் பிறன் மனையின்கண் முறை கடந்து போகின்றவன் என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறனில் விழையாமை மறையாது நிற்கும் பழி காக்கும்.
பொழிப்பு

எளிதென்று கருதிப் பிறன் மனையின்கண் நெறி கடந்து செல்பவன் என்றும் அழியாது நிற்கும் பழியை எய்துவான்.